தேனிலவு பயணத்தை முடித்து வந்த தம்பதியரின் முகத்தில் தெரிந்த தெளிவும், மகிழ்ச்சியுமே அவர்கள் வாழ்க்கையை நல்லபடியாக வாழ ஆரம்பித்துவிட்டார்கள் என்பதை பெரியவர்கள் புரிந்து கொண்டனர். அதைவிட அவர்களுக்கு வேறு என்ன மகிழ்ச்சி இருக்கப் போகிறது. வாழ்க்கை அதன் போக்கில் சீராக போய்க் கொண்டிருக்க, நாட்கள் நகர்ந்து மாதங்களாய் கடந்துவிட்டது.
அன்று பள்ளி நேரம் முடிந்தும் முழு ஆண்டு பரிட்சைக்கு முன்னால் ரெக்கார்ட் நோட்டுகளை திருத்த வேண்டிய வேலை இருந்ததால் சிவமித்ரா பள்ளியிலேயே இருந்தாள். ஆனால் அன்று பார்த்து அவளுக்கு உடல்நலம் வேறு சரியில்லை. காலையிலேயே லேசாக தலைச் சுற்றியது. இருந்தாலும் அதை பெரிதாக கண்டுக் கொள்ளாமல் பள்ளிக்கு வந்துவிட்டிருந்தாள். ஆனால் நேரமாக நேரமாக தலைச்சுற்றல் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. ஆனாலும் முக்கியமான வேலைகள் இருந்ததால் நடுவில் விடுப்பு எடுக்காமல் தொடர்ந்து வேலைப் பார்த்து கொண்டிருந்தவளுக்கு, இந்த தலைச்சுற்றலுக்கான காரணம் புரியவில்லை.
இப்போதெல்லாம் நேரத்திற்கு தூங்காததாலா? என்று நினைத்துக் கொண்டவள், அதற்கான காரணம் புரிந்து சிரித்துக் கொண்டாள். இவள் மாலையே வீட்டிற்கு சென்றுவிடுவாள். ஆனால் சக்தி என்னதான் நடுவே நடுவே வீட்டிற்கு வந்து போனாலும் இரவு வேலை முடிந்து வர ஒன்பது மணி ஆகிவிடும், அதற்கு மேல் சாப்பிட்டுவிட்டு, பெரியவர்கள் விழித்திருந்தால் அவர்களுடன் சிறிது நேரம் பேசிவிட்டு அதன்பிறகு அவர்கள் அறைக்கு சென்றதும் அங்கு சிறிதுநேரம் இருவரும் பேசுவது, அதன்பின்னான அவர்களுக்கான அந்தரங்க நேரங்கள் என்று இரவு உறங்குவதற்கே மணி பனிரெண்டு அல்லது ஒன்று ஆகிவிடும்,
சக்திக்கு காலையில் மெதுவாக எழுந்துக் கொள்ளலாம், ஆனால் இவள் காலையில் 7 மணிக்காவது எழுந்தால் தான் பள்ளிக்கு கிளம்ப முடியும், சிலநேரம் அவள் சோர்வாக இருப்பதை பார்த்து, “தினம் உன்னை ரொம்ப கஷ்டப்படுத்துறேனா பொண்டாட்டி,” என்று அவன் கேட்கும்போது,
“மனசுக்கு பிடிச்சவங்களோட செலவழிக்கும் நேரம் கஷ்டமா இருக்காது.” என்பாள்.
“காலையில் தான் உனக்கு சீக்கிரம் எழுந்து கிளம்ப வேண்டியதா இருக்கு, சாயந்தரம் வந்து கொஞ்சநேரம் தூங்கி எழுந்திருக்கலாமில்ல,” என்று அவன் கேட்டால்,
“காலையில் நான் எழுந்து கிளம்பி போகவே சரியா இருக்கு, அத்தை தான் எல்லா வேலையும் பார்த்துக்கிறாங்க, இதில் சாயந்தரமும் நான் வந்து தூங்கினா நல்லா இருக்குமா? அத்தை ஒன்னும் சொல்ல மாட்டாங்க தான், ஆனா பாவம் அவங்களே எல்லா வேலையும் தனியா செய்வாங்க, ஸ்கூலில் பாடம் எடுக்கும் நேரம் போக நான் உட்கார்ந்துட்டு தானே இருப்பேன். எனக்கு இதில் ஒன்னும் கஷ்டமில்லை.” என்று கூறுவாள். ஆனால் இரண்டு மூன்று நாட்களாக எப்போதையும் விட சோர்வும் அசதியும் அதிகமாக இருக்கிறது. கூடவே இந்த தலைச்சுற்றலும் கூட,
அதெல்லாம் யோசித்தப்படி அமர்ந்திருந்தவள், மீண்டும் வேலையில் தனது கவனத்தை திசை திருப்ப நினைக்க, அதற்கு அவள் உடல்நிலை ஒத்துழைக்கவில்லை. மொத்தமாக ரெக்கார்ட் நோட்டுகளை வண்டியில் எடுத்து கொண்டு போக முடியாது என்பதால், பாதியையாவது இங்கேயே திருத்திவிட்டு போகலாம் என்று நினைத்தாள். இப்போது அவள் உடல் இருக்கும் நிலைக்கு சிறிதுநேரம் கூட தாக்குப்பிடிக்க முடியாது போல, தனியாக வண்டியை ஓட்டிக் கொண்டும் போக முடியாது. அதனால் சக்தியை அழைத்து காரை எடுத்துக்கொண்டு வரச் சொல்லலாம் என்று அவள் அலைபேசியை கையில் எடுத்த நேரம், “டீச்சர்,” என்று ஒரு குரல் கேட்டது.
அவள் பாடம் எடுக்கும் ஒன்பதாம் வகுப்பு மாணவி மலர் தான் அவளை தேடி வந்திருந்தாள். அவளைப் பார்த்து, “என்ன மலர், பிள்ளைங்க எல்லாம் கிளம்பிட்டாங்க, நீ இன்னும் வீட்டுக்குப் போகலையா?” என்று சிவமித்ரா கேட்க,
“உங்களிடம் கொஞ்சம் பேசணும் டீச்சர், அதுவும் தனியா, இன்னைக்கு விட்டா எப்போதும் பேச முடியாது. இன்னைக்கு கணக்கு வாத்தியார் வரல, அதனால இன்னைக்கே பேசியாகணும்,” என்ற அந்த மாணவியின் பேச்சைக் கேட்டு, சிவமித்ராவிற்கு என்னவாக இருக்கும் என்பதாக மனதில் கொஞ்சம் திகில் பரவ செய்தது.
அதை அதிகப்படுத்துவது போல், “இப்போ புதுசா வந்த கணக்கு வாத்தியார் என்னிடம் தப்பு தப்பா பேசறார் டீச்சர், அதில்லாம போனில் தப்பு தப்பா மெசேஜும் அனுப்பறார். அதில்லாம அவர் சொல்றதை கேட்கணும், இதைப்பத்தியெல்லாம் யாரிடமும் சொல்லக் கூடாது. சொன்னா முழுப் பரிட்சையில் உன்னை பெயிலாக்கிடுவேன்னு பயமுறுத்துறாரு டீச்சர். எனக்கு அவர் பேசறது எதுவும் பிடிக்கல, இதை யாரிடம் சொல்றதுன்னும் தெரியல, நீங்க எங்களிடம் ஃப்ரண்ட்லியா இருப்பீங்க, அதான் உங்களிடம் இந்த விஷயத்தை சொல்லணும்னு காத்திருந்தேன்.” என்று அந்த மாணவி அழுதப்படியே விஷயத்தை கூறினாள்.
அந்த மாணவி சொன்ன அந்த கணக்கு வாத்தியார் ரத்தினபாண்டி. அவனுக்கு எப்படியோ கிட்டத்தட்ட ஐம்பது வயதிருக்கும், ஒரு மாதத்திற்கு முன்பு தான் இங்கு மாற்றலாகி வந்திருக்கிறான் அவன், வந்ததிலிருந்தே அவன் ஆசிரியைகளை பார்க்கும் பார்வையோ பேச்சோ சரியில்லையென்று மற்ற ஆசிரியைகள் இவளிடம் சொல்லியிருக்கின்றனர். இவள் தலைமை ஆசிரியரின் மருமகள் என்பதால் இவளிடம் அவன் அப்படி நடந்து கொள்ளவில்லை போலும், மேலிடத்தில் அவனைப்பற்றி புகாரளிக்க வேண்டுமென்று சிறிதுநாளுக்கு முன்பு ஆசிரியைகள் சேர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது,
“அவன் இந்த தொகுதி எம்.எல்.ஏ வின் சிபாரிசில் தான் இங்க மாற்றாலாகி வந்திருக்கான். அதனால நாம கொடுக்கும் புகாரில் அவன்மீது நடவடிக்கை எடுப்பாங்களா தெரியல,” என்று ஒரு ஆசிரியை விவரத்தை கூற,
“அதுக்குன்னு எவ்வளவுநாள் இவனை நாம சகிச்சிக்க முடியும்?” என்று மற்ற ஆசிரியைகள் கேட்டனர்.
“ஹெச்.எம் உங்க மாமனர் தானே மித்ரா, நீங்க பர்சனலா அவரிடம் அந்த ஆளைப் பத்தி சொல்லி, ஏதாவது நடவடிக்கை எடுக்க சொல்லுங்க,” என்று அனைவரும் இவளிடம் கேட்க, சிவமித்ராவும் கண்ணப்பனிடம் இதைப்பற்றி பேச வேண்டுமென்று நினைத்திருந்தாள். அந்த ஆள் இப்போது மாணவிகளிடமே தன் வேலையை காட்டுவான் என்று அவள் எதிர்பார்க்கவில்லை. இதற்கு உடனே ஏதாவது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று நினைத்தவள்,
“அந்த ஆள் உனக்கு செய்த மெசெஜெல்லாம் இருக்கா,” என்று அந்த மாணவியிடம் கேட்க,
“இல்லை டீச்சர், யாராச்சும் பார்த்துடுவாங்களோன்னு நான் எல்லாம் டெலீட் செய்துடுவேன்.” என்றாள் அந்த குழந்தை.
“சரி, இனி அந்த ஆள் ஏதாவது மெசேஜ் செய்தா அதை டெலீட் செய்யாத, அவன் என்ன பேசறானோ எனக்கும் சொல்லு,” என்று சிவமித்ரா கூற, அப்படியானால் இன்னும் அந்த ஆள் தன்னை தொந்தரவு செய்வானா?” என்று மிரட்சியோடு அந்த மாணவி பார்க்க,
“பயப்படாத, சீக்கிரமே இதுக்கு ஏதாவது நடவடிக்கை எடுக்கப் பார்க்கிறேன். அவன் செய்ததுக்கு ஏதாவது ஆதாரம் வேணுமில்ல, அதுக்குத்தான் உன்னை இதெல்லாம் செய்ய சொல்றேன். நீ இப்போ வீட்டுக்கு போ.” என்று அந்த மாணவியிடம் கூறி அந்த குழந்தையை அனுப்பி வைத்த சிவமித்ராவிற்கு அடுத்து என்ன செய்வதென்று புரியவில்லை.
இன்று பார்த்து கண்ணப்பன் பள்ளிக்கு வரவில்லை. அவர் உடம்பில் சர்க்கரை அளவு கூடியிருந்ததால் மருத்துவரை பார்க்க வேண்டுமென்று விடுமுறை எடுத்திருந்தார். ஆனால் துணை தலைமை ஆசிரியர் இன்னும் வீட்டிற்கு போகாமல் இருக்கவும், அவரிடம் இதைப்பற்றி சொல்லி வைக்கலாம் என்று அவரை பார்க்க சென்றவள், அந்த மாணவி சொன்னதை கூற,
“அந்த ரத்தினபாண்டி இந்த தொகுதி எம்.எல்.ஏ சிபாரிசில் வந்தவன் மித்ரா. எம்.எல்.ஏ க்கு சொந்தம்னு வேற சொல்லிக்கிட்டான். அந்த எம்.எல்.ஏ முன்ன ரவுடியா இருந்து தான் இப்போ எம்.எல்.ஏ ஆகியிருக்கார். கூட ஆளுங்கட்சி வேற, அதனால இந்த பிரச்சனையை பெருசாக்கினா அந்த ஸ்டூடன்ட் வீட்டுக்கு மட்டுமில்ல உங்க வீட்டுக்கு எங்க வீட்டுக்குன்னு எல்லோருக்கும் பிரச்சனை கொடுப்பார் ம்மா அந்த எம்.எல்.ஏ,” என்று துணை ஆசிரியர் கூறவும்,
“அதுக்காக அப்படியே விட்றதுக்கு இது சாதாரண பிரச்சனையில்லை சார். தன்னோட பேத்தி வயசு உள்ள குழந்தைக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கிறார் அந்த ஆளு, இதை கண்டுக்காம விட்டு இது பயங்கரத்தில் போய் முடிஞ்சா என்னாகறது?” என்று கேட்டாள் சிவமித்ரா.
“எனக்கு புரியுது ம்மா, நான் கண்டுக்காம விடச் சொல்லல, நான் ரத்தின பாண்டியை கண்டிக்கிறேன். உடனே பேசறேன். அதனால நீ ஏதும் அவசரப்படாத, நம்ம ஹெச்.எம்க்கு விவரம் தெரிய வேண்டாம், தெரிஞ்சா உடனே ஆக்ஷன் எடுக்கணும்னு சொல்வாரு, எம்.எல்.ஏக்கு இருக்க பவர்க்கு நாம போலீஸ் போனாலும் ஆக்ஷன் எடுப்பாங்களான்னு தெரியல, தேவையில்லாம நம்ம எல்லோருக்கும் பிரச்சனையாகும் புரிஞ்சிக்க,” என்று அவர் மீண்டும் அதையே சொல்ல, அரசியல் பலம் உள்ள ஆள் என்பதால் இவர் சொல்வதுபோல் பெரிய பிரச்சனையாகுமோ என்று பயந்தவள், அவர் தான் அந்த ஆசிரியரிடம் பேசுவதாக சொல்லியிருக்காரே என்று அவர் சொன்னதற்கு தலையசைத்தாள்.
ஆனாலும் இது சரியான தீர்வா என்ற குழப்பமும் அவளுக்கு இருந்து கொண்டே இருந்தது. அதில் அவளது பிரச்சனை கூட பெரிதாக தெரியவில்லை. சக்திக்கு போன் செய்து கார் எடுத்து வரச் சொல்ல நினைத்ததையும் மறந்தவள், அவளின் வண்டியிலேயே வீடு வந்து சேர்ந்தாள்.
வீட்டினுள் நுழையும்போதே கண்ணப்பன் தான் அவளை வரவேற்றவர், “என்னம்மா இவ்வளவு நேரம்?” என்று அவளிடம் கேட்க,
“ரெகார்ட் நோட் திருத்த வேண்டியதா இருந்துச்சு மாமா, அத்தையிடம் காலையிலேயே சொல்லிட்டு தான் போயிருந்தேன்.” என்று பதில் கூறினாள்.
“உன் அத்தை சொன்னா ம்மா, ஆனாலும் அப்பப்போ கொஞ்சம் கொஞ்சமா திருத்த வேண்டியது தானே, ஏன் ஒட்டு மொத்தமா செய்ற?” என்று அவர் கேட்க,
“நேத்து தான் கடைசி தேதின்னு சொல்லியிருந்தேன். ஆனா இன்னைக்கு தான் நிறைய பேர் முடிச்சு கொடுத்தாங்க, அதான் எக்ஸாம்குள்ள திருத்தணுமில்ல,” என்று அவள் காரணத்தை கூறவும், அவரால் அதை புரிந்து கொள்ள முடிந்தது.
“சரிம்மா நீ ஃப்ரஷ் ஆகிட்டு வா, நான் தேவிகாவிடம் நீ வந்ததை சொல்றேன்.” என்று அவர் கூற,
அவரிடம் பள்ளியில் நடந்த விஷயத்தை கூறிவிடலாமா? என்று ஒரு நொடி யோசித்தவள், பின் துணை தலைமை ஆசிரியர் சொன்னது நினைவிற்கு வரவும், இரண்டு நாட்கள் பொறுத்திருந்து பார்ப்போம் என்று அமைதியாகிவிட்டாள். ஆனாலும் இது சரியான தீர்வா? அந்த மாணவி தன்னை நம்பி சொன்னதற்கு அவளுக்கு அநியாயம் செய்கிறோமா? என்றெல்லாம் நினைத்து குழப்பிக் கொண்டவளுக்கு, ஏற்கனவே அவள் உடல் பிரச்சனையும் சேர்ந்து கொண்டதால், தேவிகா கொடுத்த தேனீரை குடித்துவிட்டு போய் பேசாமல் படுத்துக் கொண்டாள். ஆனால் உறக்கம் வரவில்லை.