வெளியில் இருந்தவர்களுக்கு சக்திவாசன் கோபமாக கத்துவது கேட்டு, எல்லாம் அங்கு வந்தவர்கள், சிவமித்ரா அவனது அறையில் இருப்பதை புரியாமல் பார்க்க, “அய்யோ இது எங்க ரூம்னு நினைச்சிட்டு இங்க வந்துட்டியா ம்மா, இப்போ இது சக்தி ரூம். அதை உனக்கு சொல்லி அனுப்பியிருக்கணும், என்னோட தப்பு தான்,” என்ற கண்ணப்பன்,
அதற்காக தான் மகன் கோபமாக பேசுகிறானோ என நினைத்து, “தெரியாம தானே டா உன்னோட ரூம்க்குள்ள வந்துட்டா, அதுக்கு இப்படியா கத்துவ?” என்று மகனிடம் கேட்க, அவனோ அவரையும் முறைத்தான்.
அங்கிருந்து அனைவரும் வெளியே வந்ததும், “திடீர்னு இவனுக்கு என்னாச்சுன்னு தெரியலையே, இப்படி முறைச்சிட்டு நிக்கறான்.” என்று கண்ணப்பன் தனக்குள்ளேயே பேசியப்படி வர,
“காலையிலிருந்து நல்லா தானே இருந்தான். இப்போ அவன் இப்படியிருக்கான்னா அதுக்கு காரணம் தெரிய வேண்டாமா உங்களுக்கு,” என்று அருகில் வந்து கொண்டிருந்த தேவிகா கணவரிடம் கூற,
மனைவியை முறைத்த கண்ணப்பன், “வந்திருக்கவங்க காதில் விழப் போகுது,” என்றார்.
அதன்பின், “அவன் சார்பா நான் உன்கிட்ட மன்னிப்பு கேட்டுக்கிறேன் ம்மா,” என்று கண்ணப்பன் சிவமித்ராவிடம் மன்னிப்பு கேட்க,
“அய்யோ மாமா, நீங்க போய் என்கிட்ட மன்னிப்பெல்லாம் கேட்டுக்கிட்டு, தப்பு என்மேல தான் மாமா,” என்றாள்.
அவன் அறைக்கு சென்றதை சொல்கிறாள் என்று நினைத்து, “தெரியாம தானே ம்மா போன,” என்று கண்ணப்பன் கூற, அங்கு அவள் பேசியதை சொல்ல முடியாமல் அமைதியாகிவிட்டாள்.
அடுத்து ராஜலஷ்மி குளிப்பதற்கு சென்றுவிட, சென்னையிலிருந்து கிளம்பும் போது இவர்களின் பொருட்களை ஒரு ஏஜென்ஸி மூலம் இங்கு கொண்டு வர ஏற்பாடு செய்திருந்தனர். அவர்கள் இன்னும் பொருட்களை எடுத்து வரவில்லையே என்று சிவமித்ரா அந்த ஏஜென்ஸிக்கு பேசி வண்டி எப்போதும் வரும் என்று கேட்டு தெரிந்து கொண்டவள், அலைபேசியை அணைத்துவிட்டு வரும்போது,
“என்னம்மா இது, சக்திக்கு கல்யாணம் நடக்க போற சமயமா பார்த்து இந்த பொண்ணு வந்திருக்கு, அதுவும் புருஷன் வேற உயிரோட இல்லன்னு சொல்றாங்க, ஏற்கனவே சக்தியை இந்த கல்யாணத்துக்கு ஒத்து வைக்க இவ்வளவு காலம் ஆச்சு, நாலு நாளில் கல்யாணம்னு இருக்கப்போ என்னம்மா இப்படி ஒரு பிரச்சனை?” என்று அவர்களின் உறவுக்கார பெண்மணி ஒருவர் தேவிகாவிடம் கேட்டு கொண்டிருப்பது, எதைச்சேயாக சிவமித்ரா காதிலும் விழுந்தது.
“நானும் அதையே தான் நினைச்சேன் அண்ணி. அந்த பொண்ணுக்கு நடந்தது எனக்கும் கஷ்டமா தான் இருக்கு, ஆனா அவங்க இந்தநேரம் பார்த்தா வரணும், பாருங்க காலையில் என் பையன் முகம் எவ்வளவு தெளிவா இருந்துச்சு, இப்போ எப்படி கத்தினான்னு பார்த்தீங்கல்ல, எல்லாம் இந்த மனுஷனை சொல்லணும், வந்தவங்களிடம் சாவியை கொடுத்து அனுப்பாம வீட்டுக்குள்ள கூப்பிட்டு உபசரிச்சிட்டு இருக்காரு,” என்று தேவிகாவும் பதிலுக்கு பேச, அதற்கு மேலும் அவர்கள் பேசுவதை கேட்க பிடிக்காமல், அவள் அங்கிருந்து நகர்ந்து வந்துவிட்டாள்.
அதன்பின்பு அந்த வீட்டிலும் அவளுக்கு இருக்க பிடிக்கவில்லை. ராஜலஷ்மி வந்ததும், “அம்மா வீட்டுக்கு போகலாம் ம்மா,” என்று அவரை அவசரப்படுத்த,
“இவ்வளவு நடந்ததுக்கு பிறகும் கண்ணப்பன் அண்ணன் நம்மளிடம் எப்படி நடந்துக்கிறார். அவரை உதாசினப்படுத்திட்டு போறதா, அதில்லாம விசேஷம் நடக்கும் வீட்டில் அவங்க சொல்லியும் சாப்பிடாம போனா அது நல்லதுக்கில்லை.” என்று ராஜலஷ்மி சொல்லவும், சிவமித்ராவிற்கும் அது சரியென்றுபடவே அத்துடன் அமைதியாகிவிட்டாள்.
நல்லவேளை வீட்டு முற்றத்தில் பந்தி பரிமாறவே மீண்டும் வீட்டுக்குள் போக வாய்ப்பில்லாமல் இருவரும் அங்கேயே சாப்பிட்டார்கள். அடுத்து இருவரையும் கண்ணப்பன் அங்கேயே ஓய்வெடுக்க கூற, அதை எப்படி தவிர்ப்பது என்று அவர்கள் யோசித்த நேரம், ஏஜென்சி மூலம் ஏற்றி அனுப்பி வைத்த பாத்திர பண்டங்கள் வந்துவிட்டதாக சிவமித்ராவிற்கு அழைப்பு வரவும், அதையே காரணமாக கூறி வீட்டிற்கு செல்வதாக அவள் கூறினாள்.
கண்ணப்பனும் அதற்கு ஒத்து கொண்டவர், “சக்தி, பாத்திரம் பண்டமெல்லாம் இறக்கி வைக்க நீயும் போய் கொஞ்சம் ஒத்தாசை செய்ப்பா,” என்று மகனுக்கு உத்தரவு போட, இதை எப்படி தவிர்ப்பது என்று மீண்டும் சிவமித்ரா யோசித்த நேரம்,
“முகூர்த்த கால் நட்டு நலங்கு வச்சிருக்கு, கல்யாண மாப்பிள்ளை அவனைத்தான் அனுப்பணுமா? வேற யாரையாச்சும் அனுப்புங்க,” என்று தேவிகா கணவரிடம் கூறினார்.
“வீடு சுத்தம் செய்ய நம்ம சக்கரை ஆலையில் வேலை செய்யும் முருகனை தான் அனுப்பிச்சிருக்கேன். அவனே எல்லாம் பார்த்துப்பான்.” என்று இப்போது சக்திவாசன் பதில் கூறவும், பின் இருவரும் அவர்களின் வீட்டிற்கு கிளம்பினர்.
சக்தி சொன்னது போல் முருகனும், அவன் கூட்டி வந்த ஆட்களும் பாத்திர பண்டங்களை ஏற்றி வந்த ஆட்களையும் வைத்து ஓரளவிற்கு பொருட்களையெல்லாம் அந்தந்த இடத்தில் வைத்துவிட்டனர். வீட்டையும் நன்றாகவே சுத்தப்படுத்தி இருந்தனர். கிணற்றை சுத்தப்படுத்த நாளைக்கு ஆள் வருவார்கள் என்று சொல்லி, இப்போதைக்கு உபயோகிக்க தேவையான தண்ணீரும் பிடித்து வைத்திருந்தனர்.
இப்போதைக்கு இவர்களுக்கு ஒரே வேலை சமையலறையில் பாத்திரங்களை ஒழுங்கு படுத்துவது தான், இதில் கண்ணப்பன் ராஜலஷ்மியின் அலைபேசி எண்ணை வாங்கி வைத்திருந்தவர், மதியத்திற்கும் வீட்டிலிருந்து சாப்பாடு கொடுத்தனுப்புவதாக கூறிவிடவே, “விடியக்காலை எழுந்தது மித்தும்மா, அதனால் கொஞ்சநேரம் ரெஸ்ட் எடுத்துட்டு அப்புறம் சாயந்தரமா இதெல்லாம் பார்த்துக்கலாம்,” என்று சொல்லி ஓய்வெடுக்க அவருக்கான அறைக்குள் சென்றுவிட்டார்.
சொந்த ஊருக்கும், சொந்த வீட்டிற்கும் வந்த நிம்மதியில் அவர் படுத்ததும் உறங்கியும் போனார்.
ஆனால் சிவமித்ராவால் உறங்க முடியவில்லை. இந்த ஊர் வேண்டாம், இந்த ஊரில் வேலை வேண்டாம், இந்த ஊரில் வாக்கப்பட வேண்டாம் என்று ஆசைப்பட்டு சென்னைக்கு சென்றாள். ஆனால் விதி மீண்டும் இந்த ஊருக்கே அவளை அழைத்து வந்திருக்கிறது. எதையெல்லாம் வேண்டாமென்று மறுத்தாளோ அந்த விதி அதை அவளுக்கு திருப்பி கொடுத்திருப்பதை நினைத்து ஏன் இப்படி என்று புரியாமல் யோசித்து கொண்டிருந்தவளுக்கு, இன்னுமே விதியின் விளையாட்டு முடியவில்லை என்பது அப்போது அவளுக்கு தெரியவுமில்லை.
அதன்பின் சமையலறையில் பாத்திரங்களை ஒழுங்கு படுத்தவென அன்றைய பொழுது போய்விட, கண்ணப்பன் வாத்தியார் வீட்டில் கொடுத்தனுப்பிய உணவு அன்று இரவிற்கும் சேர்த்து இருவருக்கும் போதுமானதாக இருந்துவிடவே, ஏற்கனவே புழங்கிய வீடாக இருந்தாலும், நீண்ட காலமாக புழங்காமல் இருந்ததால், அன்னை, மகள் இருவர் மட்டுமே மறுநாள் காலையில் எளிமையாக பால் காய்ச்சி பூஜை செய்து அவர்கள் வீட்டில் அன்றைய நாளை ஆரம்பித்தனர்.
அடுத்து பள்ளியில் அன்று வேலைக்கு சேர வேண்டுமென்பதால், சிவமித்ரா அதற்கு தயாராகி கொண்டிருக்க, ராஜலஷ்மி அப்போதைக்கு தேவையான சில பொருட்களை அங்கிருந்த ஒரு சிறிய கடையில் வாங்கி எளிமையாக காலைக்கும் மதியத்திற்கும் சேர்த்து சமைத்தவர், “ஞாயிற்றுக்கிழமை டவுனுக்கு போய் மளிகையெல்லாம் வாங்கிட்டு வரணும் மித்து ம்மா, இங்க பக்கத்து கடையில் எல்லாம் விலைவாசி அதிகமா இருக்கு,” என்றார்.
“சரி ம்மா,” என்ற சிவமித்ரா அவள் வேலையை பார்த்து கொண்டிருக்க, அப்போது ராஜலஷ்மி அலைபேசி இசைத்தது.
“சக்தி அப்பா தான் கூப்பிட்றார்.” என்று மகளிடம் சொல்லியபடி அலைபேசி அழைப்பை ஏற்றவர்,
“சொல்லுங்க அண்ணா” என்று பேச,
“சிவா இன்னைக்கு ஸ்கூலில் வேலைக்கு சேரணுமில்ல ராஜி ம்மா, நான் ஸ்கூல் பக்கமா தான் போறேன். நானே சிவாவை ஸ்கூலில் இறக்கி விட்றேன்.” என்று கண்ணப்பன் கூறவும்,
“உங்களுக்கு எதுக்கு ண்ணா சிரமம், அவளே தனியா போய்க்குவா, அதுவும் இப்போ தான் கிளம்பிட்டு இருக்கா, இன்னும் சாப்பிட வேற இல்லை, எப்படியோ அவ கிளம்ப இன்னும் கால் மணி நேரமாவது ஆகும்,” என்று மகளின் மனம் அறிந்து ராஜலஷ்மியே அதை தட்டி கழிக்க பார்த்தார்.
“நான்தான் அந்தப்பக்கமா போறதா சொல்றேனே, அப்புறம் என்னம்மா எனக்கு சிரமம், நடந்தே போனாலும் இங்க இருந்து நம்ம ஊர் ஸ்கூல் ரொம்ப தூரம்னு உனக்கு தெரியாதா? கால் மணி நேரம் கழிச்சு நான் வீட்டு முன்ன வந்து ஹாரன் அடிக்கிறேன். சிவாவை வரச் சொல்லு,” என்று கண்ணப்பன் அலைபேசி அழைப்பை அணைத்திட,
கண்ணப்பன் கூறியதை மகளிடம் ராஜலஷ்மி அப்படியே கூறவும், “எதுக்கும்மா அவங்களுக்கு அடிக்கடி தொந்தரவு கொடுத்துக்கிட்டு, நானே போய்க்குவேன்.” என்றாள் சிவமித்ரா,
“நான் சொல்லாமலா இருந்திருப்பேன். நான் அந்தப்பக்கம் தான் போறேன். எனக்கு அதில் ஒன்னும் சிரமம் இல்லைன்னு சொல்றவரிடம் எப்படி மறுத்து பேச சொல்ற, இன்னைக்கு ஒருநாள் தானே போகப் போற, நாளையிலிருந்து நீ தனியா தானே போகணும், நடந்ததெல்லாம் மனசுல வச்சிக்காம பழகறவரிடம் நாம வெட்டி ஒதுக்கி பேச முடியாது.” என்று பேசி ராஜலஷ்மி மகளை சம்மதிக்க வைத்தவர்,
“கால்மணி நேரத்தில் நீ ரெடியா இருப்பன்னு நான் அண்ணனிடம் சொல்லிட்டேன். அதனால சீக்கிரம் வந்து சாப்பிடு,” என்று மகளுக்கு உணவு எடுத்து வைக்கச் சென்றார்.
அன்னை கொடுத்த காலை உணவை உண்டு முடித்து மதிய உணவை கைப்பையில் எடுத்து வைத்து கொண்டிருக்கும்போது வாசலில் ஹாரன் சத்தம் கேட்கவும், “சரிம்மா, மாமா தான் ஹாரன் அடிக்கிறார் போல, அப்போ நான் கிளம்பட்டுமா?” என்று கைப்பையை மாட்டி கொண்டு சிவமித்ரா அன்னையிடம் விடைபெற, ராஜலஷ்மியும் வாசல் வரை வந்தார்.
வாசலில் சாம்பல் நிற கார் நின்று கொண்டிருக்க, அந்த காரின் முன்புறம் ஓட்டுநருக்கு அருகில் அமர்ந்திருந்த கண்ணப்பன் அவளைப் பார்த்து புன்னகைத்தவர், “ஏறிக்கோ ம்மா,” என்று பின்பக்கத்தை காட்டி சொல்ல, மீண்டும் அன்னையிடம் விடைப்பெற்றவள் காரில் ஏறிக் கொண்டாள்.
ஏறிய பின்பு, “ஸ்கூல் பக்கமா போறதா அம்மா சொன்னாங்களே, ஏதாச்சும் முக்கியமான வேலையா மாமா,” என்று அவரிடம் கேட்டவள், அப்போது தான் காரின் ஓட்டுநர் இருக்கையில் சக்திவாசன் அமர்ந்திருப்பதை கவனித்தாள்.
‘அய்யோ இவனா? இவன் காருக்குள்ள இருப்பது தெரிஞ்சிருந்தா காருக்குள்ளேயே ஏறியிருந்திருக்க மாட்டேனே, இப்போ இறங்கவும் முடியாதே, நேத்தே ஓவரா கோபப்பட்டான். இப்போ ஏதாவது சிடுசிடுப்பானா?’ என்று அவள் நினைக்க, ஆனால் அவனோ அவள் எதிர்பார்த்தது போல் நடந்து கொள்ளாமல், அமைதியாக கார் ஓட்டினான்.
கண்ணப்பன் அவளிடம் பேசி கொண்டு வர, அவளும் அதற்கு பதில் கூறியபடி வந்தாள். பத்து நிமிடத்தில் பள்ளி வரவும், காரை பள்ளி வாசலில் நிறுத்தினான் சக்திவாசன்.
அப்போது தான் பள்ளிக்கூடத்திற்கு வந்துவிட்டதை கவனித்தவள், “நாம வந்தது நம்ம வீட்டிலிருந்து வழக்கமா வர இடம் போல இல்லையே மாமா, அதுவுமில்லாம சீக்கிரம் வேற வந்துட்டோம்,” என்று அவள் வியப்பாக கேட்க,
“ஆமாம் ம்மா, ஒரு குறுக்கு வழி இருக்கு, அந்த வழியா தான் சக்தி கார் ஓட்டிட்டு வந்தான்.” என்று கண்ணப்பன் பதில் கூறினார்.
“அய்யோ நான் கவனிச்சு பார்க்கலையே, தெரிஞ்சிருந்தா வழியை பார்த்து வச்சிருந்திருப்பேன். நாளைக்கு தனியா வரும்போது எனக்கும் எப்படி வரணும்னு தெரிஞ்சிருக்கும்,” என்று சொல்லியப்படியே காரிலிருந்து இறங்கியவள்,
“ஸ்கூல் வரைக்கும் வந்து இறக்கி விட்டதுக்கு ரொம்ப நன்றி மாமா, என்னால உங்க வேலை லேட்டாகப் போகுது, நீங்க கிளம்புங்க மாமா,” என்று அவள் கண்ணப்பனிடம் கூற, அவரோ சரியென்று விடைபெறாமல் காரிலிருந்து இறங்கினார்.
“அதான் ஸ்கூலுக்கு வந்தாச்சே, நான் இதுக்கு மேல போய்ப்பேன்.” என்று அவர் எதற்கு இறங்குகிறார் என்பது தெரியாமல் பேச,
அவரோ, “இந்த பள்ளியோட தலைமை ஆசிரியரா புது டீச்சரை நான் வரவேற்க வேண்டாமா?” என்றார்.
அவர் சொன்னதற்கேற்றார்போல், அப்போது பள்ளிக்கு வந்து கொண்டிருந்த மாணவ மாணவிகளும் தலைமை ஆசிரியர் என்பதால் அவருக்கு வணக்கம் வைத்துவிட்டு வேறு செல்ல, சிவமித்ராவோ வியப்பாகி போனவள்,
“மாமா, நீங்க தான் இந்த ஸ்கூல் ஹெச். எம்மா? நான் இப்படி ஒரு ட்விஸ்ட்டை எதிர்பார்க்கவே இல்லை. நீங்க பக்கத்து ஊர் ஸ்கூலில் தானே டீச்சரா வேலை பார்த்துட்டு இருந்தீங்க? இந்த ஸ்கூலில் எப்போ ஜாயின் செய்தீங்க? அதுவும் ஹெச்.எம்மா வேற ப்ரோமோஷன் கிடைச்சிருக்கு?” என்று கேள்விகளை அவள் அடுக்கி கொண்டே போக,
“வாம்மா அப்படியே பேசிட்டே ஆஃபிஸ் ரூம் போவோம்,” என்று கண்ணப்பன் அவளை அழைக்கவும், சிவமித்ராவும் உடன் நடக்க ஆரம்பித்தாள்.
“போனவருஷம் தான் ம்மா இந்த ஸ்கூலுக்கு ஹெச்.எம்மா ப்ரோமோஷன் கிடைச்சுது, இன்னும் ஒருவருஷம் தான் இங்க எனக்கு வேலை. அப்புறம் ரிடையர்மெண்ட் தான்,” என்று முழு விவரமாக அவர் கூறவும்,
“இந்த ஸ்கூலில் எல்லாம் எப்படி இருப்பாங்களோன்னு சின்ன பயத்தோட வந்தேன். நீங்க இங்க ஹெச்.எம்னு தெரிஞ்சதும் எனக்கு ரொம்ப சந்தோஷமா ஆகிடுச்சு மாமா,” என்று அவள் மகிழ்ச்சியாக கூறினாள்.
“நீ பிறந்து வளர்ந்த ஊர் இது, இங்க என்னம்மா உனக்கு தயக்கம்?” என்று கண்ணப்பன் கேட்க, புன்னகைத்து கொண்டவள்,
“நீங்க தினமும் காரில் தான் ஸ்கூலுக்கு வருவீங்களா? மாமா,” என்று கேட்டாள்.
“என்னோட டூவீலர் எடுத்துட்டு வருவேன் ம்மா, கொஞ்சம் பிபியோ சுகரோ அதிகமா இருந்தா அப்போ சக்தி காரில் கொண்டு வந்து விடுவான்.” என்று அவர் சொல்ல,
“இப்போ உங்களுக்கு அப்படி ஏதாச்சுமா மாமா,” என்று அவள் அக்கறையாக விசாரிக்க,
“அப்படி எதுவும் இல்லம்மா, சக்தி இந்தப்பக்கம் வேலை இருந்ததால், என்னை கூட்டிட்டு வந்தான்.” என்று கண்ணப்பன் பதில் கூறினார்.
“எனக்கு கூட ஒரு டூவீலர் இருந்தா ஸ்கூலுக்கு போயிட்டு வர வசதியா இருக்கும்,” என்று சிவமித்ரா கூற,
“உன்னோட கல்யாணத்துக்கு உன்னோட வீட்டில் வாங்கி கொடுத்த வண்டி என்னம்மா ஆச்சு, நீதான் அதை உபயோகிப்பதா ராஜவேலு அப்போ சொன்னானே, வந்த பாத்திர பண்டத்தில் வண்டில்லாம் இல்லன்னு முருகன் சொல்லிட்டு இருந்தான். அதான் நீ எப்படி வருவியோன்னு நானே கூட்டிட்டு போகலாம்னு நினைச்சேன்.” என்று கண்ணப்பன் கேட்கவும்,
ஏற்கனவே அவருக்கு விஷயம் தெரியுமென்பதால், “அஷோக் ட்ரீட்மென்ட்க்கு என்னோட டூவீலரும் விட்கிற மாதிரி ஆகிடுச்சு மாமா, அப்புறம் நாங்க வீடு மாறின இடத்திலிருந்து ஸ்கூல் பக்கம் என்பதால், ஸ்கூலுக்கு நடந்தே போயிட்டு வந்தேன். ஆனா இப்போ அவசியம் ஒரு வண்டி தேவை. ஆனா ரெடி கேஷ் கொடுத்து வாங்க முடியாது. இன்சால்ட்மென்ட்ல வாங்கினா மாசம் மாசம் பணம் கட்டி அடைச்சிடலாம்,” என்று அவள் விவரமாக சொல்லி முடித்தாள்.
“நீ சொல்றது நல்ல யோசனை தான்ம்மா, நம்ம சக்தியோட ஃப்ரண்ட் ஏஜென்ஸியிலேயே வண்டி புக் செய்துக்கலாம், சக்தி சொன்னா வட்டியும் குறைவா தான் ஆகும்,” என்று கண்ணப்பன் கூறியவர்,
“என்ன சக்தி, உன் ஃப்ரண்டோட ஏஜென்சியில் வாங்கிடலாமில்ல,” என்று கேட்க,
“ம்ம் வாங்கிடலாம் ப்பா,” என்ற சக்திவாசனின் பதிலை கேட்டு தான், அவனும் அவர்கள் பின்னே நடந்து வந்து கொண்டிருக்கிறான் என்பதே சிவமித்ராவிற்கு தெரிந்தது.
‘அய்யோ இவனா? இவன் எதுக்கு இங்க வரான்? ஸ்கூலில் இவனுக்கு என்ன வேலை? இவன் வருவது தெரியாம நாம பாட்டுக்கு பேசிட்டு வரோமே,’ என்று சிவமித்ரா மனதில் நினைத்து கொண்டவள்,
இன்சால்ட்மென்ட் என்றால் கூட கொஞ்சம் முன்பணம் வைக்க வேண்டும், அதற்கு இப்போது கையில் பணம் இல்லை என்பதால், “வண்டி வாங்கணும் தான் மாமா, ஆனா உடனே இல்லை. ஒரு ரெண்டுமாசம் போகட்டும்,” என்றாள்.
இன்னும் கொஞ்சநேரம் நடந்து வந்ததுமே சக்திவாசன் எதற்காக அங்கு வந்திருக்கிறான் என்ற கேள்விக்கு உடனே அவளுக்கு விடையும் கிடைத்தது. பள்ளியின் உள்ளே ஏதோ கட்டிட வேலை நடந்து கொண்டிருக்க, “சிமெண்ட், கல்லு, மண்ணு இதெல்லாம் தேவைப்படுதா? டவுன் பக்கம் போறேன். எது வேணுமோ கடையில் சொல்லி அனுப்பினா, அவங்க அனுப்பி விட்ருவாங்க,” என்று சக்திவாசன் அங்கு நின்றிருந்த பணியாளரிடம் கேட்க,
அவரும் என்னென்ன தேவையோ அதை அவனிடம் கூறினார். “சரி ப்பா, கடைக்கும் போனதும் பொருளை அனுப்பி விட்றேன். இறக்கும்போது சொன்னதெல்லாம் சரியா வந்துருக்கான்னு நீங்க ஒருமுறை பார்த்துக்கோங்க,” என்று தந்தையிடம் சொல்லிவிட்டு சென்றவன், உடனிருந்தவளிடம் மருந்துக்கும் பேசவில்லை.
‘சார்க்கு கோபமோ, இவர் பேசலன்னா அப்படியே நாங்க சோகமாகிடுவோமா? பேசலன்னா எனக்கென்ன வந்துச்சு,’ என்று அவளிடம் பேசாமல் செல்பவனை பற்றி சிவமித்ரா நினைக்க,
தந்தையிடம் மாமா மாமா என்று அக்கறையாக பேசும் அவள் அவனுக்கு புதிதாக தெரிந்தாள். இதற்கு முன் அவன் தந்தையிடம் அவள் இப்படி பேசி சக்திவாசன் பார்த்ததே இல்லை. அவளின் அன்னையும் தந்தையும் பழகுவது போல், அவள் அவர்களிடம் அத்தனை நெருக்கம் காட்ட மாட்டாள். ஆனால் அவள் வாழ்க்கையில் நேர்ந்த அனுபவங்கள் அவளை மாற்றிவிட்டது போலும், என்று அவளைப்பற்றி யோசித்தப்படி தான் சக்திவாசன் சென்று கொண்டிருந்தான்.