ஒருவாரமாக ஓடிக் கொண்டிருந்த பிரச்சனை ரத்தினபாண்டியை போக்ஸோ வழக்கில் கைது செய்தபின் ஒரு முடிவிற்கு வந்தது என்று சொல்லலாம், கண்ணப்பனும் சிவமித்ராவும் பள்ளி சார்பாகவே ரத்தினபாண்டி மீது காவல்நிலையத்திற்கு சென்று புகார் கொடுத்ததும், அவனை கைது செய்து கூட்டி வந்தாலும் அவன் எம்.எல்.ஏ க்கு தெரிந்தவன் என்பதால் அவன் மேல் எந்த வழக்கும் போடாமல் வைத்திருந்தனர்.
பின் சக்திவாசன் ஊடகத்துறைக்கு விஷயத்தைக் கூறி அவர்களை வரவைக்கவும், மாணவியின் குடும்பத்தினர் மட்டுமல்லாமல் மொத்த ஊர்க்காரர்களும் போராட்டத்தில் ஈடுபடவும் தான் காவல்துறையினர் அவன் மீது வழக்கு தொடர்ந்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவன் இன்னுமே இரண்டு மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரிய வந்தது.
பிரச்சனை பெரிது என்பதால் எம்.எல்.ஏ இதில் வெளிப்படையாக தலையிடவில்லை. ஆனாலும் மறைமுகமாக ரத்தினபாண்டியை வழக்கிலிருந்து மீட்க முயற்சி செய்துக் கொண்டிருந்தார்.
நேராக வீட்டிற்கே வந்து கண்ணப்பனை பார்த்து, “இந்த கேஸ்ல இருந்து நீங்களும் உங்க மருமகளும் ஒதுங்கிக்கங்க வாத்தியாரே, நான் அதை வேற மாதிரி பார்த்துக்கிறேன்.” என்று அவர் சொல்ல,
“அது எப்படி? நான் தலைமை ஆசிரியரா பொறுப்பில் இருக்கும் ஸ்கூலில் இப்படி நடந்திருக்கு, நான் அதை கண்டுக்காம போனா அந்த தப்புக்கு நானும் உடந்தையா ஆன மாதிரி தானே, அதை என்னால செய்ய முடியாது.” என்று கண்ணப்பன் தீர்மானமாக கூறினார்.
“இந்த கேஸ்ல என் அப்பாவும் மனைவியும் ஒதுங்கி போகக் கூடாது. ஒரு அயோக்கியனுக்கு சப்போர்ட் செய்துட்டு வராம நீங்கத்தான் ஒதுங்கி போகணும், அவன் உங்களுக்கு சொந்தக்காரன்னு எங்களுக்கு தெரியும், ஆனா நாங்க அதை மீடியா முன்ன பேசல, இப்படி அவனுக்கு சப்போர்ட்க்கு வந்து, நீங்க அவனை காப்பாத்த நினைக்கறீங்கன்னு பேச வச்சிடாதீங்க,” என்று சக்திவாசன் கோபப்பட,
“தம்பி, இதில் உங்களுக்கு என்ன சம்பந்தம், பள்ளியில் வேலைப் பார்ப்பது உங்க அப்பாவும் மனைவியும் மட்டும் தானே, அவங்கக்கிட்ட நான் பேசறேன். நீங்க ஏன் வரீங்க?” என்று எம்.எல்.ஏ கேட்கவும்,
“அதே கேள்வியை நான் கேட்கலாம், தப்பு செய்தவனுக்கு நீங்க ஏன் சப்போர்ட் செய்துட்டு வரீங்க, அதுவுமில்லாம நடந்த அநியாயத்துக்கு யார் வேணும்னாலும் பேசலாம்,” என்றான் சக்தி.
“கடைசியா என்ன சொல்ல வரீங்க வாத்தியாரே, நீங்களோ உங்க மருமகளோ இது சம்பந்தமா வாய் திறக்கக் கூடாது. அப்படி இல்லன்னா என் உண்மையான சுயரூபத்தை பார்ப்பீங்க,” என்று இப்போது அவர் மிரட்ட ஆரம்பிக்க,
“நாங்க பின்வாங்க மாட்டோம், இந்த வழக்கில் அவனுக்கு நாங்க தண்டனை வாங்கி கொடுப்போம்,” என்று கண்ணப்பன் உறுதியாக கூறினார்.
“உங்க மிரட்டலுக்கெல்லாம் பயப்பட மாட்டோம்னு சொல்லாம சொல்றாரு. அது உங்களுக்கு புரியலையா? முதலில் இங்க இருந்து கிளம்புங்க,” என்று சக்தி கூறவும், அவரும் அவனை முறைத்துவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டார்.
கடைசியாக மாணவிக்கு ரத்தினபாண்டி அனுப்பிய குறுந்தகவலை மாணவி அழிக்காமல் வைத்திருந்தது. தொழில்நுட்பம் மூலம் அழிந்த ரத்தினபாண்டியனின் அலைபேசியில் குறுந்தகவல்களை மீட்டெடுத்தது. அவன் அலைபேசியில் பேசிய பதிவு இதெல்லாம் அவன் மேல் உள்ள குற்றத்தை ஊர்ஜீதப்படுத்தியது.
ஆனால் இன்னும் வழக்கு முடிந்து தீர்ப்பு வரவில்லை. ஆனால் கண்டிப்பாக தண்டனை கிடைத்துவிடும், இருந்தாலும் நம் நாட்டில் தான் கடுமையான தண்டனைகள் இல்லையே, பணப் பலமும் அரசியல் பலமும் இருந்தால் சட்டத்தின் ஓட்டை மூலம் தப்பித்து வந்துவிடுகின்றனர். ஒருவருக்காவது இதுபோன்ற தப்புக்கு கடுமையான தண்டனை கொடுத்தால் தானே, அடுத்தவருக்கு இதுபோன்று செய்ய தோன்றாது. இதைத்தான் பெண்கள் மூவரும் பேசியப்படி காலை உணவை தயார் செய்து கொண்டிருந்தனர்.
எம்.எல்.ஏ மிரட்டுவது போல் பேசியதில் ராஜலஷ்மியும் ஒருவாரமாக இங்கு தான் இருக்கிறார். அன்று பள்ளி விடுமுறை என்பதால் சிவமித்ரா மாமியாருக்கும் அன்னைக்கும் சமையலறையில் உதவியாக இருக்க, சக்தி இன்னும் உறக்கத்தில் இருந்தான். கண்ணப்பன் நடைப்பயிற்சி முடித்துவிட்டு நேராக சமையலறைக்கு வந்தவர், “தேவிகா டீ போடு,” என்று கேட்க,
தேவிகாவோ அதற்கு தலையசைத்தவர், “என்னங்க, கோவிலில் நாளைக்கு சிறப்பு பூஜைக்கு சொல்ல சொன்னேனே சொன்னீங்களா? ஆட்டு காலுக்கு சொல்லி வைக்க சொல்லி கறிக்கடை பாய்க்கிட்ட சொன்னீங்களா?” என்று கேட்கவும்,
“சொல்லியாச்சு ம்மா,” என்று கண்ணப்பன் விவரத்தை சொல்லிவிட்டு போய்விட்டார்.
நாளை ஞாயிற்றுக்கிழமையும் இல்லை. எந்த விசேஷமும் இல்லை. பின் எதற்கு கோவிலில் பூஜை? எதற்காக ஆட்டுக்கால்? என்பது புரியாமல், “அத்தை நாளைக்கு என்ன விசேஷம்?” என்று சிவமித்ரா தேவிகாவிடம் கேட்க,
“நாளைக்கு சக்தியோட பிறந்தநாள். அதான் கோவிலில் பூஜைக்கு சொல்லியிருக்கேன். அவனுக்கு இடியாப்பமும் ஆட்டுக்கால் குழம்பும் ரொம்ப பிடிக்கும், அதுக்கு தான் ஆட்டுக்காலுக்கு சொல்ல சொல்லியிருந்தேன்.” என்று சக்தியின் பிறந்தநாள் உனக்கு தெரியாதா? என்பதுபோல் பார்த்தப்படி தேவிகா அவளிடம் விவரத்தை கூறவும்,
“மித்ரா, புருஷன் பிறந்தநாளை கூட தெரிஞ்சிக்காம இருப்பீயா?” என்று ராஜலஷ்மி மகளிடம் கேட்டார்.
“நான் கேட்டதுக்கு அவங்க முடிஞ்சிடுச்சுன்னு சொன்னாங்க ம்மா,” என்று அவள் பதில் கூற,
“போன வருஷம் முடிஞ்சதை சக்தி சொல்லியிருக்கும்,” என்றார் ராஜலஷ்மி.
“இல்லம்மா, அவங்க வேற மாசம், வேற தேதி சொன்னாங்க, நான் அதை பெருசா செலப்ரேட் செய்யணும், மறந்துடக் கூடாதுன்னு டைரியில் எல்லாம் குறிச்சு வச்சிருக்கேன் தெரியுமா?” என்று சிவமித்ரா கூறவும்,
“அதுக்குன்னு மாத்தி சொல்வாங்களா? அவங்களுக்கு இருக்கு,” என்று வெளியில் சொல்லிக் கொண்டாலும், அவன் பிறந்தநாளுக்கு என்ன சர்ஃப்ரைஸ் செய்யலாம் என்று அப்போதே அவள் யோசிக்க ஆரம்பித்திருக்க,
“சரி நீ இடியாப்பமும், ஆட்டுக்கால் குழம்பும் சாப்பிடுவியா மித்ரா, இல்லை உனக்கு வேற ஏதும் செய்யட்டுமா?” என்று தேவிகா கேட்கவும்,
“இப்போல்லாம் எனக்கு எதுவுமே சாப்பிட பிடிக்கறதில்ல அத்தை, அதனால எனக்குன்னு எதுவும் செய்ய வேண்டாம்,” என்ற அவளின் பதிலைக் கேட்டு, ஏற்கனவே அவள் உடல்நிலை குறித்து அவருக்கு சந்தேகம் இருந்ததால்,
“நானும் கொஞ்சநாளா கவனிச்சிட்டு தான் இருக்கேன் மித்ரா, நீ ரொம்பவே சோர்வா தெரியற, இதைப்பத்தி சக்தியிடம் கூட கேட்டேன். அவன் ஒன்னுமில்லன்னு சொன்னான். அப்புறம் ஸ்கூல் பிரச்சனையில் நானும் அதை மறந்துட்டேன். இப்போ நீ சொல்றதை பார்த்தா நாள் ஏதாச்சும் தள்ளி போயிருக்கா?” என்று தேவிகா கேட்டார்.
அவளுக்கும் அந்த சந்தேகம் இருந்ததால், “ஆமாம் அத்தை, நாள் தள்ளி தான் போயிருக்கு, எனக்குமே நீங்க சொல்றது போல இருக்குமோன்னு சந்தேகம் தான், ஆனா நானும் ஸ்கூல் பிரச்சனையில் இதைப்பத்தி யோசிக்கல,” என்று சிவமித்ரா கூற,
“கடவுளே நான் நினைச்சது போல நல்ல செய்தியா இருக்கணும்,” என்று வேண்டிக் கொண்டவர்,
“அப்போ இன்னைக்கே டாக்டரை போய் பார்த்துடுவோமா?” என்று கேட்க,
“அவளிடம் எதுக்கு கேட்டுட்டு, உடனே சக்தியை காரை எடுக்க சொல்லுங்க போயிட்டு வந்துடுவோம்,” என்ற ராஜலஷ்மி மகளைத் தொட்டு முத்தமிட்டு தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
அறிகுறிகளை வைத்துப் பார்த்தால் 90% அவள் கருவுற்றிருக்கலாம் என்பது தான் சிவமித்ராவின் எண்ணம். ஆனால் அதை பரிசோதித்து அவளே சக்தியிடம் சொல்ல வேண்டுமென்று விரும்பியவள், “அம்மா, கன்ஃபார்ம் செய்துக்க நாமளே வீட்டில் செக் செஞ்சுக்கலாம், அதுக்கான வழியெல்லாம் இருக்கு, பார்மஸில போய் பிரக்னன்ஸி கிட் வாங்கிட்டு வந்து டெஸ்ட் செய்துட்டு, கன்பார்ம் ஆனா அப்புறம் டாக்டரை போய் பார்த்துக்கலாம், நானே அப்புறமா பார்மஸி போய் வாங்கிட்டு வரேன். அப்புறம் சக்தியிடமும் மாமாவிடமும் சொல்லிக்கலாம்,” என்று அவள் கூற,
“ஆமாம் மித்ரா சொன்னமாதிரி டெஸ்ட் எடுத்து கன்ஃபார்ம் ஆகட்டும்,” என்று தேவிகாவும் அதை ஆமோதித்தார்.
பின் அவர் கண்ணப்பனுக்கு தேனீர் எடுத்துக் கொண்டுப் போக, அவருடனே சிவமித்ராவும் ராஜலஷ்மியும் வெளியே வந்தனர். அப்போது அவர்கள் சர்க்கரை ஆலையில் வேலைப் பார்க்கும் முருகன் அங்கு பதட்டமாக வந்தவன், “வாத்தியாரே, அண்ணன் வீட்டில் இல்லையா? போன் போட்டா மணி அடிக்குது எடுக்கல?” என்று கேட்க,
“அவங்க தூங்கறாங்க, அதனால போனை சைலண்ட்ல போட்ருப்பாங்களா இருக்கும்,” என்று சிவமித்ரா அதற்கு பதில் கூறவும்,
“ஆமாம், என்ன காலையில் பதட்டமா இருக்க, சக்தியை வேற கேட்கிற, என்ன விஷயம் முருகா,” என்று கண்ணப்பன் கேட்டார்.
“வாத்தியாரே, நம்ம சர்க்கரை மில்லுக்கு சீல் வைக்கப் போறதா சொல்லி ஆஃபிஸர்ஸ்லாம் வந்துருக்காங்க, கவர்மென்ட் ரூல்ஸை மீறீட்டோம்னு என்னென்னவொ சொல்றாங்க, அதான் அண்ணனை உடனே அழைச்சிட்டு போகலாம்னு வந்தேன்.” என்ற அவன் சொன்ன செய்தியை கேட்டு, அனைவரும் அதிர்ச்சியாக,
அப்போது தான் சக்தியும் அறையிலிருந்து வந்தவன், முருகன் சொன்னதை கேட்டு, “என்னடா சொல்ற,” என்று அதிர்ச்சியானான்.
பின், “நான் என்னன்னு போய் பார்த்துட்டு வந்துட்றேன்.” என்று சொல்லிவிட்டு முருகனோடு அவன் உடனே கிளம்பவும்,
“என்னன்னு போனில் தகவல் சொல்லு சக்தி,” என்றார் கண்ணப்பன்,
“என்னங்க, எதுக்கு திடீர்னு மில்லுக்கு சீல் வைக்க வந்திருக்காங்க,” என்று தேவிகா கேட்க,
“என்னன்னு தெரியலையே,” என்றார் கண்ணப்பன்.
நடப்பது புரியாமல் பார்த்துக் கொண்டிருந்த சிவமித்ராவிற்குமே, இந்த செய்தி சக்திக்கு எத்தனை அதிர்ச்சியையும் வருத்தத்தையும் கொடுத்திருக்கும் என்பதை அவளால் புரிந்து கொள்ள முடிந்தது. அவன் சர்க்கரை ஆலையைப் பற்றி பேசும்போதெல்லாம் கூட தாத்தா பார்த்துக் கொண்டதை அவருக்கு பின் தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற கடைமையில் செய்கிறான் என்று தான் நினைத்திருந்தாள். ஆனால் ஒருமுறை அவனோடு சென்று சர்க்கரை ஆலையை பார்த்துவிட்டு வந்ததுக்குப்பிறகு தான் அவன் அந்த தொழிலை நேசித்து செய்கிறான் என்பதை புரிந்து கொண்டாள்.
ஆமாம் தேனிலவு பயணத்தை முடித்து வந்த சிறிது நாட்களிலேயே ஒருநாள் பள்ளி விடுமுறை என்பதால் அவள் வீட்டிலிருக்க, காலையில் திரையரங்கம், திருமண மண்டபம் அனைத்தும் மேற்பார்வையிட்டுவிட்டு வந்திருந்தவன், மதியம் வீட்டில் வந்து சாப்பிட்டுவிட்டு சர்க்கரை ஆலைக்கு கிளம்பிக் கொண்டிருக்க, “வேலையெல்லாம் மதியமே முடிஞ்சுது, போனோ இல்லை டிவியோ பார்த்துட்டு இருந்தா தூக்கம் தான் வரும்,” என்று கட்டிலில் அமர்ந்திருந்தப்படியே சிவமித்ரா அவனிடம் கூற,
சட்டையின் பட்டனை போட்டுக் கொண்டிருந்தவனோ, “தூக்கம் வந்தா தூங்கு, அப்போ தான் நைட்டு கூட கொஞ்சநேரம் விழிச்சிக்கிட்டு இருக்க வசதியா இருக்கும்,” என்று அவளைப் பார்த்து கண்ணடித்தப்படியே கூறினான்.
“இல்லன்னா மட்டும் அப்படியே சீக்கிரம் தூங்கிட்றோம் பாருங்க,” என்று நாணத்தை மறைத்தப்படி அவனுக்கு ஒழுங்கு காட்டியவள்,
“லீவ் நாளில் தூங்கிப் பழகினா ஸ்கூலிலும் சாப்பிட்டதும் தூங்கணும்னு தோனும்,” என்றாள்.
“எனக்கு வேலை இல்லன்னாலும் உன்னை எங்கேயாச்சும் வெளியே கூட்டிட்டுப் போயிருப்பேன். இப்போ மில்லுல எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு, நான் கண்டிப்பா போயே ஆகணும் மித்து,” என்றவனிடம்,
கண்ணாடி பார்த்து தலை வாரிக் கொண்டிருந்தவன், அவள் இப்படி கேட்பாள் என்று எதிர்பார்க்காது அவளை வியப்பாக பார்த்து, “உன்னை கூட்டிட்டுப் போகணுமா?” என்று கேட்க,
“ஆமாம், சர்க்கரை மில் ஓனரோட பொண்டாட்டி நான், நான் ஒருநாளும் அங்க போய் பார்த்ததில்லை. உங்க பிஸ்னஸ்லாம் நானும் தெரிஞ்சு வச்சுக்கிட்டா, உங்களுக்கும் ஏதாவது உதவி செய்வேன் தானே, அதனால என்னை அங்க கூட்டிட்டு போங்க,” என்றாள்.
‘பரவாயில்லை ரொம்பவே தேறிட்டா என் பொண்டாட்டி,’ என்று மனதினுள் நினைத்துக் கொண்டவன்,
“என் கையை கொஞ்சம் கிள்ளு,” என்று அவளிடம் கேட்க,
அவன் கேட்டதின் அர்த்தம் புரிந்தவளோ, அவன் கையை நன்றாக வலிப்பது போல் கிள்ளி விட்டவள், “நீங்க ஒன்னும் என்னை கூட்டிட்டு போக வேண்டாம் போங்க,” என்று கோபித்துக் கொள்ள,
“சும்மா விளையாடினேன் டி,” என்று அவளை சமாதானப்படுத்தி அவர்கள் சர்க்கரை ஆலைக்கு அழைத்து சென்றான்.
அங்கு சென்றதும் அனைத்து இடத்தையும் சுற்றிக் காட்டி தயாரிப்பு முறைகளை எல்லாம் விளக்கியவன், “நம்ம மில்லில் எல்லாம் சுத்தமான முறையில் செய்வோம், நம்ம ஊர் ஸ்கூல் மட்டுமில்லாம விழுப்புரத்தை சுத்தி இருக்க நிறைய ஸ்கூலில் இருந்து பிள்ளைங்களை டூர் கூட்டிட்டு வந்து நம்ம மில்லில் தான் சர்க்கரை, வெல்லம் தயாரிக்கிறதை எல்லாம் காட்டுவாங்க,
இப்போல்லாம் வெள்ளை சர்க்கரையை விட வெல்லம், நாட்டு சர்க்கரை இதைத்தான் மக்கள் அதிகம் உபயோகிக்க ஆரம்பிச்சிட்டாங்க, அதனால் இங்க நிறைய அதைத்தான் தயார் செய்றோம், கூட பனஞ்சாறு உபயோகிச்சு கருப்பட்டி, பனங்கற்கண்டு இதெல்லாமும் தயார் செய்றோம், நம்ம தயாரிப்பு வெளிநாட்டுக்கு கூட எக்ஸ்போர்ட் ஆகுது.” என்று அனைத்தையும் அவன் ஆர்வமாக கூறும்போதே, அவன் அந்த தொழிலை நேசித்து செய்கிறான் என்பதை தெரிந்து கொண்டாள்.
இப்போது அதற்கு சீல் வைக்கிறார்கள் என்றால் அவனுக்கு எவ்வளவு கஷ்டமாக இருக்கும், உடலில் ஒரு உறுப்பை இழந்தது போல் தான் அவனக்கு இந்த நிலை இருக்கும் என்று அவனை நினைத்து கவலைக் கொண்டாள்.
காலையில் சென்றவன் மாலை ஆகியும் வீடு திரும்பவில்லை. நடுவில் கண்ணப்பன் அலைபேசியில் அவனை அழைத்தபோது கூட, “வீட்டுக்கு வந்து விவரமா சொல்றேன் ப்பா,” என்று சொல்லிவிட்டு அழைப்பை அணைத்திருந்தான்.
அவன் வரும்வரையிலுமே ஒருவருக்கும் ஒரு வேலையும் ஓடவில்லை. சாப்பிடக் கூட தோன்றவில்லை. கண்ணப்பன் சர்க்கரை நோயாளி என்பதாலும், இன்னும் உறுதியாக தெரியவில்லையென்றாலும் சிவமித்ராவின் நிலை குறித்தும் அவர்கள் இருவரையும் தேவிகா வற்புறுத்தி சாப்பிட வைக்க, ராஜலஷ்மி வற்புறுத்தி தேவிகாவை சாப்பிட வைத்தார்.
இரவு நேரம் தொடங்க ஆரம்பிக்கவும் தான் சக்திவாசன் வீடு வந்தான். அங்குமிங்கும் என்று அலைந்திருப்பான் போல, சாப்பிட்டானா என்றும் தெரியவில்லை. பார்க்கவே சோர்வாக தெரிந்தான். அவனை கண்டதும் சிவமித்ரா அவனுக்கு சாப்பிட ஏதாவது கொண்டு வருவதற்கு சென்றுவிட, “எதனால சக்தி மில்லுக்கு சீல் வச்சாங்க,” என்று கண்ணப்பன் கேட்டார்.
“கவர்மென்ட் ரூல்ஸ் மீறீட்டோம்னு என்னென்னவோ சொல்றாங்க ப்பா, நாம என்னைக்கு கவர்மென்ட் ரூல்ஸ் மீறியிருக்கோம், எல்லாம் இந்த எம்.எல்.ஏ வேலை. ரத்தினபாண்டி கேஸ்ல அவருக்கு எதிர் நின்னதால நமக்கு இப்படியெல்லாம் தொல்லை கொடுக்கிறார் போல,” என்று அவன் கோபமாக கூற,
“நானும் அப்படித்தான் நினைச்சேன் சக்தி, இப்போ என்ன செய்யப் போறோம்,” என்று கண்ணப்பன் கேட்கவும்,
“நம்ம பக்கம் எல்லாம் சரியா இருக்கும்போது நாம ஏன் பயப்படணும், நாமளும் சட்டப்படி போய் நம்ம மில்லை திறப்போம்,” என்றான்.
“அரசியல்வாதிங்க கூட மோதி ஜெயிக்க முடியுமா சக்தி,” என்று ராஜலஷ்மி கேட்க,
“நம்ம பக்கம் நியாயம் இருக்கு, முடிஞ்சவரை போராடுவோம்,” என்றான்.
“நியாயத்து பக்கம் நின்னதுக்கு தானே நமக்கு இப்படியெல்லாம் பிரச்சனை வருது? இப்போல்லாம் நியாயத்துக்கு எங்க காலம் இருக்கு அநியாயத்துக்கான காலமா தானே மாறிடுச்சு,” என்று தேவிகா புலம்ப,
“அது நிலையானது இல்லை தேவிகா, தாமதமானாலும் நியாயமா நடந்துக்கிட்டதுக்கான பலன் நமக்கு கண்டிப்பா கிடைக்கும்,” என்றார் கண்ணப்பன்,
அதற்குள் சிவமித்ரா சக்திக்கு பழச்சாறு கொண்டு வந்து கொடுக்கவும், காலையில் இருந்து சாப்பிடாத அவனுக்கு அது தேவையாக இருக்கவும், அதை வாங்கிப் பருகினான்.
அவன் பழச்சாறு பருகும் வேகத்தைப் பார்த்து, “காலையிலிருந்து ஏதாச்சும் சாப்பிட்டியா சக்தி,” என்று தேவிகா கேட்கவும்,
அதெற்கு மறுப்பாய் தலையசைத்தவன், “நடுவில் முருகன் ரெண்டுமுறை டீ வாங்கிக் கொடுத்தான்.” என்று பதில் கூற,
“அப்போ சாப்பாடே சாப்பிட்டிருக்கலாமே,” என்றார் அவர்,
அவனுக்கு இப்போதைய பிரச்சனையில் சாப்பிட தோன்றவில்லை தான், ஆனால் அதற்காக சாப்பிடாமல் கொள்ளாமல் இருந்தால் பிரச்சனையை சமாளிக்க தெம்பு வேண்டாமா? அதுவுமில்லாமல் அவனே சோர்ந்து போய்விட்டால் வீட்டில் மற்றவர்களுக்கு யார் தைரியம் சொல்வது? அதனால், “நான் குளிச்சிட்டு சாப்பிட்றேன் ம்மா,” என்றவன், “நீங்கல்லாம் சாப்பிட்டீங்களா?” என்று கேட்க,
“ஏதோ பேருக்கு கொஞ்சம் சாப்பிட்டாங்க,” என்று அதற்கு ராஜலஷ்மி பதில் கூறினார்.
“சரி, நான் குளிச்சிட்டு வந்தததும் எல்லா சாப்பிடலாம்,” என்று கூறியவன், திடீரென ஞாபகம் வந்தவனாக, வரும்போது கையில் கொண்டு வந்த பையிலிருந்து இரண்டு பத்திரங்களை எடுத்து,
“அம்மா, மித்ரா, ரெண்டுப்பேரும் இந்த பத்திரத்தில் கையெழுத்து போடுங்க,” என்று சொல்ல,
“என்ன பத்திரம் சக்தி?” என்று கண்ணப்பன் கேட்டார்.
நமக்கு தொல்லை கொடுக்கணும்னு எம்.எல்.ஏ முடிவு செய்துட்டார். அடுத்து அவர் என்ன வேணும்னாலும் செய்யலாம், கல்யாண மண்டபமும் இப்போ காம்ப்ளெக்ஸ் கட்டப் போற இடமும் அம்மா பேரிலும் மித்ரா பேரிலும் இருப்பதால் அவங்களுக்கு எந்த பிரச்சனையும் வந்துடக் கூடாது. அதனால அது சம்பந்தமான பவர் எனக்கு ஏற்கனவே எழுதி கொடுத்தது போல் பத்திரம் ரெடி செய்திருக்கேன்.” என்றவன் அவர்களிடம் கையெழுத்து வாங்கவும்,
“அப்போ இன்னுமே அந்த எம்.எல்.ஏ நமக்கு தொந்தரவு கொடுப்பாரா?” என்று ராஜலஷ்மி கேட்க,
“தெரியல அத்தை, எதுக்கும் முன்னெச்சரிக்கையா செய்து வச்சுக்க வேண்டியது தான்,” என்றான்.
“சரி சக்தி, நீ போய் குளிச்சிட்டு வா, நாங்க அதுக்குள்ள சாப்பாடு ரெடி செய்றோம்,” என்று தேவிகாவும் ரஜலஷ்மியும் சமையலறைக்கு செல்ல, சிவமித்ரா சக்தியோடு அவர்கள் அறைக்குச் சென்றாள்.
அவன் வந்ததிலிருந்து அவள் எதுவும் பேசாமல் அமைதியாக இருப்பதை பார்த்து, “என்ன மித்து, மில்லுக்கு சீல் வச்சதும் பயந்துட்டீயா? எப்படியோ எம்.எல்.ஏ வை எதிர்க்கணும் என்பது தெரிஞ்சு தானே அந்த பிரச்சனையில் தலையிட்டோம், பார்த்துக்கலாம் விடு,” என்று அவன் கூற,
“இந்த பிரச்சனையோட முடிஞ்சா பரவாயில்லை. வேற ஏதாச்சும் பெருசா பிரச்சனை வந்தா என்ன செய்றது?” என்று கேட்டாள்
அவள் உள்ளுணர்வு இதைவிட பெரிதாக ஏதோ பிரச்சனை வரும்போல் சொல்லியது. அவனுக்குமே அந்த பயம் இருந்தது. அவனுக்கு எத்தனை பிரச்சனை கொடுத்தாலும் சமாளித்து கொள்வான். ஆனால் ரத்தினபாண்டி விஷயத்தில் நேரடியாக சம்பந்தப்பட்டது அவளும், அவன் தந்தையும் என்பதால், அவர்களுக்கு ஏதாவது பிரச்சனை வருமோ என்பது தான் அவனது பயமே,
ஆனால் ரத்தினபாண்டி விஷயத்தில் எம்.எல்.ஏ நேரடியாக தலையிடாததால் அவர்களுக்கு பிரச்சனை கொடுத்தால் மாட்டிக் கொள்வார் என்பதால், இப்படி மறைமுகமாக பிரச்சனை கொடுக்கிறார் என்பது அவன் யூகம்.
அதனால், “எது வந்தாலும் சமாளிச்சுக்கலாம், தைரியமா இரு,” என்று அவளுக்கு சமாதானம் கூறினான்.
ஆனால் சிவமித்ரா பயந்தது போலவே, அவன் குளித்து தயாராகி சாப்பிடும் வரை அவனுக்கு அவகாசம் என்பது போல், அவனை கைது செய்ய காவல் துறையினர் வீட்டிற்கே வந்துவிட்டனர்.