தந்தையின் முடிவை நம்ப முடியாமல் நின்றிருந்த சக்திவாசன், “என்ன ப்பா, நான் சொல்றதை காதில் வாங்கினீங்களா இல்லையா? எந்த தைரியத்துல அவங்களை கல்யாணத்துக்கு வரச் சொல்றீங்க, ஏற்கனவே பட்ட அவமானமெல்லாம் போதாதா? திரும்ப ஊரை கூட்டி வேற அவமானப்படணுமா நாம எல்லோரும்,” என்று இன்னும் அதே கோபத்துடன் அவன் பேச,
“யாருக்கும் எந்த அவமானமும் நடக்காது. நான் எதையும் யோசிக்காம செய்ய மாட்டேன். நான் சொன்னது சொன்னது தான், நாளை மறுநாள் உன்னோட கல்யாணம் நடக்கும், அதுக்கு தாயாராகிக்கோ,” என்று கூறிய கண்ணப்பன் மனைவியை அழைத்து கொண்டு வீட்டினுள் சென்றுவிட்டார்.
அனைவரும் சென்றாலும், ராஜலஷ்மியும் சிவமித்ராவும் மட்டும் இன்னும் அங்கேயே நின்றிருக்க, இதற்கு மேல் இங்கு எதற்கு நிற்க வேண்டுமென்று ராஜலஷ்மியும் அங்கிருந்து சென்றார். சிவமித்ராவோ அவருடன் செல்லாமல் அங்கேயே நின்றவள், தந்தை அவர் போக்கில் பேசிவிட்டு சென்றதை நினைத்து கோபத்தில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்த சக்திவாசனை பார்த்து, “எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல, உங்களுக்கு கல்யாணம்னு தெரிஞ்சதும் ஏனோ தெரியல மனசுல ஒரு நிம்மதி வந்த உணர்வு, ஆனா இப்படி ஒரு விஷயம் நடக்கும்னு நான் எதிர்பார்க்கவே இல்லை. அந்த பொண்ணு இப்படி செஞ்சிருக்க வேண்டாம்,” என்று அவனிடம் ஆறுதலாக பேசவும்,
“இது ஒன்னும் எனக்கு புதுசு இல்லையே, நீ முகத்துக்கு நேரா என்னை பிடிக்கலன்னு சொன்ன, அந்த பொண்ணு கோழைத்தனமா தற்கொலைக்கு முயற்சி செய்து அவ எண்ணத்தை சொல்லிட்டா, எப்படி பார்த்தாலும் வலி ஒன்னு தான், கருப்பா பிறந்து தொலைச்சிட்டேன் இல்ல, இந்த கருமாந்திர வலியெல்லாம் நான் தாங்கி தான் ஆகணும்,” என்று அவளிடமும் அவன் கோபத்தை காட்டினான்.
“உங்க மனசு கஷ்டத்தில் இருக்குமேன்னு ஆறுதல் பேச வந்தா இப்படி பேசறீங்க?” என்று அவள் கேட்க,
“எனக்கு ஆறுதல் சொல்லுன்னு நான் கேட்டேனா? இல்லை நீ ஆறுதல் சொன்னா என் வலி குறைஞ்சிடுமா? வந்தவங்க எல்லாம் அவங்க பாட்டுக்கு பேசறதை பேசிட்டு போனாங்கல்ல, நீயும் அதேபோல போக வேண்டியது தானே, உனக்கு மட்டும் என்ன பெருசா அக்கறை?” என்று கேட்டான் அவன்,
“தப்பு தான், அக்கறைப்பட்டது பெரிய தப்பு தான், உங்க ஆட்டிட்யூக்கு உங்களுக்கெல்லாம் இப்படித்தான் நடக்கும், கல்யாணம் வரைக்கும் வந்தவங்க, அந்த பொண்ணுக்கிட்ட அவளுக்கு இந்த கல்யாணத்தில் சம்மதமான்னு கேட்டீங்களா? கேட்டிருக்க மாட்டீங்க, அப்பவும் இப்படித்தான், இப்பவும் இப்படித்தான், அப்புறம் அந்த பொண்ணு மேல மட்டும் எப்படி குத்தம் சொல்ல முடியும்?” என்று அவள் சொல்லவும்,
“ஆமா என்மேல தான் தப்பு போதுமா? இது நீ சொல்லித்தான் எனக்கு தெரியணும்னு இல்ல, அதனால மூடி” என்று சொல்ல வந்தவன், அதை முழுதாக சொல்லி முடிக்காமல்,
“வாயில் ஏதாவது அசிங்கமா வந்துடும், பேசாம போயிடு,” என்றான்.
“போகத்தான் போறேன். உங்களை மாதிரி ஆள் கூட மனுஷங்க பேசுவாங்களா? இதில் உங்களுக்கு கல்யாணம் நடக்கலன்னு மாமாவும் அத்தையும் அப்படி உருகுறாங்க, இப்போ எந்த பொண்ணு உங்களிடம் மாட்டப் போறாளோ தெரியல,” என்று பதிலுக்கு பேசிவிட்டு, சிவமித்ராவும் அங்கிருந்து சென்றாள்.
“ஆமா மாட்டத்தான் போறா, உனக்கென்ன வந்துச்சு, வந்துட்டா பெருசா ஆறுதல் சொல்ல, இவளை யாராச்சும் ஆறுதல் சொல்ல சொல்லி கேட்டாங்களா?” என்று பேசியபடி, அங்கு அமருவதற்கு போட்டிருந்த நாற்காலிகளை சக்திவாசன் கோபத்தில் தள்ளி விட்டான். அந்த சத்தமும் அவன் பேசியதும், வாசல் வரை சென்ற சிவமித்ரா காதிலும் நன்றாக விழுந்தது.
அப்போதும் அவன் கோபம் ஆறவில்லை. நடந்த பிரச்சனைகளை விட, சிவமித்ரா பேசிவிட்டு சென்றது தான் அவனுக்கு இன்னும் கஷ்டமாக இருந்தது. ‘பொண்ணுக்கிட்ட சம்மதம் கேட்கலையாம், இவளுக்கு தெரியுமா? இவ பார்த்தாளா? ஏற்கனவே பட்ட அனுபவம் போதாதா? அதுக்காக தான் ஒன்றுக்கு நான்கு முறை உனக்கு சம்மதமா? சம்மதமா? வீட்டில் இருக்கவங்க சொன்னாங்கன்னு சொல்லாத, உனக்கு பிடிச்சிருக்கா இல்லையான்னு உண்மையை சொல்லு, என்று கேட்டானே,
அந்த பெண் சிரித்தப்படியே பிடிச்சிருக்கு என்று கூறினாளே, அந்த சிரிப்பு போலியானது என்று இவனுக்கு கண்டுபிடிக்க தெரியவில்லையே, அந்த பெண்ணிற்கு சம்மதம் என்று தெரிந்த பின்னர் தானே அவனும் இந்த திருமணத்திற்கு சம்மதித்தான். இவளுக்கு இதெல்லாம் என்ன தெரியுமாம்? என்று நினைத்து கொண்டவன், மீண்டும் கோபத்தில் நாற்காலிகளை தள்ளிவிட்டான்.
இன்று அந்த பெண்ணின் நிராகரிப்பு கூட அவனுக்கு அத்தனை வலியை கொடுக்கவில்லை. ஆனால் இவனை திருமணம் செய்வதற்கு சாவதே மேல் என்ற அவளது எண்ணம் தான் அவனுக்கு அத்தனை வலித்தது. மற்றப்படி அவனுமே இன்னும் முழுமனதாக இந்த திருமணத்திற்கு தயாராகவில்லையே, இதயத்தில் ஏற்கனவெ ஒருத்திக்கு கொடுத்த இடத்திலிருந்து அவளை அகற்றவும் முடியாமல் வைத்து கொள்ளவும் முடியாமல் தவித்து கொண்டிருப்பவனுக்கு, இன்னொரு பெண்ணை அந்த இடத்தில் வைக்க முடியாது என்பது தான் உண்மை. ஆனால் அவனது இதயத்தில் இடம்பிடித்தவள், வேறொருவனுக்கு சொந்தமான பின்பும் அவளையே நினைத்திருக்க முடியாது என்பதாலும், பெற்றவர்களின் மகிழ்ச்சிக்காகவும் தானே இந்த திருமணத்திற்கு அவன் சம்மதித்திருந்தான். நாளாக மனதில் மாற்றம் வரும் என்றுதானே நினைத்திருந்தான். இதெல்லாம் இவளால் புரிந்து கொள்ள முடியுமா?
ஆனால் முன்பு இவளிடம் சம்மதம் கேட்காதது தப்பு தான், ஆனால் ஏன் கேட்கவில்லை. அவளுக்கு தன்னை பிடிக்க வேண்டுமென்று எதிர்பார்த்த மனம் அவளிடம் அவள் விருப்பத்தை கேட்க மறுத்ததை அவளால் புரிந்து கொள்ள முடியுமா? ஒருவேளை அவளுடன் நடந்த திருமண பேச்சின் போதே, அவளுக்கு அந்த ஏற்பாட்டில் விருப்பமா? அவளுக்கும் தன்னை பிடிக்குமா? என்று கேட்டு தெரிந்து கொண்டிருந்தால், அவளாக வந்து மறுத்ததை விட வலி குறைவாக இருந்திருக்குமோ என்று அவன் எத்தனை முறை எண்ணியிருக்கிறான்.
இவன் மனம் அவளுக்கு என்ன தெரியும்? தன்னை நிராகரித்து வேறொருவனை மணந்த போது கூட அவள் வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டுமென்று தானே நினைத்திருக்கிறான். அவள் கனவனை இழந்த நிலையில் இங்கு வந்து நின்றபோது அவன் மனம் எவ்வளவு வேதனை அடைந்தது என்பது அவளுக்கு புரிந்திருந்தால், அவள் வாழ்க்கையில் நடந்த இழப்பிற்கு அவன் வருத்தப்பட்டபோது, எனக்கு இப்படி நடந்ததில் உங்களுக்கு சந்தோஷம் தானே, என்று கேட்டிருப்பாளா? எப்படி அவளால் அப்படி நினைக்க முடிந்தது?
இன்று மீண்டும் யாரோ ஒரு பெண் உன்னிடம் மாட்டப் போகிறாள் என்று சொல்லிவிட்டு போகிறாள். என்னைப்பற்றி அவளுக்கு என்ன தெரியும் என்று இப்படியெல்லாம் பேசுகிறாள் என்று நினைக்க நினைக்க அவன் மனம் ஆற மாட்டேன் என்கிறது. இதில் தந்தை வேறு என்னென்னவோ சொல்லி கொண்டிருக்கிறார். என்று நினைத்தவனாக, தனிமையை தேடி தனது இருச்சக்கர வாகனத்தை எடுத்து கொண்டு வெளியே சென்றான்.
சக்திவாசன் பேசியதில் கோபத்துடன் வீட்டிற்குள் வந்த சிவமித்ராவிடம், “கண்ணப்பன் அண்ணன் இந்த கல்யாணம் நடக்கும்னு சொல்றாரே, எப்படி நடக்கும் மித்து? பொண்ணு யாரா இருக்கும்?” என்று ராஜலஷ்மி கேட்க,
“அந்த அண்ணனிடமே கேட்கறது தானே,” என்று அவரிடம் எரிந்து விழுந்தாள்.
“அவர்தான் சொல்ல மாட்டேங்குகிறாரே,” என்று ராஜலஷ்மி பதில் கூற,
“அப்போ அதுவரைக்கும் காத்திரு,” என்று சொல்லிவிட்டு அவளது அறைக்கு சென்றுவிட,
‘என்னாச்சு இவளுக்கு?” என்று ராஜலஷ்மி மகளை புரியாத பார்வை பார்த்தார்.
அறைக்குள் வந்தவளுக்கோ, எப்படியெல்லாம் பேசுகிறான் என்று சக்திவாசன் மீது கோபம் கோபமாக வந்தாலும், இன்றைய அவன் மனநிலை எப்படி இருக்கும் என்பதையும் அவளால் புரிந்து கொள்ள முடிந்தது. அவனது வலிகளுக்கு அவளும் ஒரு காரணம் என்பதால் அவன் மீது இருக்கும் கொஞ்சம் மட்டுப்பட்டது என்று கூட சொல்லலாம், கோபத்தின் அளவு குறைந்ததும் தான், அவனிடம் பதிலுக்கு பதில் பேசிவிட்டு வந்ததே அவளுக்கு உரைத்தது. ஏற்கனவே வருத்தத்தில் இருப்பவனிடம் என்னவெல்லாம் பேசிவிட்டோம் என்று நினைத்து அவளுமே மனதார வருத்தப்பட்டாள்.
ஆனாலும் கண்ணப்பன் சொன்ன அந்த திருமண விஷயத்தை நினைக்கும்போது, எப்படி உடனே இன்னொரு பெண்ணை தேடி திருமணம் செய்ய முடியும்? மாமா யாரை முடிவு செய்து வைத்திருப்பார்? என்ற கேள்வி அவளுக்குமே இருந்தது.
சக்திவாசனின் திருமணம் நிச்சயக்கிப்பட்ட நாள் அழகான விடியலுடன் தொடங்கியது. மகனின் திருமணத்திற்காக கண்ணப்பன் வேட்டி சட்டையில் தயாரகி வந்தவர், மனைவியும் மகனும் தயாராகமல் இருந்ததை பார்த்து, “என்ன இன்னும் ரெடியாகாம இருக்கீங்க, நம்ம வீட்டு கல்யாணம், நாமளே லேட்டா போனா எப்படி? நாம தானே முன்னாடி போய் எல்லோரையும் வரவேற்கணும்,” என்றார்.
“என்னங்க நம்ம மகனோட கல்யாணம் நடக்கும்னு சொன்னீங்க சரி, ஆனா பொண்ணு யாருன்னு இன்னும் நீங்க சொல்லவேயில்லையே, பொண்ணு யாருன்னு தெரியாம கல்யாணத்துக்கு கிளம்புன்னு சொன்னா எப்படீங்க, எனக்கு வரப்போற மருமகளை நான் பார்க்க வேண்டாமா?” என்று தேவிகா கணவனிடம் கேட்க,
“இன்னும் கொஞ்சநேரத்தில் மண்டபத்துக்கு போனா பொண்ணு யாருன்னு தெரிய போகுது, என்ன செய்வீங்களோ, எங்க போய் தேடுவீங்களா என் மகனுக்கு கல்யாணம் நடந்தா போதும்னு சொன்ன, இப்போ பொண்ணை கண்ணில் காட்டினா தான் கல்யாணத்துக்கு வருவேன்னு சொல்ற, என்மேல உனக்கு நம்பிக்கை இல்லையா?” என்று கண்ணப்பன் கேட்கவும்,
“அப்படி இல்லங்க, நான் இப்போதே போய் கிளம்பறேன்.” என்று தேவிகா வேகமாக அவர்களது அறைக்கு ஓடினார்.
அவர்களின் பேச்சை கேட்டப்படி அமர்ந்திருந்த மகனிடம் வந்தவர், “என்ன சக்தி, கிளம்பாம இருக்க, மண்டபத்துல எல்லாம் சரியா இருக்கான்னு நீ தானே முன்ன போய் பார்க்கணும்,” என்று சொல்லவும்,
அதில் எரிச்சலனானவன், “அப்பா, உங்க மனசுல என்ன நினைச்சுட்டு இதெல்லாம் செய்துட்டு இருக்கீங்க?” என்று கேட்டான்.
“எல்லாம் நல்லதை நினைச்சு தான் செய்றேன். நீ முதலில் கல்யாணத்துக்கு கிளம்பு,” என்று அவர் சாதாரணமாக கூற,
“சரி நான் கல்யாணத்துக்கு கிளம்பணும்னா என்கிட்டயாவது பொண்ணு யாருன்னு சொல்லுங்க, எனக்கு பொண்ணு யாருன்னு தெரிஞ்சா தான் கல்யாண மண்டபம் வருவேன். அம்மாவிடம் சாக்கு சொன்னது போல என்னிடம் சொல்லலாம்னு நினைக்காதீங்க,” என்று அவன் சொல்லவும்,
“அப்பா உனக்கு நல்ல பொண்ணா தான் பார்த்திருப்பேன். அவளை கட்டிக்கிட்டா நீ சந்தோஷமா இருப்ப சக்தி.” என்றார் கண்ணப்பன்,
“அப்பா அந்த பொண்ணை கட்டிக்கிட்டா நான் சந்தோஷமா இருப்பேன் சரி. ஆனா அந்த பொண்ணு சந்தோஷமா இருப்பாளா?” என்று அவன் கேட்க,
“உனக்கென்ன குறைச்சல் சக்தி?” என்று அவர் கேட்டார்.
“அப்புறம் ஏன் இரண்டு முறை என் கல்யாணம் நின்னு போச்சாம்?” என்ற அவன் கேள்விக்கு,
“இந்த முறை அப்படி நடக்காது சக்தி,” என்றார்.
“அதெப்படி ப்பா உறுதியா சொல்றீங்க, பேசி முடிவாகி நிச்சயம் நடந்து, அடுத்து கல்யாணம்னு 5 மாசம் முடிஞ்சு, ரெண்டு நாளில் கல்யாணம் என்கிறபோது அந்த பொண்ணு என்னை பிடிக்கலன்னு தற்கொலை வரைக்கும் போனா, அப்படியிருக்க ரெண்டுநாளில் முடிவு செய்த பொண்ணுக்கு என்னை பிடிக்கும்னு எப்படிப்பா சொல்ல முடியும்? சரி உங்க விருப்பம் போல நீங்க பார்த்த பொண்ணையே நான் கல்யாணம் செய்துக்கிறேன். ஆனா அதுக்கு முன்ன அந்த பொண்ணிடம் நான் பேசணும், அவளுக்கு இந்த கல்யாணத்தில் முழு சம்மதமான்னு கேட்கணும், அப்போ தான் நான் மணமேடையில் ஏறுவேன்.” என்று அவன் தீர்மானமாக கூற,
“சக்தி, உன் அப்பா என்னைக்காவது நியாயம் தவறி நடந்து நீ பார்த்திருக்கீயா? இப்போ மட்டும் அப்படி நான் ஏதாவது செய்வேனா? நான் இந்த கல்யாணத்தை என் கௌரவ பிரச்சனையா பார்க்கல, இப்போ விட்டா பிறகு உனக்கு கல்யாணமே நடக்காம போயிடுமோ என்ற பயத்தில் தான் நான் இந்த முடிவுக்கு வந்திருக்கேன். நீ எங்களுக்கு ஒரே பிள்ளை. உன்னோட சந்தோஷம் எங்களுக்கு முக்கியமில்லையா? கல்யாணத்துக்கு பிறகும் நீ சந்தோஷமா இருக்கணும்னு அப்பா நினைக்காமலா இருப்பேன்.
இதுக்குப்பிறகு என் பேச்சில் உனக்கு நம்பிக்கை இல்லன்னா நீ மண்டபத்துக்கு வர வேண்டாம், இந்த கல்யாணம் நடக்காதுன்னு நான் போய் சொல்லிட்றேன். எனக்கு மத்தவங்க என்ன பேசுவாங்கன்னு கவலை கிடையாது. ஆனா உன் அம்மாவை நினைக்கும்போது தான் அவ சொன்னமாதிரி ஏதாவது செஞ்சிப்பாளோன்னு கொஞ்சம் பயமா இருக்கு, அப்படி அவளுக்கு ஏதாவதுன்னா அதுக்குப்பிறகு நானும் உயிரோட இருக்க மாட்டேன்.” என்றார் கண்ணப்பன்.
அவர் மகனை மிரட்ட வேண்டும் என்றெல்லாம் அப்படி பேசவில்லை. உண்மையாக மனதில் தோன்றியதை தான் அப்படியே பேசினார். ஆனால் அவரின் இந்த பேச்சை கேட்டப் பின்னும் சக்தியால் பிடிவாதத்துடன் இருக்க முடியவில்லை.
“இப்போ என்ன நான் கல்யாணத்துக்கு கிளம்பணும் அப்படித்தானே, சரி நான் ரெடியாகி வரேன். அப்படி எந்த பொண்ணை எனக்காக பார்த்து வச்சிருக்கீங்கன்னு நானும் பார்க்கிறேன். ஆனா ஒன்னு சொல்லிக்கிறேன். ஒருவேளை அந்த பொண்ணு கட்டாயத்தின் பேரில் தான் இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சிருக்கான்னு தெரிஞ்சுதுன்னா, அதுக்குப்பிறகும் நீங்க சொல்றதுக்கெல்லாம் தலையாட்டுவேன்னு தப்பு கணக்கு போடாதீங்க,” என்றவன், வேண்டா வெறுப்பாக திருமணத்திற்கு தயாராக சென்றான்.
சிவமித்ராவோ அவள் வீட்டில், “அம்மா இன்னைக்கு ஸ்கூல் போக கட்டணும்னு ஒரு புடவையை நேத்து அயர்ன் செய்து வச்சிருந்தேனே, எங்க அதை காணோம்,” என்று கேட்டப்படி புடவையை தேடி கொண்டிருக்க,
“நீ அந்த புடைவையை கட்ட வேண்டாம், ஸ்கூலுக்கும் போக வேண்டாம், இந்த பட்டு புடவையை கட்டிக்கிட்டிக்கிட்டு என்னோட சக்தி கல்யாணத்துக்கு வா,” என்று ராஜலஷ்மி கூறினார்.
“அம்மா, மாமா இந்த கல்யாணம் நடக்கும்னு சொன்னாரு தான், ஆனா யாரு பொண்ணு எதுவுமே அவர் சொல்லல, முதலில் இந்த கல்யாணம் நடக்குமான்னு கூட தெரியல, இதில் நான் வேற இந்த கல்யாணத்துக்கு வரணுமா?” என்று சிவமித்ரா கேட்க,
“முதலில் இப்படி அபசகுணமா பேசறதை நிறுத்து மித்து, சக்தியை நினைக்கும்போது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு, நான் அவனை சின்ன குழந்தையா இருக்கும்போதிலிருந்து பார்க்கிறேன். நிறம் கருப்பா இருந்தாலும் குணம் தங்கம், அந்த குடும்பத்துக்கு நீ வாக்கப்பட்டு போயிருந்தா உன்னை மகராணி மாதிரி பார்த்துட்டு இருந்திருப்பாங்க, ஆனா நீதான் அதை புரிஞ்சிக்காம வேண்டாம்னு சொல்லிட்ட, இப்போ பார்த்த பொண்ணும் அதே தப்பை செய்துட்டா, ஏன் சக்திக்கு திரும்ப திரும்ப இப்படி நடக்குதுன்னு எனக்கு எவ்வளவு கஷ்டமா இருந்துச்சு தெரியுமா?
ஆனா இப்போ கண்ணப்பன் அண்ணனே ஏதோ ஏற்பாடு செய்து இந்த கல்யாணம் நடக்கும்னு சொல்லியிருக்காரு, அது நல்லவிதமா நடக்கணும்னு நினைச்சா, நீ இப்படி பேசற,” என்று ராஜலஷ்மி மகளை திட்ட,
அவளுக்கு மட்டும் அப்படி பேசவேண்டும் என்று ஆசையா என்ன? தன் அன்னை தந்தை அளவிற்கு சக்திவாசனை அவளுக்கு தெரியாது தான், அம்மாவை பெற்ற பாட்டி வீட்டிலேயே வளர்ந்ததால் இந்த ஊரும் சரி, இங்கிருப்பவர்களும் சரி அந்த அளவுக்கு அவளுக்கு நெருக்கம் இல்லை. தனக்கு கணவனாக வரப்போகிறவனை பற்றி அவளுக்கு அதிக எதிர்பார்ப்புகள் இருந்தது. ஆனால் வீட்டில் சக்திவாசன் தான் மாப்பிள்ளை என்று சொன்னபோது அவள் எதிர்பார்ப்புக்கு மாறாக இருந்ததால் அவனை வேண்டாமென்று நிராகரித்தாள். மற்றப்படி அவன் குணம் எப்படி என்பதெல்லாம் அவளுக்கு தெரியாது.
ஆனால் அவனுக்கு இரண்டு முறை நடந்த ஏமாற்றத்தை நினைக்கும்போது அவளுக்கும் வருத்தமாக தான் இருந்தது. ஆனால் கண்ணப்பன் அதே முகூர்த்தத்தில் அவனுக்கு அவசரமாக வேறொரு பெண்ணை பார்த்து திருமணம் செய்வதும் அவளுக்கு அவ்வளவு சரியாக படவில்லை. இதை அன்னையிடம் சொல்லும்போது,
“அவசரமான முடிவா இருந்தாலும் கண்ணப்பன் அண்ணன் சரியா யோசிச்சு தான் முடிவு எடுப்பாரு, சக்திக்கும் சரி, அந்த பொண்ணுக்கும் சரி இந்த கல்யாணம் அவங்களுக்கு நல்ல வாழ்க்கையை தான் அமைச்சு கொடுக்கும்,” என்று ராஜலஷ்மி கூறினார்.
‘அன்னை சொன்னதுபோல் சக்திக்கு நல்லது நடந்தால் இவளுக்கும் மகிழ்ச்சி தானே, அவன் ஒன்றும் இவளுக்கு எதிரி இல்லையே, அவனுக்கு நடந்ததை நினைத்து இவளுக்கும் வருத்தமாக தானே இருந்தது. இப்போது பார்த்திருக்கும் பெண்ணாவது அவனை பிடித்தவளாய் அவனை புரிந்து வைத்திருப்பவளாய் அமையட்டுமே,’ என்று மனதில் நினைத்து கொண்டவள்,
“சரி ம்மா, நீ சொன்னதுபோல நடந்தா சந்தோஷம் தான், ஆனா அதுக்கு நான் எதுக்கு வரணும், நீ மட்டும் போயிட்டு வாயேன். ஸ்கூலுக்கு சேர்ந்ததுமே லீவ் போட்டா நல்லா இருக்காது ம்மா,” என்றாள்.
“நாம முன்னமே சக்தி கல்யாணத்துக்கு போகறதா தானே பேசி வச்சிருந்தோம், கண்ணப்பன் அண்ணனும் உன்னை எதிர்பார்த்திருப்பாரு, நீ வராம போனா அவர் நம்மளை என்ன நினைப்பாரு?” என்று ராஜலஷ்மி கேட்க,
சிறிது நேரம் தயக்கமாக யோசித்தவள், “சரி ம்மா, மாமாக்காக நான் அந்த கல்யாணத்தில் கலந்துக்கிறேன். ஆனா கொஞ்சநேரம் தான் அங்கிருப்பேன். அப்புறம் அப்படியே ஸ்கூலுக்கு கிளம்பி போயிடுவேன்.” என்று அவள் கூறவும், ராஜலஷ்மியும் அதுக்கு ஒத்து கொண்டார்.
“ஆனா இந்த பட்டுபுடவை எதுக்கு, ஏதாவது சிம்பிளா கட்றேனே ம்மா,” என்று அவள் சொல்ல,
“நீ இந்த பட்டுப்புடவையெல்லாம் கட்டி எவ்வளவு நாளாச்சு? எனக்காக கட்டேன் மித்து,” என்று ராஜலஷ்மி கெஞ்சலாக கூறினார்.
அசோக் இறந்தபிறகு சிவமித்ரா எளிமையாக தான் உடுத்தி கொள்வாள். வீணாக மற்றவர்கள் ஏதாவது பேசும்படி வைத்து கொள்ள வேண்டாம் என்று தான் அப்படி இருக்கிறாள். ஆனால் இப்போது அன்னை கேட்கவும், அதை மறுக்க தோன்றாமல் பட்டு புடவை கட்டிக் கொள்ள ஒத்து கொண்டவள், சக்திவாசனின் திருமணத்திற்கு தயாராகினாள்
என்னத்தான் கண்ணப்பன் மாமாவுக்காக திருமணத்திற்கு வருவதாக அவள் அன்னையிடம் சொல்லியிருந்தாலும், சக்தியின் திருமணத்தை பார்க்க வேண்டும் என்பது தான் உண்மையான காரணம். அதேபோல் கடைசி நிமிடத்தில் சக்திவாசனை மணக்க ஒத்து கொண்ட பெண்ணையும் பார்க்க விரும்பியே அவள் அந்த திருமணத்திற்கு சென்றாள்.