ராஜலஷ்மி அனைவருக்கும் இரவுக்கு தேவையான உணவை எடுத்து கொண்டு வரும்போது மணி ஏழாகியிருந்தது. வீட்டிற்குள் வந்தால் சாய்வு நாற்காலியில் அமர்ந்தப்படியே கண்ணப்பன் உறங்கிக் கொண்டிருந்தார். அதனால் சத்தம் போடாமல் அங்கிருந்த உணவு மேசையில் கொண்டு வந்ததை வைத்தவர், மகளை போய் அறையில் பார்க்க, சிவமித்ராவும் அங்கே உறங்கிக் கொண்டிருந்தாள்.
“மித்து, மித்து,” என்று மகளை எழுப்ப, அவளும் உடனே விழித்துக் கொண்டாள்.
“இங்க வந்த முதல் நாளே பொழுது போய் தூங்கிட்டு இருந்தா நல்லாவா இருக்கும், இந்தா உன்னோட ட்ரஸ்லாம் எடுத்துட்டு வந்திருக்கேன். போய் குளிச்சிட்டு, இந்த புடவையை மாத்திக்கிட்டு வா,” என்று மகளிடம் சொல்லிவிட்டு, அவர் வெளியே வந்தால் கண்ணப்பனும் கண் விழித்திருந்தவர்,
“ரெண்டு நாளா நினைச்சது நல்லப்படியா நடக்கணுமேன்னு சரியா தூக்கமே இல்லை. அதான் உட்கார்ந்ததும் கண்ணசந்துட்டேன் போல,” என்றார்.
பின், “சக்தி இன்னும் வரலையா? தேவிகாவும் எழுந்திருக்கல போல,” என்று தனக்கு தானே சொல்லி கொண்டவர், மனைவியை எழுப்பலாம் என்று நினைக்க, இதுதான் பேச வேண்டிய நேரம் என்பதை உணர்ந்த ராஜலஷ்மி,
“அண்ணா, தேவிகா அண்ணிக்கு இந்த கல்யாணத்தில் முழு மனசா சம்மதம் இல்லன்னாலும், கல்யாணத்துக்கு பிறகான சடங்கெல்லாம் அவங்க சரியா செஞ்சுட்டாங்க, ஆனாலும் இன்னும் நடக்க வேண்டிய சடங்கு இருக்கே,” என்று கூறவும்,
ராஜலஷ்மி சாந்தி முகூர்த்த சடங்கை பற்றி கூறுகிறார் என்பதை உணர்ந்த கண்ணப்பன், “நீ சொல்றது புரியுது ராஜி ம்மா, ஆனா இந்த கல்யாணம் எந்த மாதிரி சூழ்நிலையில் நடந்துச்சுன்னு நான் சொல்லி உனக்கு தெரிய வேண்டியதில்ல, நம்ம பிள்ளைங்க நம்ம கட்டாயத்தின் பேரில் தான் கல்யாணம் செய்திருக்காங்க, இப்போ இந்த சடங்கெல்லாம் நடத்தினா அவங்களுக்கு அது தர்ம சங்கடமான நிலையா ஆகிடும், நடந்ததை ஏத்துக்கறதுக்கான அவகாசத்தை அவங்களுக்கு கொடுக்கணுமில்ல, அவங்களை ஒரே ரூம்ல இருக்க சொல்லியிருக்கோம், இனி அவங்களா அவங்க வாழ்க்கையை வாழட்டும்,” என்றார்.
“நீங்க சொல்றதும் சரிதான் அண்ணா,” என்று ராஜலஷ்மி அதற்கு ஒத்துக் கொள்ள,
“சரி நான் சக்திக்கு போன் போட்டு ஏன் இன்னும் வரலன்னு கேட்கிறேன்.” என்று சொல்லி அவர் அலைபேசியை எடுத்து கொண்டு வெளியே போகவும், தேவிகா அவரது அறையிலிருந்து வெளியே வந்தார்.
“வாங்க அண்ணி, களைப்பில் நல்லா தூங்கிட்டு இருந்தீங்கன்னு அண்ணன் சொன்னாரு, தூங்கி எழுந்த பின்ன இப்போ பரவாயில்லையா? என்று ராஜலஷ்மி அவரை நலம் விசாரிக்க,
“ம்ம் இப்போ பரவாயில்லை,” என்று தேவிகா அதற்கு பதில் கூறவும்,
“ராத்திரிக்கு எல்லோருக்கும் சாப்பிட இட்லியும் சாம்பாரும் செய்து கொண்டு வந்திருக்கேன். நீங்க எதுவும் சமைக்க வேண்டாம்,” என்று ராஜலஷ்மி சொல்ல,
“நீ எதுக்கு சிரமப்பட்ற? நானே எழுந்து வந்து செஞ்சுருக்க போறேன்.” என்று தேவிகா சொன்னதற்கு,
“இதில் என்ன சிரமம் இருக்கு அண்ணி,” என்று ராஜலஷ்மியும் பதில் கூறினார்.
வீட்டு முற்றத்திற்கு வந்த கண்ணப்பன் மகனுக்கு அழைக்க, அவன் அழைப்பை ஏற்றதும், “என்ன சக்தி இன்னும் வீட்டுக்கு வராம என்ன செய்ற அங்க?” என்று கண்டிப்புடன் கேட்க,
“ஒரு முக்கியமான வேலை வந்துடுச்சுப்பா, கொஞ்ச நேரத்தில் வந்துட்றேன்.” என்றான். அவன் சொன்னதுபோல் அங்கே அவனுக்கு எந்த வேலையும் இல்லை. வீட்டிற்கு போக ஒருமாதிரி தயக்கமாக இருக்கவே தான் அங்கு அமர்ந்திருந்தான்.
அதை கண்ணப்பனும் உணர்ந்தவர், “எனக்கு உன்னோட நிலைமை புரியுது சக்தி, ஆனா சிவமித்ராவையும் மனசுல வச்சு யோசி. இது நான் எடுத்த முடிவு. அதுக்கு நீ கட்டுப்பட்டு சிவாவை கல்யாணம் செய்துக்கிட்ட, இதுல உன் அம்மாவுக்கு விருப்பம் கிடையாது. உன்னோட அம்மா மோசமானவ கிடையாது. ஆனா நீ இப்படியெல்லாம் நடந்துக்கிட்டா அதெல்லாம் அப்படியே சிவமித்ரா மேல தான் கோபமா திரும்பும், உனக்கு இந்த கல்யாணம் பிடிக்கல, சிவாவை பிடிக்கலன்னு உன்னோட அம்மா நினைச்சுப்பா, நிஜமா அதுதான் காரணம்னா நீ உன் இஷ்டப்படி நடந்துக்க,” என்று அவர் கொஞ்சம் கோபமாக கூறவும்,
“அப்படியெல்லாம் இல்ல ப்பா, நான் உடனே வந்துட்றேன்.” என்றான் சக்திவாசன்.
அவர் அழைப்பை அணைத்துவிட்டு உள்ளே வரவும், தேவிகாவை பார்த்தவர், நடந்த விஷயங்கள் எதையும் பேசாமல், “கொஞ்சம் டீ போடு தேவிகா, எல்லோருக்கும் சேர்த்துப் போடு,” என்று மட்டும் கேட்க,
“சரிங்க,” என்று தேவிகாவும் சமையலறைக்குச் சென்றார்.
தேவிகா டீ போட்டு கொண்டு வந்ததும், “சிவா எங்க ம்மா, டீ குடிக்க அவளையும் கூப்பிடு,” என்று கண்ணப்பன் கூறவும், ராஜலஷ்மி சென்று சிவமித்ராவை அழைத்து வந்தார்.
அனைவரும் டீ குடித்து கொண்டிருந்த போதே சக்திவாசனும் அங்கு வந்துவிடவே, “சக்தி வந்துட்டான். அவனுக்கும் டீ கொடு தேவிகா,” என்று கண்ணப்பன் கூற,
“இல்ல வேணாம் ம்மா, நான் அங்கேயே டீ குடிச்சிட்டேன்.” என்று அன்னையிடம் கூறியவன்,
“நிஜமாவே அங்கு வேலை தான் ப்பா, நாளைக்கு ஏத்த வேண்டிய லோட் இன்னைக்கே ஏத்தினாங்க. அதான் கூட இருக்க வேண்டியதா இருந்துச்சு,” என்று சிறுபிள்ளை போல் தந்தையிடம் காரணம் கூறி நின்றான்.
உண்மையாகவே அவன் சொன்னது போல் அவர்கள் தயாரிப்பு பொருட்களை லாரியில் ஏற்றி கொண்டிருந்தார்கள் தான், அதற்கு அவன் அங்கு இருக்க வேண்டுமென்று கட்டாயம் இல்லை. இருந்தாலும் இப்படி ஏதாவது கூறினால் தான் தந்தை கோபப்பட மாட்டார் என்று அவன் காரணம் கூற,
“சரி பரவாயில்லை. ஆனா முன்ன போல நீ தனி ஆள் கிடையாது. இப்போ உனக்கு கல்யாணம் ஆகிடுச்சு, அதை மனசுல வச்சு நடந்துக்க,” என்று கண்ணப்பன் சொல்லவும், சக்தி அங்கு அமர்ந்திருந்த சிவமித்ராவை பார்க்க, அவளும் அப்போது அவனை தான் பார்த்தாள்.
“சரி ப்பா, நான் போய் குளிச்சிட்டு வரேன்.” என்று அவன் அறைக்கு செல்லவும்,
“மித்து, என்ன இங்கேயே உட்கார்ந்திருக்க, சக்திக்கு போய் குளிக்க துண்டு எடுத்து கொடு.” என்று ராஜலஷ்மி சிவமித்ராவிடம் கூற,
அவர் பேச்சு கோபத்தை வரவழைத்தாலும், மற்ற இருவரும் இருப்பதை மனதில் கொண்டு, “அம்மா, இத்தனைநாள் அவங்களுக்கு ஒருத்தர் துண்டு எடுத்து கொடுத்தா குளிச்சிருப்பாங்க? இன்னைக்கும் அதேபோல குளிக்கட்டும்,” என்றாள்.
“சும்மா இப்படி விதண்டாவாதம் செய்யாம, போய் எடுத்து கொடு மித்து,” என்று ராஜலஷ்மி கூறவும்,
“சரியா பேசினா விதண்டாவாதமா?” என்று புலம்பியப்படியே சிவமித்ராவும் எழுந்து போனாள்.
அவள் சென்றதும், “துண்டு எடுத்து கொடுன்னு சொன்னா, அதை எடுத்து கொடுக்கிறோமோ இல்லையோ, சரின்னு சொல்லிட்டு போனா என்னவாம், இதுவே அவ விரும்பி இந்த கல்யாணத்தை செய்திருந்தா இப்படி எனக்கென்ன என்பது போல் பதில் பேசுவாளா?” என்று தேவிகா கணவரிடம் கேட்க, ராஜலஷ்மிக்கோ தான் அமைதியாக இருந்திருக்கலாமோ என்று தோன்றியது.
கண்ணப்பனோ, “அவ கேட்டதில் என்ன தப்பு தேவிகா, பின்ன அதுக்கா அவ சக்தியை கல்யாணம் செய்துக்கிட்டு வந்துருக்கா, அவங்களுக்குள்ள எல்லாம் ஒரேநாளில் சரியாகிடாது. அவங்களை அவங்க போக்கில் விட்டா அவங்களே நல்லா வாழ ஆரம்பிச்சிடுவாங்க, அதைவிட்டுட்டு இதை செய். அதை செய்னு ஏதாவது சொல்லிட்டு இருக்காதீங்க,” என்று மனைவியிடம் கூறியவர்,
“உனக்கும் தான் சொல்றேன் ராஜிம்மா, சிவாவை அவ போக்கில் விடு, அவளா புரிஞ்சு நடந்துப்பா,” என்று ராஜலஷ்மியிடமும் கூறினார்.
அதற்கு தேவிகாவோ, “அப்போ நீங்க இப்போ செஞ்சது மட்டும் என்னவாம், மில்லுல வேலையா இருந்த பிள்ளையை என்ன சொன்னீங்கன்னு இப்படி அவசரமா ஓடி வந்திருக்கான். கட்டாயப்படுத்தி கல்யாணம் செய்து வைக்கலாம், ஆனா ஒவ்வொன்னுக்கும் நீங்க கட்டளை போட்டுட்டு இருக்காதீங்க, அவனையும் அவன் போக்கிலேயே விடுங்க,” என்று சொல்லிவிட்டு தேவிகா செல்ல, அவர் செய்ததும் நியாயமான விஷயமில்லை என்பதால் கண்ணப்பனால் அதற்கு பதில் பேச முடியவில்லை.
இங்கே அறைக்குள் வந்த சக்திவாசன் போட்டிருந்த சட்டயை கழட்டி அதற்குரிய இடத்தில் மாட்டியவன், சட்டைக்குள்ளே போட்டிருந்த பனியனோடு நிற்க, அப்போது உள்ளே நுழைந்த சிவமித்ராவோ, அவன் அந்த கோலத்தில் நிற்பான் என்பதை எதிர்பார்க்காமல் அதிர்ந்து நின்றவள், ‘அம்மா சொன்னாங்கன்னு இங்கே வந்திருக்க கூடாதோ?’ என்று சங்கடத்தோடு நிற்க,
அதேநேரத்தில் சக்தியும் அவளை கவனித்தவன், “ஹே இங்க எதுக்கு வந்த?” என்று அவளிடம் கேட்டான்.
அவன் கேட்ட தோணியில், மண்டபத்தில் அவன் பேசியதற்கு அவனிடம் பேசவே கூடாது என்று நினைத்தது மறந்து போய், “ம்ம் உங்களுக்கு குளிக்க துண்டெடுத்து கொடுக்க வந்தேன்.” என்றாள் வேண்டுமென்றே,
“இத்தனைநாளா நீ வந்து துண்டெடுத்து கொடுத்து தான் நான் குளிச்சேனா?” என்று சக்தி அவளைப் பார்த்து கேட்க,
“இதே கேள்வியை தான் நான் அம்மாவிடம் கேட்டேன். அவங்க கேட்டாத்தானே, அவங்க சொன்னா புரிஞ்சிக்க மாட்றாங்க, என்ன செய்றது?” என்று கேட்டப்படி அவள் அங்கு போட்டிருந்த கட்டிலில் அமரவும்,
“என்ன இங்க உட்கார்ந்துட்ட, வெளியே போ?” என்றான் அவன்,
“நான் ஏன் வெளியே போகணும்? இனி இது உங்க ரூம் மட்டும் இல்ல, இது என்னோட ரூமும் தான், வெளியே போனா உங்க அம்மா என்னை டெரரா பார்ப்பாங்க, என் அம்மா இப்படி இரு அப்படி இருன்னு அட்வைஸ் செய்வாங்க, அதனால நான் இங்கேயே இருந்துக்கிறேன். உங்களை எந்த தொந்தரவும் செய்ய மாட்டேன். நீங்க போய் குளிங்க,” என்று அவள் கூறவும்,
அவளும் இந்த அறையில் தான் இருக்க வேண்டும் என்பது அப்போது தான் அவனுக்கு ஞாபகம் வர, ‘இனி தான் எனக்கு சோதனை காலம் போல,” என்று நினைத்தப்படி, துண்டோடு அவனது உள்ளாடைகளையும் குளியலறைக்கு எடுத்து கொண்டுச் சென்றான்.
நல்லவேளை அவன் குளியலறையிலிருந்து வெளியே வரும்போது அவள் அறையில் இல்லை. அவனிடம் வீம்புக்கு பேசினாலும் அவன் குளித்துவிட்டு வெளியே வந்து தான் உடை மாற்ற வேண்டுமென்று அவள் வெளியில் சென்றுவிட்டாள். அதனால் அறையிலிருந்தப்படியே வீட்டில் அணியும் டீஷர்ட்டும் பேன்ட்டும் அணிந்து கொண்டவன், வெளியே வந்து பார்த்தால், சிவமித்ரா கண்ணப்பனுடன் ஏதோ பேசி கொண்டிருந்தாள். ராஜலஷ்மியும் அவர்கள் இருவருடன் அமர்ந்திருந்தார்.
அவர்களை கண்டு கொள்ளாமல் அவன் தொலைக்காட்சி முன் சென்று அமர்ந்து கொண்டான். எப்போதும் இரவு வீட்டிற்கு வந்ததும் தொலைக்காட்சி பார்ப்பது அவனது வழக்கம் தான் என்றாலும், இன்று மனம் அதில் லயிக்கவில்லை. அந்த இரவை குறித்து ஒரு கலவரத்துடன் அமர்ந்திருந்தான்.
ஏற்கனவே அவனுக்கு ஏற்பாடு செய்திருந்த திருமணம் குறித்தே அதே பயத்தில் தான் இருந்தான். அவனை திருமணம் செய்யவிருக்கும் பெண் பல கனவுகளோடும் எதிர்பார்ப்புகளுடனும் வருவாள். அவையனைத்தையும் இவனால் முழு மனதுடன் பூர்த்தி செய்ய முடியுமா? அவளுடன் மகிழ்ச்சியாக தாம்பத்ய வாழ்க்கை வாழ முடியுமா?என்ற கேள்வியுடன் சுற்றிக் கொண்டிருந்தான்.
இன்றோ அதற்கு எந்த அவசியமுமில்லை என்ற நிலைமை உருவாக, இப்போதோ அவன் மனதிற்கு பிடித்த பெண்ணுடன் திருமணம். ஆனால் அவள் முழுமனதுடன் இந்த திருமணத்தை ஏற்கவில்லையே, அவளை கட்டாயமாக இந்த திருமண பந்தத்தில் இணைத்து விட்டார் தந்தை. இப்போது அடுத்து சடங்கு சம்பிரதாயம் என்று அன்னையும் ராஜலஷ்மியும் என்னவெல்லாம் செய்ய இருக்கிறார்களோ? இப்படி ஒரு சங்கடமான நிலைமையில் அவளை எப்படி எதிர் கொள்ள போகிறோமோ என்ற குழப்பத்தில் ஒரு வேற்று மொழி திரைப்படத்தை தமிழில் மொழி பெயர்த்து போட்டிருக்க, அது நன்றாக இருக்கிறதா? இல்லையா? என்று கூட தெரியாமல் அந்த திரைப்படத்தை ஓடவிட்டு அமர்ந்திருந்தான்.
ஆனால் அவன் எதிர்பார்த்து பயந்தது போல் வீட்டில் அப்படியான பைத்தியக்கார தனங்கள் எதுவும் செய்யவில்லை. அதைப்பற்றி கண்ணப்பனும் ராஜலஷ்மியும் ஏற்கனவே பேசியிருந்தது அவனுக்கு தெரியாதே, தேவிகாவும் இப்போது அவரிருக்கும் மனநிலையில் அவருக்குமே இதெல்லாம் தோன்றவில்லை. அந்தவகையில் அவனுக்கு நிம்மதியாக இருந்தாலும், அவளோடு சேர்ந்து தான் அந்த அறையில் இருக்க வேண்டும் என்றபோது, தன் மனதிற்கு பிடித்தவளை அருகில் வைத்து கொண்டு தள்ளி இருக்கும் அவனது நிலை, அவன் எதிரிக்கும் வரக் கூடாது என்று தான் சக்திவாசனுக்கு அந்தநேரம் தோன்றியது.
அடுத்து அனைவரும் சாப்பிடும்போதும் கூட “நான் டிவி பார்த்துக்கிட்டே சாப்பிட்றேன். இங்கேயே கொடுங்க ம்மா,” என்று கேட்டு வாங்கி சாப்பிடும் அவனை சிவமித்ரா அதிசயமாக பார்த்து வைத்தாள்.
பின்னே படு மொக்கையாக இருக்கும் படத்தை தீவிரமாக பார்த்து கொண்டிருப்பவனை பார்த்தால் அவளுக்கு எப்படி இருக்குமாம்? கிட்டத்தட்ட அவனது மனநிலையில் தான் அவளும் இருக்கிறாள். ஆனால் அவனது மனநிலை அவளுக்கு தெரியாததால் அவனை அப்படி நினைத்தாள்.
அனைவரும் சாப்பிட்டு முடித்ததும், கண்ணப்பன் சிறிது தூரம் காலார நடந்துவிட்டு வருவதாக கூற, தேவிகா அவரது வேலையை பார்க்கப் போய்விட்டார். அதனால் ராஜலஷ்மி மகளை அழைத்து கொண்டு வீட்டின் வெளியே முற்றத்திற்கு வந்தவர், “கட்டாயப்படுத்தி அவங்களுக்கு கல்யாணம் செய்து வச்சிட்டோம், ஆனா மத்ததுக்கும் அவங்களை கட்டாயப்படுத்தாம அவங்களை அவங்க போக்கில் விடுவோம்னு கண்ணப்பன் மாமா சொன்னதால தான் இன்னைக்கு எந்த சடங்கும் ஏற்பாடு செய்யல மித்து,” என்று சொல்லவும், அவர் எதை சொல்கிறார் என்பது புரிந்து சிவமித்ரா கொஞ்சம் நிம்மதியானாள்.
“அம்மா உன்னை கட்டாயப்படுத்தி இந்த கல்யாணத்தை நடத்தினதில் உனக்கு என்மேல கோபம் இருக்கலாம், ஆனா இது உன்னோட நல்லதுக்காக தான் செய்தேன் என்பதை நீ சீக்கிரம் புரிஞ்சிக்கிட்டு உன்னோட வாழ்க்கையை நல்லப்படியா வாழ ஆரம்பிக்கணும், அதுதான் எனக்கு சந்தோஷத்தை கொடுக்கும், நான் முன்ன சொன்னமாதிரி இங்க எல்லாம் மோசமானவங்க கிடையாது. அதுவும் சீக்கிரமே உனக்கு புரிய வரும், அதனால பார்த்து இருந்துக்கோ,” என்று மகளுக்கு அறிவுரை கூற,
“அம்மா இங்க பக்கத்தில் தானே ம்மா இருக்க, அதனால மொத்த அட்வைஸும் இன்னைக்கே சொல்லமா, அப்பப்ப சொல்ல கொஞ்சம் மிச்சம் வை.” என்றாள் சிவமித்ரா.
“முதலில் என்னிடம் பேசறது போல இங்க இருக்கவங்களிடம் ஏட்டிக்கு போட்டிக்கு பேசிட்டு நிற்காத,” என்று அதற்கும் ராஜலஷ்மி மகளை கண்டிக்க,
அவள் தான் இங்கு வந்த முதல்நாளே சக்தியிடம் அப்படி பேச ஆரம்பித்து விட்டாளே, அதை வெளிப்படையாக கூறாமல், “ம்ம் சரிம்மா,” என்று சலிப்போடு பதில் கூறினாள்.
“அப்புறம் என்னை ஏமாத்தறது போல இல்லாம தேவிகா அண்ணிக்கு காலையில் சமைக்க கூடமாட ஒத்தாசையா இரு,” என்று கூற, அதற்கும் தலையாட்டி கொண்டாள்.
இவர்கள் இப்படி பேசியப்படி நின்றிருக்க, கண்ணப்பனும் நடந்துவிட்டு வீடு வந்தவர், “என்ன இங்க நின்னுட்டு இருக்கீங்க?” என்று இருவரிடமும் கேட்க,
“சும்மா தான் பேசிட்டு இருந்தோம், அப்போ நான் கிளம்பட்டுமா ண்ணா,” என்று ராஜலஷ்மி கேட்கவும்,
“நீ அங்க தனியா படுக்கணும், பேசாம நீயும் இங்கேயே இருந்திடேன் ராஜி ம்மா,” என்று கண்ணப்பன் கூறினார்.
“இத்தனைநாள் மித்ராக்கு துணையா இருக்கணும்னு பிடிக்கலன்னாலும் இந்த ஊரையும் வீட்டையும் விட்டுட்டு இருந்துட்டேன். கூட அப்போ அந்த வீட்டில் அவர் இல்லாததும் ஒருமாதிரி இருந்துச்சு, ஆனா இங்க திரும்பி வந்தப்பிறகு தான் இந்த ஊரையும் அந்த வீட்டையும் விட்டு எப்படி இவ்வளவுநாள் இருந்தேன்னு தோனுச்சு, திரும்ப அந்த வீட்டை பூட்டி வைக்கல்லாம் எனக்கு விருப்பம் இல்லன்னா, அதுவுமில்லாம மித்ரா எங்கேயாச்சும் தூரமா இருந்தா பரவாயில்லை. நீங்க எல்லாம் பக்கத்து வீட்டில் தானே இருக்கீங்க, அப்புறம் என்ன?” என்ற ராஜலஷ்மி,
“சரி தேவிகா அண்ணியிடமும் சக்தியிடமும் நான் வீட்டுக்கு கிளம்பறேன்னு சொல்லிடுங்க,” என்று சொல்லிவிட்டு அவர் சென்றதும்,
“மாமா, நான் நாளைக்கு ஸ்கூலுக்கு போலாம்னு இருக்கேன். வேலைக்கு சேர்ந்து ரெண்டுநாள் தான் ஸ்கூல் போயிருக்கேன். இன்னும் கொஞ்சநாளில் ஹால்ஃப் இயர்லி எக்ஸாம் வேற ஆரம்பிச்சிடும், அதனால அதுக்குள்ள போர்ஷன்லாம் முடிக்க வேண்டியிருக்கு, நாளைக்கும் லீவ் போட முடியாது மாமா,” என்று சிவமித்ரா கூற,
“நீ சொல்றதும் சரிதான் சிவா ம்மா, நாளைக்கு நீ லீவ்லாம் போட வேண்டாம், ஸ்கூலுக்கு கிளம்பு, நானும் நாளைக்கு ஸ்கூலுக்கு போறதா இருக்கேன்.” என்று கண்ணப்பனும் கூறினார்.
பின் இருவரும் வீட்டிற்குள் போனதும், “சரி அப்போ சீக்கிரம் போய் படும்மா, அப்போ தான் காலையில் சீக்கிரம் எழுந்திருக்க முடியும்,” என்றவர்,
மகன் இன்னும் தொலைக்காட்சி முன் அமர்ந்திருப்பதை பார்த்து, “என்ன சக்தி, போய் படுக்கலையா?” என்று கேட்க,
“நியூயார்க்ல இருக்கான்ல என் ஃப்ரண்ட் செந்தில், அவனிடம் பேசணும் அதான், என்று ஏதோ ஒரு காரணம் கூறியவன்,
“நான் மாடியில் போய் பேசிட்டு வரேன்.” என்று அலைபேசியை எடுத்து கொண்டு மொட்டை மாடிக்குச் சென்றான்.
கண்ணப்பனும் அவரது அறைக்கு போய்விட, இதையெல்லாம் கவனித்து கொண்டிருந்த தேவிகாவோ, சிவமித்ரா அறைக்குள் போகும்போது, “ஒரு நிமிஷம் மித்ரா,” என்று அவளை தடுத்து நிறுத்தினார்.
என்னவென்று அவரை அவள் கேள்வியாக பார்க்கவும், “உன் மாமா எடுத்த இந்த முடிவில் எனக்கு உடன்பாடில்லைன்னு உனக்கே புரிஞ்சிருக்கும், ஆனாலும் இந்த முடிவை மாத்த முடியாது. நீதான் இந்த வீட்டு மருமக, சக்தியோட மனைவி. அதில் இனி எந்த மாற்றமும் இல்லைன்னு எனக்கு புரியுது. அதை நான் ஏத்துக்கிட்டு தான் ஆகணும், அதேபோல இந்த முடிவை நீயும் ஏத்துக்கிட்டு தான் ஆகணும்,
என் மகனை பிடிக்கல, அவனோட ஏற்பாடு செய்த கல்யாணம் வேண்டாம்னு நீதான் சொன்ன, உன்னையே திரும்ப என் மகனுக்கு மனைவியாக்கியிருக்க இந்த விதியை என்ன சொல்றதுன்னு எனக்கு தெரியல, நீ அப்போ இருந்த மனநிலையில் இப்போ இல்லன்னு உன் மாமா சொல்றாரு, அது உண்மையான்னு எனக்கு தெரியல, ஆனா இப்போ நீ இருக்க நிலைக்கு திடீர்னு நடந்த இந்த கல்யாணத்தை ஏத்துக்க உனக்கும் அவகாசம் தேவைப்படும்னு எனக்கும் புரியுது. ஆனா அது சீக்கிரம் நடந்தா சந்தோஷப்படுவேன்.
ஏன்னா எனக்கு என் மகனோட சந்தோஷம் ரொம்ப முக்கியம். இன்னேரம் ஏற்கனவே ஏற்பாடு செய்திருந்த மாதிரி இந்த கல்யாணம் நடந்திருந்தா இந்த சூழ்நிலையே வேற மாதிரி இருந்திருக்கும், ஆனா நினைச்சதுக்கு மாறா ஏதேதோ நடந்து போச்சு, என் மகன் விரும்பி கட்டிக்கணும்னு நினைச்ச பொண்ணே இப்போ அவன் மனைவியா வந்தாலும் அவனால முழுசா சந்தோஷப்பட முடியல, அவனால இயல்பா இருக்கவும் முடியல, அது எனக்கு நல்லாவே புரியுது. பிறந்ததில் இருந்து பார்க்கிறேனே அவனை எனக்கு தெரியாதா? அவன் இந்த வீட்டில் இயல்பா இருக்கறதும், சந்தோஷமா இருக்கறதும் உன்கையில் தான் இருக்கு, அதை நீ புரிஞ்சிக்கிட்டாலே போதும்,” என்று சொல்லிவிட்டு சென்றவரை சிவமித்ரா புரியாத பார்வை பார்த்தப்படி நின்றிருந்தாள்.