மாலை ஐந்து மணியிருக்கும், மறுநாள் செல்ல வேண்டிய வெளியூர் பயணத்திற்காக பெட்டி அடுக்கிக் கொண்டிருந்தாள் அவள். பாதி திறந்திருந்த ஜன்னலின் வழியே அத்துமீறி நுழைந்த காற்று அவளின் தேகம் தழுவி சென்றது. ஈரக் காற்றின் குளுமையில் சிலிர்த்தது அவள் உடல்.
காற்றின் ஈரம் மழை வரப் போவதை அறிவிக்க, மழை தரையை தொடும் முன்னே மண் வாசனை கிளர்ந்து எழுந்து நாசியை நிறைத்தது. மழையின் வரவை ஆவலுடன் எதிர்பார்த்தாள் அவள்.
இந்த பெங்களூர் நகரத்தில் எப்போது மழை வரும் என்று சொல்லி விடவே முடியாது. ஆனால், ஒவ்வொரு முறையும் மிகுந்த மகிழ்வுடனே மழையை வரவேற்கிறாள் அவள்.
மழை வரும் அறிகுறி தெரிந்ததுமே மனம் கணவன் கார்த்திக் தயாரிக்கும் இஞ்சி, ஏலம் மணக்கும் டீக்காக ஏங்கியது. கணவனை நினைத்ததும் மனதுக்குள் மென்மையான, சற்றே இதமான வெம்மையுடனான உணர்வு பரவுவியது.
இம்முறை திரைச் சிலைகளை விலக்கி கொண்டு அத்துமீறி நுழைந்த காற்று, அவளை முழுவதுமாக கலைக்க முயற்சித்தது.
அதுவரை அடுக்கிக் கொண்டிருந்த பெட்டியை கண்களை சுழற்றி ஒரு முறை சரி பார்த்தவள், அதை மூடி ஓரமாக நகர்த்தி வைத்தாள். விழிகளை உயர்த்தி நேரம் பார்த்தாள். ஐந்து பத்து என்றது கடிகாரம். கணவன் வருவதற்கு சரியாய் இன்னும் இரண்டு மணி நேரங்கள் இருக்கிறது என்று மனம் தானாய் கணக்கிட, அந்த கடிதத்தை கைகளில் எடுத்தாள்.
மெல்ல நகர்ந்து சென்று பால்கனியில் அமர்ந்து கொண்டாள்.
இத்தோடு நான்கைந்து முறை படித்திருப்பாள். ஆனாலும், எப்போதும் புதிதாக, முதல் முறை வாசிப்பது போலவே இருக்கிறது. அக்கடிதத்தின் ஒவ்வொரு வார்த்தைகளும் அவளுக்கு மனப்பாடம். கடிதத்தை வெறிக்கும் கண்களையும் மீறி வரிகள் மனதில் ஓடிக் கொண்டேயிருக்கும்.
அது கணவன் கார்த்திக்கின் முதல் காதல் கடிதம். அவன் எழுதியது அல்ல. அவனுக்காக எழுதப்பட்டது.
“கார்த்தி… உன்ன நான் உயிருக்கு உயிரா நேசிக்கிறேன் கார்த்தி… ஐ திங்க், ஐ லவ் யூ. எஸ், ஐ அம் இன் லவ் வித் யூ. இத்தனை நாள் உன்கிட்ட இத எப்படி சொல்றதுன்னு தெரியாம தவிச்சுட்டு.. ஆமா, அப்படித் தான் இருந்தேன். ஆனா, இனி… உன்கிட்ட சொல்லாம இருக்கவே முடியாது கார்த்தி”
கடிதத்தின் ஆரம்ப வரிகள் அப்படியாக தான் இருந்தது. அதில் தெரிந்த தவிப்பும், அன்பும் மெலிதான புன்னகையை அவள் முகத்தில் வரவழைத்தது. கண்கள் தன்னிச்சையாக அடுத்த வரிக்கு தாவியது.
“எப்பவும் உன் கூடவே இருக்கணும் போல இருக்கு கார்த்தி. உன் கையை பிடிச்சுக்கணும் போல.. உன் விரல் கோர்த்து ரொம்ப தூரம் நடக்கணும் போல… என் பைக்கில் உன்னை வச்சு மெதுவா, ரொம்ப மெதுவா, காத்து முகத்தில் மோத.. மரங்கள் அடர்ந்த சாலையில் பைக் ஒட்டிட்டு போகனும் போல இருக்கு. இதெல்லாம் எனக்கு புதுசு, ரொம்ப புதுசு. எனக்கு மட்டும் தான் இப்படி எல்லாம் தோணுதா? என்னை பார்க்கும் போது உன் மனசில் என்ன நினைச்சுப்ப? உனக்கு என்னை பிடிக்குமா?”
மனதின் ஆசைகளை வார்த்தையில் வடித்திடும் போது வரும் ஆசுவாசத்தை அதே வார்த்தைகளை கொண்டு வடித்திட இயலுமா? நிச்சயம் முடியாது என்றே அவளுக்கு தோன்றியது.
கடிதம் எழுதியவரிடம் எப்படி சொல்வாள்? உனைப் போலவே நானும் ஆசைப்படுகிறேன் என்று! எப்போதும் கார்த்தியுடன் இருக்க, அவன் கைப் பிடித்து நடக்க, அவன் தோள் சாய்ந்து காற்று முகத்தில் மோத, மரங்கள் அடர்ந்த சாலையில் ஒரு நீண்ட பயணம்.
“ஹ்ம்ம்” பெருமூச்சொன்றை வெளியேற்றி, அடுத்த வரிக்கு தாவினாள். மனம் தானாக அவ்வரிகளை உச்சரித்தது.
“என்னை பிடிக்காதுன்னு மட்டும் சொல்லிடாத கார்த்தி. அதை கேட்டதுக்கு அப்புறமும் என்னால.. என்னால… வேண்டாம் கார்த்தி.. பிடிக்கும்னு மட்டும் சொல்லு. பிடிக்கலையா? சொல்லாத. நாம நல்ல நண்பர்களா.. எப்பவும் போல உயிர் தோழர்களா இருப்போம்.”
அன்பின் புறக்கணிப்பை, நேசிப்பவர்களின் நிராகரிப்பை, காதலின் மறுதலிப்பை ஏன் ஏற்றுக் கொள்ளவே முடிவதில்லை?. ஏன் அதை ஏற்றுக் கொள்வது அத்தனை கடினமானதாக இருக்கிறது?
நாம் நேசிப்பவர்களும் பதிலுக்கு நம்மை, நேசிக்க வேண்டும் என்று என்ன கட்டாயம்? எதிர்பார்ப்புகள் அற்றது தானே அன்பு. இல்லையா? குறைந்த பட்சம் அன்பை எதிர்பார்க்கலாமோ?
காதலுக்காக இரந்து போதல் எங்கனம் சரியாகும்? சிலர் காதலுக்காக இறந்தே போகின்றனரே. ஆனாலும், அவளுக்கு இரண்டுமே சரியென படவில்லை.
காதலை தர முடியாவிட்டால், நட்பையாவது கொடு என்பது என்ன விதமான கோரிக்கை?
காதலைக் காட்டிலும் நட்பு பெரிதல்லவா? இல்லை, காதல் தான் பெரிதோ? அவரவர்க்கே வெளிச்சம்.
எத்தனையோ காதலை எளிதாக கடந்தவர்களை அவள் அறிவாள். ஆனால், நட்பு? தோழிகள்? அவர்கள் என்றைக்குமானவர்கள். பல ஆண்டுகள் கழித்து பேசினாலும், விட்ட இடத்தில் இருந்து நட்பை தொடர முடியும் அவர்களால். அது ஒரு தனி உலகம்.
மெல்ல விழிகளை தாழ்த்தி மீண்டும் கடிதத்தில் பதித்தாள்.
“என்னோட மனசில் இருக்கறதை சொன்னதால, உன்ன நான் இழக்க விரும்பல. பிளீஸ், எப்பவும் என் கூடவே இரு கார்த்தி..”
முதல் முறை வாசிக்கையில் இன்னொருவரின் அந்தரங்கத்தை படித்துக் கொண்டிருக்கிறோம் என்பதே அவள் மனதில் லேசான உறுத்தலை, மிகுந்த குற்ற உணர்ச்சியை கொடுத்தது. ஆனால், இன்று கடிதத்தின் வரிகள் அவளை ரசிக்க வைத்தது. அதில் சொட்டிய காதல் புன்னகைக்க வைத்தது. பொறாமை கொள்ளவும் செய்தது.
“முடிஞ்சா பதில் எழுது. இல்லனா அது கூட வேணாம். என் மனசை நீ படிச்சதே, தெரிஞ்சுக்கிட்டதே எனக்கு போதும்”
இப்படிக்கு,
காதலுடன்.. இல்ல.. அன்புடன்,
சாரா
என்று முடிந்திருந்தது கடிதம்.
முதல் காதல் கடிதம் என்று சொல்லி விட முடியாதபடி வார்த்தைகளில் தான் எத்தனை முதிர்ச்சி.
கடிதத்தை கசங்காமல் முன்னிருந்தது போலவே மடித்து வைத்தாள்.
முதல் முறை அந்த கடிதத்தை பார்த்ததும், படித்ததும் நினைவில் வந்தது.
எத்தனை வேகமாக அவளிடம் இருந்து கடிதத்தை பிடுங்கி தூர வைத்தான் கார்த்திக்.
“அது.. அது… நீ நினைக்கிற மாதிரி இல்ல” என்று சங்கடத்துடன் சொன்னவன், கடிதத்தை மீண்டும் அதே இடத்தில் வைத்து கப்போர்டை மூடினான்.
“இந்த லெட்டர்… இதை படிச்சதும் எனக்கு கோபம் வரணும் தானே கார்த்திக்?”
“………..”
“எனக்கு கோபமே வரல கார்த்திக். நான் நல்ல வைஃப் இல்லையா?” என்றாள் சோகம் போல,
“ஹ்ம்ம், கோபம் வரணும்னு அவசியம் இல்ல” என்றான் அழுத்தமாக,
“அப்படியா?” என்றாள் விழிகளை விரித்து.
“அப்படி தான். என்னை என்னோட நிறை, குறையோட மட்டுமில்ல, என்னோட கடந்த காலத்தையும் சேர்த்தே… என்னை முழுசா நீ ஏத்துக்கிட்டன்னு அர்த்தம்”
“இருக்கலாம்” என்று தோள் குலுக்கினாள். புன்னகையுடன் எழுந்து போனான் கார்த்திக்.
அவளுக்கு இன்னும் கூட அந்த சந்தேகம் இருக்கத் தான் செய்கிறது. கணவனின் காதல் கடிதத்தை படித்ததும் தனக்கு ஏன் கோபம் வரவில்லை? நான் இயல்பாக தான் இருக்கிறேனா? என்ற கேள்வியுடன் வெளியில் பார்த்தாள்.
மழை தூரலாக பொழியத் தொடங்கியது. பால்கனி கிரில்லை பிடித்து மெல்ல எழுந்து வீட்டிற்குள் நுழைந்து, அடுப்படிக்குள் புகுந்தாள்.
பாலைக் காய்ச்சி அவளுக்கு பிடித்த விதமாக, ஸ்ட்ராங்காக ஒரு கப் காஃபி கலந்துக் கொண்டு மீண்டும் பால்கனியில் போய் அமர்ந்தாள்.
இந்நேரம் கணவன் இருந்திருந்தால் அவளை காபியை தொடவே விட்டிருக்க மாட்டான். ஆனால், அவளுக்கு காஃபி மட்டுமே நன்றாக போடத் தெரியும். டீ ஸ்பெசலிஸ்ட் என்றால் அது கார்த்திக் தான். அதுவும் மழை நாளில் அவன் தரும் டீ எப்போதும் எக்ஸ்ட்ரா ஸ்பெஷல் தான்.
காலியாக இருந்த எதிர் இருக்கையை பார்த்தபடி காபியை அருந்தத் தொடங்கினாள். கணவன் அவ்விருக்கையை நிறைத்திருந்தால் நன்றாக தான் இருந்திருக்கும்.
படபடவென்று பேசிக் கொண்டே இருப்பான். அவளிடம் பேசுவதற்கு மட்டும் அவனுக்கு ஆயிரம் விஷயங்கள் இருக்கும்.
எதிர் வீட்டு நாய் குட்டியில் தொடங்கி, இதோ இப்போது கொட்டி கொண்டிருக்கும் மழை வரை.. ஏதேதோ கதை சொல்வான். இமைக்காமல் அவனையும், அவன் பேச்சையும் கவனிப்பாள்.
அவனைப் போலவே, அவன் பேச்சும் நேர்த்தியாக, ரசிக்கும் விதமாகவே இருக்கும்.
ஒருவேளை அவளுக்கு கணவனை அதிகம் பிடித்ததாலோ என்னமோ, அவனது பேச்சும் அதிகம் பிடிக்கிறதோ? இருக்கலாம். கணவனை நினைக்கையிலே அவள் மனதினுள்ளும் மெலிதாக மழைச் சாரல்.
காற்றில் கடிதம் படபடத்தது, அதை மழையில் நனைந்து விடாமல் தடுக்க சட்டென்று கைப்பற்றி மடியில் பத்திரமாக பொதிந்து வைத்தாள்.
இப்போது மழையின் வேகம் கூடி இருந்தது.
வானம் தன் துக்கத்தை இல்லை ஆனந்தத்தை? எதை வெளிக்காட்ட இப்படி மழையை பொழிகிறது?
இருந்திருந்து இன்றைக்கு மழை பெய்யாது இருந்திருக்கலாம். மண் வாசனையோடு மனதின் அடியில் பல வருடங்களாய் தங்கியிருந்த, இல்லை தேங்கியிருந்த நினைவுகளும் மெல்ல கிளர்ந்து மேலெழுந்து அவளது மென்னியை நெரிக்கிறது.
திடீரென்று மனதின் அமைதியை யாரோ கலைத்துப் போட்ட சீட்டுக்கட்டை போல் ஆக்கி விட்டதை உணர்ந்தாள். கடிதத்தை வாசிக்க தொடங்கிய போது இருந்த அமைதி இப்போது நிச்சயமாய் அவளிடம் இல்லை.
நினைவுகள் மெல்ல அவளை ஆக்கிரமிக்கத் தொடங்கின.
கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு முன் அவளும் ஒரு காதலுக்கு தன்னை அறியாமலேயே தூது சென்றிருக்கிறாள். இருவரின் காதலுக்கு மௌன சாட்சியாய் இருந்திருக்கிறாள். இது தான் செய்கிறோம் என்று தெரியாமலேயே தூது சென்றிருக்கிறாள்.