அவள் பிறந்து, வளர்ந்தது எல்லாம் சொந்த ஊரான மதுரையில் தான். அப்போது பள்ளி இறுதி ஆண்டுகளில் இருந்தாள். தொண்ணூறுகளின் இறுதி அது.
பள்ளி முடித்து வந்து, பக்கத்து தெருவில் இருந்த கயல்விழி அண்ணியிடம் தான் மேத்ஸ் டியூசன் செல்வாள் அவள். மேத்ஸ் என்றில்லை, அனைத்து பாடங்களிலுமே சந்தேகங்களை கேட்டு கயல் விழி அண்ணியிடம் நிவிர்த்தி செய்து கொள்ள முடியும்.
மற்ற மாணவ, மாணவிகள் “மிஸ்” என்று அழைக்கையில் இவள் ஒருத்தி மட்டுமே அண்ணி என்பாள். கயல்விழி அவளுக்கு தூரத்து சொந்தம் என்பதினால் மட்டுமல்ல, கிருபா அண்ணனின் சித்தி மகள் மற்றும் அவனின் பக்கத்து வீடு என்பதாலும் அவளுக்கு அந்த கூடுதல் சலுகை வழங்கப்பட்டது என்பது அவளுக்கு புரியவே பல வருடங்கள் தேவைப்பட்டது.
கயல் விழிக்கு அவளை மிகவும் பிடிக்கும். எப்போதும் சின்னவளை தன்னுருகிலேயே அமர்த்திக் கொள்வாள். அவள் செய்யும் வேலைகள் அனைத்தையும் இவளுக்கும் கற்றுத் தருவாள்.
சைக்கிள் ஓட்ட கற்றுக் கொடுத்தது கயல் விழி அண்ணி தான். சைக்கிள் மட்டும் இன்றி அவள் அந்த வயதில் கற்றுக் கொண்ட அனைத்துமே கயல் விழியிடம் இருந்து தான்.
“மதுரையில் இருக்கோம், மல்லிப்பூ கட்டத் தெரியாதுன்னு சொன்னா, எவ்வளவு அசிங்கம். உட்காரு இப்படி. அண்ணி கட்டுறதை பாரு” என்று அவளை இழுத்து அருகில் அமர்த்தி பொறுமையாக சொல்லிக் கொடுப்பாள்.
நான்கு நாட்கள் பூக்களை அடையாளம் தெரியாத அளவுக்கு கசக்கி விட்டு, ஐந்தாம் நாள் அவள் போராடி ஒரு முழம் கட்டியிருப்பதை பார்த்து, சற்று அதிகமாகவே வியப்பாள்.
“இந்தா பூ கட்டிட்ட இல்ல. அவ்வளவு தான். எவ்வளவு அழகா இருக்கு பாரு. திரும்பு, தலையில் வச்சு விடுறேன்” பாராட்டோடு பூவும் அவள் தலையில் குடியேறி இருக்கும்.
“அப்படியே இந்த குட்டி கழுதைக்கு கோலம் போட சொல்லி கொடு கயல்” என்று அவள் எட்டாம் வகுப்பு படிக்கையில் அவள் அம்மாவே கயல் அண்ணியிடம் கோரிக்கை வைக்க, புள்ளி கோலம் எல்லாம் புறந்தள்ளி விட்டு, அழகாக பெரிதாக, வாசலை அடைத்துப் போடும் ரங்கோலி கோலங்களை கற்றுத் தந்தார் கயல் அண்ணி.
மூன்று விரல்களில் நேர்த்தியாக கோல மாவை எடுத்து, நுனி விரலால் பிசிறில்லா கோடுகள் இழுக்க கற்றுத் தந்தாள். பத்து நிமிடத்தில் வீட்டின் முன் வாசலில் பூத்திருக்கும் பெரிய பூவிற்கு பொருத்தமான வண்ணங்கள் சேர்க்கவும் சொல்லித் தந்தாள்.
அவள் கோலத்தை முடிப்பதற்காகவே காத்திருந்தது போல, “அழகு. சொல்லித் தர்றது எவ்வளவு வேகமாக பிடிச்சுக்கற. கற்பூர புத்தி உனக்கு” கன்னம் வழித்து நெட்டி முறிப்பாள். பக்கத்து வீட்டு பெண்ணை விரட்டி, அடுத்த தெருவில் இருக்கும் அவள் அம்மாவை அழைத்து வர செய்வாள்.
இடுப்பில் கைப் பதித்து, வாய் பிளப்பார் தேவகி.
“என் செல்லக்குட்டி, நீயா தங்கம் இந்த கோலம் போட்ட? என் ராசாத்தி” என்று அவரும் தன் பங்குக்கு நெட்டி முறிப்பார். பெருமை பிடிபடாது அவருக்கு.
வீட்டில் அவள் மகா செல்லம். அம்மா வேலை ஏவினாலும், அப்பா செய்ய விட மாட்டார். (Ambien) இரண்டு மகன்களுக்கு பின் பிறந்த ஒற்றை பெண் அவள். தந்தையின் செல்லப் பெண்.
“நாளைக்கு வர்றவன் அவளை திட்ட மாட்டான். எப்படி வளர்த்து வச்சுருக்காங்க பாருன்னு, நம்மை தான் திட்டுவான். பொண்ணை செல்லம் கொடுத்து கெடுக்காதீங்க” கத்துவார் தேவகி.
“உங்கம்மா, அவ அப்படி தான் டா, நீ கண்டுக்காத. நல்லா படி போதும். நான் உனக்கு மகா ராஜாவை தேடி பிடிப்பேன். அவன் உன்னை வேலை சொல்லாம ராணி மாதிரி பார்த்துப்பான்.” அவள் தலைக் கோதி சொல்வார் அப்பா தேவராஜன்.
மகளுக்காக மகா ராஜனை தான் தேடிப் பிடித்தார். அவளுக்கு பிடித்த கார்த்திக். ராணியை போல தான் கையில் வைத்து தாங்குகிறான்.
கார்த்திக் அவளுக்காக பெற்றோர் பார்த்த பையன் தான். இல்லை, அப்படி சொல்ல முடியாது. இவள் பார்த்தாள், பெற்றோர் திருமணத்தை நடத்தி முடித்தனர்.
இவளது இரண்டாம் அண்ணனின் ஹாஸ்பிட்டல் திறப்பு விழாவின் போது தான் அவள் கார்த்திக்கை முதன்முதலாக சந்தித்தது.
“இவர் கார்த்திக்.. நம்ம..” ஏதோ சொல்லி அறிமுகப் படுத்தினான் அவளது அண்ணன். ஆனால், அவள் எதையும் கவனிக்கும் மனநிலையில் இல்லை.
ஒரு கணம் உறைந்து போனவளாக கார்த்திக்கின் முகம் பார்த்திருந்தாள்.
“தங்கப் புள்ள.. விழி மா..” என்ற தேவராஜனின் அழைப்பில், சுற்று புறம் உணர்ந்து கார்த்திக்கிடம் இருந்து கண்களை அகற்றினாள்.
“என்னங்க ப்பா” என்றாள்.
“தம்பி கை நீட்டிட்டு இருக்காங்க பாரு” என்றார் கார்த்திக்கை காட்டி,
“ஹாய், சாரி…” மென்மையாய் அவள் கைப் பற்றி குலுக்கினான். அவள் என்ன செய்கிறாள், என்னப் படித்தாள் என்று பொதுவாக தான் விசாரித்தான். அவளும் பொறுப்பாக பதில் சொன்னாள்.
அவ்வளவு தான் நடந்தது. தேவராஜனுக்கு அதுவே போதுமானதாக இருக்க, அடுத்த மூன்றாம் மாதம் கார்த்திக்கின் மனைவியாகி இருந்தாள் அவள். மிகவும் மகிழ்ச்சியாக.
ச்சே.. எங்கிருந்து எங்கு தாவுகிறது இந்த மனது என்று தலையை உலுக்கி கொண்டாள்.
அந்த வயதில் அவள் செய்யும் சிறு சிறு செயல்கள் கூட தேவராஜனை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தி விடும். மனைவியிடம் பெருமை பீற்றியே மாய்ந்து போவார்.
“என் பொண்ணை பார்த்தியா? எப்படி படிக்கறா பாரு. எவ்வளவு பொறுப்பா இருக்கா பாரு. என் பொண்ணு, என் பொண்ணு” அவரை கையில் பிடிக்க முடியாது. எல்லா சராசரி தந்தையை போல தான் அவரும்.
தேவராஜன் மகிழ்ச்சியில் பூரித்து போகும் அளவுக்கு ஒவ்வொரு வேலையையும் தெளிவாக, அழகாக கற்றுக் கொண்டாள் அவள்.
அப்போது ஒன்பது படித்தாளோ? நினைவில்லை. முதல் முறை சமையல் அறைக்குள் நுழைந்ததும் அப்போது தான். டீ, காபி என்று தொடங்கி, சாம்பார், ரசம் என்று ஒவ்வொன்றையும் எளிதாக, அதன் அளவுகளுடன் சொல்லித் தந்தாள் கயல்.
மெல்ல முன்னேறி ஒரு நாள் கயல் அண்ணி சொல்லிக் கொடுத்தது போல, முதல் நாள் கயலின் வீட்டில் அவள் சொல்ல, சொல்ல இவள் செய்தது போல, மறுநாளே அவள் வீட்டில் அவள் சமைத்து வைத்த அயிரை மீன் குழம்பு துளி கூட மிச்சமில்லாமல் காலியானது.
“அப்படியே எங்க ஆத்தா கைப் பக்குவம். இந்த ருசியில சாப்பிட்டு எம்புட்டு நாளாச்சு. எங்க ஆத்தாவே உசுரோட வந்தது போலருக்கு” சாப்பிட்டு உலர்ந்த கையுடன் கண் கலங்கினார் தேவராஜன். மகிழ்ச்சியில் பூரித்து போனாள் அவள்.
அன்றாட வாழ்வின் சின்ன சின்ன விஷயங்களையும் சிரத்தை எடுத்து அவளுக்கு சொல்லித் தந்த கயல் விழியிடம் இருந்து அவள் கற்றுக் கொள்ளாத ஒன்று உண்டென்றால் அது, இந்த காதல் ஒன்று மட்டும் தான்.
பணியாரம் செய்வதற்கு காட்டித் தருபவள், அவளுக்கென்று இரண்டு ஈட்டை டிஃபனில் கட்டியும் தருவாள்.
“இங்க பாரு, உங்க அம்மா கிட்ட மட்டும் கொடு. உங்க வீட்ல, அண்ணனுங்களுக்கு கொடு. உங்க பக்கத்து வீட்ல ஒரு தடிமாடு இருக்கே, பேர் என்ன கிருபா? அதுக்கு கொடுத்திட போற” என்று எச்சரிக்கை செய்தே அனுப்புவாள். ஆனால், அவள் வீட்டை அடையும் போது, எல்லோருக்கும் முன்பாக பக்கத்து வீட்டு கேட்டில் சாய்ந்தபடி, “ஓய் சில்வண்டு. எங்க போய்ட்டு வர்ற? கையில என்ன? இங்க கொண்டா?” என்று அவளை முதலில் அழைப்பது கிருபாகரன் அண்ணவாக தான் இருக்கும்.
மௌனமாய் சென்று அண்ணன் முன் நிற்பாள். மூன்று, நான்கு பணியாரத்தை பொறுமையாய் உண்டு விட்டு, “வீட்டுக்குள்ள ஓடு, சித்தி தேடப் போறாங்க” என்று விரட்டுவான்.
“அடுத்த முறை ரவா லட்டு செய்ய சொல்லு சில்வண்டு” என்ற கோரிக்கை நடப்பவளின் முன் வந்து விழும். சிரித்துக் கொள்வாள். ஆனாலும், மறக்காமல் மறுநாள் அதை கயல் விழியிடம் ஓப்புவித்து விடுவாள்.
அன்றைய டியூசனில் பள்ளி பாடங்கள் முடிந்ததும், மற்ற மாணவர்களை அனுப்பி விட்டு அவளை மட்டும் அருகில் வைத்துக் கொண்டு, சிரத்தை எடுத்து மிக கவனமாய் ரவா லட்டு பிடிப்பாள் கயல்விழி. உருண்டை பிடிக்கையில் சூடு பொறுக்க முடியாமல் கையை அடிக்கடி ஊதிக் கொள்ளும் அவளை பாவமாய் பார்ப்பாள் இவள்.
நிறைய முந்திரி, திராட்சை வைத்து அழுத்தி பிடிக்கப்பட்ட லட்டுகள் கிருபா அண்ணனுக்காக தனி டப்பாவில் போய் அமரும்.
“அசைக்காம கொண்டு போ என்ன? ஒடாம, ஆடாம மெல்ல நடந்து போ. அப்படியே இதை அந்த தடிமாடு கிட்ட கொடு. இதை அத்தை கிட்ட கொடு. என்ன?” என்று அவளுக்கும், கிருபா அண்ணனுக்கும் பங்கு பிரித்து அனுப்புவாள். அன்றைக்கு பார்த்து வேண்டும் என்றே வெளியில் வர மாட்டார் கிருபா அண்ணா.
இவள் தன் வீட்டிற்கு போனதும், ஒரு டப்பாவை அம்மாவிடம் கொடுத்து விட்டு, முகம் கழுவி, தலை வாரி, அடுத்த டப்பாவை கையில் எடுத்துக் கொண்டு பக்கத்து வீட்டிற்கு ஓடுவாள்.
“பெரியம்மா, மா..” என்று அழைப்பவள் முன் வந்து நின்று, “என்ன விழி? சவுண்ட் பலமா இருக்கு? ஸ்கூல் விட்டு வந்ததும் என்னத்த முழுங்கின சில்வண்டு? உங்க அண்ணி என்ன சாப்பிட கொடுத்தா?” என்று, அந்த அண்ணியில் அழுத்தம் கொடுத்து கேட்பார் கிருபா அண்ணா.
“இந்தாங்க ண்ணா, நீங்க கேட்ட ரவா லட்டு” என்று அவன் கையில் டப்பாவை திணித்து விட்டு ஓட முற்படுபவளை தடுத்து நிறுத்தும் அவன் குரல்.
“ஒய் சில்வண்டு, உன்ன கத்துக்க சொன்னா? நான் கேட்டேனாம்ல? நல்லா சொல்றா பாரு.” என்று சலித்து கொள்பவன், “சரி சரி, நீ செஞ்சதுக்காக சாப்பிடுறேன்” என்று அலுத்துக் கொண்டு, ஒரு உருண்டையை எடுத்து வாயில் போடுவான்.
“சும்மா சொல்லக் கூடாது, இந்த விழி கை மணம் இருக்கே” என்று வியப்பான். இவளது முறைப்பு அவனை மேலே பேச விடாமல் தடுக்கும்.
“அட, விழின்னு தானே சொன்னேன்? மலர் விழி, உன்னை தான் சொன்னேன் சில்வண்டு. நல்லா செஞ்சுருக்க” என்று உண்மையான குரலில் பாராட்டுவான்.
“நான் சொன்னதை அந்த விழி கிட்ட சொல்லாத, என்ன?” என்றும் எச்சரிப்பான். அப்போது தான் மறக்காமல் போய் கயல் அண்ணியிடம் சொல்வாள் இவள்.
இவள் மலர் விழி. அவள் அப்பா தேவராஜனுக்கு அடுத்து அவளை விழி என அழைப்பது இருவர் தான். கிருபா அண்ணா, கயல் விழி அண்ணி.
கயல் விழியை, விழி என அழைப்பது கிருபா அண்ணா மட்டும் தான். அவளுக்காகவே மலர் விழியும், விழியாகி போனாள் கிருபா அண்ணாவிற்கு.
அவளும் தன்னாலான வரை முயன்றாள் தான். ஆனால், பயத்தில் கீழே விழுந்து வாரிக் கொண்டே இருந்தாள்.
“இப்படி நீ விழுந்து வாரிக் கிட்டே இருந்தா, உங்கப்பா என்னை அடி வெளுத்துடுவார்.” என்று புலம்பிய கயல்விழி, அவர்களின் சைக்கிள் புராஜக்ட்டை அப்போதைக்கு தள்ளி வைத்தாள்.
ஆனால், திடீரென்று ஒரு நாள்,
“அந்த தாடிமாடு சும்மா தானே இருக்கான். உனக்கு சைக்கிள் ஒட்ட சொல்லி கொடுக்கச் சொல்லு” என்று கயல் அண்ணி புருவம் உயர்த்தி சொல்ல, மறு வாரமே கிருபா அண்ணனிடம் அவளுக்கு சைக்கிள் ஒட்டும் பயிற்சி ஆரம்பம் ஆனது.
அவர்களின் தெருவில் தான் ஓட்ட வைப்பான். அந்த முனையில் இருந்து இந்த முனைக்கு வருவதற்குள் கத்தி தீர்த்து விடுவாள் மலர்விழி.
“முதல்ல பயப்படாம ஒட்டு. அண்ணா உன்ன அப்படி எல்லாம் கீழ விழ விட மாட்டேன். உன்ன கீழ விழ தட்டிட்டு நான் இந்த தெருவுல உசுரோட நடமாட முடியும்னு நினைக்கிற? உங்கப்பா என்னை பொளந்து கட்டிடுவார். அதனால் நீ என்ன பண்ற? நேரா ரோட்டை பார்த்து ஓட்டுற? என்ன? பயப்படாத? நான் தான் பின்னாடி பிடிச்சு இருக்கேன் இல்ல?” என்பான்.
இவர்களின் வார்த்தையாடலை சன்ன சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருப்பார் அவளின் அம்மா தேவகி.
“பாப்பா பத்திரம் டா. டேய், ஒழுங்கா பிடி டா கிருபா” என்று கத்துவார் பெரியம்மா, அதாவது கிருபா அண்ணாவின் அம்மா.
“யாரு இவ பாப்பா? வந்து சைக்கிளை பிடிச்சு பாரு மா. பீப்பா இது” என்று கிண்டல் அடிப்பான்.
“அவ கூட பிறந்த ரெண்டு அண்ணனுக இருக்கானுங்கன்னு தான் பேரு. ஆனா, தங்கச்சியை திரும்பி கூட பார்க்கறது கிடையாது. நம்ம கிருபா மட்டும் தான் மலர் மேல அக்கறையா இருக்கான். நீ சொல்லி கொடு ராஜா” என்பார் தேவகி.
“மெல்ல மெல்ல, அப்படி தான். நல்லா பெடல் பண்ணு” என்று அவள் பின்னோடு ஓடி வருவான்.
“அண்ணா, ஒழுங்கா பிடி. பின்னாடி இருக்க தானே? சரியா ஒட்டுறனா?” எனும் அவளின் கேள்விக்கு பதில் வராது, அந்த பதட்டத்தில் இரு கால்களையும் தரையில் ஊன்றி, சைக்கிளை நிறுத்தி விட்டு திரும்பி பார்ப்பாள். தெருவின் மறு கொடியில் பெரிய புன்னகையுடன் நிற்பார் கிருபா அண்ணா.
“சூப்பரா ஒட்டிட்ட பாரு சில்வண்டு. இப்ப அப்படியே திரும்பி வா, பார்ப்போம்” என்பான். பயத்தில் நகர மாட்டாள் அவள்.
அங்கிருந்து ஓடி வந்து மீண்டும் அவளுக்காக சைக்கிளை பிடிப்பான். அதே வேகத்தில் காணாமலும் போவான். முழுதாக பதினைந்து நாட்கள் ஆனது அவள் நன்றாக சைக்கிள் ஓட்ட கற்றுக் கொள்ள, அத்துணை பொறுமையாக அவளுக்கு சொல்லி கொடுத்தான் கிருபா அண்ணா.
“பரவாயில்ல, உருப்படியா ஒருவேளை.. இப்ப தான் பார்த்திருக்கு” அவள் சைக்கிள் ஓட்டுவது பார்த்தபடி சொல்வாள் கயல் அண்ணி.
“நான் சொன்னதை போய் உங்க நொண்ணா கிட்ட சொல்லிடாத, என்ன?” என்பாள், பயந்தது போல. ஆனால், மறக்காமல் அதைப் போய் கிருபா அண்ணாவிடம் சொல்வாள் மலர்.
முகம் நிறைத்த புன்னகையுடன், “அவளுக்கு இருக்கு ஒருநாள், ஓவர் லந்து கொடுக்கறா” என்று கோபம் போல சொல்ல முயற்சித்து தோற்பான்.
“கோபப்பட்டானா?” என்று மெல்ல விசாரிப்பாள் கயல் அண்ணி.
“ஆமா. ஆனா, சிரிச்சிக்கிட்டே தான் கோபப்பட்டாங்க” என்று விஷயம் புரியாமல், குழம்பிப் போய் சொல்வாள் மலர். அது புரியாத வயது. ஆனால், இன்றைக்கு அனைத்துமே புரிகிறது.
கோலம், சமையலை அடுத்து உடைகளை நேர்த்தியாக உடுத்த கற்றுக் கொடுத்ததும் கயல் அண்ணி தான். தாவணி, சேலை இரண்டுமே அவளுக்கு கட்ட பழக்கி விட்டதும் அவள் தான்.