அன்றைக்கும் மழை பெய்தது. இத்தனைக்கும் அது மே மாதம். வீட்டின் பின் கட்டுக்கு செல்லும் படியில் அமர்ந்து மழையை பார்த்திருந்தனர் இரண்டு பெண்களும். கயலின் கண்ணீருக்கு அந்த மழையும், மலருமே சாட்சி.
அதற்கு பின் வந்த பல நாட்கள் வெறுமே வானம் பார்த்து, விரக்தியாக நின்றிருக்கிறாள் கயல் விழி. சென்னை போன கிருபா அண்ணனிடம் இருந்து ஒரு தகவலும் வரவில்லை.
இப்போது கயல் அண்ணியின் கண்ணீருக்கு மலர் மட்டும் அல்லாது, ஓராயிரம் கோடி நட்சத்திரங்களும், அவர்களை தழுவி செல்லும் காற்றும், மொட்டை மாடியை ஆக்கிரமித்திருந்த குண்டு மல்லியும் மௌன சாட்சியாய் உடன் நின்றன.
கிருபா அண்ணா சீக்கிரம் வந்து விடுவான் என்று கயல்விழி மனதார நம்பினாள்.
ஆனால், நாம் நினைப்பது எல்லாம் நடந்து விட்டால், வாழ்க்கையில் சுவாரசியம் ஏது?
கிருபா அண்ணா வரும் முன்னே கயல்விழி அண்ணி வேறோரு பக்கம் கிளம்பி இருந்தாள்.
மற்றொரு பக்கம் பள்ளி இறுதி தேர்வின் முடிவுகள் வந்ததும், சென்னையில் இருக்கும் சித்தி வீட்டிற்கு இடம் பெயர்ந்து விட்டாள் மலர்விழி. பெற்றோர்கள் விரும்பி அல்ல, அவளாக அழுது அடம் பிடித்து தான் சென்றாள்.
கல்லூரி படிப்பை அங்கு தான் முடித்தாள். சென்னை கிளம்புவதற்கு முன் அண்ணி கயல்விழியின் கல்யாணத்தை கலங்கிய கண்களுடன் பார்த்து விட்டு தான் சென்றாள்.
ஆம், கயல்விழிக்கு திருமணமாகி விட்டது.
ஆனால், கிருபா அண்ணா உடன் அல்ல.
“கயலுக்கு கல்யாணமாம்” என்று முதல் முறை அவள் அம்மா சொன்ன போது, அவளுக்கு துள்ளி குதிக்க வேண்டும் போலிருந்தது.
வேகமாக வெளியில் ஓடிப் போய் பக்கத்து வீட்டை எட்டிப் பார்த்தாள். கிருபா அண்ணாவின் தடயமே அந்த வீட்டில் இல்லை.
“பெரியம்மா… பெரியம்மா…” கத்தினாள்.
“என்ன மலரு குட்டி? ஏன் இப்படி ஏலம் விடுற?” என்று வந்து நின்றவரிடம்,
“கிருபா அண்ணா எங்க?” என்று அவன் வேலைக்கு சென்ற இந்த ஆறு மாதங்களில் முதல் முறையாக விசாரித்தாள்.
“லெட்டர் போட்டு இருக்கான் குட்டி. சீக்கிரம் வருவான்” என்றார்.
“அப்போ அண்ணாக்கு கல்யாணம்…” என்று அவள் கேள்வியை முடிப்பதற்குள் வீட்டின் உள்ளிருந்து பெரியப்பா அழைக்க, அங்கே சென்று விட்டார் அவர்.
மீண்டும் தன் வீட்டிற்குள் ஓடி, கயலின் கல்யாண பத்திரிக்கையை தேடினாள். அங்கு கயல்விழியின் பக்கத்தில் கிருபா அண்ணாவின் பெயர் இல்லை. மாறாக வேறு யாரோ ஒருவரின் பெயர் இருந்தது. இவளுக்கு உதடு பிதுங்கி, அழுகை முட்டிக் கொண்டு வந்தது.
கையில் இருந்த பத்திரிக்கையை தூக்கி கடாசி விட்டு, அண்ணியை தேடி அவளின் வீட்டிற்கு ஓடினாள். அங்கே அவளில்லை. அவளின் அம்மா மட்டுமே இருந்தார்
“கயலு டவுனுக்கு போய் இருக்கா மலர். துணி தைக்க கொடுத்திருக்கு. அதை அவ அப்பாவும், அவளும் வாங்கிட்டு வர போய் இருக்காங்க. அவ வந்ததும் சொல்லி அனுப்பறேன். நீ வந்து பாரு டா” என்றார் அத்தை.
இரு வீட்டிற்கும் நடுவில் இருந்த ஒற்றைத் தெருவை அழுகையிலயே கடந்தாள் மலர். இதயம் கலங்கி கண்ணீராக வழிந்திருந்தது.
அதற்குப் பின் வந்த நாட்களில் மலருக்கு கயல்விழியை தனியாக சந்திக்கும் வாய்ப்பு கிட்டவேயில்லை. அவளும் எத்தனையோ வழிகளில் முயன்றாள். ஆனால், பலனில்லை.
கயல் அண்ணியின் வீட்டில் எப்போதும் ஒரு கூட்டம் இருந்து கொண்டே இருந்தது. யாரேனும் சொந்தக்காரர்கள் வருவதும், போவதுமாக இருந்தனர். கயலை பார்த்தாலும் தனியாக அவளிடம் பேச முடியவில்லை.
கல்யாணத்திற்கு முன் தினம், மாலை நான்கு மணியளவில் அவளது வீட்டு தொலைபேசி அடித்தது. ஒலியின் வித்தியாசத்திலேயே அது வெளியூர் கால் என்று யூகித்தவள், ஓடிச் சென்று ரிசிவரை கையில் எடுத்தாள்.
“ஹலோ” என்றாள்.
“ஹேய் சில்வண்டு…” என்ற கிருபா அண்ணாவின் குரலில் இவளுக்கு தொண்டையடைத்தது.
அவர்களின் தெரு முனையில் பொருத்தப் பட்டிருந்த ஒலிப் பெருக்கியில் சமய சந்தர்ப்பம் இல்லாமல் ஒலித்தது அந்த பாடல்.
“நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துகள்…”
“அண்ணா…” என்றாள் இம்முறை. பாடலை கேட்க விடாமல் செய்ய சத்தத்தை உயர்த்தினாள்.
“எப்படி இருக்க? என்ன மார்க் எடுத்த? உங்க அண்ணி எப்படி இருக்கா?” கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனான்.
“சில்வண்டு போய் உங்க அண்ணியை கூட்டிட்டு வர்றியா? சும்மா அவளுக்கு முக்கியமான கால் வந்திருக்குன்னு சொல்லி கூட்டிட்டு வா.” என்றவன், என்ன நினைத்தானோ, “வேண்டாம் விழி. அண்ணா நாளைக்கு ஊருக்கு வர்றேன். அவளுக்கு சர்ப்ரைஸா இருக்கட்டும்” என்று சிரித்துக் கொண்டே சொன்னான்.
‘நாளை சர்ப்ரைஸ் நிச்சயம் இருக்கிறது. ஆனால், யாருக்கு என்பது தான் தெரியவில்லை. நாளை அண்ணன் சிரிப்பானா?’ என்ற எண்ணம் மனதில் ஓட அமைதியாய் ரிசீவரை இறுக்கமாக பிடித்துக் கொண்டு நின்றாள் அவள்.
“ஏன் பேசவே மாட்டேங்கற சில்வண்டு. அண்ணி நல்லா இருக்கா தானே? அவ கூட சண்டையா நீ? இல்ல வீட்ல ஏதாவது சண்டையா? தெருவுல எவனாவது வாலாட்டுறானா? யாருன்னு நாளைக்கு நான் வந்ததும் சொல்லு. நான் கவனிச்சுக்கறேன்” பேசிக் கொண்டே போனான்.
“பெரியம்மா கிட்ட பேசுங்க ண்ணா.” மூச்சு வாங்க பின்னால் வந்து நின்ற அவனின் அம்மாவிடம் போனை கொடுத்து விட்டு நகர்ந்து போனாள்.
அவர்கள் தெருவில் அவள் வீட்டில் மட்டுமே தொலைபேசி இருந்தது. அவசர தகவல்கள் சொல்ல, அவள் வீட்டுக்கு தான் அழைப்பார்கள். இவள் தான் ஓடிப் போய் ஆட்களை கூட்டிக் கொண்டு வர வேண்டும். கயல் அண்ணியின் வீட்டிலும் கூட தொலைபேசி அப்போது வந்திருக்கவில்லை.
“தம்பி நல்லா இருக்கியாய்யா?… என்ன நாளைக்கு வர்றியா? சந்தோசம் பா. கண்ணுக்குள்ளையே இருக்க. சீக்கிரம் வந்து சேரு. பார்த்து சூதானமா வா..”
அண்ணாவின் பேச்சுக்கு பதில் சொன்ன பெரியம்மாவின் குரலை கேட்டபடி மௌனமாய் நின்றாள்.
அவர்களின் தொலைபேசி உரையாடல் தொடர்ந்தது, அண்ணா என்ன சொல்கிறார் என்று தெரியா விட்டாலும், பெரியம்மாவின் பேச்சில் அதை புரிந்துக் கொள்ள முயற்சித்த படி அமைதியாய் நின்றாள்.
“இல்லப்பா.. வேலையா இருந்தேன். அதான்.. ஆங்.. என்ன பெரிய வேலை. நம்ம கயல்விழிக்கு தான் நாளைக்கு கல்யாணம். அதான் போய் ஒத்தாசைக்கு நின்னேன். நாளைக்கு நீயும் வர்றது நல்லதா போச்சு. என்னப்பா சொல்ற.. கேட்கல.. தம்பி… தம்பி…”
அண்ணாவின் அதிர்ச்சியை அவர் முகம் பார்க்காமலேயே அவளால் உணர முடிந்தது. இந்நேரம் அவன் அங்கு சுக்கு நூறாக உடைந்திருப்பான், அவளைப் போலவே என்று மனதில் நினைத்துக் கொண்டாள் மலர்விழி.
அதற்கு மேல் அவர்கள் பேச்சை தொடந்து கேட்க முடியாமல், வீட்டின் பின் பக்கம் இருந்த தோட்டத்திற்குள் புகுந்து கொண்டாள் மலர்விழி.
“ஏய், உன் மனசுல என்ன தாண்டி நினைச்சிட்டு இருக்க? என்னைய லூசு பயலா ஆக்கணும்னு பிளான் போடுறியா?” முன்னொரு முறை இதே இடத்தில் கயல்விழியை நிறுத்தி, கிருபா அண்ணா கேட்ட கேள்வி, அசரீரியாய் அவள் காதில் ஒலித்தது.
“காத்திருப்ப இல்ல?” புன்னகையுடன் கேட்ட கிருபா அண்ணா…
அவளுக்கு அழுகை முட்டிக் கொண்டு வந்தது. கயல் விழி அண்ணிக்கு மிகப் பிடித்த சந்தன முல்லைப் பூ கொடியின் கீழ் போய் அமர்ந்தாள். அதுவரை அடக்கி வைத்திருந்த கண்ணீர் இப்போது அருவியாய் கொட்டத் தொடங்கியது. எதற்காக அழுகிறோம் எனத் தெரியாமலேயே அழுது கரைந்தாள்.
“ஏழை காதல் வாழுமோ
இருளும் ஒளியும் சேருமோ
நீயோர் ஓரம் நான் ஓர் ஓரம்
கானல் நீரால் தாகம் தீராது…” பாடல் தொடர்ந்து கொண்டிருந்தது. மலரின் அழுகையும்…
இரவு ஒன்பது மணிக்கு அவளின் அம்மா மறுக்க மறுக்க, கயலை பார்க்க அவளின் வீட்டிற்கு போனாள். வீடு முழுக்க நிறைந்திருந்த ஆட்களை கடந்து ஒரு வழியாக கயலிடம் போய் நின்றாள் மலர்.
“ஏன் அண்ணி இப்படி பண்ணீங்க? என்ன ஆச்சு அண்ணி? ஏன் அண்ணி? உங்களுக்கு அண்ணாவை பிடிக்காதா? கிருபா அண்ணா வந்தா என்ன…” என்று தொடங்கிய மலரை, மேலே தொடர விடாமல்… வார்த்தைகளை முடிக்க விடாமல் தடுத்தது கயலின் ஈர விழிகள்.
அதற்கு மேல் அவளுக்கு மதுரையில் எதுவுமே ரசிக்கவில்லை. வாழ்வில் எல்லாமே பொய்த்து போன உணர்வு.
அவர்கள் வரைந்த வானத்தில் அப்போது தான் நட்சத்திரங்கள் பூக்க ஆரம்பித்திருந்தது. ஆனால், மொத்த வானத்தையும் தன் கையோடு சுருட்டிக் கொண்டு தூர தேசம் போனாள் கயல்விழி.
புதுக் கணவனுடன், புது மணப் பெண்ணாக, புதுப் பொலிவுடன் கயல் விழி கேரளா கிளம்புவதை எவ்வித எதிர்வினையும் காட்டாது மௌனமாய் பார்த்து நின்றாள் மலர்விழி.
அன்று அவள் கண் முன்னே ஒரு அழகிய காதல் தோற்றுப் போனது. அவள் எதிர்பார்த்தது போல, மறுநாள் கிருபா அண்ணா வரவில்லை. அப்போது மட்டுமல்ல அதற்கு பின்பு பல வருடங்களுக்கு அண்ணா ஊருக்கே வரவில்லை என்று அவளின் அம்மா சொல்லி தான் தெரிந்து கொண்டாள் அவள்.
கிருபா அண்ணா என்னவானான் என்று அறிந்து கொள்ள அவள் ஆர்வம் காட்டவே இல்லை.
அவள் சென்னை கிளம்பும் வரை பெரியம்மா தான் புலம்பிக் கொண்டே இருந்தார்.
“காசு மட்டும் கரெக்டா மணி ஆர்டர் அனுப்பிடுறான் தேவகி. ஆனா, அவன் வர மாட்டேங்கறான். புள்ள முகம் கண்ணுக்குள்ளயே இருக்கு…” கண்ணீரை சேலை தலைப்பால் துடைத்துக் கொள்வார்.
“எங்க போக போறான் கா, பொறுப்பா வேலை தானே பார்த்திட்டு இருக்கான். நம்ம புள்ள எங்க சுத்தினாலும் வீட்டுக்கு தான் வருவான். நீங்க கவலைப் படாதீங்க” என்று தேற்றுவார் அவளின் அம்மா.
கண் மூடித் திறப்பதற்குள் வருடங்கள் ஓடி மறைந்திருந்தன.
சென்னையில் சித்தி வீட்டில் தங்கிப் படித்துக் கொண்டிருந்த அவளை பார்க்க வந்த அவளின் அம்மா, ஒரு நாள் சித்தியிடம் பேசுவதை அவள் கேட்க நேர்ந்தது.
“இந்த கிருபா பைய, யாரையோ விரும்பினானாம். அதை வீட்ல சொல்றதை விட்டுட்டு, அந்த பொண்ணு கல்யாணமாகி போய்டுச்சுன்னு வீட்டுக்கே வராம இருந்து, பெத்தவங்களை போட்டு நோகடிச்சு. என்னவோ போ, இந்த சிறுசுக மனசை எங்க புரிஞ்சுக்க முடியுது. இனியாவது அவன் நல்லா இருந்தா சரி தான்.” என்று அவளது சித்தியிடம் அங்கலாய்த்தார் தேவகி.
அதைக் கேட்டுக் கொண்டிருந்த மலர் ஒன்றும் சொல்லவில்லை. ஒன்றும் சொல்லத் தோன்றவும் இல்லை.
கிருபா அண்ணாவிற்கு மிகுந்த கோபம், அது கயல் மீது மட்டுமல்ல. இரு வீட்டு பெரியவர்களின் மேலும் கடுங்கோபம் அவனுக்கு. காரணமற்ற கோபம்.
அதற்குப் பின் வந்த நாட்களில் மலரும் கூட ஊர் பக்கம் செல்லவேயில்லை.
நாட்களும், வருடங்களும் அதன் போக்கில் ஓடி மறைய, அவள் கல்லூரி இறுதி ஆண்டில் இருந்த போது கிருபா அண்ணாவுக்கு திருமணம் நிச்சயமாகியது. ஆனால், அம்மா எவ்வளவு வற்புறுத்தி அழைத்தும் அவள் அந்த கல்யாணத்திற்கு செல்லவில்லை.
கயல் அண்ணியின் இடத்தில் வேறு ஒருவரை அவளால் நிறுத்தி பார்க்கவே முடியாது.
கிருபா அண்ணா இடத்தில் வேறு ஒருவரை பார்க்கும் போது எத்தனை உடைந்து போனாள் அவள். அன்றிரவு முழுவதும் அழுதுக் கொண்டே தானிருந்தாள்.
“கயல் கூடவே சுத்திட்டு திரிஞ்சது இல்ல இந்த குட்டிக் கழுத, அதான். அவ தூரமா போறதை தாங்கிக்க முடியல. அழுகையை நிப்பாட்டு விழி குட்டி. இருபது நாள் செல்லட்டும். அவ புருஷன் வீட்டுக்கு போய் அவளை பார்த்திட்டு வருவோம்” என்று மகளை எவ்வளவோ சமாதானப்படுத்த முயன்றார் தேவராஜன். ஆனால், அவளின் அழுகை குறையவேயில்லை.
மலர் இனி ஒருபோதும் கயலை சந்திக்கவே விரும்பவில்லை. காதலை காலடியில் போட்டு மிதித்து விட்டு, யாரோ ஒருவரை திருமணம் செய்து கொண்டு போனவளை நான் ஏன் போய் பார்க்க வேண்டும் என்ற வீம்பு அவளுள் வளர்ந்து மரமாகி நின்றது.