மெல்ல திரும்பி அவன் முகம் பார்த்தாள். ஈரம் சொட்டும் தலை முடியுடன் கவர்ச்சியாக தெரிந்தான். மழை, தான் தொடும் அனைத்தையுமே அழகாக்கி விடுகிறது.
எம்பி அவன் கன்னத்தில் முத்தமிட போனாள், சன்ன சிரிப்புடன் கன்னம் திருப்பி இதழ்களை கொடுத்தான்.
மழைநாளின் முத்தங்கள் மட்டும், முத்தங்களாக முடிந்து விடுவதில்லை. அவளது இதழ்களில் சிரித்தபடி அவளை அப்படியே தூக்கினான். மிக கவனமாக கடிதத்தை கைப் பற்றியது அவளது கரங்கள்.
அவளை மொத்தமாய் மயக்கி, அவளிடம் இருந்து கடிதத்தை பிரித்து படுக்கையின் அருகில் இருந்த டேபிளில் வைத்தான்.
இப்போது வெளியில் மட்டுமல்ல, அவர்களுக்கு நடுவிலும் மழைப் பொழிய தொடங்கியது. காதல் மழை.
நன்றாக அயர்ந்து உறங்கி கொண்டிருந்தவளின் உச்சியில் மென்மையாய் இதழ் பதித்தான் கார்த்திக்.
காற்றில் படபடத்த கடிதத்தை கை நீட்டி எடுத்தான். மெல்ல புன்னகைத்துக் கொண்டான்.
மறுநாள் காலை திட்டமிட்ட படி அவர்கள் மதுரை கிளம்பினார்கள்.
“உன்கிட்ட எத்தனை முறை சொல்றது விழி, அது.. எனக்கு.. என்னோட ப்ரெண்ட் கொடுத்தது. விளையாட்டுக்கு… கிண்டல் பண்ண கொடுத்தது. அதை ஏன் டா நீ இவ்வளவு சீரியஸா எடுத்துக்கற? என்னனு கேட்டு சண்டை போட்டா கூட பரவாயில்ல… ஆனா நீ… ஜஸ்ட் இக்னோர் விழி. பிளீஸ்.” அவள் கரத்தை எடுத்து, தன் கரத்தினுள் பொதிந்து கொண்டான்.
“ஆமா, தப்பில்ல தான். ஆனா, நான் யாரையும் காதலிக்கல விழி. உன்னப் பார்த்ததும் உன்கிட்ட விழுந்தவன் தான். மத்தபடி..” தோள் குலுக்கினான்.
அமைதியாய் அவன் தோள் சாய்ந்து கண்களை மூடினாள். விமானம் மெல்ல மேலெழும்பத் தொடங்கியது.
“உங்க அத்த பொண்ணு சாரா எப்படி இருக்காங்க?” என்று மெல்லக் கேட்டாள்.
“அவளுக்கு என்ன ரொம்ப நல்லா இருப்பா. புருஷன், புள்ள, குட்டின்னு..” என்று சொல்லிக் கொண்டே போனவன், சட்டென்று நிறுத்தி விட்டு அவள் முகம் பார்த்தான்.
“லூசு விழி. சாரா.. அந்த சாரா இல்ல. நீ வருத்தப்பட்டு மனசை போட்டு குழப்பிக்கற அளவுக்கு, அவ்வளவு முக்கியம் இல்ல மா அந்த லெட்டர். பிளீஸ் லீவ் இட்” என்றான் இறுக்கத்துடன், “ம்ம்ம் ஓகே” என்றாள்.
“இன்னைக்கு, இந்த நிமிஷம் உன்ன மட்டும் தான் உயிரா நேசிக்கிறேன் விழி. இதுக்கு முன்னாடியும் என் வாழ்க்கையில், மனசில் யாருக்கும் இடம் கொடுத்தது இல்ல. அது தான் நிஜம். ட்ரஸ்ட் மீ” என்றான் கெஞ்சல் குரலில்.
“எனக்குத் தெரியும்” லேசாக அவன் கன்னம் உரசி சிரித்தாள். அவள் உச்சியில் தலைப் பதித்து உறங்கத் தொடங்கினான் கார்த்திக்.
‘அப்படி முக்கியம் இல்லா கடிதத்தை, காதலை, ஏன் இப்படி பாதுகாத்து வைத்திருக்கிறான் கணவன்?’ என்ற கேள்வி அவள் மனதை குடைய, விழி மூடி உறங்க முயற்சித்தாள் மலர்விழி.
அவர்கள் மதுரையை அடையும் போது மாலையாகி இருந்தது.
கார்த்திக்கின் வீட்டில் தலைக் காட்டி விட்டு, அவள் வீட்டுக்கு சென்றார்கள்.
“ஹேய் விழி, விழி தானே? சில்வண்டு”
அவள் வீட்டு வாசலில் அவர்களுக்காக காத்திருந்த அனைவரையும் தாண்டிக் கொண்டு முன்னே வந்தது கிருபா அண்ணாவின் குரல்.
“அண்ணா” என்றவள், மெலிதாக இதழ் பிரித்து புன்னகைத்தாள்.
“வாங்க மாப்பிள்ளை. நல்லா இருக்கீங்களா?” என்று கார்த்திக்கை நலம் விசாரிக்க தொடங்கினார் கிருபா அண்ணா.
அண்ணா கொஞ்சம் கூட மாறவில்லை. அப்படியே தான் இருந்தார். என்ன, கொஞ்சம் எடை கூடி, கம்பீரமாக, பார்க்க முன்பை காட்டிலும் நன்றாக இருந்தார்.
அவளின் கைப் பிடித்து வீட்டிற்குள் அழைத்துப் போனான் கார்த்திக்.
*********
காலை பத்து மணியாகியும் கூட, படுக்கையை விட்டு எழுந்து கொள்ளாமல் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த மனைவியின் அருகில் அமர்ந்து, அவளை லேசாக எழுப்பி, “விழி, உங்க அண்ணா கூட ஹாஸ்பிட்டல் போறேன். இவெனிங் வந்துடுவேன். டேக் ரெஸ்ட். ஓகே?” என்றான்.
“ஹ்ம்ம், சாப்பிட்டீங்களா?” என்றாள்.
“ஆச்சு. நீயும் எழுந்து சாப்பிட்டு தூங்கு. வரேன் டா” அழுத்தமாய் அவள் உச்சியில் இதழ் பதித்து விட்டு விலகினான்.
சிறிது நேரம் படுக்கையில் புரண்டு விட்டு, மெல்ல எழுந்து குளித்து, காலை உணவை முடித்து விட்டு பக்கத்து வீட்டிற்கு சென்றாள் மலர்.
கேட்டை திறக்கும் போதே, கிருபா அண்ணா ஓடி வருவது தெரிந்தது.
“வா விழி” என்று அழைத்தவனின் முகம் முழுவதும் மகிழ்ச்சியின் ரேகைகள்.
அதே மாறாத, வாஞ்சையான பிரத்யேக சிரிப்பொன்றை அவளுக்கென்று தந்தான்.
“மாப்பிள்ளை எங்க?” விசாரித்தான்.
“ஹாஸ்பிட்டல் போய் இருக்கார். வர லேட்டாகும். அதான், நான் மட்டும் வந்தேன்”
“ஓ. சரி, சரி. நீ உள்ள வா..” விலகி நின்று அவள் நடக்க வழி விட்டான்.
“எங்களை எல்லாம் மறந்துட்ட இல்ல சில்வண்டு? ஊருக்கு வர்றதே இல்ல நீ?” புருவம் சுருக்கி கேட்டவனின் குரலில் வலி மிகுந்திருந்தது.
‘யார், யாரை மறந்தது? அவள் வாழ்வில் கடந்து போன இத்தனை ஆண்டுகளில் என்றேனும் அவளால், இவர்களை மறக்க முடிந்திருக்கிறதா? நிச்சயம் இல்லை’
வாசலை நிறைத்து கோலம் போடுகையில், கோடுகளையும், பூக்களையும், வண்ணங்களையும் தாண்டி, கயல் அண்ணியின் முகம் தான் பல நாட்கள் தெரிந்திருக்கிறது.
பருப்புருண்டை குழம்பும், பைனாப்பிள் ரசமும் வைக்கையில் கயல் அண்ணியை நினைக்காத நாள் உண்டா?
அயிரை மீன் குழம்பை முன்பு போல ரசித்து உண்ண முடிந்திருக்கிறதா? ம்ஹூம்.
“எப்படி, இவ்ளோ நல்லா வண்டி ஓட்டுற விழி?” என்று கார்த்திக் புருவம் உயர்த்தி வியப்புடன் கேட்கும் ஒவ்வொரு முறையும் கிருபா அண்ணா முகம் தானே முன்னே வந்து நிற்கும்.
மீனாட்சியம்மனை தரிசிக்கும் ஒவ்வொரு முறையும் கிருபா, கயல் இருவருக்காக தானே அதிக வேண்டுதல்களை வைத்திருக்கிறாள் அவள். கயலின் கைப் பிடித்து எத்தனை முறை மீனாட்சியை தரிசித்து இருப்பாள்.
ஒவ்வொரு சித்திரை திருவிழாவின் போதும் அவர்களை சுற்றி குமிந்திருக்கும் ஜனத் திரளில் எத்தனை பாதுகாப்பாக அழைத்துச் செல்வான் கிருபா அண்ணா. மேல மாசி வீதியும், வைகை ஆறும் எத்தனை நினைவுகளை சுமந்திருக்கின்றன.
அவள் மதுரைக்கு வராமல் இருப்பதே இந்த நினைவுகளில் இருந்து தப்பிக்க தானே.
ஆனால், இதையெல்லாம் அவனிடம் தற்போது சொல்ல வேண்டும் என்று அவளுக்கு தோன்றவில்லை. அப்படி சொல்லித் தான் தன்னை நிரூபிக்க வேண்டுமா என்ன?
இல்லை, அதைச் சொல்லி அவனை காயப் படுத்துவானேன் என்ற எண்ணத்துடன் மௌனமாய் நடந்தாள்.
ஆனால், அதே நேரம் எதையும் நான் மறக்கவில்லை என்று சொல்லவும் நா எழவில்லை.
அமைதியாய் அவனை ஏறிட்டாள்.
“சாரி அண்ணா” என்றாள்.
“ச்சே, என்ன சில்வண்டு நீ, என்ன பேசுற? பெரிய வார்த்தை எல்லாம் சொல்லிட்டு. பேசாம நட” என்றான்.
“ரம்யா, ரம்யா.. யார் வந்திருக்கா பாரு” உள்ளே பார்த்து குரல் கொடுத்தான்.
இதற்கு முன் இந்த வீட்டிற்கு எத்தனையோ முறை வந்திருக்கிறாள். ஆனால், இன்று போல தயங்கியதில்லை.
ஹாலில் நின்று, கண்ணை சுழற்றி வீட்டை நோட்டம் விட்டாள் மலர்விழி. வீடும் சரி, கிருபா அண்ணாவும் சரி கொஞ்சம் கூட மாறவே இல்லை.
அழகாக ஃப்ரேம் செய்யப்பட்டு சுவரை நிறைத்திருந்த அவனது திருமண புகைப்படத்தை பார்த்தாள்.
“வாங்க” என்ற குரலில் பட்டென்று திரும்பினாள். புகைப்படத்தில் இருந்தவள் எதிரில் நின்றிருந்தாள்.
“அண்ணி..” மெல்லிய தடுமாற்றத்துடன் அழைத்தாள்.
“ஏன் நின்னுட்டே இருக்கீங்க? உட்காருங்க. மலர்விழி தானே? எப்படி இருக்கீங்க? உங்களை பத்தி இவர் நிறைய சொல்லி இருக்கார்”
“விழின்னே கூப்பிடு ரம்யா. அவ சின்ன பொண்ணு” என்றார் அண்ணா. அவர் சொன்னதை ஆமோதிக்க மெல்ல தலையசைத்தாள்.
“உட்காரு விழி. என்ன சாப்பிடுற?” என்று உபசரிப்பில் இறங்கினாள் ரம்யா அண்ணி.
“இப்ப தான், வீட்ல சாப்பிட்டு வந்தேன் அண்ணி. தண்ணி கொடுங்க. போதும்” என்றாள்.
கிருபா அண்ணாவின் மனைவி ரம்யா அழகாக இருந்தாள். அதை விட அழகாக பேசினாள். அவர்களுக்கு ஆண், பெண் என இரண்டு குழந்தைகள். இருவருக்கும் அம்மா வாங்கி வைத்திருந்த பொருட்களை கையோடு எடுத்து போய் இருந்தாள். அதை அவர்களிடம் நீட்டினாள். அழகாக வெட்கப் பட்டு கொண்டே வாங்கிக் கொண்டனர்.
அவளை “விழி” என்று அழைத்தது தவிர, முன்னொரு காலம் தான், அப்படி ஒரு பெயரில்.. அந்த பெயர் கொண்டவளின் மீது உயிராய் இருந்ததை அண்ணன் சுத்தமாய் மறந்து விட்டது போலிருந்தது. கயல் அண்ணியின் தடம் அந்த வீட்டில் எங்குமே இல்லை. கிருபா அண்ணாவின் வாழ்விலும் இல்லை.
மனைவி, குழந்தைகள் என்று நிறைவான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தான் அவன்.
மகிழ்ச்சியில் மனம் நிறைய அவர்களை பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்.
அவள் விடைபெறும் போது மெல்ல, “விழி” என்றழைத்தான் கிருபா அண்ணா.
“சாரி” என்றான் மன்னிப்பை வேண்டும் புன்னகையுடன், பதில் சொல்லாமல் தன் வீட்டை நோக்கி நடந்தாள் மலர்விழி.
********
“எத்தனையோ வருஷம் கழிச்சு, நீ இப்ப தான் ஊருக்கு வந்திருக்க . நீ வர்றது தெரிஞ்சதோ, என்னவோ.. அதிசயமா கயலும் வந்திருக்காளாம். இதுவரை அம்மா வீட்ல ரெண்டு நாளைக்கு மேல அவ தங்கினது இல்ல. ஒரு எட்டு போய் பார்த்திட்டு வருவோம். இப்ப கொஞ்ச நேரம் படுத்து எழுந்திரு” என்றார் அம்மா.
“நான் இப்பவே போய் பார்த்திட்டு வரேன் மா” என்றாள் அவள் பிடிவாதமாக,
“முன்ன உங்கப்பா, இப்ப மாப்பிள்ளை.. எல்லாம் உன்ன செல்லம் கொடுத்தே கெடுத்து வைக்கறாங்க” அலுத்துக் கொண்டே அனுமதி வழங்கினார்.
“சீக்கிரம் வந்திடு மலரு” கத்தினார். புன்னகையில் இதழ்கள் மலர, பக்கத்து தெருவை நோக்கி நடந்தாள் மலர்.
கயல்விழி அண்ணி, கிருபா அண்ணாவை அன்பெனும் பெயரில் அநியாயமாக ஏமாற்றி விட்டார் என்ற கோபத்தை பல வருடங்களாக சுமந்து கொண்டிருந்தவள், கயலுக்கும் ஏதாவது காரணம் இருந்திருக்கும் என்பதை புரிந்து கொள்ள பல வருடங்கள் ஆனது.
இன்று அண்ணாவை மனைவி, குழந்தைகள் என குடும்பத்துடன் மகிழ்ச்சியாக பார்க்கையில் கயல் அண்ணியின் மேலிருந்த துளிக் கோபமும் காணாமல் போக, அவள் வீடு நோக்கி நடந்தாள் மலர்விழி.
“கயலு… கயலு..” அவளை தெருவில் பார்த்ததும், வீட்டினுள் பார்த்து கத்தினார் அத்தை.
அந்த அழைப்பில் அவசர அவசரமாக வாசலுக்கு வந்த கயல் அண்ணி, ஒரு நொடி திகைத்து அப்படியே நின்று விட்டாள்.
கண்களை சிமிட்டி அவளை கூர்ந்து பார்த்தவள், “விழி, மலர் விழி தானே?” கண்கள் கலங்க கேட்டாள்.
“நான் தான் அண்ணி” என்றாள் மெல்ல,
“உன்னைப் பார்த்து எத்தனை வருஷம் ஆச்சு. எப்படி வளர்ந்திட்ட. ஆளே அடையாளம் தெரியல எனக்கு. வீட்டுக்குள்ள வா டா” மூச்சு வாங்க பேசினாள். அவளின் கைப் பிடித்து வீட்டுக்குள் அழைத்துப் போனாள்.
“உட்காரு டா, இதோ வரேன்” என்று விட்டு அடுப்படிக்குள் மறைந்து போனாள்.
சோஃபாவில் அமர்ந்து வீட்டை பார்வையில் சுற்றினாள் மலர். அவளுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் வீடு முழுவதும் கிருபா அண்ணாவின் தடங்கள்.
ஷோ கேஸ் முழுவதும், ஜோடி புறாக்கள், கண்ணாடி இதயம், தாஜ்மகால் என வரிசையாக கிருபா அண்ணா கொடுத்த பரிசுகள்.
சுவரில் அண்ணனுக்கு பிடித்த புத்தரின் ஓவியம். அலமாரியில் அண்ணன் விரும்பி வாசிக்கும், அண்ணிக்கு கொஞ்சமும் பரிச்சயம் இல்லாத பாலகுமாரன் நிறைந்திருந்தார்.
பூஜை அறையின் மூலையில் மயில் பீலி. கற்றை கற்றையாய்… ஒரு மயிலே எதிரில் நிற்பது போன்ற தோற்றத்தில் அதன் தோகை சாய்த்து வைக்கப் பட்டிருந்தது. எத்தனை முறை கயல் அண்ணிக்கு அவளிடம் கொடுத்து, கொடுக்க சொல்லி இருப்பான் கிருபா அண்ணா.
ஆனால், இன்று அவளே இவ்வளவு சேர்த்து வைத்திருக்கிறாளே.
“கயலு, இங்க.. ஊருக்கு எப்பவாவது தான் வருவா” என்ற அம்மாவின் குரல், அவசியம் இல்லாமல் இப்போது காதில் எதிரொலித்தது.
எப்பொழுதாவது வந்து தங்கப் போகும் வீட்டில் கூட, ஏன் கிருபா அண்ணாவின் நினைவுகளால் நிரப்புகிறாள் இவள்? கேள்விகள் முளைத்து, சஞ்சலத்தை கொடுத்தது.
மெல்ல நிமிர்ந்து கயலைப் பார்த்தாள். அடுப்படியில் இருந்து காப்பி கோப்பையுடன் வந்து கொண்டிருந்தாள். ஒரு கையில் காபி, மறுகையில் இருந்த தட்டில் பணியாரமும், ரவா லட்டும்.. பெரிதும் அதிர்ந்தவளாக கயலின் முகம் பார்த்தாள்.
கயல்விழி தன் வாழ்க்கையை வாழவே இல்லையோ? இன்னும் கிருபா அண்ணாவுக்காக காத்துக் கொண்டு நிற்கிறாளா?
கிருபா அண்ணாவின் நினைவுகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறாளா?
இன்றும் யாருக்காக பணியாரமும், ரவா லட்டும் செய்கிறாள் இவள்?
அவளை அதிர்ச்சியில் விக்கித்துப் போய் பார்த்தாள் மலர்விழி.
“அவரும், பசங்களும் வெளில போய் இருக்காங்க. இப்ப வந்துடுவாங்க. நீ சாப்பிடு விழி” என்றாள்.
அதே குரல், ஆனால் குரல் மட்டும் தான் மாறவில்லை. மற்றபடி அண்ணி நிறைய மாறி இருந்தாள். அவளின் ஆளை அசரடிக்கும் அழகு காணாமல் போய் இருந்தது. இடை தொடும் கூந்தல், இப்போது தோளில் புரண்டு கொண்டிருந்தது. கயல் விழியின், விழியில் வெளிச்சமே இல்லை. ஒளி மங்கிய ஓவியமாக மாறி இருந்தாள் கயல் விழி.
“மாப்பிள்ளை எப்படி இருக்கார், நாளைக்கு அவரையும் கூட்டிட்டு வாயேன். நல்லா இருக்க தானே?” என்றாள் மெல்ல,
“ரொம்ப நல்லா இருக்கேன் அண்ணி” என்றவள், அதற்கு மேல் அங்கே அமர்ந்திருக்க முடியாமல் எழுந்து கொண்டாள்.
“எனக்குத் தெரியும் விழி. அப்போ அது தான் சரின்னு பட்டது. ஆனா, இப்போ…” குரல் உடைய மேல பேச முடியாமல் நிறுத்தினாள்.
மலருக்கு இதயம் தாறுமாறாக துடிக்கத் தொடங்கியது.
“நான் வரேன் அண்ணி” அவளை திரும்பியும் பாராமல் எழுந்து வாசலுக்கு நகர்ந்தாள்.
காபியும், பணியாரமும், லட்டும் அவள் விரல் படாமல் தட்டிலேயே இருந்தது.
மெதுவாக நடந்து வெளியில் வந்தாள். பூத்துக் குலுங்கிக் கொண்டிருந்தது வாசலில் இருந்த குண்டு மல்லிப் பூக்கள். ஆனால், உள்ளே இருந்தவளின் வாழ்வு? யோசனையுடன் வீடு நோக்கி நடந்தாள் மலர்விழி.
அடுத்த ஐந்தாம் நிமிடம் வீடு நுழைந்தவள், நேராக சென்று அம்மாவின் மடியில் தலை வைத்து படுத்து விட்டாள்.
“என்ன குட்டி?” என்று தலை கோதினார் அவர்.
“எங்க வீட்டுக்கு போறேன் மா. அவருக்கு போன் பண்ணி நேரா அங்க வந்திட சொல்லிடுறேன். ஒரு ரெண்டு நாள் கழிச்சு இங்க வரேன். இல்லனா, நீங்க எல்லாம் அங்க வாங்க” என்றாள் மெல்லிய குரலில்,
அவளின், “எங்க வீட்டுக்கு” என்பதில் புன்னகைத்தவர், “அண்ணா வந்ததும் போடா” என்றார்.
“இல்ல, அவரோட கார் இருக்கு இல்லம்மா. அதை எடுத்திட்டு போறேன். அவருக்கு நாளைக்கு தேவைப்படும்”
“சரி பார்த்து போ. வண்டியை மெதுவா ஒட்டு. மாப்பிள்ளைக்கு வர்றதை போன் பண்ணி சொல்லிட்டு போ. அங்க போய்ட்டு அம்மாக்கு கால் பண்ணு”
“சரிங்கம்மா”
ஏனோ அங்கிருந்து கிளம்பியதும் தான், அவள் மனம் ஒரு நிலைக்கு வந்தது. அவளால் அப்போது தான் நிம்மதியாக மூச்சு விடவே முடிந்தது.
முன்னர் கிருபா அண்ணா, இப்போது கயல் அண்ணி.. அவளை பெரிதும் கலங்க செய்தனர். அந்த வயதில் புரியாதது, இப்போது நன்றாக புரிந்தது.
முதல் காதலை அழகாக கடந்து, கல்யாண வாழ்வில் காதலுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் கிருபா அண்ணாவிடம் போய் கயல் அண்ணியை பற்றி கேட்கவே அவளுக்கு மனம் வரவில்லை.
இன்னும் கிருபா அண்ணாவின் காதலை பற்றிக் கொண்டு வாழும் கயல் அண்ணியின் முகம் பார்த்து பேசவே அவளால் முடியவில்லை. என்ன வாழ்க்கை இது? இந்த காதலை போல பைத்தியக்காரத் தனம் இந்த உலகில் வேறேதும் உண்டா?