காலைக் காற்று இதமாய் அவள் மேனியை வருடி சென்றது. வானம் முழுவதும் கருப்பு, வெள்ளை போர்ட்ரைட் ஓவியம் போலிருந்த மேகங்கள் சூரியனுக்கு விடுமுறை அளித்திருந்தது. அந்த இதமான காலநிலையை ரசித்தபடி மொட்டை மாடியில் நின்று நீரற்ற வைகையை வெறித்துக் கொண்டிருந்தாள் அவள்.
நதியின் இரு கரையையும் கண்டவளின் கண்களில் நினைவலைகள் கரை புரண்டு ஓடிக் கொண்டிருந்தது.
“அம்மாடி மலரு, மலரு. கொஞ்சம் கீழ இறங்கி வா மா” அத்தையின் குரல் அவளை கலைக்கவும், மெல்ல கீழிறங்கினாள்.
மாடிப் படிகளில் இறங்கும் போதே கண்ணில் பட்ட அத்தை வாணியை பார்த்து புன்னகைத்தாள்.
“பார்த்து இறங்கு டா. வயித்து புள்ளக்காரி எத்தனை முறை மேலயும், கீழயும் ஏறி இறங்குவ? கார்த்திக் கிட்ட நான் சொன்னேன் மா. கீழ இருக்க அவன் ரூம்ல இருக்கச் சொல்லி.. சுத்தம் பண்ணி வைக்கறேன்னு சொன்னேன். எங்க கேட்கறான் அவன்” சலித்துக் கொண்டார்.
அவர் நீட்டிய ஜூஸை வாங்கி குடிக்க ஆரம்பித்தாள்.
“எனக்கு ரொம்ப போர் அடிக்குது அத்த. இன்னைக்கு நான் சமைக்கவா?” என்று அவள் கேட்க,
“அச்சோ வேணாம் மா. பெங்களூரில் நீ தானே எல்லாம் செய்யற? இங்க வந்தாவது ரெஸ்ட் எடு மா. நான் சமைச்சு போடுறேன்.” என்றவர், தொடர்ந்து,
“கார்த்திக்கு பிடிக்கும்னு நாட்டு கோழி சொல்லி இருந்தேன். அதை அடிச்சு, வாட்டி வச்சுருக்கேன். அரை மணி நேரத்தில் கொழம்பு ரெடியாகிடும். உனக்கு பிடிக்கும்னு அயிரை மீன் வாங்கி இருக்கு. உயிரோடு துள்ளிட்டு இருக்கு. நான் போய் குழம்பை கூட்டுறேன்.” என்றபடி அவர் அடுப்படியை நோக்கி நகர,
“நானும் வர்றேன் அத்த” எட்டி அவரின் கைப் பற்றினாள்.
அவளுக்கு அயிரை மீன் பிடிக்கும் என்று சொல்லி வைத்திருந்த அம்மாவை தானாக அர்ச்சித்தது மனது.
“வேணாம்னு சொன்னா கேட்கணும் மா. இரு, உனக்கு கார்த்தியோட பழைய ஆல்பம் எல்லாம் எடுத்து தரேன். பார்த்திட்டு இரு. அதுக்குள்ள நான் சமையலை முடிச்சுட்டு ஓடி வரேன்” என்றபடி அவளை அழைத்துக் கொண்டு கார்த்தியின் அறையை நோக்கி நடந்தார்.
“அவன் இந்த ரூமை இப்போ யூஸ் பண்றது இல்லல்ல மலரு. அதான், நான் பழைய சாமான் எல்லாம் போட்டு வைக்கறேன்” என்று சொல்லிக் கொண்டே கதவை திறந்து, அவள் முன்னே செல்ல கைக் காட்டினார்.
அது நாள் வரை இந்த அறைக்குள் அவள் வந்ததில்லை என்பது அப்போது தான் அவளுக்கு உரைத்தது. எப்போதும் பூட்டியே இருக்கும் அந்த அறை. திருமணத்திற்கு முன்பு வரை கார்த்திக் உபயோகித்த அறை அது.
அறையின் ஜன்னல்கள் எல்லாம் திரைச்சீலை கொண்டு மூடி இருக்கவும், இருளில் மூழ்கி இருந்தது அறை. அத்தை ஸ்விட்சை தட்ட, கண் முன் விரிந்தது அறை.
மெல்ல நிமிர்ந்தவளின் கண்கள் அப்படியே நிலைக் குத்தி நின்றது.
ஒரு பக்க சுவர் முழுவதையும் வரிசை வரிசையாக, சீராக, அழகாக ஃப்ரேம் செய்யப்பட்ட புகைப்படங்கள் நிறைத்திருந்தது.
“அத்த இது…?” தயக்கத்துடன் விரல் நீட்டினாள்.
“சரா மா.. கார்த்திக் சொல்லல? நீ ஃபோட்டோ பார்த்தது இல்ல?” அந்த கேள்விக்கு அவளிடம் பதிலில்லை.
“சாரா.. தெரியும் அத்த.. ஆனா, இதுவரை நான் பார்த்தது இல்ல. ஃபோட்டோ பார்த்தது இல்லை” என்றாள் மெல்லிய குரலில்,
“கார்த்தின்னா உயிரு சராக்கு. கார்த்தியும் அப்படி தான். எப்படி இருந்த புள்ளைங்க.. ஹ்ம்ம்” சொல்லி விட்டு அவள் முகம் பார்த்தார்.
“எப்படி அத்த?” என்றாள். அவளுக்கே அவள் குரல் கேட்கவில்லை. பின்னர் அவருக்கா கேட்டிருக்கப் போகிறது.
“சரா தான் கார்டியாலஜி படிக்க ஆசைப்பட்டது.” என்றார் புகைப்படத்தை பார்த்துக் கொண்டே,
“என்ன சொன்னீங்க அத்த?” என்றாள் பெரும் அதிர்ச்சியுடன், ஒரு நிமிடம் அவள் முகத்தை உற்று நோக்கி விட்டு,
“சரா ஆசைக்காக தான் கார்டியாலஜி படிச்சான் கார்த்திக். இல்லனா, அவனுக்கு..”
“குழந்தைகள் நல மருத்துவரா ஆகனும்னு தான் ஆசை.. பீடியாட்ரிசன்” அவர் சொல்ல வந்ததை இவள் முடித்து வைத்தாள்.
“ஆமா மா” என்றவர், பழைய பீரோவை திறந்து, அதில் துழாவி, தேடி நாலைந்து புகைப்பட ஆல்பங்களை எடுத்து கொடுத்து விட்டுப் போனார்.
அதை நெஞ்சோடு சேர்த்து அணைத்தபடி, எதிரில் இருந்த புகைப்படத்தையே கண்ணெடுக்காது பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்.
சாராவின் தோளில் கைப் போட்டபடி நின்றிருந்த கார்த்திக்கின் முகம் சிரிப்பில் மலர்ந்திருந்தது. அவனை அணைத்தபடி நின்றிருந்த சாராவின் முகத்தில் நிலைத்து நின்றது அவள் பார்வை. விழிகளை அந்த முகத்தில் இருந்து நகர்த்த முடியவில்லை அவளால். கார்த்திக்கை காட்டிலும் ஒரு முகம் அவளை கவரும் என்பதையே நம்ப முடியாத அதிர்வுடன் இமைக்க மறந்து நின்றிருந்தாள் அவள்.
அவளையும் அறியாமல் கார்த்திக்கு சாரா அளித்த காதல் கடிதத்தின் வரிகள் தன்னிச்சையாக மனதில் ஓட ஆரம்பித்தது.
அந்த சுவரில் இருந்த புகைப்படங்களை ஒவ்வொன்றாக பார்த்துக் கொண்டே வந்தாள். நேரம் போனதே தெரியவில்லை.
ஒவ்வொரு படத்திலும் அவர்களைப் போலவே, அவர்களின் உறவும் வளர்ச்சியை கண்டிருந்தது. இருவரையும் மாறி மாறிப் பார்த்தபடி சிலையென நின்றிருந்தாள் அவள்.
மதிய சமையலை முடித்து விட்டு, அத்தை வந்து அழைக்கும் வரையும் அந்த இடத்தை விட்டு அவள் ஒரு அடி கூட நகரவில்லை.
“என்ன மா, அப்படியே நின்னுட்ட? உட்கார்ந்து ஃபோட்டோ பார்க்கலையா?” என்ற குரலில் கலைந்து அத்தையை திரும்பிப் பார்த்தாள்.
“கார்த்திக் மதிய சாப்பாட்டுக்கு வரலையாம். ஏதோ முக்கியமான வேலை இருக்காம். நீ வா, நாம சாப்பிடுவோம்” என்று அவளை இழுத்துக் கொண்டு போனார்.
தன் கைகளில் கனத்து கொண்டிருந்த புகைப்பட ஆல்பங்களை கவனமாய் அருகில் இருந்த மேஜையில் வைத்து விட்டு உணவருந்த சென்றாள் அவள்.
உணவை முடிக்கும் தருவாயில், “அத்தை நான் கொஞ்சம் எங்க வீடு வரைக்கும் போய்ட்டு வரவா?” என்று அவள் கேட்க, நேற்று தானே அங்கிருந்து வந்தாள் என்ற குழப்பத்துடன் முழித்தார் அவர்.
“இல்ல, அவர் வீட்டுக்கு வர்றதுக்குள்ள வந்துடுவேன் அத்த” என்றாள்.
ஏதோ யோசனையுடன் சம்மதமாக தலையசைத்தார் வாணி.
“காரை எடுத்துட்டு போ மலர். நான் டிரைவர் கிட்ட சொல்லி இருக்கேன். பார்த்து, பத்திரம். சீக்கிரமா வரப் பாரு” என்றார்.
“சரிங்கத்த..”
அடுத்த பத்தாம் நிமிடம் காரில் இருந்தாள். ஏனோ அவளுக்கு உடனே கயல் விழியை பார்க்க வேண்டும் போலிருந்தது.
சாராவை பார்த்ததில் இருந்து, கயலை தேடியது மனது. முன் தினம் அவளிடம் முகம் கொடுத்து பேசாமல் வந்தது மனதை அறுத்தது.
அன்றைக்கு காதலை ஒதுக்கி விட்டுப் போக, கயலுக்கும் ஏதாவது காரணம் இருந்திருக்கும் என்று ஏன் தன்னால் புரிந்துக் கொள்ளவே முடிவதில்லை என்று தன்னைத் தானே நொந்து கொண்டாள் மலர் விழி.
மதுரை நகருக்குள் நுழைந்து, ராஜ்மஹாலுக்கு சென்று கயல் அண்ணிக்கு பிடித்த ரோஜா நிறத்தில் பட்டுப் புடவை ஒன்றை வாங்கிக் கொண்டாள். மீனாட்சி அம்மன் கோயில் வாசலில் தாழம்பூ குங்குமத்தை கண்டதும் கைகள் பரபரக்க அதையும் வாங்கிக் கொண்டாள்.
தாழம்பூ மணக்கும் சிவப்பு, பச்சை வண்ண குங்குமத்தை அவளுக்கு முதன்முதலில் வாங்கி தந்தது கயல் அண்ணி தான், இன்றைக்கு அதை அவளுக்கே வாங்கிக் கொண்டு செல்கிறாள்.
பிரேமா விலாஸில் நிறுத்தி ஸ்வீட் மற்றும் காரம் வாங்கிக் கொண்டாள். அத்தனையும் கயலுக்கு பிடித்தமானவை. கயலுடன் மீண்டும் இணைந்திடும் முயற்சியா என்றால் இல்லை என்றே சொல்வாள். ஒரு காலத்தில் தனக்கு அன்பை மட்டுமே தந்தவளுக்கு, தன்னால் முடிந்த பிரியத்தை திருப்பி தர முயற்சிக்கிறாள், அவ்வளவே.
வீட்டிற்கு சென்று அம்மாவிடம் சொல்லி அவர் நெருக்கமாக கட்டி வைத்திருந்த சந்தன முல்லை சரத்தை வாழை இலையில் பொதிந்து வைத்தாள். அனைத்தையும் எடுத்துக் கொண்டு கயலின் வீட்டைக் நோக்கி நடந்தாள்.
கிருபா அண்ணா குழந்தைகளுடன் பக்கத்து வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருப்பது ஓரக் கண்ணில் பட்டது.
தனது நடையில் வேகத்தை கூட்டினாள். மெலிதாக ஏதோ ஒரு பாடலை முணுமுணுத்து கொண்டு, ஏற்கனவே திறந்திருந்த கேட்டினை லேசாக தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்தாள்.
இரண்டு படிகளை கடந்து, வாசலில் கால் வைத்து, அழைப்பு மணியை அழுத்தப் போனவளின் கைகள் அப்படியே அந்தரத்தில் அசையாமல் நிற்க, கண்கள் கண்ட காட்சியில், விழிகள் அதிர்ச்சியில் விரிய, உடலின் ஒரு அணுவைக் கூட அசைக்க முடியாதவளாக உறைந்து போய் நின்றாள் அவள்.
பதட்டத்தில் கைகள் வியர்க்க, கையில் இருந்த கனமான பை நழுவி விடும் போலிருந்தது. பிடிமானம் இன்றி தவித்தவள், அதை அழுத்தமாய் இறுக்கிப் பிடித்தாள்.
எந்த இடத்தில் வைத்து கிருபா அண்ணா, கயலிடம் கெஞ்சினானோ.. அதே இடத்தில் இன்று கயல் அண்ணி நிற்கும் கோலம், அவளை அறியாமல் கண்களில் கண்ணீர் சுரந்தது.
“பிளீஸ், ஒரே ஒரு தடவை உன்னை கட்டிக்கறேன் விழி, பிளீஸ்.”
தனக்கே நினைவிருக்கும் போது, கயல் எப்படி மறந்திருப்பாள்?
இன்று அதே இடத்தில், சுவரோடு சுவராக அவளை இறுக்கி, ஒரு கரத்தால் கழுத்தை நெரித்து, மறுகரத்தில் கொத்தாக அவளது தலை முடியை பற்றி… பல்லைக் கடித்துக் கொண்டு கர்ண கொடூரமாக கத்திக் கொண்டிருந்தான், இல்லை கத்திக் கொண்டிருந்தார் கயல் விழியின் கணவர்.
முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு, வலியை கொஞ்சம் கூட முகத்தில் காண்பிக்காமல் சிலையென அத்தனையையும் தாங்கிக் கொண்டு நின்றிருந்தாள் கயல்விழி.
இது வயலன்ஸ், எதிர்த்து போராட வேண்டும் என்று கயலுக்கு தெரியாதா? எதற்காக அமைதியாக பொறுத்துக் கொண்டு, அடியை வாங்கிக் கொண்டு நிற்கிறாள்.
கோபமும், கண்ணீரும் போட்டி போட்டுக் கொண்டு வந்தது. கண்ணீர் கரகரவென வழிந்து கன்னம் தொட்டது.
எப்படியும் இந்நேரம் கயலின் பார்வை வட்டத்தில் விழுந்திருப்போம். அவள் தான் வந்ததை, பார்த்ததை கவனித்திருப்பாள் என்று மலருக்கு தெரிந்தே இருந்தது. ஆனாலும் அவளால் அங்கு நிற்க முடியவில்லை.
கண்கள் இருண்டு, கால்கள் வலுவிழந்து தோய்ந்து போக, மயக்கம் வரும் போலிருந்தது.
மெல்ல திரும்பி தன்னால் முடிந்த மட்டும், வேகமாக வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தாள் அவள்.
மனம் வலியில் துடித்து விசும்பிக் கொண்டே இருந்தது. கயல் அண்ணிக்கு இப்படி ஒரு வாழ்க்கை… அமைந்திருக்க வேண்டாம்.
கார்த்திக் லேசாக குரல் உயர்த்தினால் கூட அவளால் தாங்கிக் கொள்ளவே முடியாது. இவள் கோபப்பட்டாலும் கார்த்திக்கின் முகம் வலியில் எப்படி சுருங்கிப் போகும்.
ஆனால், கயலுக்கு அடியும், அசிங்கமான, அவமதிப்பான பேச்சும்.. எப்படி தாங்கிக் கொள்கிறாள் அவள். மலரால் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை.
“என்ன குட்டி, போன வேகத்தில் திரும்பி வந்திட்ட?” விசாரித்தார் தேவகி.
“வீட்ல யாரும் இல்லம்மா” என்றபடி உள்ளே போகப் போனவளை ஈர்த்தது கிருபா அண்ணாவின் மகளின் குரல்.
“பாப்பா, இங்க வாங்க” என்று அழைத்தாள். “போ” என்று கிருபா அண்ணா கண் காட்ட, அவள் முன் வந்து நின்றாள் அந்த குட்டி பெண்.
“இந்தாங்க ஸ்வீட்ஸ்” என்று பிரேமா விலாஸ் கவரை எடுத்து நீட்டினாள்.
பெரும் தயக்கத்துடன் அப்பாவை திரும்பி திரும்பி பார்த்தபடியே மெல்ல கை நீட்டி வாங்கிக் கொண்டாள்.
மெதுவாக கவரை திறந்து பார்த்து, “ஐய் அல்வா” என்று பல் தெரிய சிரித்தாள். அந்த கொள்ளை அழகில் மயங்கியவளாக குழந்தையையே பார்த்துக் கொண்டிருந்தாள் மலர்.
“என் பேரு மலர்விழி” என்று கை நீட்டினாள்.
“தெரியும் அத்த” என்ற குழந்தை, பதிலுக்கு தன் பெயரையும் சொன்னது.
“நான் நேத்ரா” அவளைப் பின் பற்றி, அவளைப் போலவே சொன்னது குழந்தை.
“உங்களுக்கு அழகான பேர் செல்லம்” என்று அவள் உயரத்திற்கு குனிந்து சொன்னாள் மலர்.
அழகாக மலர்ந்து புன்னகைத்தாள் நேத்ரா.
“வீட்டுக்கு எடுத்துட்டு போய் சாப்பிடுங்க. அத்த கொடுத்தேன் சொல்லுங்க, அம்மா ஒன்னும் சொல்ல மாட்டாங்க” என்று கிருபா அண்ணாவை ஒரு முறை திரும்பி பார்த்து விட்டு சொன்னாள்.
“அல்வா பிடிக்கும் சொன்னீங்க இல்ல? போய் சாப்பிடுங்க.”
“சரி” என்று தலையை ஆட்டி விட்டு, மீண்டும் கவரைப் பிரித்துப் பார்த்தது குழந்தை.
“ஐ, ரவா லட்டு. எனக்கு பிடிக்கும்னு உங்களுக்கு எப்படித் தெரியும் அத்த. எனக்கு ரொம்ப பிடிக்கும் தெரியுமா? ஆனா, அம்மாக்கு செய்யவே தெரியாது” கடைசி வரியை ரகசியம் போல சொன்னாள் குழந்தை.
பட்டென்று நிமிர்ந்து கிருபா அண்ணாவைப் பார்த்தாள் மலர். அவள் பார்வையை கவனித்து விட்டு மெல்ல அவளின் கையை சுரண்டியது குழந்தை.
“அப்பா சாப்பிட மாட்டாங்க” மீண்டும் அழுத்தி சொன்னாள் நேத்ரா.
நான்கு வயது குழந்தையை கைகளில் அள்ள யோசித்தவள், குனிந்து அவளின் கன்னத்தில் அழுத்தமாய் முத்தமிட்டு, வீட்டிற்குள் நடந்தாள். மறந்தும் கூட திரும்பி கிருபா அண்ணாவை பார்க்கவில்லை.
“கயல் அண்ணியை பார்த்தீங்களா?” என்ற கேள்வியை கடைசி வரை அவனிடம் கேட்காமல் தொண்டைக்குள் விழுங்கினாள்.
”அன்புக்குரிய காதலர்களைக் காதலிப்பவர்கள் போகப் போக தங்கள் காதலை மட்டுமே காதலிக்கத் தொடங்கி விடுவார்கள்” என்றோ படித்த அயல்நாட்டு பொன்மொழி அவளுக்கு ஞாபகம் வந்தது.
வருத்தம், வேதனை, துக்கம் என கலவையான உணர்வுகள் அவளைத் தாக்க நெஞ்சை அடைத்தது. இந்த அன்பு மட்டும் ஏன் இத்தனை சிக்கலானதாக இருக்கிறது.
நேசித்தவர்களை எப்படி வெறுக்க முடிகிறது? எப்படி மறக்க முடிகிறது?
அவரவர்க்கு அவரவர் நியாயம். காலத்தின் கட்டாயம் மறந்திருப்பார்கள். காலம் மறக்கச் செய்திருக்கும், தனக்குள் சொல்லிக் கொண்டாள் மலர்விழி.