யோசனையுடன் கையை பின்னே கட்டி நடந்து கொண்டிருந்தார் செல்லதுரை.
“சாப்பிட வாங்கபா” என்ற மூத்த மகன் செல்வேந்திரனின் குரலில் திரும்பினார்.
“ஆகாஷ் எங்க?”
“அம்மா கூட இருக்கான் பா”
“ம்ம்” என்றவர் மீண்டும் நடக்க ஆரம்பித்தார்.
“அந்த பொண்ணை இந்த வீட்டு மருமகளா ஏத்துக்கிட்டீங்களாப்பா?” என்று கேட்டான் செல்வேந்திரன்.
“அப்படின்னு உனக்கு தோணுதா?”
“அப்புறம் ஏன் பா அந்த பொண்ணை அவங்க வீட்டு ஆளுங்க கூப்பிட்டப்போ அனுப்பலை?”
“அந்த பொண்ணு தான் போ மாட்டேன் சொல்லிடுச்சே”
“அந்த பொண்ணு போலன்னா என்னபா? அவங்க வீட்டு ஆளுங்க அவளை இழுத்துட்டு போகவும் தயாரா தான் இருந்தாங்க.நீங்க தான் அந்த பொண்ணை அவ போக மாட்டேன்னு சொல்லவும் உடனே உள்ளே அனுப்பிட்டீங்க” குறைபட்டுக் கொண்டான் செல்வேந்திரன்.
“அந்த பொண்ணு போனா உன் தம்பியும் பின்னாடியே போய்டுவானே.பரவாயில்லையா?” என்று கேட்டார் செல்லதுரை.
“அது எப்படிபா அவன் போவான்?”
கேட்ட மகனை பார்த்து பெருமூச்சு விட்டார்.
“அவளுக்காக உன் தம்பி நம்மளை எல்லாம் விட்டுட்டு வெளி நாட்டுக்கே போக தயாராயிட்டான்.இந்தா இருக்க மதுரைக்கு போக மாட்டானா?”
அதிர்ச்சியாய் தந்தையை பார்த்தான் செல்வேந்திரன்.
“இது பொறுமையா செய்ய வேண்டிய விசயம் தம்பி.வர தேர்தல்ல நான் நிக்கலாம்னு இருக்கேன்.இந்த நேரத்துல உன் தம்பி தான் ஏழரையை கூட்டிட்டான்னா நாமளும் அதையே செய்ய கூடாது.நம்ம பையனை நம்பி வந்த பொண்ணை நம்ம ஊருக்கே வந்து நம்ம முன்னுக்க அந்த மதுரைகாரனுங்க இழுத்துட்டு போயிட்டானுங்கன்னு ஊருல பேச்சு ஆகிடும்.நம்ம கிட்ட பணம், செல்வாக்கு,ஆள் பலம் எல்லாம் இருக்கு.இந்த பதவியும் வந்து அதுல சேர்ந்துக்கட்டும்.அதுக்கு தடையா இப்போ எதுவும் பண்ண வேணாம்னு சொல்றேன் “
“அதுக்காக அந்த பொண்ணை நான் மருமகளா ஏத்துக்கிட்டேன்னு அர்த்தம் இல்லை.அரசியல்ல இறங்குனா எல்லா பக்கமும் யோசிக்கனும்.நமக்கு நம்ம ஜாதி ஓட்டும் வேணும்,மத்த மக்கள் ஓட்டும் வேணும்.இது சேலையில பட்ட முள்ளை முள்ளும் உடையாம சேலையும் கிளியாம எடுக்குற கதை.அந்த பொண்ணை நாம ஏதும் செஞ்சு அனுப்பினா ஊரு ஏசும்.அந்த பொண்ணை மருமகளா ஏத்துக்கிட்டா நம்ம ஆளுங்க ஏசுவானுங்க.இதுவே சேர்ந்த அவங்க ரெண்டு பேருமே தானா பிரிஞ்சுட்டா ரெண்டு பக்கமும் சேதாரம் இல்ல”
“அதுக்கு தானே நாம இருக்கோம்.அவ அப்பனும் லேசு பட்டவன் இல்ல.ஏதாவது செஞ்சு பொண்ணை மீட்டுக்க தான் பார்ப்பான்.அவன் அப்படி செய்யும் போது நம்ம பயலை நாம அடக்கி வைக்கனும்.அந்த வேலையை மட்டும் நாம பார்த்தா போதும்.அப்புறம் உன் தம்பியை உன் அம்மா கூடவே இருக்குற மாதிரி பார்த்துக்க சொல்லு.அந்த பொண்ணு கூட உன் பொண்டாட்டியை இருக்க சொல்லு.ரெண்டு பேரும் சேர்ந்து இருந்தா பிரிக்குறது கஷ்டமாயிடும்.புரிஞ்சதா?” என்று தலையசைத்தவர் கீழே செல்ல அவரைத் தொடர்ந்தான் செல்வேந்திரன்.
**********
“ஆஷியா..” தாதிமாவிடமிருந்து வந்த அனத்தல் குரலில் அவருடன் படுத்திருந்த ஆஷியா எழுந்தமர்ந்தாள்.
“நதீரா வந்தா அவளை விட்டுறாதே டி.அவளுக்கு எப்பவும் துணையா நில்லு.அவளை தனியா விட்டுறாதேடி” அரற்றியபடியே அவளின் கையை எடுத்து தன் நெஞ்சின் மேல் வைத்துக் கொண்டார்.
‘அதுக்கு அவ வரனுமே’ என்று எண்ணிய ஆஷியாவின் எண்ணம் அவள் முகத்தில் தெரிந்தது போல அந்த முதியவருக்கு.
“ அவ கண்டிப்பா வருவா.வந்தா நீ விட்டுறாத அவளை.விட மாட்டீல்ல?” என்று கேட்டவரிடம் ‘மாட்டேன்’ என்பது போல் தலையசைத்தாள்.
“ உன் மனசுக்கு பிடிச்சது போல வாழ்க்கை அமையும் டி கண்ணு.பொறுமையா இரு.உன் நம்பிக்கையும்,தைரியமும் தான் எப்பவும் உனக்கு பக்க பலமா இருக்கும்.அதை மட்டும் விட்டுடாத.எப்பவும் சந்தோஷமா இருக்கனும்” அவளின் கன்னம் வழித்து முத்தமிட்டவர் அப்படியே கண்களை மூடிக்கொண்டார்.
அடுத்து நடக்கப் போவதை கணித்து சொல்லுவது போல் சொன்னவரை புரியாமல் பார்த்தவள் அவருடைய போர்வையை எடுத்து போர்த்தி விட்டு மன சஞ்சலத்துடன் தானும் உறங்கினாள்.
அடுத்த நாள் விடியலைக் காண அவரின் கண்கள் திறக்கவில்லை.படைத்தவனே அவரை திரும்ப அழைத்துக் கொண்டான்.