“போனது எதுக்குனு தெரிஞ்சிக்கிட்டு பேசுடி” என்றவன் மனைவி செய்தததை சொல்ல, தாரகைக்கும் ஆதினியின் செயல் பிடித்தமில்லை. என்ன இது படம் பார்ப்பது வரை பரவாயில்லை, வேண்டுமென்றே மாட்டிக்கொள்வது எல்லாம் மடத்தனம் இல்லையா? என்று எரிச்சலானது.
“இதை அவ எங்கிட்ட சொல்லவே இல்லைடா, ஏன் இப்படி பண்றா?” தாரகையும் சலிப்பாகக் கேட்க அரி ஒன்றும் சொல்லவில்லை. அவன் வாழ்க்கையின் சோர்வை தங்கையிடம் சொல்லி அவளை கஷ்டப்படுத்த விரும்பவில்லை. இதே தாரகைக்கு ஒன்றென்றால் குரலிலே கண்டுகொள்வான், தாரகையும் சொல்லிவிடுவாள்.
ஆதினியை அவனால் சமாளிக்க முடியும், கொஞ்சம் கஷ்டம்! ஆனாலும் அரியால் முடியும்! இப்போதைக்கு அவன் ஆயுதம் கண்டிப்பு! அது ஆதினிக்குப் பிடிக்கவில்லை என்றாலும் அதுதான் அவளை பிடித்து வைக்கும் என்று இத்தனை நாளில் அறிந்து வைத்திருந்தான் கணவன்.
“என்னடா அவளை ரொம்ப திட்டினியா? அதான் பொங்கலுக்கு வரலனு சொல்றாளா?”
“பின்ன திட்டாம? நீயே சொல்லு தாராம்மா. இண்டர்னல்ஸ் கட் அடிச்சா ஓகே, அவ ரூம் மேட் ஷெரின் உடம்பு சரியில்லனு சொல்லி சமாளிச்சிருக்கா, நம்ம அரை டிக்கெட்டு படத்தை பார்த்து பல்லைக் காட்டி, தியேட்டர்ல நின்னு செல்ஃபி எடுத்து க்ளாஸ் குரூப், அதுவும் மேம் இருக்க குரூப்ல போட்டிருக்கா” என்றான் கொஞ்சம் சிரிப்போடு. அப்போது மிகையான கோபம். இப்போது தங்கையிடம் பேசும்போது தானாகவே ஒரு தணிவு வந்தது. ஒரு குழந்தையின் குறும்பினை சொல்லும் தந்தையின் பாவனை. ஆனால் ஆதினியிடம் அந்த குறும்பினை கண்டிக்கும் அன்னை!
“அதுக்கு நீ என்ன சொல்லி திட்டின?” என்று தாரகை கேட்டதற்கு
“இப்படி கேஸ்’ல மாட்டுறதுன்னா என்னை கூப்பிடாத, உங்கப்பாவை கூப்பிடு, என் டைம் வேஸ்ட் பண்ணாதனு வார்ன் பண்ணினேன்” என்று அரி சொல்ல
“ஏதோ தெரியாம பண்ணிட்டா விடேன் டா. இப்படி பேசினா யாரா இருந்தாலும் ஹர்ட் ஆவாங்க அரி” என்று அண்ணனுக்கு எடுத்து சொல்ல
“ஆதினி ஆகமாட்டா! அந்த அரைடிக்கெட் எங்கிட்ட நீ எதுக்கு அட்வகேட்டா இருக்கனு கேட்கிறா. இது சின்ன விஷயம்னு விட்டா நாளைக்கு இதை விட பெருசா செய்வா தாரா. நீயே யோசி நமக்கே கோவம் வருது, டீச்சர்ஸ்லாம் சும்மா இருப்பாங்களா? இண்டர்னல்ஸ்ல கை வைப்பாங்க. ஏதோ படம் பார்த்து விட்டா கூட ஓகே, இப்படி செஞ்சா அரகன்ஸ் இல்லையா? இதை எப்படி எங்கரேஜ் பண்றது?” என்று கேட்க, தாரகை அமைதியாக அண்ணன் சொல்வதை கேட்டாள். ஆதினி தஞ்சாவூரில் இருக்கும் மத்திய அரசின் கீழ் வரும் பல்கலைக்கழகத்தில் பயின்றாள்.
“முதல்ல படிப்பு எவ்வளவு முக்கியம்? இந்த காலேஜ்’ல எவ்வளவு கஷ்டப்பட்டு என்டரென்ஸ் எழுதி அவளுக்கு சீட் கிடைச்சது! ஆல் இந்தியா லெவல் எக்ஸாம். இப்போ அதையெல்லாம் யோசிக்காம என்னை வெறுப்பேத்த அவ ஃப்யூச்சரோட விளையாடுறா. அவளை நான் ஹாண்டில் பண்ணிப்பேன். நீ ஃபீரியா விடு, ஆமா இன்னிக்கு என்ன பாட்டு போடுறார் உன் பூமர்” என்று தங்கையை கிண்டல் செய்தான்.
தாரகை கணவன் ராஜதுரை காதலனாக இருந்த போதே வாட்ஸப்பில் தாரகைக்கேன்றே பிரத்யேகமாக பாடல் வைப்பான். அதனால் அரி வம்பு செய்ய,
“மழை வருதுனு நியுஸ்ல சொன்னதால துரை டென்ஷன், வயலுக்குப் போயிருக்கார். சரி நீ தூங்கு, நாளைக்கு ஆதி கிட்ட பேசுடா அரி” என்று தாரகை போனை வைத்தாள்.
அரிச்சந்திரனுக்கும் தாரகைக்கும் ஒரு அற்புதமான தோழமை உண்டு. அன்பால் கட்டப்பட்ட உறவில் ஆண்பால், பெண்பால் பேதமில்லையே. அப்படித்தான் அவர்கள்! என்ன விஷயம் என்றாலும் அண்ணனிடம் யோசிக்காமல் மனதை பேச முடியும் தாரகையால்.
அப்படி ஒரு அண்ணனுக்கு எல்லாம் சிறப்பாக இருக்க வேண்டும் என்ற பேரவா அவளிடம். ஆதினியிடம் இதுவரை அவள் குறை கண்டதில்லை.
ஏன் அவள் கணவன் ராஜதுரை எல்லாம் அக்மார்க் பிற்போக்குவாதி, இப்போது இவள் கணவனாகிவிட்ட பின்னே, காதல் வந்த பின்னே தான் அவனிடம் மாற்றங்கள். அப்படியிருக்க பிழைகளை பொறுத்துக் கொள்வதும் திருத்திக் கொள்வதும்தானே வாழ்வு என்ற தெளிவு தாரகைக்கு உண்டு. ராஜதுரையோடு முதல் பார்வையில் மோதலாகி, சண்டையாகி ஊரே பார்க்கும் அளவு பிரச்சனையாகி என்று பெரிய கதை அவர்களுடையது. ஆனால் எங்கோ ஒரு புள்ளியில் எல்லாம் மாறியது, மாயமாகியது, மயக்கம் வந்தது! காதல் கண்டது அவர்கள் மனது!
அப்படி ஒரு இந்திரஜாலம் அண்ணனுக்கு வாய்க்காதா என்ற தவிப்பு தங்கையிடம். அரிச்சந்திரன் குரலில் மனைவி பற்றி பேசும்போது தெரிந்த வாஞ்சை தாரகைக்கு நம்பிக்கை தந்தது.
ஆதினி தாரகையிடம் பேசி முடிக்க, அவள் அப்பா ரவிக்குமார் அழைத்தார். பொங்கலுக்கு வா என்று அவரும் சொல்ல,
“நம்ம வீட்டுக்கு வாடா, ஆனா மாப்பிள்ளை கூட வரணும். அதுதான் முறை.” என்று சொல்ல, ஆதினிக்குக் கோபம்.
“ஏன் நம்ம வீட்டுக்கு வர எனக்கு ரைட்ஸ் இல்லையா? இதுக்குத்தான் நீயும் அந்த பெருசும் என்னை ப்ளான் பண்ணி துரத்தி விட்டீங்களா?” என்று கத்தினாள். எல்லா இடத்திலும் அந்நியப்பட்டு நிற்கும் உணர்வில் பெண் தவித்தாள்.
“என்னம்மா நீ? இன்னும் கோவம் போகலையா? மாப்பிள்ளையை பிடிக்கலையா உனக்கு” என்றதும் இன்னும் கோபம்.
“உன்னை தான் எனக்குப் பிடிக்கல, அவரை பிடிக்கும் எனக்கு” என்றால் உடனே. அதில் ரவிக்குமாருக்கு பெரிய சந்தோஷம். சத்தமாக சிரித்தார்.
“சிரிக்காத எனக்குக் கோவமா வருது.” என்ற ஆதினிக்கு உண்மையில் கண்கள் கலங்கி போனது.
ஆதினிக்குப் படிக்கும் போதே வீட்டில் திருமணம் செய்கிறார்கள் என்ற கோபம். மறுக்கவும் முடியவில்லை. வீட்டில் ஆதினி அரசி! அப்பா, அம்மா, தாத்தா, ஆத்தா என்று எல்லாருக்கும் அவள்தான் உயிர். அம்மா இரண்டு வருடம் முன்பு தவறிவிட, வீட்டில் இருந்தவர்களுக்குப் பயம். ஒற்றைப் பெண், நன்றாக இருக்கும்போதே திருமணம் செய்துவிடலாம் என்று எண்ணி செயல்படுத்திவிட்டனர்.
அரிச்சந்திரனிடம் சொல்லியிருந்தால் அவனே நிறுத்தி இருப்பான், பெண்களின் உரிமையைக் கேட்டு வாங்க வேண்டும் என்று சொல்பவன், ஆதினி அவனிடம் சொல்லவில்லை. மற்ற வரன்களை விட இவன் பரவாயில்லை என்றே தோன்றியது.
அம்மா இறந்த இழப்பில் இருந்து மீள்வதற்குள் மீண்டும் அவளை உணர்வு ரீதியாக வீட்டினர் தாக்கினர். ஆதினி திருமணமான புதிதில் அரிச்சந்திரனிடம் தன் கோபத்தை எல்லாம் காட்டியவள், ஒரு கட்டத்தில் அவன் ஒதுங்கிப்போக பிரிந்து விடலாம் என்று அந்த நேர கோபத்தில் சொல்லிவிட்டாள். இப்போது அவன் பதிலுக்கு செய்கிறான்.
அவளின் ஆசை அரிச்சந்திர மகாபிரபு மனைவிக்கு சுதந்திரம் தர வேண்டி அவள் விருப்பப்படி படி என்று விடுதியில் சேர்த்து விட்டான். உண்மையில் அரி விலகியிருந்தானே தவிர, ஆதினியை விட்டுவிட என்றுமே எண்ணமில்லை ! அது அவனுக்குத் தெரியும், ஆதினிக்குத் தெரியப்படுத்தவில்லை. பார்த்து பார்த்து செய்யும் கணவன், ஆனால் இவளை பார்த்தே பல மாதமாகிவிட்டது.
ஆதினியை எல்லாரும் தாங்குவார்கள். அதனால் அரியின் விலகல் வெகுவாக பாதித்தது. ஏக்கம் ஏமாற்றமாகி எரிச்சல் தர, அவனை அலையவிட்டாள். என்னை பார்க்க மாட்டியா? என்ற கோபம் ஹாஸ்டலில் மற்ற மாணவருக்கு பேய் பயம் காட்டுவது, க்ளாஸ் கட் அடிப்பது என்று அத்தனை கலாட்டாக்கள் செய்ய வைத்தது. அரிச்சந்திரனும் இவள் அடாவடிக்கெல்லாம் அசரவில்லை. சரியாக ஈடுகொடுத்தான்.
இன்றும் இவளிடம் அப்படி நடக்க, அரிச்சந்திரனை தேடும் ஆவல் அதிகமானது! அது காதலா என்றெல்லாம் தெரியாது அவளுக்கு. உன்னை பார்க்க வேண்டும் என்று உரிமையாக, அன்பாக கேட்டிருந்தால் வந்திருப்பான். ஆனால் கேட்காமலே எல்லாம் செய்யும் அப்பா, தாத்தா என்று அவளின் வீட்டினர் இருக்க, அரிச்சந்திரனுக்கு ஆதினி முக்கியமில்லையா என்பதே ஆதினியின் அதி முக்கிய கேள்வி!
நான் அவனை மிஸ் பண்றேன், இவன் என்னை ஏன் மிஸ் பண்ணல? என்ற எண்ணம் அவனை தவிர வேறெதையும் சிந்திக்க விடவில்லை. அதே நேரம் இறங்கி பேச அவள் குணம் விடவில்லை. இப்போது அப்பா பேச, அழுகை வந்தது.
அவள் குரலே ரவிக்குமாரை ஆட்டிவைக்க, “என்னம்மா? என்னாச்சு?” என்று கேட்க பதிலே பேசவில்லை. ரவி உடனே
“சரிடா, நீ முதல்ல வீட்டுக்கு வா. நான் வந்து அழைச்சிட்டு போகவா?” என்று கேட்டார். மகள் மறுத்து அவர்கள் செய்த ஒரே விஷயம் திருமணம், அதுதான் ஆதினியை அதிகம் பாதித்து விட்டது.
“ம்ம், ஓகே. தூங்க போறேன் பா. தாத்தாவை பார்த்துக்கோ” என்று சொல்லி மெத்தையில் போனோடு அப்படியே விழுந்தாள். தூக்கம் வரவில்லை, இவள் இரவு கணவனின் நினைவால் திருடுப் போனது!