மாணவ மாணவியர் எல்லாரும் மிகுந்த உற்சாகமாக மேடைக்குக் கீழ் இருந்த அந்த மைதானத்தில் நின்று களியாட்டம் போட்டனர். துப்பட்டாவை எல்லாம் தூக்கி போட்டு, அட்டகாசம். வயது, இளமை, திருவிழா என்று எல்லாம் சங்கமித்திருக்க, சந்தோஷம் மட்டுமே அங்கே.
அரிச்சந்திரன் எடுத்த வீடியோவை தங்கைக்கு அனுப்பிவிட்டு, விழாவை பார்த்தான். ஆதினி ஆட்டம் முடிந்து பின்வரிசையில் வந்து காலை நன்றாக நீட்டி நாற்காலியில் சாய்ந்தபடி உட்கார்ந்தாள். மனைவி உட்கார்ந்ததைப் பார்த்த அரிச்சந்திரன், மெல்ல எழுந்து அவளிடம் வந்து அமர்ந்தான்.
“அடி பின்னிட்ட! குட்!” என்ற குரலில் திரும்பிய ஆதினிக்கு ஆச்சரியம். பரவசத்தில் விழிகள் விரிய, அரிச்சந்திரனை பார்த்தாள். வெள்ளை சட்டை, கறுப்பு பேண்ட் என்று கோர்ட் சென்றவன் அப்படியே வந்திருந்தான். உண்மையில் களைத்து போயிருந்தான். ஆனால் ஆதினிக்கு அதனை ஆராய அவகாசமில்லை, அவன் வந்திருப்பதிலே மனதுக்குள் ஒரு உற்சாகம், கர்வம் அவளிடம்.
“தேங்க் யூ” என்று சொல்லி அவள் விழாவினை பார்க்க,
“இப்போ கிளம்பினாதான் வீட்டுக்குப் போகலாம் ஆதினி, லேட்டாகிடும். தாத்தா வெயிட் பண்ணுவார்” என்று அரி சொல்ல
“நான் வரல, அப்பா வரேனு சொல்லியிருக்கார். நீங்க தாரா அத்தாச்சி சொல்லி தானே என்னை அழைக்க வந்திருக்கீங்க?” என்று ஆதினி நன்றாக திரும்பி அவனை பார்த்து கேட்டாள். தங்கை சொன்னால் என்றில்லை, முதல் பொங்கல் ஆதினி வந்தால் நன்றாக இருக்கும் என்ற எண்ணம். அதனால் ஆதினி மீது மனத்தாங்கல் இருந்தாலும் இறங்கி வந்தான்.
“ஏன் அரிச்சந்திர மகாபிரபு கூப்பிட மாட்டீங்களோ? அயோடைஸிட் உப்பு போட்டு சாப்பிடுறவ ஆதினி, கூப்பிடாம எல்லாம் வர மாட்டா” அவனை போலவே சொன்னாள் ஆதினி.
ஆதினியின் பேச்சில் லேசாக சிரித்த அரி, “அதான் இப்போ கூப்பிடுறேனே” என்று கைகளை நீட்டி நெட்டி முறித்தவன் எழுந்து கொண்டான்.
ஆதினிக்கும் மறுக்க முடியவில்லை. அவன் அழைக்க வேண்டும் என்று ஆவல், வந்துவிட்டான். அதனால் இன்று முரண்டுபிடிக்காமல் எழுந்தாள். அதுவும் வந்தவுடனே அவளை பாராட்டியிருக்க குளிர்ந்தது மனம்.
“டென் மினிட்ஸ், ஹாஸ்டல்ல போய் பேக் எடுத்துட்டு வரேன்” என்று சொல்ல,
“நானும் வரேன்” என்று அரிச்சந்திரனும் உடன் நடந்தான். இவன் ஹாஸ்டலில் கீழே நிற்க, ஆதினி தோழி மற்றும் வார்டனிடம் சொல்லிவிட்டு மேலே சென்று பையை எடுத்து வந்தாள். அரிச்சந்திரன் அவள் வரவும் பையை வாங்கிக் கொண்டான்.
அன்பின் செயல்கள் எல்லாம் சின்னஞ்சிறியவையே என்று தோன்ற வைத்தான் ஆதினியின் கணவன். அரி காரை எடுத்தான். ஆதினிக்கு வியர்க்க,
“ஏசி ஆன் பண்ணு” என்றான் அரி.
“இல்ல, விண்டோ ஓபன் பண்றேன்” என்ற ஆதினியிடம்
“அப்புறம் எப்படி உனக்கு பறையில இண்டரஸ்ட்? பொண்ணுங்க பொதுவா பரதம் அது மாதிரிதானே போவாங்க” என்று கேட்டான் அரி.
“யுஜி படிக்கிறப்ப எங்க காலேஜ்ல கத்துக்கிட்டேன், பரத நாட்டியமா அதுக்கு மேக் அப் போடணும், எக்ஸ்ட்ரா நிறைய வேலை செய்யணும். இது நானாவே இருக்கலாம். அதனால் பிடிக்கும்” என்றாள்.
“ரொம்ப நல்லா அடிச்ச. எனர்ஜிடிக்!” அரிச்சந்திரன் மனதார புகழ்ந்தான். அதில் நனைந்தாள் ஆதினி, கடைசியாக அவள் கல்லூரியில் சேர நுழைவுத் தேர்வில் தேர்ச்சிப்பெற்ற போது பாராட்டியவன். இவளும் பாராட்டும்படி ஒன்றும் செய்யவில்லை.
ஆதினியின் முகம் களைப்பாக இருந்தாலும் பிரகாசித்தது. கணவனுடன் நீண்ட கார் பயணம், தழுவிய தென்றல் காற்று, புதிதாய் உணர்ந்தாள்.
“எக்ஸாம் எப்படி பண்ணின?” அரி கேட்க
“சூப்பர்” என்றாள். வேறெதுவும் பேசாது அரி காரை ஓட்ட, ஆதினிக்கு அவனிடம் பேச வேண்டும் என்ற ஆசை. அதனால் சாதாரணமாக பேச்சு கொடுத்தாள்.
“எனக்கு ரொம்ப நாளா ஒரு டவுட்” என்று அவனை பார்க்க
“சொல்லு” என்றான் சாலையில் கவனம் வைத்து.
“அது அத்தை மாமா அந்த காலத்துலயே லவ் மேரேஜ், அப்புறம் ராஜாண்ணா தாரகை அத்தாச்சி லவ் மேரேஜ். நீங்க தானே மைதிலி அக்காவுக்குக் கூட லவ் மேரேஜ் பண்ணி வைச்சீங்க, ஆனா நீங்க ஏன் லவ் மேரேஜ் பண்ணல” என்று கேட்டுவிட, அரியோ புன்னகையுடன்
“ஊர்ல இருக்கவன் காதலுக்கு எல்லாம் ஹெல்ப் பண்ணினா எனக்கு ஏது லவ் பண்ண நேரம். அதான் பண்ணல” என்றான்.
“ஹே சூப்பர் ஆதி, செம ஆட்டம்” என்று எடுத்தவுடனே உற்சாகமாக பாராட்ட
“என்ன அத்தாச்சி? நீங்க எப்போ பார்த்தீங்க?” என்று ஆதினி புரியாமல் கேட்க
“அரி எனக்கு வீடியோ எடுத்து அனுப்பினானே, என் பொண்டாட்டி டான்ஸ் பாருனு” என்று தாரகை சொல்ல, ஆதினியின் பார்வை கணவனை அள்ளிக்கொண்டது. தன்னை அவனுக்கு பிடிக்குமோ என்று தோன்றியது. தேவையில்லாமல் பேசி எல்லாவற்றையும் சிக்கலாக்கி விட்டோம் என்று புரிந்தது. இருந்தும் இத்தனை நாள் என்னை தேடவில்லையே என்ற கோபம் இருந்தது. இவள் அவனை தள்ளி வைத்ததை மறந்தாள்.
“சூப்பர் சூப்பர், நாளைக்கு வரேன் நான். பார்த்து வாங்க” என்று சொல்லி தாரா வைத்துவிட ஆதினி அமைதியாக கண்மூடி கொண்டாள். காலையில் சீக்கிரமே எழுந்தது, படித்து, பரீட்சை எழுதியது மதியம் முதல் பயிற்சி என்று உடல் வலியெடுத்தது.
கண்மூடியவள் அப்படியே, “வீடு வந்ததும் சொல்லுங்க, எனக்கு ரொம்ப தூக்கமா வருது” என்றாள்.
அரி தலையசைக்க, அவன் அமைதியாக வண்டி ஓட்டினான். ஒன்றரை மணி நேர பயணம். வீடு வந்ததும் ஆதினியை எழுப்ப, கண்கள் சிவந்திருந்தாலும் ஆதினிக்கு வெகு நாட்கள் கழித்து கணவன் வீடு வரும் உற்சாகம். கார் கதவை திறந்தவள், வேகமாக வீட்டினுள் ஓட,
“ஓய்! அரை டிக்கெட் வா டி இங்க” என்று காருக்குள் இருந்து அதட்டி அழைத்தான் அரிச்சந்திரன்.
“என்ன?” என்று அவள் அருகே வர,
“கேட் திற, காரை உள்ள விட வேண்டாமா?” என்றான் கடுப்பாக.
“ஓகே ஓகே” என்று சொன்னவள் காரை அவன் உள்ளே விடவும் கேட்டை சாற்றினாள். வீட்டுக்குள் நுழைந்து ஹாலில் அமர்ந்து டீவியில் ராஜபாட் ரங்கதுரை படம் பார்த்திருந்த ராமசாமியிடம் ஓடினாள்.
“தாத்தா” என்று உற்சாகமாய் குரல் கொடுத்து அவர் அருகே உட்கார
“அடேடே ராஜாத்தி! வாடா” என்று வாஞ்சையாக சொல்லிய ராமசாமி ஆதினியின் கன்னத்தைத் தட்டி
“சாப்பிட்டியா? படிப்பெல்லாம் எப்படி போகுது” என்றார்.
ஆதினி பதிலுக்கு, “நீங்க சாப்பிட்டீங்களா தாத்தா?” என்று கேட்டு அவரிடம் அரட்டை அடிக்க துவங்கினாள்.
அரிச்சந்திரன் அவள் பையை அறையில் வைத்தவன் கிச்சன் சென்று இருவருக்கும் தட்டு எடுத்து உணவு மேஜையில் வைத்தான். தண்ணீர் ஊற்றியவன் “சாப்பிட வா ஆதினி” என்று அழைக்க
“போ போ, நேரமாச்சு” என்று ராமசாமி சொல்ல
“அதான் நாங்க வந்துட்டோம்ல தாத்தா, போய் தூங்குங்க” என்று அரி சொல்ல தாத்தாவோ மறுப்பாக பார்த்தார்.
“இருடா, படம் ஓடுது” என்று பாவமாக டீவியை பார்க்க, “ஆஃப் பண்ணிட்டு வா ஆதினி” என்றான்.
“தாத்தா பார்த்திட்டு இருக்கார்ல, ஏன் இப்படி பண்றீங்க?” என்று ஆதினி அவனை முறைக்க, இட்லியை எடுத்து வைத்து உட்கார்ந்தவன் ஆதினியை முறைக்க,
“இது பனங்காட்டு நரி, உங்க சலசலப்புக்கு எல்லாம் அஞ்சாது” என்று சிவாஜி கணேசன் வசனம் பேசவும் சரியாக இருக்க, ஆதினிக்கு பயங்கர சிரிப்பு. கிண்டலாக கணவனை பார்த்தாள். அரிச்சந்திரன் முறைத்தவன் அவன் பாட்டுக்கு உண்ண ஆரம்பித்தான்.
“போ போ, இந்த தடிபய அப்புறம் கத்துவான்” என்று ராமசாமி மெல்லிய குரலில் சொன்னவர்
“நாளைக்கு இந்த படம் போன்ல எடுத்துக் கொடு” என்று பேத்தியிடம் சொல்லிவிட்டு உறங்க போக, ஆதினி உண்ண உட்கார்ந்தாள்.
“முகம் கழுவல, அப்படியே வந்தாச்சு. வந்ததுல இருந்து ஒரே அரட்டை” என்று பேச, அப்போதுதான் அரியை பார்த்தாள். அவன் ஸ்லீவ்லெஸ் டீஷர்ட், வேஷ்டி என்று இருந்தான்.
‘அதுக்குள்ள டிரஸ் மாத்திட்டான்’ என்று நினைத்தவள் அறைக்குள் போக எழ, “கை கழுவியாச்சுல, போதும். சாப்பிட்டு டிரஸ் மாத்தலாம்” என்றான்.
உணவை உண்டவளின் முகம் எதிர்ப்பார்ப்பிலிருந்து ஏமாற்றத்துக்கு மாறியது. அரியின் கைப்பக்குவத்தை எதிர்ப்பார்த்து வந்திருக்க, சமையல் செய்பவரின் சமையல் என்று புரிந்தது. உண்டு முடித்து தட்டை கழுவி வைத்து, அறைக்குள் சென்று ஆதினியும் ஒரு பெரிய டீஷர்ட், ஸ்கர்ட் அணிந்து அப்படியே மெத்தையில் சரிந்தாள்.
அரிச்சந்திரனுக்கு களைப்பாக இருந்த போதிலும் உடனே உறக்கம் வரவில்லை. உண்டு முடித்தவன் வாசற்படியில் போய் உட்கார்ந்தான். ஆதினி கணவனை காணாமல் வெளியே வர, அந்த இரவில் வாசல் தூணில் சாய்ந்து கண்மூடியிருந்தான் அரி.
ஆதினிக்கு அவன் இரவின் கவிதையாய் தெரிந்தான்! முட்டிப்போட்டு அவனருகே உட்கார, அந்த அசைவில் கண் விழித்தான் அரிச்சந்திரன்.