“எதுக்கு பயம்?” ஆதினியின் பேச்சில் பயம் கூட தைரியமாக தான் வந்தது. தைரியம் என்று சொல்வதை விட அலட்சியம் என்று சொல்லலாம். வேண்டும் என்றே செய்த செயல் அல்லவா? அதனால் துணிவு தூக்கலாகவே இருந்தது.
நேற்று நடந்த இன்டர்னல் தேர்வை கட்டடித்துவிட்டு படம் பார்க்க போய்விட்டாள் ஆதினி. ஷெரின் அவளது ரூம் மேட். தோழிக்கு உடல்நிலை சரியில்லை என்று பொய் சொல்லிவிட்டாள்.
ஆனால் ஆதினி படம் பார்த்து அதனை வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் ஆக வைத்து, போதாக்குறைக்கு அதனை ஆசிரியர்கள் மாணவர்கள் இருக்கும் கிளாஸ் குரூப்பிலும் பகிர்ந்து விட்டாள்.
இன்று அது தெரிந்து அவர்களுடைய hod பிடி பிடி என பிடித்து விட்டார். வீட்டில் இருந்து ஆட்களை அழைத்து வர சொல்லி விட்டார். இதற்காகத்தானே ஆதினி இவ்வளவு செய்தது.
தன்னை இங்கு கல்லூரிக்கு அனுப்பி விட்டு ஒருத்தன் நிம்மதியாக இருப்பது அவளுக்குப் பிடிக்கவில்லை. தன்னை தாங்கிய உறவுகளை மட்டும் பார்த்தவள், தவிர்ப்பவனை தவிக்க விட நினைத்தாள்.
“வரட்டும், இந்த ஆதினியை ஈசியா அவாய்ட் கூட பண்ண கூடாது” என்றாள் தீவிரமான குரலில்.
தன் தாத்தா உறங்குகிறாரா என்று பார்த்துவிட்டு உறங்க வந்த போது தான் போனை எடுத்துப் பார்த்தான் அவன். வாட்ஸ் அப்பில் குறுஞ்செய்தியை பார்த்ததுமே கொதித்தான் அவன்.
ஆதினியை பற்றிய புகார் தான் அது. பார்த்த கணமே ஆதினிக்கு அழைத்தான். ஆதினி அதுவரை ஆன்லைனில் இருந்தவள் வேண்டுமென்றே போனை அணைத்து வைத்தாள், ஷெரின் போனையும் சைலன்டில் போட்டாள்.