ஆர்வம் மேலிட்ட விழிகளுடன் தன்னை ஆசையாய், காதலாய் நோக்குபவனின் முகத்தைப் பார்க்காது வேறு புறம் பார்த்த நிவி, தொண்டையை சரி செய்து கொண்டு அவனிடமிருந்து விலகினாள்.
“சந்த்ரு, உங்களை எந்த வகையில நான் டிஸ்டர்ப் பண்ணேன்னு கூட எனக்குத் தெரியலை. இன்ஃபேக்ட் ஆரம்பத்துல இருந்து உங்களுக்கும் எனக்கும் எந்த வகையிலயும் ஒத்துப் போனது இல்லை. இப்போ கூட இந்த ரெண்டு நாளா தான் உங்க மேல ஒரு நல்ல அபிப்பிராயம் வந்துச்சு. ஐ க்நோ, உங்களுக்கு என்னைப் பிடிச்சு இருக்கு. உங்களோட உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்குற நிலைமைல நான் இல்லை. உங்களுக்காக பிறந்த பொண்ணு கண்டிப்பா சீக்கிரம் வருவாங்க. உங்க வாழ்க்கை நல்லா அமைய என் வாழ்த்துக்கள்!” என அவன் முன்னே நட்பு கரம் நீட்டியவளின் கையை பார்த்தவன், இதழ்கள் கசந்த முறுவலை சிந்தின.
“ஏன்? ஏன் பிடிக்கலை?” ஒற்றை வார்த்தையில் கேட்டான் சந்த்ரு.
பெருமூச்சு ஒன்றை வெளியிட்டவள், “நான் உங்களை பிடிக்கலைன்னு சொல்லவே இல்லை. ஒரு நண்பனா, ப்ரெண்டா, அத்தைப் பையனா பிடிக்கும். ஆனால், அந்த பிடித்தம் காதல் எல்லாம் இல்லை. அது ஜஸ்ட் நமக்கு தெரிஞ்சவங்கன்ற எண்ணத்துல பிடிக்கிறது. மத்தபடி அதுக்கு நான் பேர் கொடுக்க விரும்பலை!” அத்தனை தன்மையாய் தான் பேசினாள் நிவேதா.
தலையை இடம் வலமாக அசைத்தவன், “ஆக்சுவலி ஐ யம் மேட்லி லவ் ஆன் யூ! என்னால என்னை மாத்திக்க முடியாது. அதுக்காக ஒரு பொண்ணை என்னால கட்டாயப்படுத்த முடியாது. என் அம்மாவும் என்னை அப்படி வளர்க்கலை. பட், உன்னை மறக்க எல்லாம் முடியாது. முயற்சியும் செய்ய மாட்டேன். நீ என்னை ஃப்ரெண்டா பாரு. பட், என்னால அப்படி பார்க்க முடியும்னு பொய் சொல்ல மாட்டேன். ஹோப் யூ ஒரு நாள் உனக்கு என் மேல லவ் வரலாம். நான் வெயிட் பண்றேன்!”
“லுக் சந்த்ரு, லைஃப் நீங்க பார்க்குற சினிமா இல்லை. ஹீரோ ஹீரோயின் கடைசில ஒன்னு சேர்றதுக்கு. இது ரியாலிட்டி. எனக்காக வெயிட் பண்ணி உங்க வாழ்க்கையை நீங்க கெடுத்துக்காதீங்க. இதுக்கு மேல நான் எதுவும் பேசுறதுக்கு இல்லை. உங்க லைஃப், உங்களோட டிசிஷன்!” என நிவி உள்ளே சென்று விட்டாள். ஆனால், சந்த்ருவால் தான் இந்த நிராகரிப்பை ஏற்க முடியவில்லை. மனம் கனத்துப் போனது. ஏன் அவளுக்கு தன்னைப் பிடிக்கவில்லை. தன்னுடைய குணமா? இல்லையே! பேசும் போது கூட அவள் அப்படி எதுவும் கூறவில்லையே! என எண்ணி மருகிப் போனான்.
மதிய உணவு கூட உண்ண வரவில்லை அவன். ஆனந்தி எவ்வளவோ அழைத்தும், எதேதோ காரணங்கள் கூறி வரவில்லை ஆடவன். அவரும் விட்டுவிட்டார். நிவி உண்டு முடித்து வீட்டிற்கு கிளம்பி விட்டாள்.
அவளுக்கு சந்த்ருவை பிடித்து இருந்தது. ஆனால், காதல் எல்லாம் இல்லையே! முன்பு அவள் யோசித்த பிம்பங்கள் எல்லாம் சுக்கு சுக்காக உடைந்தது என்னவோ உண்மை. அவள் சந்தருவை ஒரு விதமாய் கற்பனை செய்திருந்தாள். ஆனால், இந்த சில நாட்களில் நடந்த நினைவுகளை தூசி தட்டி அடுக்கும் போது, அவன் கெட்டவன் என்ற வரையறைக்குள் எல்லாம் வரவே இல்லை. என்ன கொஞ்சம் வயதுக்கு ஏற்ற முதிர்ச்சி இல்லை அவனிடம். மனதில் பட்டதை பேசி விடுகிறான். நல்லவன் தான். கொஞ்சம் பகட்டானவன். அது அவன் சூழ்நிலையால் வந்தது தானே!
மறுநாள் மாலை அவள் சந்த்ரு அறைக்குள்ளே நுழையும் போது அவளைப் பார்த்து லேசாக புன்னகைத்தவன், தலையை மட்டும் அசைத்தான். ஆனால், அந்த சிரிப்பில் உயிர்ப்பு இல்லை. கண்களில் ஒளி இல்லை. மனம் லேசாய் அவன் புறம் இருந்து யோசிக்க துவங்க, இதெல்லாம் வேண்டாத வேலை என அடக்கி விட்டாள் பெண். பதிலுக்கு புன்னகை செய்து விட்டு தன் இருக்கைக்கு சென்று அமர்ந்து விட்டாள்.
தன்னை நினைத்து அவளுக்கே ஆச்சரியமாக இருந்தது. அவள் பிறந்ததிலிருந்து இன்று வரை நடந்த அனைத்தும் யுகிக்கும் தெரியும். அவனிடம் பெண் எதையும் மறைத்தது இல்லை. அப்படி ஒரு எண்ணம் மாதுவுக்கு தோன்றியதும் இல்லை. ஆனால், சந்த்ரு விஷயத்தில் எதையுமே அவன் செவிவரை நிவி எடுத்துச் செல்லவில்லை. ஏன் என்ற கேள்விக்கு அவளிடம் பதில் இல்லை. ஆனால், மறைக்க வேண்டும் என்ற எண்ணமெல்லாம் இல்லை.
முதலில் அவள் சந்த்ருவை ஒரு பொருட்டாக கூட மதிக்கவில்லை என்பதே உண்மை. அவனின் செயல்களால் எரிச்சல் அடைந்தாலும், அதை யுகியிடம் கூற விரும்பவில்லை. ஏன்னென்றால் அவளுக்கு ஒன்று என்றால் முதல் ஆளாக சந்த்ருவை அழைத்து யுகி பேசியிருப்பான். ஆனால், அது ஜோதிக்கும் ஆனந்திக்கும் இடையில் உள்ள நட்பை பாதிப்பதாக மாறிவிடும் என்ற எண்ணம் தான். மேலும் அவள் இங்கு வேலை பார்க்கும் வரை, தெரிந்தவர்கள் என்ற முறையில் அவர்கள் வீட்டிற்கு செல்ல நேரிடலாம். அப்போது முகத்தைப் பார்த்து பேச வேண்டுமே! எதை செய்தாலும் நான்கு புறமும் யோசித்து தான் செயல் பட வேண்டும் என எண்ணியவள், அவனை பற்றி கூறவில்லை. ஆனால், இப்போது கொஞ்சம் குற்ற உணர்வாக இருந்தது பெண்ணுக்கு. யுகி அவளிடம் எதையும் மறைக்க மாட்டான். ஆனால், நிவி அவனுக்கு உண்மையாக இல்லையோ? என மனம் யோசிக்க, தலை வலித்தது.
அவள் லேசாக தலையில் கையை வைத்து நெற்றியை சுருக்கவும், “என்னாச்சு நிவி? தலை ரொம்ப வலிக்குதா? இரு காபி சொல்றேன்!” என அலைபேசியை எடுத்துப் பேசியவன், அவளருகில் வந்து நாற்காலியை இழுத்து அமர்ந்தான்.
‘ஷப்பா! இவன் வேற!’ என எண்ணியவள், “அதெல்லாம் ஒன்னும் இல்லை. ஜஸ்ட் லைட்டா தலைவலி. ஐ கேன் மேனேஜ்!” என்று விட்டு கணினி புறம் முகத்தை திருப்பிக் கொண்டாள்.
“நிவி!” என்றவன், அவள் கைகளை தொட, “ப்ம்ச்…” என சலித்துக் கொண்டே அவனிடமிருந்து கையை உருவினாள்.
“நிவி, ஒரு ஃப்ரெண்டா இப்போ நான் உன்கிட்ட பேசுறேன். வாட் இஸ் ஈட்டிங் இன் யூ?” என கனிவாக கேட்டான். அவன் குரல் எதையோ அவளுள் செய்ய விழைய, சட்டென விழியோரம் நீர் கோர்த்தது.
‘அட கடவுளே! இவன் முன்னே நான் அழக்கூடாது!’ என நினைத்தவள், இமையை சிலுப்பி விழீநீரை உள்ளிழுத்துக் கொண்டாள். இருந்தும் ஆடவன் அதை கவனித்து விட்டான்.
“என்னாச்சு டா? கண்ணெல்லாம் கலங்குது? எதாவது பிரச்சனையா? என்கிட்ட சொல்ல முடிஞ்சா சொல்லாலம். நான் உனக்கு சொல்யூஷன் தரேன்!” என்றவன் இப்போது அவளது கைகளை ஆதரவாகப் பற்ற, அவளால் உதற முடியவில்லை. சந்த்ரு பேச பேச கண்ணீர் சுரப்பி அதன் வேலையைச் செய்தது.
புறங்கையால் உவர்நீரை துடைத்தவள், “நத்திங், ஐ வாண்ட் டு கோ ரெஸ்ட் ரூம்!” என்று விட்டு விறுவிறுவென கழிவறைக்கு சென்று விட்டாள். முகத்தை நன்றாக கழுவிவிட்டு, தன்னை சமன்படுத்திக் கொண்டு நிவி உள்ளே நுழைய, அவள் மேஜையின் மீது சூடான தேநீர் காத்திருந்தது.
அவள் இருக்கையில் அமர, “ஃப்ர்ஸ்ட் டீயை குடி மா!” என கோப்பையை அவளருகில் நகர்த்தினான். எதுவும் பேசாமல் அதை எடுத்து பருகிலானாள். மனது கொஞ்சம் சமன் பட, அவனைப் பார்த்தாள். மாதுவின் அகத்தின் தெளிவு முகத்தில் தெரிய, அதில் நிம்மதி பெருமூச்சு ஒன்றை வெளிவிட்டவன், “இதான் என் நிவி. எதுனாலும் தைரியமா ஃபேஸ் பண்ணுவா. என்னோட நிவி அழறதை என்னால பார்க்க முடியாது. ப்ளீஸ் டி இனிமேல் அழாத!” என்றவனின் கைகள் ஆதரவாக அவள் கைகளை தொட்டாலும், லேசாய் அவன் குரலும் கரகரத்தது. அவன் முகத்தை ஊன்றி கவனித்தவள், தன்னையே நிந்திக் கொண்டாள். அவனுக்கான வாய்ப்பை தானே உருவாக்கி கொடுக்கிறோம் என மூளை பெண்ணை சாடியது.
அவன் திரும்ப எத்தனிக்க, “ஒரு நிமிஷம் சந்த்ரு” என்றவள், “எனக்கு இந்த மாதிரி பேச்செல்லாம் பிடிக்கலை. இனிமே இப்படி பேசாதீங்க!” என்றாள் குரலில் கடுமையுடன்.
“சாரி நிவி, நீ என் பக்கதுல இருக்கும் போது, வேற எப்படியும் என்னால பேச முடியலை!”
“அப்போ இனிமே நான் இங்க வொர்க்குக்கு வரலை. நீங்க பைல எல்லாம் யார்கிட்டேயாவது கொடுத்து விடுங்க. நான் வீட்ல இருந்தே பார்த்துக்குறேன்!”
“நோ… நோ… ஐ வில் ட்ரை டூ கன்ட்ரோல் மை செல்ஃப்!” என்றவனின் குரலில் பதட்டம் மிகுந்து இருந்தது. தலையை மட்டும் அசைத்தவள், இனிமேல் தேவைக்கு அதிகமாக அவனிடம் ஒரு வார்த்தை கூட பேச கூடாது என நினைத்துக் கொண்டாள்.
வேலை முடிந்து தானே ஒரு மகிழுந்தை பதிவு செய்து வீட்டிற்கு சென்று விட்டாள். அவன் உதவியை நாடவில்லை பெண். படுக்கையில் படுத்தவளுக்கு யுகி முகமே கண்முன்னே வந்தது. அவனிடம் பெய்யுரைத்ததை நினைத்து மனசு பாரமானது. பேசாமல் அவனிடம் விஷயத்தை கூறலாம் என அலைப்பேசியை எடுத்தவள், பின்பு வேண்டாம் என மறுத்து வைத்து விட்டாள்.
நேரே சென்று அவனிடம் கூறலாம் என யோசித்தவள், அப்படியே தாய் தந்தையையும் பார்த்து விட்டு வரலாம். மனதுக்கு கொஞ்சம் ஆறுதலாக இருக்கும் என தோன்ற, நேரத்தைப் பார்த்தாள். அது நள்ளிரவு பன்னிரெண்டு என காட்ட, சரி இரண்டு நாட்களுக்கு விடுப்பு எடுத்துக் கொண்டு வீட்டிற்கு சென்று வரலாம் என திட்டம் தீட்டினாள். வீட்டிற்கு செல்ல போகிறோம் என்ற நினைப்பே குதூகலத்தைக் கொடுக்க, யுகியிடம் நேரில் தாஜா செய்து கொள்ளலாம் என நினைத்து இதழில் உறைந்த புன்னகையுடன் நித்திரையை தழுவினாள்.
மறுநாள் காலையில் எழுந்தவள், வங்கிக்கு விடுமுறை கடித்தத்தை மின்னஞ்சல் மூலம் அனுப்பிவிட்டு, நந்துவுக்கு அழைத்து விஷயத்தை கூறினாள். பின் குளித்து முடித்து கோயம்பேடு பேருந்து நிலையத்தை அடைந்தவள், திருச்சி செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்தாள். வீடு செல்லும் மகிழ்ச்சி கடலளவு இருக்க, முகம் விகசித்தது நிவிக்கு.
வீட்டிற்கு தான் வரும் விஷயத்தை யுகியிடம் கூறவில்லை. வேறு எவரிடமும் அவள் கூறவில்லை. அவர்களை ஆச்சரியப்படுத்தலாம் என எண்ணியே கூறாமல் விட்டாள். எல்லாம் சரியாக செய்து விட்டோம் என எண்ணியவளுக்கு அப்போது தான் சந்த்ரு நினைவு வந்தது.
அவனுக்கு அழைத்தாள். காலையில் அவள் அழைப்பை எதிர்பாராதவன், “நிவி, என்னாச்சு டா? என்ன இந்த நேரத்துல கால் பண்ணி இருக்க? நல்லா இருக்க தானே?” என குரலில் பதகளிப்புடன் கேட்டான்.
“சந்த்ரு, நான் நல்லா இருக்கேன். ஒரு த்ரீ டேய்ஸ்க்கு என்னால வொர்க் வர முடியாது. அதை சொல்ல தான் கால் பண்ணேன்!”
“ஏன்? ஏன்? நான் நேத்து அப்படி பேசுனதாலயா? சாரி நிவி, நான் அப்படி பேசமாட்டேன். ப்ளீஸ்!” என்றவனின் குரல் கெஞ்ச, தலையில் அடித்துக் கொண்டாள்.
“கொஞ்சம் கூட பொறுமையே இல்லையா உங்களுக்கு. நான் ஒரு ரெண்டு நாள் வீட்டுக்கு போய்ட்டு வரலாம்னு பேங்க் லீவ் சொல்லீட்டு கிளம்பிட்டேன். அதான் உங்களுக்கு இன்பார்ம் பண்ண கால் பண்ணேன்!” என்றவளின் பதிலில் மூச்சை இழுத்து விட்டவன், “ஹம்ம்… ஓகே மா!” என இருக்கையில் தளர்வாக அமர்ந்தான்.
“ஹம்ம்… நான் போய்ட்டு வர மூனு நாளாவது ஆகும்!”
“பத்ரமா போய்ட்டு வா நிவி!” என்றவனின் மூச்சுக் காற்று அவள் செவியில் மோத, “மூனு நாள்ல வந்துடுவதானே? வந்துடு நிவி ப்ளீஸ்!” என்றவனின் குரல் ஆழ்ந்து ஒலித்தது. எதுவும் பேசவில்லை நிவி, அழைப்பைத் துண்டித்து விட்டாள்.
அலைபேசியையே இரண்டு நிமிடங்கள் பார்த்தவன், அதை கீழே வைத்து விழிகளை மூடி இருக்கையில் சாய்ந்து கொண்டான். மூன்று நாட்கள் மூன்று யுகமாய் கடக்கப் போவதை அவன் மட்டுமே அறிவான்.
‘கடவுளே! இவன் கூட இருக்க நேரத்தைக் கட் பண்ணணும். ரொம்ப இடம் கொடுக்குறேன் போல. இது நல்லதுக்கு இல்லை!’ என நினைத்துக் கொண்டாள் நிவி.
மாலை வீட்டிற்கு சென்று அவள் இறங்க, அவளை எதிர்பாராத ஜோதி, “என்னடி இப்படி திடுதிப்புன்னு சொல்லாம கொல்லாம வந்திருக்க? என்னாச்சு?” என பதறிவிட்டார்.
“ம்மா… உங்களை எல்லாம் சர்ப்ரைஸ் பண்ண தான் சொல்லாம வந்தேன்” என அவரை அணைத்துக் கொண்டாள்.
“ஏன் டி? அதுக்காக இப்படியா வர்றது? மனசு ஒரு நிமிஷம் பதறிடுச்சு டி. இனிமே இப்படி எல்லாம் பண்ணாத!” என அவளை உள்ளே அழைத்துச் சென்றார்.
“முகம், கை கால் கழுவிட்டு வா டி. நான் டீ போட்றேன்” என அவர் அடுக்களைக்குள் நுழைய, நிவி தன்னை சுத்தம் செய்து வெளியே வந்தாள்.
“இந்தா டி டீயை குடி. உங்கப்பாவுக்கு நான் போன் போட்டு சொல்லிட்டேன். நைட்டு உனக்கு புடிச்ச சாப்பாட்டை வாங்கிட்டு வராறாம். என்ன வேணும்னு அவருக்கு மெசேஜ் பண்ணுவியாம்!” என்றார் ஜோதி.
“அம்மா!” என அவர் கன்னத்தைப் பிடித்து ஆட்டியவள், “வெளிய சாப்ட்றதுன்னா, அங்கேயே சாப்பிட மாட்டேனா? எனக்கு உன் கையால தான் சாப்பாடு வேணும். நீ போய் நைட்டுக்கு மணக்க மணக்க ரெண்டு நெய் தோசை ஊத்தி, தக்காளி சட்னியை அரைச்சு வை. நான் வந்து சாப்பிட்றேன்!” என்று விட்டு, தேநீரை வாங்கிக் கொண்டு சாந்தியை காண விரைந்தாள்.
மறுநாள் வகுப்பெடுப்பதற்காக எதோ குறிப்பெடுத்துக் கொண்டிருந்தார் சாந்தி. அவரை பின்னிருந்து அணைத்த நிவி, “அத்தை… எப்படி இருக்கீங்க?” என்றாள் சிரிப்புடன்.
“என்ன தான் ஹோட்டல் ஹோட்டலா சாப்டாலும், உன் கைமணம் வர மாட்டுது மா!” என தோசையை பிய்த்து சட்னியில் முக்கி வாயில் வைத்தாள். அவள் சாப்பிட்டு முடிய, வீரபாண்டி வந்தார். அவரிடம் செல்லம் கொஞ்சி, கெஞ்சினாள். வீரபாண்டி இனிமேல் இப்படி சொல்லாமல் வர கூடாது என மகளை கண்டிக்க தவறவில்லை. தலையை தலையை ஆட்டியவள், யுகி வர நேரமாகும் காரணத்தினால் அவன் வீட்டின் கூடத்தில் அமர்ந்து தொலைக்காட்சியை உயிர்பித்து அதில் பாடல்களை ஒலிக்க விட்டாள்.
சிறிது நேரத்தில் வந்த யுகி இவளைப் பார்த்து புருவத்தை உயர்த்திக் கொண்டே நுழைந்தான். “என்ன மாமா, சர்ப்ரைஸா உங்களை எல்லாம் பார்க்கலாம்னு வந்தேன்!” என்றாள் புன்னகையுடன்.
“நான் லாஸ்ட் வீக் தானே வந்தேன். மேடம் அதுக்குள்ளேயும் இங்க விசிட்டா?” என கேட்டுக் கொண்டே தன் அறைக்குள் நுழைந்து உடை மாற்றி வர, சாந்தி அவனுக்கு உணவை பரிமாறினார்.
“மாமா!” என அவன் அருகில் சென்று அமர்ந்து கொண்டாள். அவளுக்கும் இரண்டு வாய் ஊட்டிக் கொண்டே யுகி சாப்பிட்டு முடித்து அறைக்குள் நுழைய, வால் போல அவன் பின்னே சென்றாள்.
அவன் கட்டிலில் அமர்ந்ததும், அவனை ஒட்டி அமர்ந்தாள். “என்னடி?” என கேட்டு அவள் கழுத்தில் கையைப் போட்டான். அவனை பாவமாக பார்த்தவள், “மாமா…” என இழுத்தாள்.
“என்னடி இழுக்குற? எதுவும் எனக்கு தெரியாம செஞ்சுட்டீயா?” என்று அவள் மூக்கைப் பிடித்து ஆட்டினான்.
“அது… அது வந்து!” என நிவி நீட்டி முழக்க, “யுகி, இங்கே வா டா!” என சாந்தி அழைத்தார்.
“இதோ வரேன் மா!” என்றவன், “வந்து பேசிக்கலாம் டி!” என்று விட்டு நகர்ந்தான்.
“என்னம்மா?” யுகி வினவ,
“என்னோட ரூம்ல பரண் மேல சில புக்ஸ் இருக்கு. அதை மட்டும் எடுத்து தா டா!” என்றார் சாந்தி.
“ஹம்ம் மா!” என்ற யுகி சாந்தி அறைக்கு சென்று, நாற்காலியை போட்டு அதில் ஏறி நின்றான்.
“ம்மா… நிறைய புக்ஸ் இருக்கே!” அவன் கத்த, “டென்த் புக்ஸ் மட்டும் எடுத்துட்டு வா டா!” என்றார் அவர். யுகி என்ன செய்கிறான் என காண சென்றாள் நிவி.
புத்தகத்தை எடுத்தவன், அறையை விட்டு வெளியேறினான். “மாமா…” என அழைத்துக் கொண்டே வெளியே செல்ல எத்தனித்தவள், எதோ சத்தம் கேட்க, திரும்பி பார்த்தாள். மேலிருந்து எதோ ஒரு புத்தகம் விழுந்திருந்தது. அதை கையில் எடுத்து பார்த்தாள். அது நாட்குறிப்பேடு போல இருக்க, புரட்டினாள். சில பல புகைப்படங்கள் அதிலிருந்து விழ, எடுத்துப் பார்த்தாள். சாந்தி புன்னகையுடன் நிற்க, அவரருகில் ஒரு ஆண் நின்றிருந்தார். அதை கண்டதும் ரெண்டும் ரெண்டும் நான்கு என மனம் கணக்கிட, பட்டென அதை எடுத்து தன் சட்டைக்குள் மறைத்துக் கொண்டாள். அவளுக்கு சாந்தியை பற்றி அறிய வேண்டி இருந்தது. அவருக்காக மட்டுமல்ல, யுகேந்திரனுக்காகவும் தான்.
“மாமா, எனக்கு தூக்கம் வருது. நாளைக்கு பேசலாம்!” என அவன் பதிலை எதிர்பார்க்காமல் தன் வீட்டிற்கு ஓடி விட்டாள். ‘என்னாச்சு இவளுக்கு?’ என யோசித்தான் ஆடவன்.
தன் அறைக்குள்ளே சென்று கதவை தாழிட்டவள், அந்த புகைப்படத்தை எடுத்துப் பார்த்தாள். அந்த ஆண் முகம் நன்றாக தெரியவில்லை. லேசாக துணியை வைத்து துடைத்து விட்டு பார்த்தாள். மிகவும் பரிட்சையமான முகமாக தோன்ற, எங்கு பார்த்தோம் என நினைவில் இல்லை.
பத்து நிமிடங்கள் அறையில் நடந்தவளின் மூளை நினைவடுக்கில் தூசி தட்டி தன் வேலையை செய்ய, உடனே தன் அலைபேசியை எடுத்து புலனத்திற்கு சென்றாள். சந்த்ருவின் இலக்கத்தை தேடி எடுத்து, அவனின் முகப்பு படத்தை பார்த்தாள். பின் அந்த புகைப்படத்தில் உள்ள ஆணைப் பார்த்தாள். இரண்டையும் அருகருகே வைத்துப் பார்த்தவளின் கைகள் நடுங்க, கையிலிருந்ததை நழுவ விட்டிருந்தாள் பெண். அதிர்ச்சியில் உறைந்து தான் போனாள்.