அனைவரும் வந்து இறங்க, “வா ஆனந்தி, வாங்க அண்ணா!” என அழகரையும் மற்றவர்களையும் அழைத்து அமர வைத்தார் ஜோதி.
“என்ன ஜோதி, எப்படி இருக்க?” என ஆனந்தி முகமன் விசாரிக்க, சிறிது நேரம் அந்த பேச்சிலே கழிந்தது.
“இருங்க, நான் போய் காபி போட்டு எடுத்துட்டு வரேன்” ஜோதி அடுக்களைக்குள் நுழைய, நிவியும் அவர் பின்னே நுழைந்தாள்.
“என்ன நிவி, எல்லாரும் உன்னை எப்படி பார்த்துக்குறாங்க?” அக்கறையாய் கேட்ட தாயை பார்த்து புன்னகைத்தவள், “ம்மா… ஆனந்தி அத்தை என்னை பொண்ணு மாதிரி தான் பார்த்துக்குறாங்க. மாமா கூட என்னை எதுவும் சொல்ல மாட்டாரு. உங்க மாப்ளையை பத்தி உங்களுக்கு தெரியுமே! நான் ரொம்ப நல்லா இருக்கேன். ஹாப்பியா இருக்கேன்!” என கண்ணை சிமிட்டினாள்.
“கேட்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு டி. புகுந்த வீட்டுக்காரங்க இப்படி எல்லாம் அமையுறது கஷ்டம். என்ன தான் ஆனந்தி என் ஃப்ரண்டா இருந்தாலும், அவங்க வேற. நம்ம வேற தான் எல்லாத்துலயும். இந்த வித்யாசம் எல்லாம் கல்யாணம் அப்போ என் கண்ணை உருத்திட்டே இருந்துச்சு டி!” தாயாய் தன் பயத்தை வெளிப்படுத்திய ஜோதியின் கைகளில் அழுத்தம் கொடுத்தவள், “என் வாழ்க்கையை பத்தி நீ இனிமே கவலைப்பட தேவையில்லை மா. என்னை ஒரு நல்ல இடத்துல கட்டிக் கொடுத்துட்டேன்னு நீ நிம்மதியா இருக்கலாம்!” என கூறிய நிவி அறியவில்லை சற்று நேரத்தில் நடக்கப் போகும் பூகம்பத்தை. வாடாமல் முகத்திலிருந்த புன்னகை இடம் தெரியாமல் போக போவதை.
“நான் போய் அத்தையை பார்க்குறேன்!” என்று நகர்ந்த நிவியின் கையைப் பிடித்த ஜோதி, “காபியை குடிச்சுட்டு போடி. ஆறிட போகுது. அப்படியே எல்லாருக்கும் கொடுத்துட்டு வா!” என அவள் கைகளில் தட்டைக் கொடுத்தார்.
அனைவருக்கும் குளம்பியை கொடுத்து தானும் பருகி முடித்தவள், “அத்தை, நீங்க இன்னும் சாந்தி அத்தையை பார்த்தது இல்லையே! வாங்க பார்க்கலாம். மாமா நீங்களும்!” என இருவரையும் நிவி அழைக்க, சந்த்ருவும் வித்யாவும் உடன் வந்தார்கள். சாந்தி என்ற பெயரை கேட்டதும் அழகருக்கு நினைவுகள் கல்லூரிக் காலத்தை தொட்டு மீண்டன.
“வாங்க மா, வாங்க பா!” என யுகி அவர்களை வரவேற்று அமர வைக்க, சாந்தி சமையலறையில் இருந்தார். உள்ளே நுழைந்த வித்யாவின் விழிகள் யுகியை தான் தொட்டு மீண்டன.
“ம்மா… எல்லாரும் வந்துட்டாங்க!” என்ற யுகியின் குரல் தன் செவியை அடைந்ததும், “இதோ வரேன் பா!” என புன்னகையுடன் வெளியே வந்தவரின் கைகளில் ஒரு தட்டிருக்க, அதில் திண்பண்டங்கள் இருந்தன.
அழகர் பார்வை வீட்டை அளவிட்டுக் கொண்டிருக்க, “வாங்க!” என எல்லோரையும் பொதுவாக அழைத்தார் சாந்தி. அந்த குரலில் சுயநினைவை பெற்ற அழகரின் பார்வை அன்னிச்சை செயலாக சாந்தியை தொட்டது. மூளையும் மனதும் ஒரு நிமிடம் தன் செயலை மறந்து நிறுத்தி, மீண்டும் இயங்க ஆர்மபிக்க, விழிகள் பார்த்ததை மனம் நம்ப மறுத்தது. கிட்டத்தட்ட இருபத்தி ஏழு வருடங்களுக்கு பிறகான இருவருடைய சந்திப்பு. எத்தனை மாற்றங்கள் என் சாந்தியிடம்? மொத்தமாக சாந்தியின் தோற்றமே மாறியிருப்பதாக விழிகள் கூற, மனதோ இன்றும் அவர் முகத்திலிருக்கும் புன்னகையும் சாந்தமும் மாறாமல், சாந்தி தான் அவர் என பறைச்சாற்றியது. அவரிடம் பேச மனது உந்தியது. கைகால் எல்லாம் எதோ சிறையிலடைப்பட்டதை போல உறைந்து விட்ட பிரம்மை. அவரும் சாந்தியும் மட்டுமே அந்த கணங்களில் உறையா பொருளாய்! உணர்வுள்ள ஜீவன்களாய்!
அழகர் மட்டும் தான் உறைந்து போயிருந்ததார். ஆனால், சாந்திக்கு அப்படி எதுவும் இல்லை. இயல்பாக அனைவருக்கும் திண்பண்டங்களை கொடுத்தவர், “நான் நல்லாகிட்டேன் மா!” என ஆனந்தியிடம் பதிலளித்தார். அந்த கின்னத்தை கையில் எடுப்பதற்குள் அழகரின் கைகளில் நடுக்கம். ஆனால், சாந்தி அவர் முகத்தை கூட பார்க்கவில்லை. ‘சாந்தி! என்னுடைய சாந்தி!’ என அழகர் மனம் கதறியது.
‘இல்லை, இப்போ அவ உன் சாந்தி இல்லை! அவளுக்கென்று தனி குடும்பமும் வாழ்க்கையும் இருக்கிறது. பழைய விஷங்களை கிளறி தற்போது அவள் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கைக்கு எதுவும் ஆபத்து விளைவித்து விடாதே!’ என மூளை மனதை அடக்க, எதுவும் செய்ய இயலாத கையறு நிலையில் நின்று விட்டார் அழகர்.
உள்ளே நுழைந்ததில் இருந்து நிவியின் பார்வை அழகரையும் சாந்தியையும் தான் மொய்த்தது. அவள் எதிர்பார்த்தது போல சாந்தியின் முகத்தில் ஒரு துளி கூட அதிர்ச்சி இல்லையே! எப்போதும் போல இயல்பாக இருந்தார். ஆனால், அழகர் முகம் மட்டும் பல பாவனைகளை காட்டியது. ஆனால், அவளால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. ‘அழகர் தானே சாந்தியை ஏமாற்றிய மனிதர்? அது உண்மைதானே?’ என நிவியின் மனம் ஒரு நிமிடம் குழம்பி பின் அழகரின் முகத்தில் நிலைத்தது. அவர் கைகளின் நடுக்கமும் அவரது துடிப்பும் இவள் கண்களில் பட்டது. ஆனால், சாந்தி அத்தை, அவருக்கு அழகர் மாமாவை அடையாளம் காண இயலவில்லையா? ஒரு வேளை தோற்ற மாற்றமோ? இல்லையே! அப்படி ஒன்றும் அடையாளம் காண முடியாத அளவுக்கு எல்லாம் அழகர் முழுதாக மாறியிருக்கவில்லையே! வயதுக்குரிய மூப்பு மட்டுமே வந்திருந்தது.
இரண்டு வருடங்களாக உருகி காதலித்த ஒருவரை எப்படி மறக்க முடியும் சாந்தி அத்தையால். ஒரு வேளை சாந்தி அத்தைக்கு முன்பே சந்த்ருவின் அப்பா அழகர் தான் என தெரிந்து இருக்குமோ? அதனால் தான் அவர் எந்த வித எதிர்வினையும் ஆற்றவில்லையோ? மனம் ஒன்றும் ஒன்றும் இரண்டு என கணக்கிட, மூளை அதை உறுதி செய்தது.
“சாந்திமா, இந்த டைம் உங்க கையால எனக்கு சமைச்சு தரீங்க” உரிமையாய் சாந்தியின் தோளில் கையைப் போட்ட சந்தருவையும் அழகர் பார்த்தார். பின்னர் அவர் பார்வை யுகியை தொட்டது. ‘சாந்திக்கு திருமணம் முடிந்து அவர்கள் வாழ்க்கைக்கு பலனாய் பிறந்தவன் தான் யுகேந்திரனா? அவனுடைய அப்பா? இப்போது இல்லை என்று கூறினானே? ஒரு வேளை சாந்தியின் கணவர் இறந்து இருப்பாரோ? சாந்தி தனியாக கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறாளா? பாவம்! அவள் கணவன் இறந்து எத்தனை வருடங்கள் இருக்கும்? இப்போது அவளிடம் போய் பழையவற்றை பேசுவது நியாயமா? இல்லையே! அவளே என்னை மூன்றாம் மனிதராக காண்கிறாள். அவளுக்கு விருப்பமில்லாத போது எதற்கு நாம் அவளை தொந்தரவு செய்ய வேண்டும்?’ என தனக்கு தானே கேட்டுக் கொண்டவர், சாந்தியிடம் பேச வேண்டாம் என முடிவெடுத்தார்.
‘ஆனால் ஒரு முறை கூட நிமிர்ந்து என் முகம் பார்க்க கூட அருகதையின்றி போய் விட்டேனா?’ என அவர் மனது குமைந்தது.
‘முகம் பார்க்கும் அளவுக்கு, தான் செய்தது ஒன்றும் பெருமை பட வேண்டிய செயல் அல்லவே! தன் மனதறிந்து அவளுக்கு செய்தது பச்சை துரோகம். நான் ஒரு துரோகி!’ என அவரது மனமே அவருக்கு எதிராக பேசிய போது மனம் நொந்து போனார் அழகர்.
அவர் மனம் இப்படி நினைவுகளுக்கும் நிஜத்துக்கும் இடையில் சிக்கி தவித்துக் கொண்டிருக்க, மற்றவர்களோ அவரை கவனிக்கவில்லை.
ஆனந்தி சாந்தியிடம் பொதுவாக பேச்சுக் கொடுக்க, சந்த்ருவும் அவரிடம் தான் பேசிக் கொண்டிருந்தான். யுகி ஒரு ஓரமாக அமர்ந்து பார்வையாளராக இருக்க, அவனருகில் அமர்ந்திருந்த வித்யாவிற்கு அவனிடம் பேச வேண்டும் என தோன்றியது. என்ன பேச? அவனைக் காணாது இருந்த இந்த ஒரு மாதத்தில் தான் வாடி போய் விட்டதையா? எதையோ பறிகொடுத்ததை போல மனம் பதறியதையா? அவன் மீது தனக்கு உருவாகியிருக்கும் உணர்வை பற்றி சொல்லவா? எப்படி சொல்வது? எனக்கு உன்னை பிடித்திருக்கிறது என்றா? இல்லை இதை காதல் என்றா? என்ன முயன்றும் அவளுக்கு தெளிவு பிறக்கவில்லை.
யுகியின் அலைபேசி அழைக்க, வீட்டின் பின்புறம் சென்றான் பேசுவதற்காக. யாரின் கண்களையும் கவராத வண்ணம் வித்யாவும் அவன் பின்னே சென்றாள்.
இரண்டு நிமிடங்களில் யுகி பேசி முடித்து திரும்ப, வித்யா அவனை தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவளை பார்த்து புன்னகைத்தவன், “என்னாச்சு வித்யா? முகம் டல்லடிக்குதே!” என வினவியவனின் குரலில் கரிசனம் மட்டுமே. காதலை தேடி தோற்றவள், “ட்ராவலிங் டயர்ட். அதான்” என பதில் இயம்பினாள்.
“ஹ்ம்ம்… அப்புறம்?” என கேட்டவனின் விழிகளை ஒரு நொடி ஆழந்து நோக்கி விட்டு, “நான் உங்களை மிஸ் பண்ணேன்” என்றவள் குரலில் அவன் மீதான பிடித்தமோ இல்லை காதலோ, எதோ ஒன்று கொட்டிக் கிடந்தது.
ஆச்சரியமாக அவளைப் பார்த்த யுகி, “அட! நானும் கொஞ்சம் மிஸ் பண்ணேன் உன்னை. நிவியை ரொம்ப மிஸ் பண்றேன்” என்றவன் கரங்கள் இயல்பாக பெண் தலையை நோக்கி நிமிர்ந்தது. நிவி தலையில் கையை வைத்து அழுத்துவது போல கையை வைத்தவனின் கரத்தை வெடுக்கென தட்டிவிட்டவள், “எனக்குப் பிடிக்கலை!” என்றாள் சுள்ளென.
அதில் யுகி முகம் மாற, “சாரி, நான் ஜஸ்ட் நிவி மாதிரி நினைச்சு தான் பண்ணேன்!” என்றவனின் முன்னே கையை நீட்டியவள், “அதான் எனக்கு பிடிக்கலை. நான் நிவி அக்கா இல்லை. வித்யா, என்னை வித்யாவா பாருங்க. என்கிட்டே இருக்க மாற்றம் உங்களுக்குப் புரியும்!” என கோபமாக மொழிந்தவள், “தொப்பை வச்ச மாமாக்கு எப்போ லைட் எரியும்?” என உதட்டுக்குள் முணுமுணுத்து விட்டு அவ்விடத்தை விட்டு அகலப்பார்க்க, அவள் கையை எட்டிப் பிடித்தவனின் மூளையும் மனதும் அவள் பேச்சின் சாரம்சத்தை உணர்ந்தது அந்த நொடி.
“என்ன வேணும் உங்களுக்கு?” அதே முறைப்புடன் கேட்ட வித்யாவின் மூக்கின் நுனி கோபத்திலும், விழிகள் கசிந்ததிலும் சிவந்து இருக்க, அப்போது தான் பெண்ணின் அழுத விழிகள் ஆடவனின் கண்ணில் பட்டன.
“நான் உன்கிட்ட பேசணும் வித்யா” இத்தனை நேரம் உடலிலும் குரலிலும் இருந்த மென்மை யுகியை விட்டு விடைபெற்று இருந்ததை அவதானித்தவள், “எனக்கு உங்க கூட பேச விருப்பம் இல்லை. சும்மா அட்வைஸ் பண்ணலாம்னு நினைக்காதீங்க. ஐ யம் நாட் அ டீனேஜ் கேர்ள்.. எனக்கு இருபத்தி மூனு வயசு. சோ உங்க பஞ்சாங்கத்தை நீங்களே வச்சுக்கோங்க!” அத்தனை கோபமாக பேசியவளின் விழிகள் நீரை உகுக்க தயாராக, இமை சிமிட்டி அதை உள்ளுழுக்க முயன்று தோற்றவளின் பார்வை கோர்த்திருந்த தங்களது கரங்களில் நிலைத்தது. இன்னும் அவள் கரத்தை விடாததை உணர்ந்து பட்டென விட்டவன், “வித்யா!” என அழைக்கும் முன்பே வீட்டிற்குள் சென்று விட்டாள். அவள் கோபத்தை பார்த்து ஆடவன் இதழ்களில் புன்னகை முகிழ்த்தது. அதே சமயம் அவளிடம் இதை பற்றி பேசி, இனிமேல் இப்படி பட்ட எண்ணங்களை வளர விட கூடாது என எண்ணிக் கொண்டான்.
சிறிது நேரம் பேசிவிட்டு மற்ற மூவரும் நிவி வீட்டிற்கு செல்ல, அழகரின் விழிகள் சாந்தியின் மீது வேதனையாய் படிந்து மீண்டன.
அவர்கள் எல்லோரும் சென்றதும் மதியம் சந்த்ருவிற்காக சமைக்க அனைத்தையும் தயார் செய்ய சமையலறைக்குள் நுழைந்தார் சாந்தி. நாற்காலியில் அமர்ந்திருந்த நிவியின் மனதுக்குள் விடையறியா பல கேள்விகள். அதை அறிந்து கொள்ள மனம் விழைய, முதலில் சாந்தியிடம் பேசி உறுதி படுத்த நினைத்தவள், எழுந்து அவரிடம் சென்றாள்.
“என்ன நிவி, வாழ்க்கை எல்லாம் எப்படி போகுது? என் பையன் எப்படி பார்த்துக்குறான்?” என சாந்தி புன்னகையுடன் வினவினார்.
“எனக்கென்ன அத்தை, ரொம்ப நல்லா இருக்கேன். ஆனால், உங்க மனசுக்குள்ள எதேதோ ஓடுது போல?” பூடகமாய் கேட்ட நிவியை பார்த்து விழித்த சாந்தி, “புரியும் படி பேசு நிவி!” என்று விட்டு வேலையை தொடர்ந்தார்.
“ஏன் அத்தை, ரெண்டு வருஷமா உருகி உருகி காதலிச்ச ஒருத்தரை, எத்தனை வருஷம் கழிச்சுப் பார்த்தாலும் ஒரு பொண்ணால அடையாளம் காண முடியுமாமே? அழகர் மாமாவை உங்களால கண்டுபிடிக்க முடியலையா? இல்லை முடியாத மாதிரி நடிக்குறீங்களா?” என அழுத்தமாக வினவிய நிவியின் வார்த்தை சாந்தியின் செவியை அடைந்ததும், கையிலிருந்த பொருட்களை எல்லாம் தவற விட்டிருந்தார். கைகள் நடுங்க, முகம் மாற திரும்பி நிவியை பார்த்தார். இத்தனை நாட்கள் அவர் மறைத்து வைத்திருந்த ரகசியம், இதோ இப்போது வெளிச்சத்திற்கு வந்து விட்டதா? அவரால் நம்ப முடியவில்லை.
முகத்தை சரி செய்து கொண்டவர், “என்ன… என்ன பேசுற நிவி? எனக்கொன்னும் புரியலை” என்றார்.
“நீங்க பெரிய நடிகை அத்தை. அதை இப்போ கொஞ்சம் நேரத்துக்கு முன்னமே நிரூபிச்சிங்க. பட், எனக்கு உண்மை எல்லாம் தெரியும். ஐ க்நோ, யுகி மாமாவோட அப்பா அழகர் மாமா தான்” என்றாள்.
“எதையும் நீயா கற்பனை பண்ணிக்கிட்டா, நான் பொறுப்பாக முடியாது!” தன் முகம் காண மறுத்து பொய்யுரைக்கும் சாந்தியை பார்த்து நிவிக்கு மனம் கனத்தது. வார்த்தைகளின்றி அவர் பேச தடுமாற, அதில் சற்றும் இளகவில்லை பெண். இப்போது சாந்திக்கு ஆதரவாக பேசினால், கடைசி வரை அவர் உண்மையை யாரிடமும் கூற கூடாது என தன்னிடம் கேட்டு விடுவார் என எண்ணியவள், “ஆதரத்தை எடுத்துட்டு வரேன் இருங்க” என்று விட்டு இரண்டு நிமிடத்தில் திரும்பினாள் பெண்.
அந்த இரண்டு நிமிடங்கள் சாந்தியின் மனது எத்தனையோ கற்பனை எல்லாம் செய்து மருகியது. தன்னோடு புதைந்து போகட்டும் என எண்ணியவை எல்லாம் இப்போது வெட்ட வெளிச்சத்திற்கு வர போகிறதா? வேண்டாமே! முடிந்தவற்றை கிளற வேண்டாம். யாரையும் இனி தன் வாழ்வில் நான் அனுமதிக்க மாட்டேன் என உறுதியாய் நின்றவர் முன்னே அவரது நாட்குறிப்பேட்டையும் புகைப்படங்களையும் காட்டினாள் நிவி.
அதை கண்டதும் சாந்தி கைகள் நடுங்கிக் கொண்டே வாங்க, “அத்தை!” என அவரை தாங்கினாள் பெண். சாந்தி மொத்தமும் உடைந்து போய்விட்டார் என அறிந்தாள் நிவி.
“நிவி, ப்ளீஸ் டா. இது முடிஞ்சு போன அத்தியாயம். எதையும் கிண்டி கிளற வேண்டாம். என் வாழ்க்கை என் பையனோட போகட்டும். எனக்கு அவன் இருக்கான். அவனுக்கு நான் இருக்கேன். இதுவே போதும்!” என குரல் தழுதழுக்க பேசிய சாந்தியை பார்த்து சரசரவென விழகளில் நீர் வழிந்தது நிவிக்கு. முதல் முறையாக சாந்தி உடைந்து பார்க்கிறாள். அவரது விழிநீர் அவளை பலவீனப்படுத்தியது.
சாந்தியை அருகில் உள்ள இருக்கையில் அமர வைத்தவள், “அத்தை, என்னை பலவீனப்படுத்தாதீங்க. இதை இப்படியே விட முடியாது என்னால!” என்றாள் உறுதியான குரலில்.
“இல்லை நிவி, இதை மறந்துடு. உன் வாழ்க்கை. இப்படி எல்லாம் மறுபடியும் ஒரு பந்தம் வரும்னு நான் நினைக்கலை. கடவுள் நடத்தி வச்சாரு. அதை ஏத்துக்கிட்டு உன் வாழ்க்கையை சந்தோஷமா வாழப்பாரு நிவி!” சாந்தி பேசியவற்றை கேட்டு,
விரக்தியாக சிரித்தாள் நிவி.
“கடவுள் நடத்தலை அத்தை. நான் நடத்துனேன். அழகர் மாமா விஷயம் தெரிஞ்சதால தான் நான் சந்த்ருவை கல்யாணம் பண்ணிக்கிட்டேன். உங்களுக்கு நியாயம் வாங்கி தரணும்னு தான் நான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன் அத்தை!” என்றவளை சாந்தி அதிர்ச்சி சுமந்த விழிகளுடன் ஏறிட்டார்.
“எஸ் அத்தை! நானா தேடி போகலை. எதேச்சையாக நடந்தது. ஆனால், அதை எனக்கேத்த மாதிரி மாத்திக்கிட்டேன். உங்களுக்கும் யுகி மாமாவுக்குமான நியாயம் கண்டிப்பா கிடைக்கும். வாங்கி தருவேன்!” என கூறியவளை உலுக்கிய சாந்தி,
“என்ன பேசுற நிவி நீ? சந்த்ருவை நீ லவ் பண்ணி தானே கல்யாணம் பண்ண?” என பதகளிப்புடன் வினவியரின் குரலில் அத்தனை ஆதங்கம் குவிந்திருந்தது.
“ஆமா! அவரை நான் நூறு சதவீதம் காதலிக்கிறேன். அவர் காதலுக்கு நான் உண்மையா இருக்கேன். அதே மாதிரி என்னோட சாந்தி அத்தை மேலயும் யுகி மாமா மேலயும் அவ்ளோ பாசம் வச்சிருக்கேன். அவங்களுக்காகவும் தான் இந்த கல்யாணம்” என்றாள்.
அவளை அதிர்ந்து பார்த்த சாந்தி, “நிவி, வேணாம் டா. நடந்தது நமக்குள்ள மட்டுமே தெரிஞ்சதா இருக்கட்டும். இது உன் வாழ்க்கை, அதை கெடுத்துக்காத. எதுக்காக வேணா நீ கல்யாணம் பண்ணி இருக்கலாம். ஆனால், இப்போ நீ நல்லா வாழ்ந்துட்டு இருக்க. அதை மட்டும் மனசுல நினைச்சுக்கோ. முடிஞ்சு போன எங்க கதையை தொடருறதுக்காக உன் வாழ்க்கையை பணயம் வைக்காத டி!” என பொறுமையாக கூற முயன்றார்.
“நான் மட்டும் சந்தோஷமா இருக்கணும். ஆனால், நீங்க மட்டும் காலம் முழுசும் கஷ்டப்படணும். அப்படி தானே?”
“இப்போ நான் என்ன கஷ்டத்தை அனுபவிக்கிறேன்னு நீ பார்க்குற நிவி. என் பையன் என்னை நல்லா பார்த்துக்குறான்!”
“அத்தை, பொய்! உங்க மனசாட்சிக்கே தெரியும் இது பொய்ன்னு. எனக்கு விவரம் தெரிஞ்ச நாள்ல இருந்து எத்தனை அவமானம்? எத்தனை நிராகரிப்பு? என் மாமா அழுறதை என் கண்கொண்டு பார்த்து இருக்கேன் நான். என் அத்தை முகத்துல எத்தனை கஷ்டத்தை பார்த்து இருக்கேன். நீங்க சந்தோஷமா இருக்கணும். மாமா நல்லா இருக்கணும். அதுக்காக நான் என்ன வேணா செய்வேன். என் வாழ்க்கையை பத்தி நீங்க கவலைப்படாதீங்க! உங்க ரெண்டாவது மகன் சந்த்ரு நடந்ததை எடுத்து சொன்னா கண்டிப்பா புரிஞ்சுப்பாரு. என்னை எப்பவும் கைவிட மாட்டாரு!” என உறுதியாக மொழிந்தவள், தன் கை மேல் இருக்கும் சாந்தி கையை விலக்கிவிட்டு எழுந்தாள்.
“நிவி, நான் சொல்றதை கேட்க போறீயா இல்லையா நீ?” நிதானம் விடைபெற கோபமாக சாந்தி வினவினார். முதன் முதலில் சாந்தியின் இத்தகைய அவதாரத்தைக் கண்டவள், அதிர்ந்தாலும் அசரவில்லை.
“ஏன் அத்தை, நீங்க கல்யாணத்துக்கு வந்து எதுவும் பிரச்சனை ஆக கூடாதுன்னு காலையே ஒடிச்சுட்டு எனக்காக வீட்ல இருக்கலாம். ஆனால், உங்களுக்காக நான் எதுவும் செய்ய கூடாதா? ஐ நோ… உங்களுக்கு ஏற்கனவே சந்த்ரு அப்பா அழகர் மாமா தான்னு தெரிஞ்சு இருக்கு. என்னால சுயநலமா எல்லாம் வாழ முடியாது அத்தை. எல்லாரும் வேணும், அதுக்கான என்னோட முயற்சி இது. கண்டிப்பா நடக்கும்!” என்றவள், விழிகளை நன்றாக துடைத்து கொண்டு தன் வீட்டை அடைந்தாள்.
அழகரும் வீரபாண்டியும் எதோ பேசிக் கொண்டிருக்க, “மாமா, உங்க கிட்டே கொஞ்சம் பேசணும். வரீங்களா?” என கேட்டாள். வீரபாண்டி மகளை கேள்வியாக காண, விழிகளை மட்டும் மூடி தந்தையிடம் எதையோ கூறியவள், அழகரை அழைத்துக் கொண்டு சாந்தியிடம் விரைந்தாள். ஜோதியும் ஆனந்தியும் அறைக்குள் அமர்ந்து பேசிக் கொண்டிருந்ததால், அவர்களிருவரும் இதை கவனிக்கவில்லை. ஆனால், தனது அலைபேசியை பார்த்துக் கொண்டிருந்த சந்தரு கவனித்தான். என்னவென புருவம் சுருக்கி யோசித்தவன், அவர்கள் பின்னே செல்ல விழைந்தான். வாசலில் நின்ற வித்யா எதையோ வெறித்துக் கொண்டிருக்க, நிவியை மறந்தவன், அவளிடம் பேச்சுக் கொடுக்க துவங்கினான்.
அப்போது தான் வெளியே சென்று வந்த யுகி தன் வீட்டிற்கு வர, அவனையும் அழைத்துக் கொண்டு அழகருடன் சாந்தியிடம் சென்றாள் நிவி.
அவர்கள் இருவரையும் சாந்தி முன்னே நிற்க வைத்தவளை, சாந்தி இயலாமையுடன் பார்த்தார்.
யுகி எதுவும் புரியாது தன் தாயை பார்த்தான். அவர் தோற்றம் எதையோ அவனுக்கு உணர்த்தியது.
அவளை அதிர்ந்து பார்த்த அழகர், “நிவி… அது!” என திணறினார்.
“ப்ம்ச்… உங்களுக்கு தெரியலையா?” என கேட்டு அவர்கள் எடுத்த புகைப்படத்தை அவரிடம் கொடுத்தாள். அதை வங்கிய அழகரின் கைகள் நடுக்கம் கொண்டது.
“கை எல்லாம் நடுங்குதே மாமா உங்களுக்கு. தப்பு செய்றப்போ வராத பயம், இப்போ எல்லாருக்கும் தெரிஞ்சுடும்னு வருதா?” நக்கலாக வினவிய நிவி, “நீங்க செஞ்ச தப்புக்கான தண்டனையை அனுபவிக்க வேண்டிய நேரம் வந்துடுச்சு. சொல்லுங்க, எங்க அத்தை என்ன பாவம் பண்ணாங்க? உங்களை நம்பி காதலிச்சதை தவிர? ஏன் இப்படி ஏமாத்தீட்டுப் போனீங்க? சொல்லுங்க!” என அதட்டலாக கேட்டாள்.
“இல்லை! நான் ஏமாத்தலை. என்னோட சாந்திக்கு ஒரு நாளும் நான் துரோகம் நினைச்சது இல்லை. என்னோட சூழ்நிலை மா. என் சூழ்நிலை தான் என்னை குற்றவாளியாக்கி கூண்டுல ஏத்திடுச்சு. காதலை விட என் அப்பா, அம்மா உயிர் முக்கியமா பட்டுடுச்சு அப்போ!” தன் பக்க நியாயத்தை எடுத்துக் கூற விழைந்த அழகரின் கண்களில் நீர்கோர்க்க, உடல் எல்லாம் தளர்ந்து போனது. அவரது பதிலில் சாந்தியின் இதழ்கள் கசப்பான புன்னகையை உதிர்த்தது.
“செய்ற எல்லாத்தையும் செஞ்சுட்டு சூழ்நிலை மேல பழி போட்டா எல்லாம் சரியாகிடுமா? அப்பா, அம்மா தான் முக்கியம்னா, ஏன் காதலிச்சீங்க? எங்க அத்தை வாழ்க்கையை எதுக்காக சீரழிச்சீங்க? சொல்லுங்க. இதோ ரத்தமும் சதையுமா நிக்கிற என் மாமா வாழ்க்கைல எவ்ளோ கஷ்டப்பட்டு இருக்கார்னு உங்களுக்கு தெரியுமா? அப்பன் பேர் தெரியாதவன்னு எத்தனை அவமானம்? எத்தனை பேர் கிட்ட பேச்சு வாங்கி, என் அத்தை வாழ்க்கையே போச்சு. கடைசிவரை அவங்களுக்குன்னு ஒரு வாழ்க்கை இல்லாமையே போச்சு. கஷ்டத்தை தவிர என்ன கொடுத்தீங்க நீங்க?” நிவி பேசியதில் சமைந்து போய் நின்று விட்டார் அழகர்.
ஒரு நொடி உலகமே தட்டாமாலை சுற்றியது போல பிரம்மை. யுகியை பார்த்தவருக்கு நம்ப முடியவில்லை. தன் உதிரம்… தன்னோட ரத்தம்… இப்படி எல்லாம் இருக்க முடியுமா? நடந்திருக்குமா? என ஒரு நொடி ஒரு பொழுது கூட அவர் யோசிக்கவில்லையே! சாந்தி வேறு யாரையும் மணந்து நிம்மதியா இருக்க வேண்டும் என தானே அவர் வாழ்க்கையில் குறுக்கிட வேண்டாம் என நினைத்து அவரைப் பற்றிய செய்திகளை கூட தன்னருகே நெருங்க விடவில்லை. ஆனால், அன்று தான் செய்த தவறின் வீரியம் புரிந்தது.
இத்தனை ஆண்டு காலமாக தான் செய்த பாவத்தின் சுமை அதிகம் என புரிந்தது. கழுத்தில் தாலி இல்லாமல் எப்படி சாந்தியால் இந்த சமூகத்தை எதிர்கொள்ள முடிந்தது. தவறு! நான் செய்தது மகா தவறு. என மனதில் அரற்றியவர், ‘யுகி, என் பிள்ளை, என் பிள்ளை. எத்தனை கஷ்டப்பட்டானோ?’ என நினைக்க நினைக்க மனம் ரணமாகியது. நிற்க முடியாது தள்ளாடியவர், சுவற்றை பிடித்து நின்று கொண்டார். மூச்சு அதிகமாக வாங்கியது. கண்முன்னே நடந்து முடிந்த நிகழ்வுகள் எல்லாம் வந்து அவரை பலவீனப்படுத்த துவங்கியது.
இளமைக்காலத்தில் தான் செய்த தவறு இப்போது இரண்டு பேரின் வாழ்க்கையை காவு வாங்கி விட்டதே! எத்தனை பெரிய பாவம் இது? இதற்கு மன்னிப்பு என்பதே கிடையாதே! எதை கொண்டு என் பாவத்தை போக்கப் போகிறேன்?’ மனது ஊமையாய் அரற்ற, சுவற்றைப் பிடித்தவரின் கண்கள் சாந்தியையும் யுகியையும் காண, விழிநீர் மொத்தமாக அவர்கள் உருவத்தை மறைத்து விட்டிருந்தது.
யுகிக்கு நடந்த எதையும் உணர முடியவில்லை. இவரா? தன் தந்தை? என்ன நடக்கிறது? எப்படி இது? என் தாய்க்கு துரோகம் இழைத்த மனிதர் இவர்?’ என கோபம் கடலளவு பொங்கியது. இத்தனை நாட்கள் தான் பட்ட கஷ்டங்களுக்கு காரணம் இவர் தானா? எப்படி இது சாத்தியம்? நிவி, நிவி இதற்காக தான் சந்த்ருவை திருமணம் செய்து கொண்டாளா? ஏன் இப்படி செய்தாள் இந்த பெண்? தன் வாழ்க்கையை பணயம் வைத்து விட்டாளா? வரிசையாய் தன் முன்னே கேள்விகள் அடுக்கப்பட, அதற்கு விடை தெரியாது திணறினான் யுகி. கோபமிருந்தாலும், நிதானத்தை மட்டும் கைவிடவில்லை ஆடவன்.
“என்ன மாமா, ஏன் பேச மாட்றீங்க? சொல்லுங்க…” என அவரை பிடித்து உலுக்கும் அளவுக்கு ஆத்திரம் வந்தாலும், கைகளை கட்டிக் கொண்டாள் நிவி. அவரது வயதும் தன் மாமனார் என்ற உறவும் அவளை கட்டிப் போட்டது.
“யுகி… என் பையனா? என்னை மன்னிச்சுடு பா. என்னை மன்னிச்சுடு!” என அவன் கைகளை அழகர் பிடிக்க, சட்டென கரத்தை அவரிடமிருந்து உதறியவனுக்கு, அவர் முகத்தைக் கூட காண விருப்பம் இல்லை. அவன் கண்கள் சாந்தியை பார்க்க, அவனை பார்த்துக் கொண்டிருந்தவரின் விழிகள் உவர் நீரை உகுத்தது. அவனைப் பார்த்தவரின் கண்களில் எதோ குற்ற உணர்வு தென்பட்டது.
அவர் அருகே சென்றவன், “ம்மா, ஒன்னும் இல்லை மா!” என அவரை வயிற்றோடு அணைத்துக் கொண்டான். சாந்தியின் கண்களிலிருந்து வழிந்த சூடான நீர் யுகியை நனைத்தது.
“என்னை மன்னிச்சுடு பா யுகி. எனக்கு இவர் வேண்டாம்னு தான் நான் உண்மை எல்லாத்தையும் மறைச்சுட்டேன். ஆனால், உனக்கு நான் பண்ணது அநியாயம் தான். உன் அப்…” என ஆர்மபித்தவர், “நீ இந்த உலகத்துக்கு வர காரணமா இருந்தவரை பத்தி உன்கிட்டே சொல்லாம மறைச்சுட்டேன்…” என்றவரின் வார்த்தைகள் யுகியை உளி கொண்டு அடிப்பது போல வலித்தது.
“அம்மா! என் அம்மா எப்பவும் எனக்கு நல்லது மட்டும் தான் பண்ணுவாங்க. உங்களுக்கு தேவையில்லாத உறவு எனக்கும் வேண்டாம்மா. அப்பான்னு ஒருத்தருக்கு என் வாழ்க்கையில இடம் இல்லை மா. எனக்கு அம்மாவும், அப்பாவும் நீங்க மட்டும் தான். நான் உங்களை விட்டு போக மாட்டேன் மா!” என்று யுகி சாந்தியின் கைகளை அழுத்தமாக பிடித்துக் கொண்டான். அதில் நம்பிக்கை வர பெற்றவர், “வேண்டாம், இனிமே என் வாழ்க்கைலயும் என்னோட மகனோட வாழ்க்கைலயும் உள்ள வராதீங்க. தயவு செஞ்சு போய்டுங்க. உங்க தயவு எங்களுக்கு தேவை இல்லை. இத்தனை வருஷம் என் புள்ளையை நான் பார்த்துக்கிட்டேன். இனிமே அவன் என்னைப் பார்த்துப்பான். உங்களோடான என் உறவு முடிஞ்சது முடிஞ்சது தான். உங்களுக்குன்னு ஒரு மனைவி, மகன் குடும்பம் எல்லாம் இருக்கு. போய்டுங்க!” என கத்தினார் சாந்தி.
அவரை இறுக அணைத்துக் கொண்ட யுகி, “ம்மா… பொறுமை மா. வேணாம். யாரும் நமக்கு வேண்டாம்!” என்று தன் தாயை சமாதானம் செய்தான். அவர் நிலை அவனை வேதனை கொள்ள செய்தது. எத்தனை திடமான மனிஷி, இப்போது உடைந்து அமர்ந்திருப்பதை அவனால் கண் கொண்டு காண இயலவில்லை. விழிகளை இறுக மூடித் திறந்தான்.
இத்தனை நேரம் அமைதியாக இருந்த நிவி, “அத்தை, என்ன பேசுறீங்க? உங்களையும் மாமாவையும் இத்தனை வருஷம் கஷ்டப்பட வச்சவரை நீங்க சும்மா விட போறீங்களா? என்னால முடியாது. உங்களுக்கான உரிமை வேணும். இவருக்கு தண்டனை எல்லார்கிட்டயும் இவரே சொல்லணும். யுகேந்திரன் என் பையன், சாந்தி தப்பானவ இல்லைன்னு இவரே சொல்லணும். என் யுகி மாமா அப்பா பெயர் தெரியாதவரு இல்லை! அவருக்கு அப்பா இருக்காரு. என் அத்தை தப்பானவங்க இல்லை! இந்த உலகத்துக்கிட்டே சொல்லணும்!” என நிவி விழிகளில் நீர் வழிய கதறினாள்.
“என்ன பேசுற நிவி, இப்போ போய் இவர் சொல்லிட்டா மட்டும் எங்க மேல இருக்க களங்கம் போய்டுமா? இல்லை இத்தனை நாள் பட்ட கஷ்டம் எல்லாம் இல்லைன்னு ஆகிடுமா? என் அம்மா வேண்டாம்னு துரோகம் பண்ணிட்டு போன இந்த மனஷரை அப்பான்னு சொல்லவே வாய் கூசுது நிவி. வேணாம்! நீ உன் வாழ்க்கையை பாரு. நீ பண்ணியிருக்கது முட்டாள் தனம். எங்களுக்காக உன் வாழ்க்கையவே நீ பணயம் வச்சிருக்க? ஏன் டி இப்படி பண்ண?” என கேட்ட யுகியின் குரலில் அத்தனை வேதனை. இருந்தும் உடைந்து போக கூடாது என எதோ ஒரு உறுதி மனதின் ஓரத்தில் கேட்டுக் கொண்டே இருந்தது ஆடவனுக்கு.
யுகி பேசுவதை கேட்ட அழகர் தன்னையே வெறுத்தார். இந்த வாழ்க்கையை வெறுத்தார். காதலித்த பெண்ணை கரம் பிடிக்க முடியாது போன தன் கோழை தனத்தை வெறுத்தார். சாந்தி நல்லதிற்காக என எண்ணி, அவரை பற்றி ஆராயமல் விட்ட தன் முட்டாள் தனத்தை வெறுத்தார். இத்தனை நாட்கள் தான் வாழ்ந்த வாழ்க்கை எப்படி? ஆனால் தான் மனதார காதலித்த பெண்ணும் தங்கள் காதலுக்கு அடையாள சின்னமான தன் உதிரம் யுகியும் வாழ்ந்த இப்படிப்பட்ட வாழ்க்கை தன்னால் தான் என மொத்தமும் வெறுத்துப் போனார். தனக்கு ஒரு மகன் இருக்கிறான் என்பதை கூட அறியாத தன் அறியாமையை வெறுத்தார்… மனது கதறியது. இப்படி ஒரு சூழ்நிலையில் தன்னை நிற்க வைத்து விட்டார்களே என யார் மீதும் பழி சுமத்த அவர் மனது இடம் கொடுக்கவில்லை. தன்னுடைய தவறு… முழுக்க முழுக்க தன்னுடைய தவறு தான். ஆனால், தண்டனை மட்டும் இவர்களுக்கா? சந்த்ரு வாழ்ந்த வாழ்க்கையும் யுகி வாழ்ந்த வாழ்க்கையும் நினைத்து குமைந்து போனார். மனம் கதறிய கதறல்களை எல்லாம் வாய் விட்டு கூற கூட திறணின்றி நின்றிருந்தார். தான் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்க கூட நா கூசியது. மனதின் ஓலங்கள் எல்லாம் காதல் திரும்ப திரும்ப ஒலிக்க, நிலை குலைந்து அமர்ந்திருந்த சாந்தியும் விழிகள் சிவக்க தன்னை கோபத்துடன் காணும் யுகியும் அவரை மேலும் வதைத்தனர். இந்த சித்ரவதையிலிருந்து என்னை காப்பாற்று இறைவா? என கடவுளிடம் மண்டியிட்டது அழகரின் மனது.
“உங்களுக்காக… ஆமா நான் சந்தருவை கல்யாணம் பண்ணது உங்களுக்காக தான் மாமா. என் அத்தையும் மாமாவையும் நிராதரவா விட்டுட்டு வேறொரு கல்யாணம் பண்ணி சந்தோஷமா வாழ்ந்த மனுஷனை என்னால சும்மா விட முடியலை… எல்லாருக்கும் தெரியணும்… அழகர் மாமா தான் உங்க அப்பா, அவர் தான் சாந்தி அத்தையை ஏமாத்துனதுன்னு. இனிமேலாவது நீங்க தலை நிமிர்ந்து இந்த சமூதாயத்துல வாழணும் மாமா. கஷ்டப்பட்டீங்கன்னு ஒரு வார்த்தையில இப்போ பேசுறோம். ஆனால், ஒவ்வொரு முறையும் நீங்க கஷ்டப்படும் போது, அவமானப்படும் போது கூட இருந்து பார்த்தவ நான். எனக்காக தான் இதை செஞ்சேன். நான் ஒரு செல்ஃபிஷ் மாமா. என்னோட சாந்தி அத்தையும் யுகி மாமாவும் நல்லா இருக்கணும். அவங்களுக்கு உண்டான மரியாதை கிடைக்கணும்னு தான் கல்யாணம் பண்ணேன்…!” என தரையில் மடங்கி அமர்ந்த நிவி முகத்தை மூடிக் கொண்டு தேம்பினாள். வேதனை சுமந்த முகத்தோடு நிவியை கண்ட யுகிக்கும் சாந்திக்கும் தொண்டை அடைத்தது. வார்த்தைகள் எல்லாம் சிக்கிக் கொண்ட உணர்வு. எத்தகைய அன்பு இது? எதற்காக இந்த பெண் இப்படி செய்தாள்.
“ஏன் டி… ஏன் இப்படி பண்ண? சொல்லு… எங்க வாழ்க்கை நல்லா இருக்கணும்னு உன் வாழ்க்கையை பணயம் வைப்பீயா?” யுகி அவள் முன்னே மண்டியிட்டு அமர்ந்து கேட்டான்.
“ஒன்னு வாழ்ந்தா எல்லாரும் சேர்ந்து வாழ்வோம் சந்தோஷமா. இல்லை எல்லாரும் இப்படியே இருப்போம். எதுனாலும் உங்க கைலயும் அத்தை கைலயும் தான் இருக்கு… இந்த குடும்பத்தை ஒன்னு சேர்க்க எனக்கு வேற வழி தெரியலை மாமா.” என்று தேம்பியவளின் முகத்தை தாங்கிய யுகியின் கைகளை எல்லாம் உவர் நீர் நனைத்தது.
இரண்டு நிமிடங்களுக்கு முன்பு அங்கே விரைந்த சந்த்ருவின் காதில் கேட்டது எல்லாம் அவனால் ஜீரணிக்க முடியவில்லை. நிவி… அவள் வார்த்தைகள்… யுகிக்காகவும் சாந்திக்காவும் தன்னை திருமணம் செய்து கொண்டாளா? அப்போது என் மீதான விருப்பம் எல்லாம் வெறும் வாய் வார்த்தை தானா? நாடகமா? என்னுடைய உணர்வுகள் எங்கும் மதிக்கப்படவில்லையா? என்றவனின் எண்ணங்கள் எல்லாம் அவனை கொன்று தின்றது. சாந்திமாவிற்கு தன் அப்பா துரோகம் செய்து விட்டாரா? என்ன நடந்தது அவர்களுக்கு இடையில்? யுகி… யுகி அவனின் தந்தையும் தன் தந்தையும் ஒன்றா? தன் தந்தை தவறிழைத்து இருப்பாரா? அப்படி அவர் இழைத்த தவறுக்கு தன் வாழ்க்கை விளையாட்டு பொருளாகி விட்டதா? எந்த இடத்தில் என் மீது தவறு? நான் எங்கே இடறினேன்? நிவி ஏன் இப்படி செய்தாள்? தன் தந்தையின் துரோகத்தையும் மனைவியின் துரோகத்தையும் ஒரே நேரத்தில் தாங்காது துவண்டு போனான். மூளை மனது எல்லாம் தன் செயல்பாட்டை முற்றிலும் நிறுத்தி இருந்தது.
கசங்கிய முகமும் துவண்டு போன கால்களுமாக கடினப்பட்டு உள்ளே நுழைந்தான் சந்த்ரு. இந்த இரண்டு அடி கூட நடப்பதற்கு உடலில் ஜீவனில்லாது போல உணர்வு. அவன் பார்வை எல்லாம் இப்போது அழகரிடமும் நிவியிடமும் தான். சந்த்ருவை எதிர்பார்க்காதவர்கள் திகைத்தனர். அழகருக்கு அவன் தோற்றமே உண்மையை உணர்ந்து விட்டான் என உரைக்க, கூனி குறுகி போனார் மனிதர். பெற்ற பிள்ளையின் முன்பு ஒரு தந்தை பட கூடாது அவமானம்? தந்தை செய்ய கூடாத செயல்? அவன் முகம் கூட காண தனக்கு தகுதி இல்லையே! என அவர் மனம் கதறியது.
தன் மனைவியின் முகத்தைப் பார்த்தான் சந்த்ரு. எதோ மொத்தமாக தனக்கும் அவளுக்குமான உறவு இந்த நொடியில் அறுந்து விட்டது போல உணர்ந்தான். அவள் பொய்! அவளுடைய காதல் பொய்! ஒரு மாதம் தன்னுடன் வாழ்ந்த இந்த வாழ்க்கை பொய்! என மூளை நம்ப மறுத்தது. நடந்தது எல்லாம் வெறும் கனவாக இருக்க கூடாதா? என்ற நப்பாசையில் மனது விம்மியது ஆடவனுக்கு. நிஜத்தின் கசப்பு அவனுள்ளே கொஞ்சம் கொஞ்சமாக இறங்கி நஞ்சாய் மாறிக் கொண்டிருந்தது. அழகர் சாந்திக்கு செய்தது துரோகம் தான். அதே போல நிவி தனக்கு செய்ததும் துரோகம் தான். சுயநலவாதி இந்த பெண். என்னை ஏமாற்றியவள்!’ வெடித்து சிதற காத்திருந்தான் சந்த்ரு.
“என்னாச்சு? அங்க எல்லாரும் என்ன பண்றாங்க வித்யா?” என ஆனந்தி வினவ, “தெரியலே அத்தை. எதோ பேச்சு சத்தம் கேக்குது!” என்ற வித்யாவுடன் ஆனந்தியும் யுகி வீட்டை நோக்கி நகர, ஜோதியும் வீரபாண்டியும் கூட வந்தார்.
நான்கு மூளைகளிலும் நால்வர் நின்று கொண்டிருக்க, சந்த்ரு வாயிலில் நின்று கொண்டிருந்தான். “டேய் சந்த்ரு, ஏன் இப்படி வழியில நிக்குற? உங்க அப்பா எங்க? பேசிட்டு இருக்காரா?” என கேட்டுக் கொண்டே உள்ளே நுழைந்த ஆனந்தியை பார்த்து அனைவரின் மனமும் கனத்தது. சந்த்ரு தன் தாயை பார்த்தான். அவன் முகத்தில் என்ன இருந்தது என தாயால் இனம் கண்டறிய முடியவில்லை. யுகியும் ஆனந்தியை பார்த்தான். அழகரால் பாதிக்கப்பட்டது ஆனந்தியும் தானே? சாந்திக்கு அவர் செய்தது ஒரு வகை துரோகம் என்றால், ஆனந்திக்கும் அது பொருந்துமே! இத்தனை நாட்கள் தன்னுடன் மனம் ஒன்றி திருமண வாழ்க்கையை வாழ்ந்த கணவருக்கு பின் இப்படி ஒரு வாழ்க்கையும், அதில் ஒரு மகனும் இருப்பது தெரிந்தால் எப்படி தாங்குவார் இந்த மனுஷி? சாந்திக்கு அழகர் தனக்கு செய்தது துரோகம் என முன்பே தெரியும்.
ஆனால் ஆனந்தி, அவரைப் பொறுத்த வரை தன் கணவர் உத்தமர். ராமர், தனக்கு மட்டும் உண்மையாக இருந்த மனிதர். அந்த பிம்பம் உடையும் போது ஆனந்தியின் மனமும் அல்லவா உடைந்து போகும்? நிவியும் அதையே தான் நினைத்து அவரைப் பார்த்தாள். சாந்திக்கும் ஆனந்தியை நினைத்து உள்ளே வேதனை பொங்கியது.
“என்னாச்சு? ஏன் இப்படி இருக்கீங்க எல்லாரும்? உங்களுக்கு என்ன ஆச்சு? பிரஷர் மாத்திரை போட்டீங்களா? இல்லையா?” என அழகர் அருகே சென்று கரிசனமாக வினவிய ஆனந்தியின் கைகள், அவர் முகத்திலிருந்த வியர்வை துளிகளை துடைத்த போது, அழகர் அந்த நொடி மனதால் மறித்துப் போனார். யாருக்கும் தன்னால் உண்மையாக இருக்க முடியவில்லையே என!
“ஏங்க, உக்காருங்க!” என்ற ஆனந்தியின் கைகள் அழகரின் கரங்களை பற்றிய நொடி, நிவி வார்த்தைகள் அவர் செவியை அடைய, தன் கணவரை பிடித்திருந்த கைகள் அந்த நொடி உறைந்து போனது.