“அத்தை, என்னை மன்னிச்சுடுங்க. உங்களை காயப்படுத்தணும்னு நான் எதையும் செய்யலை. ஆனால், என் சாந்தி அத்தைக்கு ஒரு வாழ்க்கை வேணும். அவங்களும் இந்த சமூதாயத்துல தலை நிமிர்ந்து வாழணும். அதான் உங்க வாழ்க்கையை அவங்க பங்கு போட்ற நிலைமை வந்துடுச்சு!” என்ற நிவியின் வார்த்தைகளை கேட்ட ஆனந்திக்கு ஒன்றுமே புரியவில்லை. எதோ தவறாக நடக்கப் போகிறது என உள்ளுணர்வு உணர்த்தியது.
வீரபாண்டியும் ஜோதியும் நிவியின் வார்த்தைகளில் உறைந்து விட்டனர். வித்யாவின் பார்வை பட்டென யுகியை மொய்த்தது. அவன் முகத்தின் வேதனை, அவனுடைய உடல் மொழி எல்லாம் அதை மெய்ப்பிக்கும் வகையில் தானிருந்தது.
“நிவி, யாரை பார்த்து என்ன சொல்ற நீ? என் புருஷனை பத்தி தப்பா சொல்ற உரிமை யாருக்கும் இல்லை!” என்ற ஆனந்தியின் வார்த்தைகள் சீறலாய் வெளி வந்தன.
“அத்தை, உங்களால இதை ஏத்துக்க முடியாது தான். ஆனால், உண்மை இதுதான். அழகர் மாமாவும் சாந்தி அத்தையும் காலேஜ்ல ஒன்னா படிக்கும் போது லவ் பண்ணி இருக்காங்க. ஆனால், சந்தர்ப்ப சூழ்நிலையால் அழகர் மாமா உங்களை கல்யாணம் பண்ணிகிட்டாரு. ஆனால், சாந்தி அத்தை வயித்துல யுகி மாமா இருந்துருக்காரு. எங்க தாத்தா பாட்டி எல்லாம் அவங்களை அடிச்சு துரத்திட்டாங்க!” என்று சாந்தியின் நாட்குறிப்பேட்டில் தான் படித்தது அனைத்தையும் கூறி முடித்தவள்,
“என்னை மன்னிச்சுடுங்க அத்தை… உங்க வாழ்க்கையை பறிக்கிறது என்னோட நோக்கம் இல்லை. யுகி மாமாவும், சாந்தி அத்தையும் இத்தனை நாள் வாழ்ந்த வாழ்க்கைகான நியாயம் கிடைக்கணும். என் யுகி மாமா தப்பான பொறப்பு இல்லைன்னு எல்லாருக்கும் தெரியணும். என் அத்தை மேல இருக்க களங்கத்தை துடைக்கணும். அது மட்டும் தான் என் எண்ணம்!” என்று தொண்டை அடைக்க கூறிய நிவியின் கைகள் ஆனந்தியை நோக்கி கூப்பியது. அவளால் இப்போது ஆனந்தியின் மனநிலையை புரிந்து கொள்ள முடிந்தது. தன் கணவன் தனக்கு துரோகம் இழைத்துள்ளான் என்பதை எப்படி ஒரு பெண்ணால் ஏற்றுக் கொள்ள முடியும்.
“இல்லை, நீ சொல்றதை என்னால நம்ப முடியலை!” என்ற ஆனந்தி, அழகர் புறம் திரும்பினார்.
“என்னங்க, இவ என்னமோ சொல்றா. நீங்களும் அமைதியா இருக்கீங்க? இல்லைன்னு சொல்லுங்க!” என்ற ஆனந்தியின் பார்வை கணவனிடம் எதையோ யாசித்தது. ‘என்னுடைய நம்பிக்கையை காப்பாற்றுங்கள். இல்லையென கூறிவிடுங்கள்!’ என ஆனந்தியின் மனது கதறியது.
தலையை குனிந்து கொண்டார் அழகர். இதோ, இரண்டு பெண்களின் வாழ்க்கை தன்னால் கேள்வி குறியாகிவிட்டது. அவர் தலை குனிந்ததை பார்த்து அதிர்ந்த ஆனந்தி, “என்னங்க, சொல்லுங்க!” என மீண்டும் கேட்டார். குரலில் ஆனந்தி மனதின் பயம் முழுவதும் அப்பிக் கிடந்தது. முகத்தில் பதட்டம், உடல் கொஞ்சம் தளர்ந்தது அந்த பெண்மணிக்கு.
“என்னை மன்னிச்சிடு ஆனந்தி, யுகி என்னோட பையன் தான். சாந்திக்கு நான் துரோகம் பண்ணிட்டேன். உனக்கும் நான் உண்மையா இல்லை!” என்று தன் முன்னே உடல் குலுங்க கூறிய அழகரின் விழிகள் முழுவதும் கசிந்தது. நடந்த எதையும் மனது ஏற்றுக் கொள்ள மறுத்தது ஆனந்திக்கு. அழகர், அவரை பொறுத்த வரை தன் கணவர் தனக்கு இத்தகைய துரோகம் எல்லாம் இழைக்க மாட்டார். எனக்கு உண்மையாக இருந்த மனிதர். இப்படி ஒரு பெண்ணின் வாழ்க்கை கெடுவதற்கு காரணமாக இருந்திருப்பாரா? எப்படி முடிந்தது அவரால்? அதிர்ந்து கூட பேச தெரியாத மனிதர் அழகர் என ஆனந்தி அவர் மீது வைத்திருந்த பிம்பம் எல்லாம் சுக்கு சுக்காக உடைந்து நொறுங்க, நிற்க முடியாது தள்ளாடியவரை ஓடி வந்து தாங்க சென்ற அழகரின் கையை வெடுக்கென தட்டி விட்டான் சந்த்ரு. அவன் பார்வை பெற்றவரை சுட்டுப் பொசுக்காதது ஒன்று தான் குறை.
ஆனந்தியை தன் கை வளைவில் சந்த்ரு நிறுத்த, அழகர் விழிகளில் நீர் வழிந்தது. ஆனந்தியும் அவரை தான் பார்த்திருந்தார்.
நிவிக்கும் மனது வலித்தது ஆனந்தியை காண. எப்போதும் தன்னை அரவணைத்து அன்பாக பார்த்துக் கொண்ட ஆனந்தியை நிராதரவாக நிற்க வைத்த தன் மேலே அவளுக்கு கோபம் வந்தது.
இத்தனை நேரம் அமைதியாக இருந்தவர், “ஏன் இப்படி செஞ்சீங்க? உங்க பணக்கார தனத்தை எல்லாம் என் தங்கச்சி வாழ்க்கைல காட்டீங்க போல? என்னங்க தப்பு பண்ணா அவ? சொல்லுங்க. இத்தனை வயசு வரைக்கும் அவ சுமந்த பட்டம் எல்லாம் உங்களுக்கு தெரியுமா? கேடுகெட்டவ! தப்பான வழியில போய் குழந்தை பெத்தவ! அப்பன் எவனோ? எவனுக்கு பெத்தாளோ? இது தான் அவளுக்கு நீங்க வாங்கி கொடுத்தது… ஏன் இப்படி செஞ்சீங்க?” என அழகரின் சட்டையை பிடித்திருந்த வீரபாண்டிக்கு இத்தனை வருட கோபம் எல்லாம் ஆதங்கமாய் வார்த்தைகள் வழியே வெளி வந்தது. அவருக்கும் உடல் நடுங்கியது.
வீரபாண்டியின் கேள்வி கணைகளுக்கு பதில் கூற இயலாது நின்ற அழகரின் பார்வை அவரிடம் மன்னிப்பை மட்டும் யாசித்தது. கூனி குறுகி நின்றார் மனிதர்.
“சுயநலம்… நீங்க ஒரு பெரிய சுயநலவாதி. கதலிச்ச பொண்ணை கல்யாணம் பண்ண தைரியம் இல்லாத நீ எல்லாம் எதுக்குய்யா காதலிக்கிற… காதல் கருமாந்திரம்னு இருபத்தி எட்டு வருஷமா உன்னால ரெண்டு ஜீவன் எவ்ளோ கஷ்டப்பட்டாங்கன்னு தெரியுமா? பாருய்யா… பாரு அவங்களை. உங்களுக்கு பிறந்ததை தவிர என்ன பாவம் பண்ணினான் யுகி? அவனுக்கு ஏன்ய்யா வாழ்க்கை முழுசும் தண்டனை? சொல்லு?” என தன்னை உலுக்கிய கரங்களை விலக்காது நின்றார் அழகர். உடல் மட்டும் தான் இங்கு இருப்பது போல அவருக்கு பிரம்மை. உயிர் எங்கோ சென்று விட்டது. தன்னுடைய உடலே கனமாய் இருந்தது அழகருக்கு. அதை விட மனதின் பாரம் அதிகமாக இருந்தது.
“என்னங்க, எதுவானாலும் பேசி தீர்த்துக்கலாம். முதல்ல நீங்க கையை எடுங்க அவர் சட்டைல இருந்து” என ஜோதி தான் வீரபாண்டியை பிரித்து விட்டார்.
சுற்றிலும் மௌனம் மட்டுமே ஆட்சி செய்தது.
யுகி தன் தாயுடன் அமர்ந்து இருக்க, சந்த்ரு தன் அம்மாவை பிடித்திருந்தான். நிவேதா யார் புறமும் நிற்காமல் ஒரு மூலையில் நின்றிருந்தாள்.
“சாந்தி மா, ஏன் என்கிட்ட நீ சொல்லலை? ஏன் டா? இவரை காப்பாத்த தான் சொல்லலையா? சொல்லு!” என்ற வீரபாண்டி இப்போது சாந்தியின் அருகில் சென்றார். தன் அண்ணனைப் பார்த்து விரக்தியாக சிரித்தார் சாந்தி.
“அத்தை, ஏன் அமைதியா இருக்கீங்க. பேசுங்க அத்தை. உங்களுக்கான நேரம் இது. பேச வேண்டிய இடத்துல எல்லாம் நீங்க அமைதியா போனதால தான் இப்படி உங்க வாழ்க்கை ஆகிடுச்சு. எல்லா இடத்திலும் அமைதி ஆயுதமா மாறாது. கேளுங்க… அவர் கிட்டே கேளுங்க அத்தை. உங்க பையனுக்காக கேளுங்க!” என்ற நிவி ஆவேசமாக சாந்தியின் கைகளைப் பற்றிக் கொண்டாள். சாந்தியின் மொளனம் அவளிடம் கோபத்தை துளிர்க்க செய்திருந்தது.
“நிவி! கன்ட்ரோல் யுவர் செல்ஃப்!” என்ற யுகியின் அதட்டலே அவளை நிதானத்திற்கு கொண்டு வந்திருந்தது.
தன்னை நிலைப்படுத்திக் கொண்ட சாந்தி எழுந்து நின்றார். அவர் முகத்தில் ஒரு தெளிவு பிறந்திருக்க, அவர் எதோ ஒரு முடிவை எடுத்துருக்கிறார் என அனைவராலும் யூகிக்க முடிந்தது.
“என்னை மன்னிச்சிடுங்க அண்ணே! சொல்லலை. சொல்ல தோணலை. நான் காதலிச்சது உண்மை. ஆனால், என்னை காதலிச்சவரும் எனக்கு உண்மையா இருப்பார்னு நம்பி என் வாழ்க்கையை அவர்கிட்டே பகிர்ந்துகிட்டது தான் என்னோட முட்டாள் தனத்தோட உச்சம். என் வயசு அப்படி. அதோட வீரியம் எல்லாம் தெரியலை. ஆனால், இந்த இருபத்தி எட்டு வருட தனிமை வாழ்க்கை எனக்கு எவ்ளோவே கத்துக் கொடுத்துடுச்சு. வாழ்க்கைன்னா இப்படி தான் இருக்கும்னு நான் அனுபவிச்ச உட்ச பட்ச கஷ்டம் என் பையன் வயித்துல இருக்கும் போது நிராதரவா நடு ரோட்ல நின்னது தான். எவ்ளோ கஷ்டத்தை எல்லாம் தாங்கி, எத்தனையோ பிரச்சனை எல்லாத்தையும் பார்த்து பார்த்து மனசு மரத்துப் போச்சு. வலி!” என்று கூறிய சாந்தியின் இதழ்களில் வலியின் மொத்த சாயல் படர்ந்திருந்தது.
“அந்த வார்த்தைக்கான அர்த்தம் முழுசா புரிஞ்சுகிட்டேன் எப்பவோ. இப்போ, எனக்கான வாழ்ககைன்றது என் பையன் மட்டும் தான். வேற யாரையும் என்னால வாழ்க்கைக்குள்ள விட முடியாது. என் பையன் ஆசைபட்டா மட்டும் தான். ஆனால், அவனுக்கும் அப்பான்ற உறவு வேண்டாம்னு சொல்லிட்டான். இவரு இப்போ என் மனசு, மூளை ரெண்டுத்துலயுமே இல்லை. இது முடிஞ்சது. இதுக்கு மேல மறுபடியும் ஆர்மபிக்க வேண்டாம் ண்ணே!” என்றவரின் குரலில் அத்தனை அழுத்தம். அழகரின் பார்வை மொத்தமும் சாந்தியிடம் தான். சாந்தி பேசும் போது அவர் முகத்தில் தெரிந்த வேதனை எல்லாம் அவரை கொஞ்சம் கொஞ்சமாக உருக்கிக் கொண்டிருந்தது.
“சபாஷ் அத்தை… நீங்க எவ்ளோ பெரிய சுயநலவாதி தெரியுமா? உங்களுக்கு உங்க கணவர் வேண்டாம். ஆனால், யுகி மாமா என்ன பண்ணாரு. அவருக்கு நீங்க பண்றது அநியாயம். அப்பான்ற நியாயமான உறவை அவருக்கு நீங்க தர மறுக்குறீங்க? இப்ப தப்பு பண்றது நீங்க தான்!” என்ற நிவியின் வார்த்தை முழுவதும் ஆதங்கம் மட்டுமே.
தன்னை கோபப்படுத்தும் நோக்கோடு பேசிய நிவியை பார்த்து விரக்தியாக சிரித்த சாந்தி, யுகியின் முன் நின்றார்.
“யுகி, சொல்லுப்பா. இந்த அம்மாவுக்காக நீ பார்க்க கூடாது. நூத்துல ஒரு சதவீதம் உனக்கு அப்பா வேணும், இவரை மன்னிச்சுடலாம்னு தோணுனா கூட, உனக்காக இவரை நான் ஏத்துக்க தயார் தான். சொல்லுப்பா!” என்றார். குரலில் சிறு பிசிறு கூட இல்லை சாந்தியிடம்.
யுகியின் இதழ்களில் கசப்பான புன்னகை நெளிந்தது. “அப்பா! இந்த வார்த்தைக்கு அர்த்தம் தெரிஞ்சு உங்க கிட்ட வந்து கேட்டப்போ நீங்க அழுதது இன்னும் என் கண்ணுல இருக்குமா. உங்களுக்காக அந்த வார்த்தையவே நான் யூஸ் பண்றதை நிப்பாட்டிட்டேன். அப்புறம் பெரியவனானதும், கொஞ்சம் இல்ல அதிகமான வெறுப்பு. என்னையும் எங்க அம்மாவையும் இப்படி விட்டுட்டுப் போன மனுஷன் எப்படி நல்லவரா இருப்பார்னு அந்த வயசுல இருந்தே வெறுப்பு அதிகமாகிடுச்சு. இருபத்தி எட்டு வருஷம் என் அம்மாவோட நிழல்ல வாழ்ந்துட்டேன். அம்மா, என் அம்மாவே அவரை ஏத்துக்கிட்டா கூட, நான் அவரை மன்னிக்க தயாரா இல்லை. தப்பை மன்னிக்கலாம். ஏன் குற்றம் செஞ்சவங்களை கூட தண்டிச்சு, பிறகு ஏத்துக்கலாம். ஆனால், இவர் செஞ்சது துரோகம். இவர் துரோகி… அதுக்கு மன்னிப்பு எல்லாம் கிடையாது. மறப்பது மட்டும் தான் வழி. ஆனால், என் அம்மாவை இப்படி பார்க்குற ஒவ்வொரு நிமிஷமும் என்னால எதையும் மறக்க முடியாது!” என்றவன் குரல் இறுதியில் உடைந்திருந்தது. அவன் விழிகள் ஈரம் கசியும் முன், நிவியின் கண்களிலிருந்து நீர் சரசரவென இறங்கியது. சந்த்ரு அவர்கள் இருவரையும் தான் பார்த்திருந்தான். மனது இன்னுமே ரணமாகிக் கொண்டிருந்தது ஆடவனுக்கு.
யுகியின் விழிநீரை துடைக்க மனம் விழைந்தாலும், சூழ்நிலை கருதி அமைதியாக நின்றிருந்தாள் வித்யா.
“நிவி, உன்னோட வயசுக்கு நீ நினைக்கிறது நியாயமா படலாம். உன்னோட இந்த கோபம் எங்க மேல வச்சிருக்க கண்மூடி தனமான அன்புல தான்னு என்னால புரிஞ்சுக்க முடியுது. ஆனால், உண்மையை நீ ஏத்துக்கிட்டு தான் ஆகணும். என்ன நினைக்கிற நீ? இந்த சினிமால எல்லாம் காட்ற மாதிரி கடைசியில நியாயம் கிடைச்சுடும்னா. அதெல்லாம் வெறும் கற்பனை காட்சி. இந்த ஜென்மத்துல நான் இப்படி தான், என் வாழ்க்கை இப்படி தான்றது என்னோட விதி. அதை எப்பவோ நான் ஏத்துக்கிட்டேன். நீ சொல்ற மாதிரி நான் இப்போ அவர்கிட்ட நியாயம் கேட்டா, எல்லாம் சரியாகிடுமா? இழந்த இத்தனை வருஷத்தை ஈடுகட்ட முடியுமா?”
“இழந்ததை ஏன் அத்தை பார்க்குறீங்க? இனிமே உங்களுக்கான வாழ்க்கையை பாருங்க அத்தை. அதை தான் நான் சொல்றேன்!” நிவியும் பேசினாள் தன் வாதத்தை. சாந்தியை ஒப்புக் கொள்ள வைக்கும் வேகம் அவளிடம்.
“என்ன நியாயம்? இல்லை என்ன நியாயம்? சரியான நேரத்துல கிடைக்காத நியாயம் எல்லாம் அநியாயத்துக்கு சமம். அதை புரிஞ்சுக்கோ நிவி. எல்லாரும் என் பின்னாடி பேசுறதை, நம்மளே மேடை போட்டு, வந்து பேசுங்கன்னு வழி செஞ்சு கொடுக்குற மாதிரி இருக்கு நீ சொல்றது. இத்தனை வயசுக்கு பிறகு அவரோட மனைவி நான் தான்னு சொல்றது உனக்கு வேணா நல்லா இருக்கலாம். ஆனால், எனக்கு அது பிடிக்கலை. நான் இப்படியே இருந்துட்றேன். இதுக்கு மேல என்னோட முடிவுல மாற்றம் எதுவும் இல்லை.” என்று தீர்க்கமாக உரைத்த சாந்தியின் கால்கள் ஆனந்தியை நோக்கி நகர்ந்தது.
தளர்ந்து போய் நின்றிருந்த ஆனந்தியின் கைகளைப் பிடித்த சாந்தி, “என்னை மன்னிச்சுடுங்க ஆனந்தி. ஒரு பொண்ணா, உங்களோட மனநிலையை என்னால புரிஞ்சுக்க முடியுது. ஆனால், கண்டிப்பா உங்க வாழ்க்கைல என்னால எந்த ஒரு பிரச்சனையும் வராது. எந்த வித பங்கும் கேட்டு வர மாட்டேன். அப்படி வரணும்னா, இருபத்தெட்டு வருஷத்துக்கு முன்னமே வந்திருப்பேனே! எனக்கு பேச தெரியாதா என்ன? வேண்டாம். எனக்கு இவர் வேண்டாம்! என்னை வேண்டாம்னு சொல்லி, என் காதலை அசிங்க படுத்திட்டு போன இவர் வேண்டாம்னு தான் நான் வரல. ஆனால், யுகி நான் எதிர்பார்க்காதது. கடவுள் எனக்கு கொடுத்தார் அவனை. அவன் என் வாழ்க்கைல இல்லாம இருந்தா, தனிமைலயே செத்து இருப்பேன். நிச்சயம் வேற ஒரு கல்யாணம் எல்லாம் பண்ணியிருக்க மாட்டேன். அப்பவே உங்க வாழ்க்கைல குறுக்க வர விரும்பலை நான். இப்போ உங்களுக்கு ஒரு குடும்பம் இருக்கு. எனக்கு அவர் துரோகம் பண்ணியிருக்காரு தான். அவரை மன்னிக்குற மனசு எனக்கு இல்லை. ஆனால், உங்களோட கல்யாணம் ஆன பிறகு என்னை தேடி ஒரு நாளும் வரலை. அந்த வகையில் அவர் உங்களுக்கு நியாயமா தான் இருக்கார்னு என்னால சொல்ல முடியும். குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லைன்னு சொல்வாங்க. அது உண்மை தான். எல்லாரும் எதோ ஒரு இடத்துலே சூழ்நிலை கைதியாகிட்றோம். அவரோட சூழ்நிலை தான் இத்தனை பேரோட வாழ்க்கையை அழிச்சுடுச்சு. அது முடிஞ்து. அதை நினைச்சு இப்ப இருக்க உங்க வாழ்க்கையை கெடுத்துக்காதீங்க!” என்ற ஆனந்தியின் பார்வை இப்போது நிவேதாவை தொட்டது.
“நிவி பண்ணது தப்பு தான். ஆனால், அவ எங்க மேல இருக்க பாசத்துல செஞ்சுட்டா. அதை தவிர அவ மேல தப்பு இல்லை. மன்னிச்சு ஏத்துக்கோங்க!” என்றவரின் கைகள் இப்போது ஆனந்தியை நோக்கி கும்பிட்டது.
ஆனந்தியின் விழிகள் வேதனையுடன் சாந்தியை தழுவியது. எத்தனை பெருந்தன்மையான மனுஷி இவளென்று.
சந்த்ரு தலையை குனிந்து கொண்டான். அவனால் சாந்தியை காண முடியவில்லை. “சந்த்ரு!” என அழைத்து அவன் தலையை கோதிய சாந்தியை நிமிர்ந்து பார்த்தவனின் விழிகள் பனித்திருந்தது.
“ஏன் டா?” என கேட்டு அவன் விழிநீரை துடைத்த சாந்தியை அணைத்துக் கொண்டவன், “சாரி சாந்திமா!” என்று மன்னிப்பை யாசித்தான்.
“நீ ஏன் டா மன்னிப்பு கேட்குற. உன்னோட தப்பு எதுவும் இல்லை!” என்று கூறியவர், அவனது முதுகை ஆதரவாக தடவி, “எல்லாம் சரியாகிடும். இப்போ உங்கம்மாவுக்கு உன்னோட தேவை இருக்கு. அவங்களை பார்த்துக்கோ!” என்றார்.
அனைவரின் பார்வையும் அந்த நொடி சாந்தியின் மீது தான். அவரின் தெளிவான பேச்சில், எல்லோரும் சமைந்து தான் நின்றனர்.
“அண்ணா! இவங்க எல்லாம் உங்க வீட்டுக்கு வந்த விருந்தாளிங்க. நான் போன்னு சொல்ல எனக்கு அனுமதி இல்லை. நீங்க அங்க அழைச்சுட்டுப் போங்க!” என்றவரின் விழிகள் மறந்தும் அழகரை நோக்கவில்லை. நடந்த அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த அழகர், நடைபிணமாக வாசலுக்கு சென்றார்.
“ம்மா…” என அழைத்த சந்த்ருவிடம், “நீ போய் காரை எடு டா. அம்மா வரேன்!” என்ற ஆனந்தி, சாந்தி அருகில் சென்று அவர் கையை பிடித்துக் கொண்டார்.
“கல்யாணம் பண்ணும் போது சுகத்தையும் துக்கத்தையும் பகிர்ந்துக்குறோம்னு சத்தியம் பண்ணி தான் இந்த பந்தத்துக்குள்ள நுழையுறோம். அதே மாதிரி என் கணவரோட பாவத்துலயும் என் பங்கு சமமா இருக்கு. மன்னிச்சுடுங்கன்னு கேட்டா, எல்லாம் சரியாகாது. ஆனால், என் மனசுல இருக்க குற்ற உணர்ச்சி போகும்னு நம்புறேன். எனக்கு தெரியாது. இவரோட வாழ்க்கையில இப்படி ஒரு பக்கம் இருக்கும்னு. அதுக்காக நீங்க அப்பவே நியாயம் கேட்டிருந்தா, என் வாழ்க்கையை விட்டு தந்திருப்பேன்னு எல்லாம் சொல்ல மாட்டேன். என் அப்பா, அம்மா அமைச்சு கொடுத்த வாழ்க்கை. தூக்கி எறிஞ்சுட்டு போற அளவுக்கு எனக்கு தைரியம் இல்லை. ஆனால், எதாவது ஒன்னு செஞ்சு இருப்பேன். இப்போ, காலம் கடந்துடுச்சு.
ஒரு பையனை தனியாளா பெத்து வளர்த்து இந்த சமூதாயத்துல எல்லாரும் மதிக்குற அளவுக்கு இருக்கீங்கன்னா, அது உங்களோட தன்னம்பிக்கையும் மனதைரியத்தையும் காட்டுது. ஒரு பொண்ணா, உங்களை பார்த்து நான் வியக்குறேன். மன்னிக்க முடியலைன்னா, மறக்க முயற்சி பண்ணுங்க” என்ற ஆனந்திக்கு எல்லாம் விட்டுப் போன நிலை. ஆனாலும் சாந்தியிடம் பேசினார். ஒரு பொண்ணாக, மற்றவரின் துயரம் அவரது நெஞ்சை பாறாங்கல்லாய் அழுத்தியது.
சந்த்ரு சென்று மகிழுந்தில் ஏற, அழகரும் எதுவும் பேசாமல் ஏறிக் கொண்டார். விழிகளை துடைத்துக் கொண்டே வந்த ஆனந்தி வாகனத்தில் ஏறியதும், அவன் பார்வை வித்யாவை தான் தொட்டது.
“மாமா, நான் நிவி அக்கா கூட வர்றேன்!” என்ற வித்யாவிற்கு யுகியை இப்படியே விட்டு வர மனமில்லை. அவனுடன் பேச வேண்டி இருந்தது பெண்ணுக்கு. அவனுக்கு சமாதானம் கூற வேண்டியிருந்தது. சந்த்ரு நிவியின் முகத்தைக் கூட காணவில்லை. அப்படியே கிளம்பி விட்டான்.
புயலுக்கு பின் வரும் அமைதியை போல இருந்தது நிவியின் வீடு. வீரபாண்டி மகளை வேதனையாக பார்த்தார். இதை அவள் வேறு விதமாக கையாண்டு இருக்கலாமோ? தன்னிடம் கூறி இருக்கலாம். இப்போது அவள் வாழ்க்கையே கேள்வி குறியாகி விட்டது.
ஜோதி நிவியை முறைத்துக் கொண்டிருந்தார். “ஏன்டி இப்படி பண்ண? எல்லாத்தையும் தெரிஞ்சு தான் இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சியா?” என சீற்றலாக அவர் வினவ, அமைதியாக அமர்ந்திருந்தாள் நிவேதா.
“வாயை தொறந்து பேசு நிவி. பெத்தவங்க உயிரோட தான் இருக்கோம்னு தோணலையா உனக்கு. எதை எப்படி பண்ணணும்னு உனக்கு தெரியலையே டி. முதல்லயே இதை எங்க கிட்ட சொல்லியிருந்தா, நாங்க பேசியிருக்க மாட்டோமா?” என கேட்டு மகளை உலுக்கினார் ஜோதி.
“எனக்கு யுகி மாமாவும் அத்தையும் தான் பெருசா தெரிஞ்சாங்க மா. உங்க கிட்ட சொன்னா, கண்டிப்பா இந்த கல்யாணத்தை நடத்தி வச்சுருக்க மாட்டீங்க!” என்றாள் அழுத்தமாக.
“ஆமா டி? முடிஞ்சு போன உங்க அத்தை வாழ்க்கைகாக உன்னோட வாழ்க்கையை பணயம் வைப்பியா நீ?” ஆதங்கமாய் வெளி வந்தது தாயின் குரல்.
“ம்மா… நான் என் வாழ்க்கையை அடமானம் எல்லாம் வைக்கலை. சந்த்ருவை காதலிச்சு தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். ஆனால், அதுல என் சுயநலமும் இருந்துச்சு. ரெண்டு குடும்பத்தையும் ஒன்னு சேர்க்கணும். அழகர் மாமாவை ஆனந்தி அததைக்கிட்ட இருந்து பிரிக்கணும்னு நினைக்கலை மா. ஆனால், அவங்களை மாதிரி சாந்தி அத்தையும் மரியாதையோட வாழணும்னு நினைச்சேன். நான் பண்ணது தப்பா மா?” என வினவிய மகளை ஜோதி கலங்கிய விழிகளுடன் ஏறிட்டார்.
வீரபாண்டியின் பார்வை மகளை வேதனையுடன் தழுவியது. தன் தமக்கையின் வாழ்க்கைகாக பார்த்த மகளை எண்ணி பூரிக்கவா? இல்லை அவளுடைய வாழ்க்கை இப்படியாகி விட்டதே என கவலை கொள்ளவா?
“நிவி, உன் நினைப்பு தப்பு இல்லை டா. ஆனால், நீ போன பாதை ரொம்ப தப்பு. உன்னோட வாழ்க்கையை யோசிச்சு பார்த்தீயா? மாப்ளையோட மனநிலை இப்போ எப்படி இருக்கும்?” வீரபாண்டி குரலில் வருத்தம் தொனித்தது.
“அப்பா, நீங்க என் வாழ்க்கையை பத்தி கவலைப்படாதீங்க பா. என் வீட்டுக்காரரு நான் சொன்னா, கண்டிப்பா புரிஞ்சுப்பாரு. அவருக்கு என் மேல வருத்தம் இருக்கலாம். ஆனால், கோபம் எல்லாம் படமாட்டாரு பா. நீங்க சாந்தி அத்தை வாழ்க்கையை பத்தி யோசிங்க!” என்று விட்டு தன் அறைக்குள் நுழைந்து கொண்டாள் நிவி. எப்படியாவது அழகரையும் சாந்தியையும் சேர்த்து வைக்க வேண்டும் என்ற எண்ணம் அவளிடம் வலுப்பெற்றிருந்தது.
சாந்தியின் அருகில் அமர்ந்து அவரது முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான் யுகி. அவனை பார்த்து புன்னகைத்த சாந்தி, “அம்மா மேல எதுவும் கோபம், வருத்தம் இருக்கா டா யுகி?” என கேட்டவரின் கரங்களை தன் கைக்குள் பொதிந்து கொண்டவன், ‘இல்லை!’ என்பதை போல தலையை அசைத்தான்.
“ம்மா… உங்களுக்கு எதுவும் வருத்தமா இருக்கா? ஆனந்தி அம்மாவை பார்த்து அவங்க, வாழ்க்கையை பார்த்து?” என வினா தொடுத்தான் யுகி.
“எனக்கென விதிக்கப்பட்டது என்னை வந்தடையும் யுகி. எனக்கானது எனக்கு மட்டும் தான் சொந்தம். அதே மாதிரி அழகரோட வாழ்றது எனக்கானது இல்லை. அது எப்பவோ எனக்கு புரிஞ்சுடுச்சு பா. ஆனந்தி வாழ்க்கையை பார்த்து பொறாமை பட்ற வயசை எல்லாம் தாண்டிட்டேன். இப்போ நான் வாழ்றது உனக்காக தான். நீ சந்தோஷமா வாழ்றதை பார்த்தா தான் எனக்கு நிம்மதி டா. இதுக்கு மேல இதை பத்தி என்கிட்ட பேசாத யுகி” என்றவர், யுகியின் முகத்தைப் பார்த்து தயங்கி, “அம்மா உன்கிட்ட மறைச்சுட்டேன்னு கோபம் எதுவும் இல்லையே பா?” என வினவினார்.
“ம்மா… நீங்க எது செஞ்சாலும் அதுக்கு ஒரு காரணம் இருக்கும். இதை பத்தி நீங்களும் இனிமே பேச கூடாது. நானும் பேச மாட்டேன்!” என்றவன், “சரி, ரொம்ப டயர்டா தெரியுறீங்க. கொஞ்சம் நேரம் தூங்கி எழுங்க!” என அறைக்கு அழைத்து சென்று அவரை படுக்க வைத்து போர்வையை போர்த்தி விட்ட மகனை கண்களில் நிரப்பியவாறு, நித்திரையை தழுவ முயன்றார் சாந்தி. ஆனால், அது எங்கோ ஓர் மூலையில் நிராதரவாக நின்று கொண்டிருந்தது.
தன் அறைக்குள் சென்ற யுகி, பொத்தென நாற்காலியில் சாய்ந்து அமர்ந்தான். விழிகளை முடியது தான் தாமதம். இத்தனை நேரம் அடக்கி வைத்திருந்த கண்ணீர் எல்லாம் அவன் கன்னத்தை நனைத்தது. எதை நினைத்து வருத்தப்படுவது? தன் தாயை நினைத்தா? இல்லை தந்தை என இத்தனை வருடங்கள் கழித்து தன் முன்னே நிற்பவரை நினைத்தா? தன் வாழ்க்கையை பற்றி கவலை கொள்ளாமல் இவற்றை செய்ய துணிந்த நிவியை நினைத்தா? என்ன செய்வது என தெரியவில்லை ஆடவனுக்கு.
எத்தனையோ தடவை தன் தாய் வாழ்க்கையை எண்ணி மருகி இருக்கின்றான். பல முறை அவரிடம் கேட்க வாய் வரை வார்த்தைகள் வந்த போதும் அதை அப்படியே தொண்டைக் குழியிலே நிறுத்தி விடுவான். சாந்தியை சங்கடப்படுத்த அவன் விரும்பவில்லை. அவர் முகம் கசங்குவது மகனால் காண இயலாது. ஆனால், அவர் வாழ்வில் எதோ ஒன்று நடந்திருக்கிறது என மட்டும் அவனால் யூகிக்க முடிந்தது. முழுதாக தெரியவில்லை. இன்று தெரிந்து கொண்ட போது மனம் கனத்துப் போனது. இத்தனை துரோகங்களையும் வலிகளையும் யாரிடமும் கூற கூட முடியாது எத்தனை கஷ்டங்களை மனதில் தாங்கியிருப்பார். எப்படி இவரால் இருக்க முடிந்தது? நினைக்க நினைக்க மனம் ஆறவில்லை. அழகர் மீது கோபம் மலையளவு இருந்த போதும், அவர் யாரோ ஒருவர் என மனதில் பதிய வைத்துக் கொண்டான். முழுவதுமாக அவரை புறக்கணிக்க எண்ணினான்.
தன் அறைக்கதவு திறக்கப்படும் ஓசை கேட்டு கண்களை திறந்தான். வித்யா நின்றிருந்தாள். அவளை பார்த்ததும் நின்றிருந்த கண்ணீர் சுரப்பி வேலை செய்தது போல இருந்தது ஆடவனுக்கு. வித்யாவின் விழிகளும் பனித்திருந்தது.
அவன் அருகில் சென்ற வித்யா, “யுகி…” என அழைத்தது தான் தாமதம். அவளை இழுத்து இறுக அணைத்திருந்தான்.