வளைகாப்பு முடிந்து நிவி தன் தாய் வீட்டிற்கு சென்று இரண்டு நாட்கள் கடந்திருக்கும். வீட்டின் பெரியவர்கள் எல்லாம் சேர்ந்து யுகி திருமணத்தைப் பற்றி தீவிரமாக பேசி, எங்கே திருமணம் வைத்துக் கொள்ளலாம், எப்போது நிச்சயம் என முடிவு செய்தனர்.
நிவி சந்த்ரு திருமணம் போலவே முதல் நாள் நிச்சயம் வைத்துக் கொள்ளலாம், மறுநாள் திருமணம் என ஆனந்தி கூற, அனைவருக்கும் அதில் சம்மதமே!
தன் மகனின் திருமணம் என அழகர் அதிக பூரிப்புடன் வேலை செய்தார். அவரே நேரில் சென்று மண்டபத்தை பார்த்து முன்பதிவு செய்து வந்தார்.
பத்திரிக்கை அமைப்பை வித்யாவும் யுகியும் முடிவு செய்ய, பத்திரிகை அடித்து ஊர் முழுவதும் கொடுக்கப்பட்டது. சாந்தியும் யுகியும் திருச்சி சென்று இரண்டு நாட்கள் தங்கி, அங்கிருக்கும் நண்பர்களையும் உறவுகளையும் திருமணத்திற்கு அழைத்தனர்.
கோகிலாவும் வாஞ்சிநாதனும் எதுவும் செய்ய இயலாத கையறு நிலையில் தான் இருந்தனர். அந்த கோபம் எல்லாம் வித்யா மேல் தான் திரும்பியது. எந்த நேரமும் அவளை தன் வாய்க்கு அவலாக்கிக் கொண்டிருந்தார் கோகிலா. வாஞ்சிநாதன் அவளிடம் பேசுவதை தவிர்த்து விட்டார். தன் பெற்றவர்கள் செய்கை அவளை அதீத மன அழுத்தத்திற்கு உள்ளாக்கியது.
அவளுக்கு ஆறுதலாக இருந்தது விஜய் மட்டும் தான். அவனும் பள்ளி சென்று விட, அறையிலே முடங்கிக் கொண்டாள். தினமும் இரவு யுகிக்கு அழைத்து பேசி விடுவாள். வித்யா அழைக்காவிடினும் அவனே அழைத்து விடுவான். அவள் குரலை வைத்தே கோகிலா எதோ பேசியிருக்கிறார் என ஆடவனால் உணர முடிந்தது. அவ்வப்போது ஆறுதல்களும் காதலான வார்த்தைகளும் கொஞ்சல்களும் கெஞ்சல்களும் தான் அவளை உயிர்ப்புடன் வைத்திருந்தது.
சந்த்ரு எதிலும் கலந்து கொள்வதில்லை. ஆனந்தியாக அவனை இழுத்துப் பிடித்து வேலை வாங்குவார். முகத்தை சுழித்தாலும், செய்து முடித்து விடுவான். செய்ய மாட்டேன் என அவன் அடம் செய்யும் செயலை, சாந்தி மூலம் நிறைவேற்றி கொள்வார். ஆனந்தி சொல்லி மறுப்பவனால், சாந்தியின் வார்த்தைகளை ஒரு போதும் தட்ட இயலவில்லை. அவர் கூறினால், தலையை ஆட்டி செய்து முடித்து விடுவான்.
அழகரும் ஆனந்தியும் தம்பதியாக சென்று தான் எல்லோரிடமும் பத்திரிகை வைத்து யுகியின் திருமணத்திற்கு அழைத்தனர். நிறைய நிறைய கேள்விகளும், விசாரணைகளும் தங்களை சூழ்ந்த போதும், ஒரு புன்னகையுடன் அதை கடந்து விட்டார் அழகர். கடக்க வைத்தார் ஆனந்தி என்பதே உண்மை. தங்களுடைய நியாயங்களும் விளக்கங்களும் எல்லோரையும் திருப்தி படுத்துமா என்றால் இல்லையே! அவரவர்க்கு அந்த அந்த நேரத்து நியாயம்! அவ்வளவு தான். யாரிடமும் விளக்கம் கொடுக்க முற்படவில்லை. கொடுக்க விரும்பவில்லை என்பதே உண்மை. உறவுகள் என்னும் சங்கிலியால் கட்டப்பட்டிருக்கிறோம். சுகமோ, துக்கமோ, எனக்காக வந்து நில் என்பது போல தான் ஆனந்தியின் நடவடிக்கை. பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை அவர்.
பேசினார்கள்! சிலர் ஆனந்திக்கு ஆதரவு என்பது போல யுகியையும் சாந்தியையும் வசைபாடினார்கள்! சிலர் சாந்திக்கு ஆதரவாக! சிலர் இதில் எதிலும் ஒட்டாத ரகமாக எட்ட நின்று நலம் விசாரிதத்தோடு கடமை முடிந்து விட்டது போல பாவனை! அவ்வளவு தான். இது தான் மனிதன். அவனின் எண்ணங்களும் சிந்தனைகளும் இப்படி குறுகிய வட்டத்திற்குள் முடிந்து விடுகிறது. இது இப்போதைய அவர்களுக்கான பேச்சு! அவர்களின் நேரம் எதோ ஒன்றால், யாரோ ஒருவரால் சூறையாடப்பட வேண்டும். அவ்வளவு தான் அவர்கள்!
ஆனந்தி எண்ணம் இதுவாக தான் இருந்தது. உன்னால் பேச முடியும் என்பதற்காக பேசுகிறாய்! இதே நிலையில் நீ நிற்க ஒரு நொடி போதாது. வார்த்தைகளும் செயல்களும் பலம் வாய்ந்தவை. தன்னை நோக்கி திரும்பினால் தாங்க முடியாது மடிந்து விடுவோம். இதை அறியாத அற்ப ஜென்மங்கள் வார்த்தைகளால் அடுத்தவரை காயப்படுத்தி இன்பம் கொள்ளும். அதையெல்லாம் தூசி போல தட்டியவர், அழகர் சோர்வுறும் சமையங்களில் தட்டிக் கொடுக்க தவறவில்லை.
அதோ இதோ என திருமண நாளும் நெருங்க, இரண்டு நாட்கள் முன்பே வீரபாண்டி, ஜோதி, நிவி என மூவரும் கிளம்பி வந்து விட்டிருந்தனர். வித்யாவை இப்போதே அழைத்துக் கொள்ளலாம் என நிவி அவளை அழைத்து வந்து தன்னுடன் தங்க வைத்துக் கொண்டாள்.
அன்றைய பேச்சிற்கு பிறகு சந்த்ருவிற்கும் நிவிக்கும் இடையில் பேசி தீர்க்க வேண்டியது ஆயிரம் இருந்தும், இருவரும் மௌனத்தின் நிழலில் நின்று கொண்டிருந்தனர். யார் உடைப்பது அந்த நுலிழையை என்ற போராட்டம். அது முற்றுப் பெற்று மோட்சம் காண நாள் பார்த்துக் கொண்டிருந்தனர்.
திருமணத்திற்கு முதல் நாள், மண்டபமே விழாக் கோலம் பூண்டிருக்க, சிரிப்பும் சந்தோஷமும் ஆக்கிரமித்திருந்தது அவ்விடத்தை.
வித்யாவும் யுகியும் மேடையில் எதிரெதிரே அமர்ந்து இருக்க, நிச்சயதார்த்த விழா துவங்கப்பட்டது. புரோகிதர் நிச்சயப்பத்திரிக்கையை வாசித்து முடிக்க, “பொண்ணோட அம்மா, அப்பாவும், மாப்ளையோட அம்மா, அப்பாவும் தட்டை மாத்திக்கோங்க!” என கூற, வீரபாண்டியும் ஜோதியும் பொண்ணு வீட்டு சார்பாக தட்டை மாற்றிக் கொண்டனர்.
வரட்டு கௌரவத்திற்காகவும் வீம்பிற்காகவும் தன் திருமணத்திற்கு வர மறுத்த பெற்றவர்களை நினைத்து வித்யா வருத்தப்பட, “ஏன் வித்யா இதுக்கெல்லாம் அழலாமா? நீயும் என் பொண்ணு மாதிரி தான். நானும் அவரும் உங்க அப்பா, அம்மா ஸ்தானத்துல இருந்து உன்னை கல்யாணம் பண்ணிக் கொடுக்குறோம்!” என ஜோதி அவளை தேற்றி அணைத்துக் கொண்டார்.
புன்னகையுடன் ஜோடியாக நின்றவர்களை புகைப்படக்காரர் விதவிதமான புகைப்படங்களாக எடுத்துத் தள்ளினார். முகத்தில் புன்னகையுடன் கண்களில் நிறைவுடன் மேடையில் நின்ற யுகியை பார்க்க மனது நிறைந்து போனது நிவேதாவிற்கு. இன்னும் ஒரு வார காலம் மட்டுமே அவளுக்கு பிரசவத்திற்கு இருக்க, அவளை அசைய விடாமல் ஒரு நாற்காலியை முன்புறம் போட்டு அமர வைத்து விட்டான் யுகி.
“அம்மா, நிவியை கூப்ட்டுங்க மா, போட்டோ எடுக்கணும்!” சாந்தி காதில் யுகி கூற, “சந்த்ரு…” என அழைத்தவர், “நீயும் நிவியும் மேடைக்கு வாங்க. அவளை பத்ரமா கூட்டீட்டு வா. போட்டோ எடுக்கணும்” என கூற, தலையை ஆட்டியவன், அவளருகில் சென்றான்.
“நிவி, வா போட்டோ எடுக்கணுமாம்!” என அவளை தோளோடு அணைத்துக் கொண்டு சந்த்ரு அழைத்து செல்ல, புன்னகையுடன் மேடையேறினாள். அவளை விட்டுவிட்டு செல்ல சென்ற கணவனின் கையை இறுக்கமாக பற்றியவளின் விழிகளில் இறைஞ்சுதல். எதுவும் பேசாதவன், யுகிக்கு அருகே சென்று நிற்க, வித்யா அருகே நின்று கொண்டாள் வித்யா. நான்கு பேரையும் புகைப்பட கருவி தன்னுள் அழகாய் சுருட்டிக் கொண்டது.
நிச்சயம் நன்முறையில் முடிய, வந்திருந்த உறவினர்கள் கலையத்துவங்கினர். வித்யாவுடன் மணமகள் அறையில் அவள் நெருங்கிய தோழி ஒருவருடன் தங்கிக் கொண்டாள்.
நிவேதாவுடன் ஜோதி தங்கிக் கொண்டார். அவளை விட்டு நகரவே இல்லை பெண்மணி. நாள் நெருங்க நெருங்க, பெண்ணுக்கு தாயாய் அவருக்கு பதட்டம் அதிகமாகியது. நிவி அவ்வப்போது அவரிடம் தைரியம் சொல்லுவாள். கணவனுடன் தங்க மனம் விரும்பினாலும், வாயை திறந்து கூறவில்லை பெண். அவரவர் அவரவருக்கு ஒதுக்கப்பட்ட அறையில் தஞ்சம் புகுந்தனர்.
மறுநாள் காலையில் எழுந்த ஜோதி குளித்து முடித்து நிவியை எழுப்பினார். எழுந்து கிளம்பியவள், மணமகள் அறைக்கு சென்று அமர்ந்து கொண்டாள்.
வித்யாவிற்கு அலங்காரம் நடந்து கொண்டிருந்தது. அவளது தோழி ஒருபுறமும் அலகுகலை நிபுணர் ஒரு புறமும் அவளை அழகு படுத்திக் கொண்டிருந்தனர்.
“ஃபைனலி எங்க வீட்டுக்கு குட்டி ஹன்சிகா மருமகளா வர போறா!” நக்கலாக நிவி கூறி சிரிக்க,
“அக்கா… நீங்க அதை விட மாட்டீங்களா? மாமா கிட்ட வேற சொல்லி வச்சிருக்கீங்க. அவர் வேற அதை சொல்லியே கிண்டல் பண்றாரு!” என சிணுங்கினாள் வித்யா.
“வித்யா, நான் உண்மையை தானே சொன்னேன்!” என மேலும் அவளை கிண்டலடித்துக் கொண்டிருந்தாள் நிவி.
மணமகன் அறையில் யுகேந்திரன் தயாராக, விஜய் அவனுடன் தான் சுற்றிக் கொண்டிருந்தான். ‘மாமா! மாமா!’ என நூறு மாமா போடும் விஜயை யுகிக்கும் அதிகமாக பிடித்துப் போக, அவர்களுக்கு இடையில் உறவு அழகாய் ஜனித்திருந்தது.
நல்லநேரம் பார்த்து புரோகிதர் மணமகனை அழைத்தார். யுகி வந்து மேடையில் அமர, அவன் கண்கள் தாயை தேடியது.
‘இங்க தான் இருக்கேன் பா!’ என கண்களாலே சைகை செய்த சாந்தி, உறவினர்களை கவனித்துக் கொண்டிருந்தார்.
சிறிது நேரத்தில் வித்யா அழைத்து வரப்பட்டு அவனருகில் அமர்ந்தாள். யுகேந்திரன் விழிகள் இப்போது அருகே அமர்ந்த வித்யாவிடம் தான். மணப்பெண்ணுக்கே உரிய அத்தனை லட்சணங்கள் இல்லாவிடினும், லேசாக வெட்கத்துடன் அமர்ந்திருந்தாள். ரோஜா நிறப்பட்டு உடுத்தி, அவனை வசீகரித்தாள் பெண். உதட்டில் மெல்லிய சிரிப்புடன் அவளைப் பார்த்தவன், பின் புரோகிதர் கூறும் மந்திரங்களை கூற துவங்கினான்.
“சந்த்ரு, அம்மா, அப்பாவை கூட்டீட்டு வா!” என சாந்தி அவனை அனுப்ப, வந்தவர்களை வரவேற்று கொணடிருந்த அழகரும் ஆனந்தியும் மேடையேறினர். சாந்தியும் அவர்களுடன் தான் நின்றாள்.
“கெட்டி மேளம்! கெட்டி மேளம்!” புரோகிதர் கூற, வித்யாவின் கழுத்தில் மூன்று முடிச்சிட்டு தன்னில் பாதியாக ஏற்றுக் கொண்டான் யுகேந்திரன். பின் அவள் நெற்றியில் குங்குமத்தை வைத்து விட்டு, அக்னியை ஏழு முறை சுற்றி வந்து சம்பிரதாயங்களை செய்து முடித்தான்.
சாந்தியின் விழிகளில் சந்தோஷ கண்ணீர். அழகரும் மனநிறைவுடன் பார்த்தார். நிவிக்கு முகமெல்லாம் புன்னகை தவழ்ந்தது. சந்த்ரு கையைப் பிடித்து அவனருகில் மேடையில் நின்றிருந்தாள்.
“மாமா, நீங்களும் வித்யாவும் கொஞ்சம் தள்ளி நில்லுங்க. உங்களோட சேர்த்து இன்னொரு கல்யாணமும் இந்த மேடையில நடக்கப் போகுது!” என நிவி கூற, அனைவரும் விழித்தனர்.
“தள்ளுங்க பா!” என அவர்களை சற்று தள்ளி நிறுத்திய நிவி, “அழகர் மாமா!” என அழைத்து அவரை அமர வைத்தாள்.
“அக்கா, நீங்க வாங்க!” என ஆனந்தி சாந்தி கையை பிடித்து இழுத்து சென்று அழகர் அருகில் அமர வைக்கப் போக, அப்போது தான் நடக்கும் நிகழ்வின் வீரியம் உணர்ந்த சாந்தி, “ஆனந்தி, என்ன பண்ற நீ?” என அவரிடமிருந்து தன் கையை உருவ முயன்றார்.
“அக்கா, என்ன பண்றாங்க? வாங்க நீங்க அமைதியா?” ஆனந்தி சாந்தியின் கைகளை இறுக்கமாக பிடிக்க,
“ஆனந்தி!” என கோபமாக அழைத்தார் சாந்தி.
“அக்கா, ஏன் கோபப்டுறீங்க? நான் ஒன்னும் தியாகி எல்லாம் இல்லை. இது உங்களுக்கான நியாயம். கண்டிப்பா கிடைக்கணும். என் புருஷனை உங்களுக்கு விட்டுக் கொடுக்குற பெரிய மனசு எல்லாம் இல்லை என்கிட்ட. என்னோட வாழ்க்கைல உங்களுக்கு ஒரு இடம் தரேன். என்னோட வீட்டுக்காரர்காக! அவர் ஆசைப்பட்டாரு கா. ஒரு மனைவியா நான் நிறைவேத்துறேன்!” என சாந்தியை அழகருக்கு அருகில் அமர வைத்தார்.
ஆனந்தியின் வார்த்தைகளை கேட்டுக் கொண்டே சாந்தி அழகர் அருகில் அமர, “ஐயரே! மந்திரம் சொல்லி தாலியை எடுத்துக் கொடுங்க. உங்களுக்கு டபுள் பேமெண்ட் உண்டு!” என அவரிடம் தாலியை நீட்டினாள் நிவேதா. அவர் எதோ புரியாத மொழியில் படம் பார்ப்து போல பார்த்து விழித்து, மந்திரங்களை கூறி தாலியை எடுத்துக் கொடுக்க, அழகர் சாந்தி முகத்தைப் பார்த்தார். அவருடைய சம்மத்ததை மனம் விரும்பியது. நடப்பது எல்லாம் கனவா? நினைவா? இதெல்லாம் ஒத்து வருமா? என நொடியில் யோசித்த சாந்தியின் பார்வை அழகரிடம் நிலைக்க, அவரும் சாந்தியை பார்த்தார். தன்னையே தவிப்பாய் நோக்கும் விழிகளின் உணர்வை நொடியில் உணர்ந்தவரின் இமைகள் சம்மதமாய் அசைய, அழகர் சாந்தி கழுத்தில் மூன்று முடிச்சிட்டு நெற்றி வகிட்டில் குங்குமத்தை வைத்த நொடி, சாந்தி கண்களிலிருந்து வழிந்த உவர் நீர் மோட்சம் பெற்றது. இந்த நொடி அவர் என்ன உணர்கிறாறென்று வார்த்தையால் வடிக்க முடியும் என்று தோன்றவில்லை. எத்தனை அவமானங்கள்? எத்தனையோ பேச்சுக்கள்? எல்லாம் கடந்து விட்ட உணர்வு என்றாலும் இந்த நொடி எல்லாவற்றையும் தகர்த்து விட்டது.
கூடத்தில் பெரும் சலசலப்புகள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக தங்களுக்குள் பேச துவங்கினர்.
யுகி! என்ன நடந்தது என அவனால் நம்ப முடியவில்லை. மூளையும் மனதும் அந்த நொடி மரத்துப் போனது. தன் தாய் முகத்தில் தெரிந்த உணர்வு? எத்தனை கோடி கொடுத்தாலும் வாங்க முடியாது? எத்தனை நிறைவு? யார் கொடுத்தது. அழகர்! அவர், அவர் கொடுத்தது. மனம் அந்த நொடி அவர் மீது இருக்கும் பிணக்குகள் எல்லாம் மறைந்து போனது. அவர்களை பார்த்தவனின் கண்கள் நிவியை காண, மலர்ந்த முகத்துடன் அவளும் யுகியைப் பார்த்தாள். பெண்ணின் கண்ணெல்லாம் கலங்கி இருக்க உதட்டில் அதற்கு மாறான புன்னகை. முகம் முழுவதும் மலர்ந்திருந்தது. அவளை தான் இமைக்க மறந்து பார்த்தான் யுகி. அவள் தான் இதற்கு காரணமென தெரியும். அவனுக்கான நேசம் நிவியின் விழிகளில். அதில் தெரிந்த மகிழ்ச்சி, திருப்தி. இந்த நொடி அவன் கண்களுக்கு நிவி தேவதை தான்.
யுகி உணர்ச்சிவசப்
பட்டிருக்கிறான் என உணர்ந்த வித்யா, அவன் கைகளை அழுத்தமாக பற்றிக் கொண்டாள். அவளுக்கு முன்பே தெரியும். நிவி கூறியிருந்தாள். வித்யாவை திரும்பி பார்த்தான் யுகி. அவளின் முகத்தில் அதிர்ச்சியின் சாயல் துளிகூட இல்லை. அவளுக்கு முன்பே தெரிந்திருக்கிறது என எண்ணிக் கொண்டான்.
ஆனந்தி புன்னகையுடன் சாந்தியையும் அழகரையும் பார்த்து இருந்தார். அவர் முகத்தில் என்ன இருந்தது என யாராலும் அறிய முயலவில்லை. மனம்! அது ஒரு குரங்கு. பொறாமை என்று கூறாவிட்டாலும், சாந்தியை கணவன் அருகில் பார்க்கும் போது நூற்றில் தொன்னுற்றி ஒன்பது சதவீதம் சந்தோஷம் என்றாலும், அந்த ஒரு சதவீதத்தில் மனம் சுணங்கியது. அதை எல்லாம் முகத்தில் காட்டவில்லை பெண். அவருக்கு தன் கணவனின் புன்னகை ததும்பும் முகம் தான் கண்முன்னே நின்றது. இத்தனை வருடங்களில் அவர் முகத்தில் இதுவரை பார்த்திராத புன்னகை! நிறைவு! அது கொடுத்த மகிழ்ச்சியில் மற்றவை எல்லாம் பின்னே சென்று விட்டது. யுகி ஆனந்தியை நன்றியுடன் பார்க்க, அவர் புன்னகைத்தார். சந்த்ரு தன் தாயின் அருகே வந்து நின்றான். அவனுக்கும் சாந்தியின் சந்தோஷமான முகம் மகிழ்வை கொடுத்தாலும், தன் தாயின் மனநிலை என்னவாக இருக்கும் என யுகிக்க இயலாது அவர் கையை பற்றிக் கொண்டான். அவனை திரும்பி பார்த்தார் ஆனந்தி. கண்களில் தவிப்புடன் தன்னருகே நின்ற மகனைப் பார்த்து சிரித்தவர், “போடா! எனக்கு ஒன்னும் இல்லை… போ… போய் வேலையை பாரு” என்றார். அவர் குரலில் உறுதியிருந்தது, சந்தோஷமும் இருந்ததை உணர்ந்தவனின் மனம் சமன்பட்டது.
நடந்து முடிந்த நிகழ்வை எல்லோரும் ஓரளவுக்கு கிரகிக்க, “எல்லோர்கிட்டயும் முதல்ல மன்னிப்பை கேட்டுக்குறோம். ஒரு கல்யாணத்துக்கு அழைச்சுட்டு ரெண்டு கல்யாணத்தை நடத்திட்டோம். இருந்தாலும் நீங்க ரெண்டு ஜோடியையும் மனசார வாழ்த்துங்க. அப்புறம், யாரும் யாரையும் ஏமாத்தலை. வாழ்க்கையை பறிக்கலை. இது அவங்களோட வாழ்க்கை. அவளுக்குக்கான முடிவை எடுக்க தெரியாத சின்ன பசங்க இல்லை என் அத்தையும் மாமாவும். எங்களோட அழகான குடும்பத்துல
சாந்தி அத்தைக்கான அங்கீகாரம்.
ரொம்ப தாமதான அங்கீகாரம் தான். இருந்தாலும், இது கண்டிப்பா என் சாந்தி அத்தைக்கும், யுகி மாமாவுக்குமான நியாயமான அடையாளம்!” என்ற நிவிக்கு அடுத்து பேச வரவில்லை. மகிழ்ச்சியா? துக்கமா? எதோ ஒன்று தொண்டையை அடைக்க, அவளது கைகளை ஆதரவாக பிடித்துக் கொண்டார் ஆனந்தி.
“நன்றி அத்தை! ஒரு பொண்ணா, இந்த இடத்துல நீங்க ரொம்ப உயர்ந்துட்டீங்க!” என அவரை அணைத்துக் கொண்டாள். சலசலப்புகள் எல்லாம் அடங்கியது.
“யுகி மாமா, வித்யா நீங்க ரெண்டு பேரும் ஆசிர்வாதம் வாங்குங்க அத்தைகிட்டயும் மாமாகிட்டயும்!” என அவர்களை அழைத்து சென்றாள்.
முதன் முறையாக அழகர் காலை தொட்டு வணங்கிய யுகியின் தலையில் கையை வைத்தார் அழகர். அவருடைய கரங்கள் நெகிழ்ந்து இருந்தது. “எங்களை ஆசிர்வாதம் பண்ணுங்க!” என அவரிடம் நேருக்கு நேராக பேசினான் யுகி. அதற்கே மனிதர் உருகி விட்டார்.
“அத்தை, நீங்க வாங்க!” என ஆனந்தியை இழுத்து அழகர் அருகில் நிற்க வைத்தாள் நிவி.
பின் அவர்களிடம் ஆசிர்வாதம் வாங்கி விட்டு, ஜோதியிடமும் வீரபாண்டியிடமும் ஆசிர்வாதம் வாங்கினர்.
மற்ற உறவினர்கள் எல்லோரும் ஆசிர்வாதம் செய்ய, என அடுத்தடுத்த சடங்குகள் செய்யப்பட்டது. பின்னர் மணமக்களை சாப்பிட அழைத்து சென்றனர். யுகி ஒரு வித நிறைவான மனநிலையில் இருந்தான். தனக்கு திருமணம் முடிந்திருக்கிறது என்றெல்லாம் அவனது நினைவில் இல்லை. தன் தாயையும் தந்தையும் சுற்றியே வந்து கொண்டிருந்தது எண்ணங்களும் மனமும்.
ஆனந்தி, “அண்ணா, நீங்க சாப்டலையா? ஜோதி எங்க போனா?” என கேட்டுக் கொண்டே வீரபாண்டியை உணவுன்ன மேஜையில் அமர்த்தினார்.
“ஆனந்தி, ஒரு நிமிஷம்!” என அவரை அழைத்தவர், கைகளை கூப்பினார். “ரொம்ப நன்றி மா! என்ன சொல்லன்னு தெரியலை!” என கூற, “அண்ணா! என்ன கையெல்லாம் கூப்புறீங்க?” என ஆனந்தி அவர் கைகளை பிடித்து கீழே இறக்கினார்.
“நான் ரொம்ப சுயநலவாதி தான் அண்ணா! இப்போ நான் தியாகம் எல்லாம் செய்யலை. என்னோட புருஷனுக்காக செஞ்சேன். அதோட சாந்தி அக்காவுக்கு கிடைக்க வேண்டிய நியாயம். அவ்ளோ தான்!” பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை அவர்.
சிறிது நேரத்தில் மணமக்கள் வீட்டிற்கு அழைத்துச் செல்ல, வந்திருந்த உறவினர்கள் அனைவரும் சென்று விட்டிருந்தனர்.
“அம்மா, நீங்க போங்க. நான் பார்க்துக்குறேன்!” என சந்த்ரு எல்லோரையும் அனுப்பிவிட்டு தன் நண்பன் ஒருவனுடன் சேர்ந்து மற்ற வேலைகளை பார்க்க ஆரம்பித்தான்.
மணமக்களை ஆரத்தி எடுத்து வரவேற்று கூடத்தில் அமர வைத்தனர்.
“பாலும் பழமும் கொண்டு வாங்க ப்பா… நல்ல நேரம் முடிய போகுது!” கூட்டத்தில் ஒருவர் குரல் கொடுக்க, ஆனந்தி பாலும் பழமும் எடுத்து வந்து மணமக்களிடம் கொடுத்தார்.
அவருக்கு அருகில் சாந்தி நின்றிருந்தார். நெற்றி நிறைய குங்குமமும் கழுத்தில் புது தாலியும் மின்ன நின்றிருந்த தாயின் முகத்தை பார்த்து பார்த்து மனம் நிறைந்து போனது மகனுக்கு. சிறுது நேரம் பேச்சு செல்ல, “யுகி, நீ போய் ரெஸ்ட் எடு!” என்ற ஆனந்தி, வித்யாவையும் அறைக்கு அனுப்பி வைத்தார்.
தனதறைக்கு சென்ற யுகி உடையை மாற்றிவிட்டு, நிவிக்கு அழைக்க, புன்னகைத்தவள், எழுந்து அவன் அறைக்கு சென்றாள்.
“என்னவாம் யுகேந்திரனுக்கு? கால் எல்லாம் பண்ணி இருக்கீங்க?” புன்னகையுடன் அவள் வினவ, உள்ளே நுழைந்ததும் அவளை இறுக அணைத்துக் கொண்டான் யுகி. அவன் உடல் கொஞ்சம் சிலிர்த்தது. அத்தனை உணர்வு குவியலாக இருந்தான் யுகி.
“தேங்க்ஸ் டி.. தேங்க் யூ சோ மச்!” என்றவன் குரல் கரகரக்க, “ஏன்டி?” என வினவினான்.
“ஏன்னா… ஏன்னா இந்த யுகி முகத்துல எப்பவுமே நான் சந்தோஷத்தை பார்க்கணும்னு ஆசை பட்டேன். என்ன தான் அழகர் மாமாவோட சாந்தி அத்தை ஒரே வீட்ல இருந்தாலும் அவங்களுக்குன்னு ஒரு மரியாதை, அடையாளம் வேணாமா? அது வேணும்னு உங்க மனசு தான் என்கிட்ட சொல்லுச்சு. என்னோட சந்தோஷம் முக்கியம்னு சின்ன வயசுல இருந்தே எனக்கு பார்த்து பார்த்து செஞ்ச என் யுகி மாமாவுக்கு. அவரோட மனசு நிறைஞ்சு போச்சா?” என கேட்டவளின் கைகளை எடுத்து முத்தமிட்டவன், “ரொம்ப…” என்றான். வித்யா உள்ளே நுழைந்தாள். முகத்தில் புன்னகை தவழ்ந்தது. ஒரு நொடி கூட அவளால் வேறு எப்படியும் நினைக்க முடியவில்லை. எத்தனை தூய்மையான அன்பு அவர்களுக்கு இடையில் என அவளறிந்ததே!
“நான் இல்லை வித்யா, எல்லாம் உன்னோட புருஷன் தான். நீ தான் கேட்கணும்!” என நிவி கூற, அவர்கள் இருவரையும் புன்னகையுடன் பார்த்த யுகிக்கு, அந்த கணம் தான் தான் இந்த உலகத்திலே அதிர்ஷ்டசாலி என தோன்றியது. இந்த உலகத்தில் தன்னை மட்டுமே நேசிக்கும் தூய அன்பின் முன்பு தோற்றுப் போக கூட தோன்றியது அவனுக்கு.
“சரி, நான் என் ரூம்க்கு போறேன்!” என நிவி நகர, வித்யாவை இழுத்து அணைத்துக் கொண்டான். அவன் முதுகை தடவிக் கொடுத்தாள் பெண்.
“ஒன்னும் இல்லை யுகிப்பா!” என்றவளின் கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டவன், எதுவும் கூறாது அவளை இறுக்கி அணைக்க, “வித்யா!” என யாரோ அழைத்தனர்.
“மாமா! போதும் விடுங்க!” என அவனிடமிருந்து பிரிந்து சென்றாள் வித்யா. பொத்தென்று கட்டிலில் அமர்ந்து விட்டான் யுவகேந்திரன். இந்த நாளின் மகிழ்ச்சி நீட்சியாய் நீடித்துக் கொண்டே இருப்பதை மனதும் உடலும் உணர்ந்தது.
கண்ணாடி முன்னே வித்யா அமர்ந்து இருக்க, இரவு சடங்கிற்காக அவளை தாயார் செய்து கொண்டிருந்தனர் பெரியவர்கள்.
அவள் கையில் பாலை கொடுத்தார் ஜோதி. “வித்யா! உனக்கு கல்யாணம் ஆகிடுச்சு. பொறுப்புகள் எல்லா அதிகமா இருக்கும். புருஷன் பொண்டாட்டிக்குள்ள சின்ன சின்ன சண்டைகள் சமாதானங்களும் இருக்கும். எப்பவுமே சந்தோஷம் மட்டும் இருக்கது இல்லை டா. எல்லாத்தையும் பழகிக்கணும். சந்தோஷமா இரு!” என தாய் ஸ்தானத்தில் அறிவுரை கூற, அவர் காலில் விழுந்து வணங்கியவள், சாந்தியிடமும் ஆனந்தியிடமும் ஆசிர்வாதம் வாங்கினாள்.
“நல்லா இரு வித்யா. என் பையன் தான் என் உலகம். இப்போ அந்த உலகத்துல நீயும் ஒரு ஆள். அவனை சந்தோஷமா பார்த்துக்கோ!” என்ற சாந்தியின் விழிகள் பனிக்க, “அக்கா!” என ஆனந்தி தான் அதட்டினார்.
நிவி நாற்காலியில் அமர்ந்து இவற்றைப் பார்த்துக் கொண்டிருந்தாள். “சரி, நல்ல நேரம் ஆரம்பிச்சுடுச்சு. அவளை விட்டுட்டு வரலாம்!” என வித்யாவை யுகியின் அறையில் விட்டுவிட்டு வந்தனர்.
உள்ளே நுழைந்த வித்யா தாழ்போட்டு, யுகி அருகில் சென்றாள். புன்னகையுடன் அவளை எதிர் நோக்கினான் கணவன். பாலை அவனுக்கு கொஞ்சம் கொடுத்தவள், பின் தானும் குடித்தாள். நிமிடங்கள் கடக்க என்ன செய்வது என தெரியாமல் விழித்தவளை இழுத்து தன்னருகே அமர்த்திக் கொண்டவன், அவளை இறுக அணைத்துக் கொண்டான். அத்தனை மகிழ்ச்சி ஆடவனுக்கு.
“ரொம்ப சந்தோஷமா இருக்கேன் டி பொண்டாட்டி!” என அவள் கன்னத்தில் முத்தமிட்டு படுக்கையில் சரிந்தான். அவன் மார்பில் தலையை வைத்து படுத்தாள் வித்யா. சில நிமிடங்கள் பார்த்தவள், நிமிர, ஒரு கையில் அவளை அணைத்துக் கொண்டு மறுகையை தலைமேல் வைத்து கண்களை மூடியிருந்தான் யுகேந்திரன்.
மனைவியின் பார்வை தன்னை துளைப்பதை உணர்ந்தவன், விழிகளை திறந்து, “என்னடி?” என வினவினான்.
“இல்லை… நம்ம இப்போ தூங்க தான் போறோமா?” என வித்யா வினவ, அதில் கணவனுக்கு சிரிப்பு வந்தது.
“ஆமா! நைட்டானா தூங்க தானே செய்வாங்க எல்லாரும்?” என பதில் இயம்பியவனிடம் என்ன பேசுவது என தெரியாமல் விழித்தவளின் கண்களில் அழுத்தமாக முத்தமிட்டவன், அவள் மீது படர்ந்தான்.
அதில் கூச்சம் கொண்டு நெளிந்தவள், “மாமா!” என சிணுங்க, “நீ தானே டி அவ்ளோ தானான்னு கேட்ட?” என கேட்டு கணவனாய் மாறிப் போனான்.
“மாமா… யுகிப்பா! யுகி!” என வித்யாவின் கெஞ்சல்களும் சிணுங்களும் யுகியின் கொஞ்சல்களும் அந்த அறையை நிறைக்க துவங்கியது. இத்தனை நாட்களுக்குமான நேசத்தை அள்ளித் தெளித்தான் ஆடவன். அதை பெற்றுக் கொண்டவளும், அவனுக்கான ஏக்கங்களைம் காதலையும் அவனிடம் சேர்பிக்க, அந்த நாளின் மொத்த மகிழ்ச்சியையும் சேர்த்து தன் மனைவியிடம் மொத்தமாய் கரைந்து உருகி போனான். களைத்துப் போய் உறங்க வெகு நேரமாகி விட்டது அவர்களுக்கு.
தன்னருகே படுத்திருந்த ஆனந்தியின் முகத்தையே பார்த்திருந்தார் அழகர். “என்னங்க?” என ஆனந்தி வினவ,
“இல்லை, உனக்கு இதுல முழு சம்மதம் தானே ஆனந்தி? வருத்தம் எதுவும் இல்லையே?” என கேட்டார்.
“வருத்தம் இருக்குன்னு சொன்னா என்ன செய்வீங்க?” மனைவியின் கேள்வியில் அதிர்ந்த அழகர், “ஆனந்தி!” என தவிப்புடன் அழைத்தார்.
“பச்… விடுங்க. எல்லாரும் எல்லா நேரத்துலயும் ஒரே மாதிரி இருக்கது இல்லை. உண்மையை சொன்னா, நான் தான் நிவிக்கிட்ட உங்களுக்கும் சாந்தி அக்காவுக்கும் கல்யாணம் பண்ணலாமான்னு கேட்டேன். அதுக்காக வருத்தம் இல்லைன்னு பொய் எல்லாம் சொல்ல மாட்டேன். ஆரம்பத்துல உங்களோட செயலை என்னால ஏத்துக்க முடியலை. பட், போக போக ஏத்துக்கிட்டேன். பொறாமை! கோபம்! ஈகோ, இதெல்லாம் எல்லா மனுஷனுக்கும் இருக்கும். சாந்தி அக்காவை உங்க கூட வச்சு பார்க்கும்போது 99 சதவீத சந்தோஷம் தான். இருந்தாலும் அந்த ஒரு சதவீதம் அற்ப பொறாமை வரத்தான் செஞ்சுது. அது தான் நான் சாதாரண மனுஷின்னு காட்டுச்சு. நான் ஒன்னும் புத்தர் இல்லை. ஆனால் பாருங்க உங்க முகத்துல தெரிஞ்ச சந்தோஷம், நிறைவு, அந்த பொறாமையை பின் தள்ளிடுச்சு. இப்ப நீங்க என் கூட இருக்கீங்க. இது நிஜம். விடுங்க!” என்றவரிடம் என்ன பேசுவது என தடுமாறினார் அழகர்.
“எதையும் யோசிக்காதீங்க. எல்லாத்தையும் பேசணும்னு இல்லை. சில விஷயத்தை அப்டியே விட்டுடணும். அது கால போக்குல சரியாகிடும். இதுவும் அது மாதிரி தானே. என்னோட புருஷன் சந்தோஷமா இருந்தா போதும்னு நினைக்குற சாதாரண பொண்ணு நான். அவ்ளோ தான்!” என்ற ஆனந்தி தன் கணவன் கைகளில் முகத்தைப் புதைத்துக் கொள்ள, அழகர் மனம் கொஞ்சம் நெகிழ்ந்தது. தன்னை இந்த அளவிற்கு நேசிக்கும், புரிந்து கொள்ளும் மனைவி கிடைப்பதெல்லாம் வரம். மனதில் நன்றி கூறினார் ஆனந்திக்கு. அதற்கு மேல் அந்த பேச்சை அவர் தொடர விரும்பவில்லை. இது தான் என்றான பிறகு பேசி பேசி என்ன பயன். அவருக்கான நிறைவு! இரண்டு மனைவியும் இப்போது அவர் மனதில் நிறைந்து, வாழ்க்கையும் நிறைவு செய்தனர்.
சந்த்ரு எல்லா வேலையும் முடித்து தாமதமாக தான் வந்தான். ஆனந்தியை காத்திருக்க வேண்டாம் என சொன்னவன், நிவியிடமும் அதையே கூறியிருந்தான். வெளியே உண்டு வந்தவன், அறை விளக்கைப் போட, மனைவி அவன் அறையில் துயில் கொண்டிருந்தாள். இதழ்களில் புன்னகை பூத்தது. உடை மாற்றி வந்து விளக்கை அணைத்து விட்டு அவன் படுத்ததும், அவனருகில் நெருங்கி படுத்தாள் பெண். அவன் மார்பில் தலையை வைத்தவள், “சாரி, உங்க கிட்ட சொல்லாம அழகர் மாமா, சாந்தி அத்தைக்கு கல்யாணம் பண்ணதுக்கு!” என்றவளுக்கு எந்த பதிலும் கூறவில்லை ஆடவன். ஆனால், அவன் கைகள் மனைவியை அணைத்துக் கொண்டது.
“கோபமா இருக்கீங்களா?” என மீண்டும் கேட்டாள் நிவி. தவிப்புடன் கணவன் முகத்தை ஏறிட்டாள். “ஆமா! கோபம் இருந்துச்சு தான். ஆனால், சாந்தி மா முகத்துல சந்தோஷத்தை பார்த்ததும் கோபம் போய்டுச்சு!” விழிகளை திறக்காமலே கூறிய கணவனின் பதிலில் மனம் மகிழ்ந்தவள், அவனோடு ஒன்றிப் படுக்க, அவள் சாய தோதாக இறங்கிப் படுத்தான். அவன் கரத்தில் தன் தலையை வைத்து விழிகளை மூடியவ
ளுக்கு இன்றும் புரியாதது சாந்திக்கும் சந்தருவுக்குமான நேசம்? எங்கு பிணைக்கப்பட்டது? எந்த நூலிழையில் பிணைக்கப்பட்டது என்பது தான்.