அறைக்குள்ளே நுழைந்த சந்த்ரு, “உன் வேலை தானே டி இது?” என பல்லைக் கடித்துக் கொண்டு வினவ, “ஆமா! நான் தான் அந்த போட்டோவை மாட்டுனேன். ஏன் நல்லா இல்லையா? க்ளியரா தானே இருக்கு?” என நிவி நக்கலாக கூறினாள்.
“எனக்கு பிடிக்கலை. அதை இப்போ போய் கழட்டுற!” என்றான்.
“இல்லை, அந்த போட்டோ அங்க தான் இருக்கும். அப்படி இல்லைன்னா, நம்ம பெட்ரூம் உள்ள கூட மாட்டிக்கலாம். நோ ப்ராப்ளம்!” என கூறிய நிவி அறையிலிருந்து வெளியேற, அவளது இதழ்கள் அந்த புகைப்படத்தை பார்த்து புன்னகைத்தன. அவளுக்கு பிரசவ வலி வந்து மருத்துவமனையில் சேர்ந்திருந்த அன்று, சந்த்ரு யுகியை கட்டி அணைத்த புகைப்படம். வித்யா நிவிக்கு அதை அனுப்பி இருக்க, ஊரிலிருந்து அதை சுவரில் மாட்டும் படி பெரிதாக்கி எடுத்து வந்திருந்தாள்.
வீட்டிற்கு வந்த கையுடன் புகைப்படத்தை கூடத்தில் மாட்டி வைத்து விட்டாள். உள்ளே நுழைந்த சந்த்ருவின் கண்களில் முதலில் புகைப்படம் தான் பட்டது. அதனால் தான் கோபமாக பேசினான்.
படத்தை பார்க்க பார்க்க தெவிட்டவில்லை நிவேதாவிற்கு. உதட்டில் புன்னகையுடன் நீள்விருக்கையில் அமர, “ஏன் நிவிக்கா, வந்ததும் வராததுமா மாமாவை கோபப்படுத்துறீங்க?” என வினவிக் கொண்டே தேநீரை பருகினாள் வித்யா.
“ஏன் நிவி இப்படி? பாரு அவன் கோபமா இருக்கான்?” என சாந்தி கேட்க, அவள் பதிலளிக்கும் முன், “அவன் கோபம் எல்லாம் எவ்ளோ நேரம்னு பார்த்துக்கலாம். விடுங்க கா!” என்றார் ஆனந்தி.
“சரியா சொன்னீங்க அத்தை. நீங்களாவது எனக்கு சப்போர்ட் பண்றீங்களே!” என அலுத்துக் கொண்டாள் நிவி. அழகர் அவர்கள் பேச்சில் தலையிடாது புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தார். நிவி புகைப்படம் மாட்டியதும் மனிதர் அத்தனை மகிழ்ந்து போனார்.
அறைக்குள் கோபமாக அமர்ந்திருந்த சந்த்ருவை குழந்தை அழுது கலைக்க, எழுந்து அவளிடம் சென்றான். பிரதியின் சிணுங்கிய முகத்தைப் பார்த்ததும் மனைவியின் மீதிருந்த கோபம் பின்னுக்கு சென்று விட்டது.
“பிரதி குட்டி, அப்பாவை மீஸ் பண்ணீங்களா?” என கேட்டு குழந்தையை தூக்கி கொஞ்ச ஆரம்பித்தான். நிவி அறைக்குள் வர, அவளை கண்டு கொள்ளவே இல்லை ஆடவன். அவளும் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.
அலுவலகம் முடிந்து வந்த யுகேத்திரன் கூடத்தில் இருக்கும் புகைப்படத்தை பார்த்து புருவத்தை தூக்கினான். பின் ஒன்றும் சொல்லாமல் அறைக்கு சென்று விட்டான்.
“என்னக்கா, ரியாக்ஷனே இல்லை?” சிரிப்புடன் வித்யா வினவ, “எனக்கு தெரியும் என் யுகி மாமாவை. அவர் எதுவும் சொல்ல மாட்டார்னு!” என்ற நிவி யுகியுடன் பேச சென்று விட்டாள். தினமும் சந்த்ருவிடம் பேசிவிட்டு, யுகிக்கும் நாள் தவறாமல் அழைத்து பேசி விடுவாள். இருந்தும் அவனிடம் கூற ஆயிரம் கதை இருந்தது பெண்ணிடம். யுகி உடை மாற்றி விட்டு கட்டிலில் அமர, நிவி அவனுடன் கதையளக்க துவங்கினாள். புன்னகையுடன் தலையை ஆட்டிக் கொண்டே கேட்டுக் கொண்டிருந்தான் யுகேந்திரன்.
“அக்கா, சாப்ட்டு வந்து பேசுவீங்களாம்! அத்தை சாப்ட கூப்ட்டாங்க!” என வித்யா அழைக்க, அனைவரும் இரவு உணவை உண்டு முடித்தனர். சந்த்ரு அப்போதும் முறைத்துக் கொண்டே தான் உண்டான்.
அவன் தங்களது அறைக்குள் செல்ல, நிவி மீண்டும் யுகி அறைக்கு தான் சென்றாள். வித்யாவும் வர, சிறிது நேரம் பேசிவிட்டு தன்னறைக்குள் பெண் நுழைய, குழந்தையை அப்போது தான் உறங்கினாள் போல. அவளருகில் அமர்ந்திருந்தான் சந்த்ரு. அவனிடம் எதுவும் பேசாதவள், விளக்கை அணைத்து விட்டு படுக்க, ஆடவனும் படுத்தான்.
மௌனம் அந்த இடத்தை ஆட்சி செய்ய, நிவி திரும்பி கணவனைப் பார்த்தாள். அவளை முறைத்தான். சிரிப்பு வந்தது பெண்ணுக்கு. அவனருகில் ஒட்டிப் படுத்தாள். சந்த்ரு தள்ளிப் படுக்க, அவனை மீண்டும் ஒட்டிப் படுத்தாள்.
“தள்ளி போடி!” சந்த்ரு கடுகடுக்க, “முடியாது! என் புருஷன். அப்படி தான் படுப்பேன்” என அவன் மீது கையை போட்டாள்.
“எனக்கு பிடிக்கலை!” என அவள் கையை வெடுக்கென சந்த்ரு தட்டி விட, “ரொம்ப தான் பண்றீங்க?” என முறைத்து விட்டு அவனை விட்டு தள்ளி கட்டிலின் முனையில்
மறுபுறம் திரும்பி படுத்துக் கொண்டாள் நிவி. சில நொடிகள் கழிய, அவளது இடையில் கைக்கொடுத்து தன் புறம் இழுத்தான்.
“என்ன? அதான் கோபமா இருக்கீங்களே!” பெண் உதட்டை சுழிக்க,
“எனக்கு பிடிக்காததை செய்றதே உனக்கு வேலை!” என வலிக்கும் படி அவள் உதட்டை பிடித்து இழுத்தான்.
அவன் கையை தட்டி விட்டவள், “உங்களுக்கு பிடிக்காததுன்னு ஏன் நினைக்குறீங்க? எனக்கு பிடிச்சதை செய்றேன். என்னை பிடிச்ச உங்களுக்கு, எனக்கு பிடிச்சதையும் பிடிச்சவங்களையும் பிடிக்கணும்!” என கூற, “வாய்! வாய்!” என பெண் உதட்டை விரல்களால் அளந்தவன், தன் உதட்டை அவள் உதட்டில் பொருத்தினான்.
அழுத்தமாக முத்தமிட்டவன், அவள் உதட்டை கடித்து வைக்க, “ஆ… வலிக்குது!” என அலறினாள் நிவி.
“நீ செஞ்ச தப்புக்கு தண்டனை டி!” என்றவன் மீண்டும் அவள் உதட்டில் முத்தமிட்டான். இப்போது மென்மையாக அவளது உதட்டை சுவைத்தான். கோபம் தாபமாக மாறியிருக்க, மோகம் அவர்களை ஆளத் துவங்கி இருந்தது. ஆடவனின் கைகளும் உதடுகளும் அவளில் அலைபாய்ந்து அத்துமீற துவங்கியது. இத்தனை நாட்கள் பிரிந்திருந்த பிரிவை எல்லாம் சேர்த்து அவளை வதைத்தான் ஆடவன். பெண் சிணுங்கி, வெட்கப்பட்டு, களைத்து அவன் மார்பிலே உறங்கிப் போக, ஆடவனும் புன்னகையுடன் உறங்கிப் போனான். அவர்களுக்கு இடையிலிருந்த ஊடல் எல்லாவற்றையும் கூடல் அடித்துச் சென்று விட்டது.
மறுநாள் காலையில் எழுந்த சந்த்ரு புகைப்படத்தை பார்த்தாலும் எதுவும் கூறவில்லை. அதில் நிவிக்கு புன்னகை அரும்பியது.
மாலை அலுவலகம் முடிந்து வந்த யுகி வித்யாவை அழைத்துக் கொண்டு வெளியே சென்று வந்தான். வீட்டிற்குள் நுழைந்தவர்களின் முகம் அத்தனையாய் நிறைந்திருந்தது.
வித்யா தன் கர்ப்பத்தை உறுதி செய்து வந்திருப்பதாக கூற, அனைவரும் அகமகிழ்ந்து போயினர்.
“ரொம்ப சந்தோஷமா இருக்கு யுகிப்பா!” என சாந்தி மகனின் கையை பிடித்துக் கொண்டார்.
“என்னை மறுபடியும் அம்மாச்சியாக்கிட்ட யுகி!” ஆனந்தி தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்த, வார்த்தைகளால் தன் உணர்வை வெளிப்படுத்த முடியாது சந்தோஷத்தில் திளைத்து இருந்தார் அழகர்.
“என்ன மாமா, பையனை வச்ச கண்ணு வாங்காம பார்க்குறீங்க?” என நிவி கிண்டலடிக்க, அதற்கும் அவர் பார்வை மாறவில்லை. மகனை பாசமாக ஏக்கமாக பார்த்தார் மனிதர். யுகி கண்ணுக்கு அது தெரிந்தாலும், அமைதியாய் நின்றான்.
“மாமா… வாங்க!” என நிவி தான் யுகியை இழுத்துக் கொண்டு வந்து அழகரிடம் நிறுத்த, “ரொம்ப சந்தோஷம் பா!” என யுகியின் தலையில் கைவைத்தவர், அவன் கைகளை பிடித்துக் கொண்டார். அவர் முகத்தில் தெரிந்த உணர்வுகளைப் படித்தவன், தலையை மட்டும் அசைத்தான்.
சந்த்ரு எதுவும் கூறவில்லை. ஆனால், அவனது உதட்டிலும் புன்னகை.
“இனிமே ஓடியாடி வேலை செய்ய கூடாது வித்யா. மெதுவா நடக்கணும்!” என ஆனந்தி பாடம் எடுக்க துவங்க, நிவி அவர்களை பார்த்து சிரித்தாள்.
“நான் அம்மா, அப்பா கிட்ட சொல்ல போறேன்!” என அலைபேசியை எடுத்துக் கொண்டு தனியாக சென்றவள், வீரபாண்டியிடமும் ஜோதியிடமும் கூறி மகிழ்ந்து போனாள்.
வித்யா தன் பெற்றவர்களிடம் தன்னுடைய கர்ப்பத்தை பகிர அழைப்பு விடுக்க, கோகிலா அவள் பேசியதை கூட கேட்காது திட்டி அழைப்பை துண்டித்து விட்டார். அவரில்லாத நேரம் விஜய் அவளுக்கு அழைத்து தன் மகிழ்ச்சியை தெரியப்படுத்தினான். இருந்தும் பெற்றவர்கள் உதாசீனம் அவளை அதிகமாக வருந்தச் செய்தது.
இரவு தூங்க செல்லும் நேரம் தன்னருகே சோர்வாக அமர்ந்திருந்த மனைவியை பார்த்தவன், “என்னாச்சு டி? எதுவும் பண்ணுதா?” என அக்கறையாக வினவினான்.
வித்யா தலையை தன் தோளில் சாய்த்து, அவள் கைகளுடன் தன்னுடைய கரங்களை பிணைத்துக் கொண்டான்.
“அவங்களுக்கு கொஞ்சம் டைம் எடுக்கலாம் நம்மளை அக்செப்ட் பண்ண. போக போக எல்லாம் சரியாகிடும்!” பொய் என தெரிந்தும் மனைவிக்காக அதை கூறினான். கோகிலா இந்த ஜென்மத்தில் தங்களை ஏற்றுக் கொள்வார் என அவனுக்கு நம்பிக்கை இல்லை.
நாட்கள் வேகவேகமாக நகர்ந்தது. வித்யா எல்லோருடைய அன்பான கவனிப்பிலும் திக்கு முக்காடி போனாள். இரண்டு மாமியார்களும் கையில் வைத்து தாங்க, நிவி வித்யாவை அதீத அக்கறையுடன் பார்த்துக் கொண்டாள். வித்யா மீதிருந்த பிரியம் ஒரு புறம் என்றாலும், அது அவளுடைய யுகி மாமாவின் குழந்தையாகிற்றே!
தாய் தந்தை தன்னை கவனிக்கவில்லை என்ற குறையிருக்க கூடாது என நிவி தன் பெற்றவர்களை அழைத்து வித்யாவிற்கு வளைகாப்பு செய்ய சொல்ல, அவர்களும் பாசத்துடன் செய்தனர். ஊரையே கூட்டி அத்தனை சிறப்பாக வளைகாப்பு முடிய, அடுத்த சில மாதங்களில் அழகான ஆண் குழந்தையை ஈன்றெடுத்தாள் வித்யா.
எல்லோரும் குழந்தையை தூக்கி கொஞ்சி, முத்தமிட்டு, உச்சி நுகர்ந்து என தங்களது மகிழ்வை வெளிப்படுத்த, யுகி அன்று முழுவதும் குழந்தையின் பிஞ்சு கரங்கைளையும் பட்டுக் கன்னங்களையும் தொட்டு தொட்டு மகிழ்ந்து போனான். வார்த்தைகளால் வடிக்க முடியாத உணர்வு. குழந்தை அப்படியே வித்யாவை போல நிறம், ஆனால் முக ஜாடை யுகியை உரித்து வைத்திருந்தான். வித்யாவின் வீட்டிலிருந்து பெரியவர்கள் இருவரும் வரவில்லை. விஜய் மட்டும் வந்து தன் அக்கா மகனைப் பார்த்து கொஞ்சி, தன் சேமிப்பில் வாங்கிய மோதிரத்தை குழந்தைக்கு அணிவிக்க, வித்யாவிற்கு விழிகளில் நீர் தேங்கி விட்டது.
ஒரு மாதம் கழித்து உறவினர்களை அழைத்து குழந்தைக்கு பெயர் சூட்டும் விழாவை வைத்தார்கள் வீட்டு பெரியவர்கள். எல்லோரும் சேர்ந்து கிஷன் என பெயரை சூட்டி மகிழ்ந்தனர்.
அத்தனை மகிழ்ச்சியாக வாழ்க்கை நகர துவங்கி இருந்தது அனைவருக்கும். பெரியவர்களுக்கு தங்களது பேரன் பேத்தியுடன் நாட்கள் ரம்மியமாக சென்றது.
நிவி முன்பு போலவே சந்த்ருவுடன் அலுவலகம் செல்ல துவங்கி இருந்தாள். வித்யா குழந்தைக்கு ஒரு வயது முடிந்த பிறகு வேலையை தொடரலாம் என்று விட்டாள்.
யுகிக்கு தன் குழந்தையுடனும் மனைவியுடனும் நாட்கள் நகர, அவ்வப்போது வேலையும் அவனை இழுத்து சுருட்டிக் கொள்ளும். மாதத்தில் ஒரு முறை திருச்சி சென்று, அங்கிருந்த வேலையும் பார்த்துக் கொண்டான். முடிந்த அளவு குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டான்.
சந்தருவிற்கு நாட்கள் பிரதியுடன் சென்றது. தினமும் மகளை வெளியே அழைத்து சென்று, அவள் கை நீட்டும் அனைத்தையும் வாங்கி கொடுத்து மனைவியின் முறைப்பை பரிசாக பெற்றுக் கொண்டான்.
கிஷனும் இரண்டு வயதை அடைய, பிரதிக்கு அப்போது தான் நான்கு முடிந்து ஐந்து வயது துவக்கமாகியிருந்தது. தினமும் இரண்டு தந்தைமார்களும் குழந்தைகளுக்கு எதையாவது வாங்கி வருவார்கள். தங்களுக்கு இடையில் பிரிவு இருந்த போதும், அதை ஒரு போதும் குழந்தையிடம் காண்பிக்கவில்லை இருவரும். சந்த்ருவும் சரி, யுகியும் சரி, இரண்டு குழந்தைகளையும் தங்களது குழந்தை போல தான் பார்த்துக் கொண்டனர்.
குழந்தைகளும் சித்தப்பா பெரியப்பா என்றில்லாமல், சந்தருப்பா, யுகிப்பா என அழைத்து தான் பழகியிருந்தனர். பிரதி எதாவது சேட்டை செய்தால் நிவி அவளை சத்தம் போட, உடனே யுகிப்பா என அவனிடம் ஓடிவிடுவாள் குழந்தை.
யுகி என்ன ஏது என்று கூட விசாரிக்காமல் நிவியிடம் சண்டைக்கு சென்று விடுவான். குழந்தை கை தட்டி சிரிப்பாள் அதைப் பார்த்து.
வித்யா தன்னை திட்டி விட்டால், கிஷன் குட்டியும் சந்த்ருப்பா என அவனிடம் முறையிடுவான். மொத்தத்தில் குழந்தைகளுடன் நாட்கள் அத்தனை மகிழ்ச்சியாக நிறைவாக சென்று கொண்டிருந்தது குடும்பத்தாருக்கு.
அன்று அலுவலகம் முடிந்து வந்த சந்த்ரு, குழந்தைகளுக்கு பொம்மையும் இனிப்பும் வாங்கி வர, “சந்த்ருப்பா…” என கிஷன் குட்டி தத்தி தத்தி வர, “ப்பா…” என பிரதியும் அவனை தொத்திக் கொள்ள, இருவரையும் கைகளில் அள்ளிக் கொண்டவன், நீள்விருக்கையில் அமர்ந்தான்.
“சாக்லேட் சாப்டுங்க கிஷன் குட்டி!” என அவனுக்கு இனிப்பை பிரித்துக் கொடுத்தவன், பிரதிக்கும் கொடுத்தான்.
இனிப்பை உண்டு கொண்டே அவனுக்கு பின்னே வைத்திருந்த பொம்மையை பிரதி எட்டிப் பார்க்க, அதில் சந்தருவுக்கு இதழ்கள் பெரிதாக மலர்ந்தன. அதை கையில் எடுத்தவன், “என் செல்ல குட்டி ஏரோப்ளேன் கேட்டீங்க இல்லை?” என அவளிடம் ஒன்றை கொடுத்தவன், கிஷனிடம் மற்றொன்றை கொடுத்தான்.
“ப்பா… தேங்க்ஸ்!” என பிரதி அதை பிரித்துப் பார்த்து மகிழ்ந்து போனாள். அதை பறக்க விட்டு, சந்தரு நெற்றியை பதம் பார்த்து விட்டாள்.
“பிரதி, அப்பா மேல படுது பாரு. மெதுவா விளையாடு!” என நிவி அதட்டுப் போட, குழந்தை அமைதியாக விளையாட துவங்கினாள்.
“ப்பா… ப்பா!” கிஷன் விளையாட தெரியாது தடுமாற, அவனை மடியில் தூக்கி வைத்து சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தான் சந்த்ரு.
யுகேந்திரன் உள்ளே நுழைய, அவனைப் பார்த்த மகிழ்ச்சியில் பிரதி கையிலிருந்த பொம்மையை கீழே போட்டு விட்டு, “யுகிப்பா…” என அவன் மீது தாவ, குழந்தையை கைகளில் அள்ளிக் கொண்டான். பிரதியை கவனித்துக் கொண்டிருந்த சந்த்ரு, ‘என் புள்ளையும் பொண்டாட்டியும் மயக்கி வச்சுருக்கான்!’ என முணுமுணுத்துக் கொண்டே கிஷனை தூக்கிக் கொண்டு அறைக்குள் சென்று விட்டான்.
“பிரதி குட்டி, சந்த்ருப்பா ஆசையா வாங்கிக் கொடுத்த பொம்மையை அப்படியே போட்டுட்டு வரலாமா? தப்பு இல்லை?” என கேட்டு குனிந்து அதை எடுத்தான்.
அது சரியாக வேலை செய்கிறதா? என பார்த்து விட்டு, மேஜை மீது வைத்தான். “சாரி ப்பா!” என குழந்தை அவன் கன்னத்தில் முத்தமிட, அதில் அவன் இதழ்கள் புன்னகைத்தன.
“என்கிட்ட கேட்க கூடாது. போய் சந்த்ருப்பா கிட்டே கேட்கணும்!” என குழந்தையை இறக்கி விட்டு தன்னறைக்குள் நுழைந்தான்.
பிரதி தன்னை நோக்கி வருவதை கண்டு கொள்ளாமல், சந்த்ரு முகத்தை திருப்பிக் கொண்டான். “ப்பா… சாரிப்பா!”. குழந்தை அவன் முன்னே நிற்க, மறுபுறம் திரும்பி கிஷனுடன் விளையாட, “ப்பா…” என சிணுங்கியவள், கடினப்பட்டு கட்டிலில் ஏறி அவன் மீதேறினாள்.
“சாரி ப்பா… எனக்கு சந்த்ரு அப்பாவை மட்டும் தான் ரொம்ப பிடிக்கும்!” என அவன் கன்னத்தில் முத்தமிட்டாள்.
குழந்தையை தூக்கி கொஞ்சியவன், “உனக்கு யுகி அப்பாவையும் பிடிக்கலாம். ரொம்ப பிடிக்கலாம். தப்பு இல்லை!” என்ற சந்த்ருவின் முகம் புன்னகையை பூசியிருந்தது யுகியை நினைத்து. கடந்த நான்கைந்து வருட வாழ்க்கை சந்த்ருவுக்கும் யுகிக்கும் இடையில் ஒரு சிறிய புரிதலை விதைத்திருக்க, அது விருட்சமாக எதிர்காலத்தில் வளரலாம். யுகியுடன் ஒரே வீட்டில் தங்குவது ஆரம்பத்தில் பிடிக்கவில்லை அவனையும் பிடிக்கவில்லை என நினைத்துக் கொண்டு சுற்றிய சந்த்ருவிற்கு யுகியின் மீதான பிம்பங்கள் எல்லாம் சுக்கு சுக்காகிப் போனது உண்மை.
யுகி சந்த்ருவுடன் பேச தயாராக இருந்தாலும், சந்த்ரு தான் முறுக்கிக் கொண்டு திரிகிறான். முன்பு போல இருவருக்கும் இடையில் முறைப்புகள் எல்லாம் இல்லவே இல்லை. ஆனால், எதோ ஒன்று சந்த்ருவை பேசவிடாமல் தடுக்க, கண்டிப்பாக பிற்காலத்தில் அவர்களுக்கான உறவு பலப்படலாம். அது யுகியின் குணத்தால் விளைந்ததாக இருக்கலாம். இல்லை இரண்டு மனைவிமார்களின் செயல்களின் பலனாக கூட இருக்கலாம்.
“தேங்க்ஸ் அப்பா!” என்ற பிரதி அவனிடமிருந்து குதித்துக் கொண்டு யுகியிடம் விரைந்தாள்.
“யுகி ப்பா… தூக்கு!” என கையை நீட்ட, யுகி அவளை தூக்கினான். “எனக்கு யுகிப்பாவை ரொம்ப ரொம்ப பிடிக்கலாம். தப்பில்லை!” என சந்த்ரு கூறியதை அச்சுப் பிசகாமல் குழந்தை கூற, யுகியின் புன்னகை அதிகமாக விரிந்தது. அது சந்த்ரு கொடுத்த வார்த்தையின் பரிசு. தன் அறைக்குள் அமர்ந்திருந்த சந்த்ருவுக்கும் முகமெல்லாம் புன்னகை. அவனுக்கு தெரியும், தான் கூறியதை அப்படியே குழந்தை யுகியிடம் கூறுவாள் என்று. அதனால் தான் பிரதியிடம் அப்படி பேசினான்.
நடப்பதை எல்லாம் கவனித்துக் கொண்டிருந்த நிவிக்கு விழிகள் லேசாக பனித்தது. கதவில் சாய்ந்து கொண்டே கணவனை புன்னகையுடன் பார்க்க, அவள் பார்த்ததும் முகத்தை திருப்பிக் கொண்டான். ஆனால், அவன் அறியாதது மனைவி தன்னை அறிவாள் என்று. சில நொடிகள் அவன் முகத்தைப் பார்த்தவளின் விழிகள் பின், கூடத்திலிருந்து தன்னவர்கள் இருவரின் புகைப்படத்தில் நிலைத்தது.
மீண்டும் இது போல ஒரு புகைப்படம் கண்டிப்பாக எடுக்க வேண்டும் என நினைத்துக் கொண்டாள். நிவியின் நம்பிக்கை கண்டிப்பாக நிறைவேறலாம்! சந்த்ருவும் யுகியும் ஒருவருக்கொருவர் தங்களை புரிந்து கொள்ளலாம். தங்களுக்கு இடையே உள்ள பிணக்குகளை பேசி தீர்த்துக் கொள்ளலாம். தங்களை ஆரத்தழுவி புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம். இதெல்லாம் காலத்தின் பிடியில் தான் உள்ளது. அவர்கள் உறவு எதிர்காலத்தில் பிரிக்க முடியாததாக மாற நாமும் வேண்டிக் கொண்டு விடை பெறுவோம்.