சென்னை எழும்பூர் தொடர்வண்டி நிலையம், காலை நேர பரபரப்பை சற்றே தத்தெடுக்காமல் வார இறுதி போல காண்போரை அலைக்கழிக்க மனமின்றி ஆமை போல அமைதியாக நகர்ந்து கொண்டிருக்க, அதன் ஓட்டத்துடன் தன் கையில் ஒரு பையை தவழ விட்டு, வேடிக்கைப் பார்த்துக் கொண்டே வந்தாள் நிவேதா.
தலை முதல் கால் வரை போர்வையை போர்த்தியும் குளிரில் நடுங்கிக் கொண்டிருந்த ஒரு பெண்மணியின் மீது சற்றே இரக்கம் தோன்ற, நொடிகள் அதிகமாக கடந்து அவர்களில் பார்வை நிலைத்தது. இருந்தும் தன்னால் எதுவும் செய்ய இயலாது என மனதை சமன்படுத்திக் கொண்டே இரண்டு எட்டுகள் அவள் வைக்க, பெற்றவர்கள் அவள் பின்னே நடந்து வந்து கொண்டிருந்தனர்.
“நிவி, இப்படி உட்கார். காபியை குடிச்சுட்டு போகலாம்!” தன் சட்டையின் ஒரு கையை தளரவிட்டுக் கொண்டே அருகில் இருந்த கல்மேஜையில் அமர்ந்தான் யுகேந்திரன்.
“அத்தை, மாமா!” அவர்களை அழைத்தவன், காகித குவளையில் சுடசுட குளம்பியை கொடுக்க, பெரியவர்கள் ஒரு ஓரமாக அமர்ந்து குடிக்க துவங்கினர்.
இரவு சரியாக தூங்காததால் கண்கள் சற்றே சிவந்து வீங்கியிருக்க, “என்ன இப்படி கண்ணெல்லாம் வீங்கியிருக்கு?” என கேட்டுக் கொண்டே அவளுக்கும் தனக்குமான குளம்பியை குவளையில் ஊற்றினான் யுகி.
“ம்ப்ச்… ட்ராவலை ரசிக்காம யாராவது தூங்குவாங்களா மாமா? நைட் செம்மையா இருந்துச்சு!” படுத்ததும் அசதியில் யுகி உறங்கி விட, நிவி கண்கள் ஜன்னல் வழியே வெளியே தெரியும் இயற்கையின் எழிலை கண்களால் பருகிக் கொண்டிருந்தது.
தலையை ஆட்டியவன் கடைசி சொட்டு குளம்பியை உறுஞ்சிக் குடிக்கவும் அவன் அலைபேசி அழைக்கவும் சரியாக இருந்தது. அதை ஏற்றவன், “ஓகே அண்ணா, நீங்க வெளியே வசந்தபவன் கிட்டே நில்லுங்க. நாங்க வர்றோம்” என கூறி அழைப்பை துண்டிக்க, நால்வரும் யுகி குறிப்பிட்ட உணவு விடுதியின் முன்னே நிற்கும் மகிழுந்தில் ஏறினர்.
இதோ அதோ என்று காலை நேரத்தின் போக்குவரத்து நெரிசலில் வளைந்து நெளிந்து நாற்பது நிமிட பயணத்தில் அவர்கள் சைதாப்பேட்டையை அடைந்தனர். கார்னீஸ்வரர் கோவிலில் இருந்து இரண்டாவது சந்தின் துவக்கத்தில் ஊதா வண்ணத்தில் சிரித்துக் கொண்டிருந்தது அந்த வீடு.
“இதான் சார் நீங்க சொன்ன அட்ரஸ்” ஓட்டுநர் கூறியதும் தலையை அசைத்து அவருக்கான பணத்தை கொடுத்த யுகி கீழே இருந்த வீட்டின் அழைப்பு மணியை அழுத்தினான்.
நடுத்தர வயதுடைய மனிதர் ஒருவர் கதவை திறந்து இவர்களைப் பார்த்து கேள்வியாக புருவத்தை உயர்த்த, தன்னை அறிமுகம் செய்துக் கொண்ட யுகி, தான் வந்த நோக்கத்தைக் கூறினான்.
“வாங்க சார்!” என்ற வீட்டின் உரிமையாளர் மேலே உள்ள இருப்பிடத்தின் சாவியை எடுத்துக் கொண்டு மேலேற, அவர்களுடன் யுகி செல்ல, அவள் பின்னே மூவரும் நுழைந்தனர்.
“சார், ரெண்டு பெட் ரூம், அட்டாச் பாத்ரூம், தண்ணீர் ஒரு நாளைக்கு காலை அண்ட் ஈவ்னிங் ரெண்டு தடவை தான் மோட்டர் போடுவோம். அதுக்கு மேல போட மாட்டோம். உங்களோட கரெண்ட் பில் தனி தான். நீங்க முதல்லயே ஒருத்தவங்க தான் வருவாங்க, கெஸ்ட்டு எப்போதாவது வருவாங்கன்னு சொல்றீங்க. சோ அந்த டைம்ல ரென்ட் அதிகமாகும்.” என சிரிக்க முயன்று அசல் சென்னை வீட்டின் உரிமையாளர் என தன்னை தம்பட்டம் அடிக்காத குறையாக மேலும் சில பல விதிமுறைகளை அவர் கூற, நிவி தான் அத்தனை ஆச்சர்யமாகப் பார்த்தாள்.
“ஓகே சார்!” வீட்டின் உரிமையாளர் சொன்ன அன்னைத்தையும் ஒப்புக் கொண்டு யுகி முன்பணத்தை கொடுத்து அவரை வெளியே அனுப்பி விட்டு வந்தான்.
“மாமா, வீட்டை வாடகைக்கு தானே விட்றாங்க. என்னமோ விக்கப் போற போல பேசுறாங்களே!” நிவி கேட்க,
“ரொம்ப கறாரான ஆளா இருப்பார் போலயே யுகி?” ஜோதி தன் பங்குக்கு வினவினார்.
“நிறைய ரூல்ஸ் இருக்கே!” எப்போதும் அமைதியாக இருக்கும் வீரபாண்டி கூட கேள்வியாக பார்த்தார்.
சுத்தமாக இருந்த தரையில் நிவி தான் கொண்டு வந்த பாயை விரிக்க, அதில் சுவற்றை ஒட்டி சாய்ந்து சட்டையை பின்பக்கமாக இழுத்து விட்டான் யுகி.
“மாமா, சென்னைல வாடகைக்கு வீடு கிடைக்குறது ரொம்ப கஷ்டம். அதுவும் இவளுக்கு வொர்க்கிங் பிளேஸ்லயே கிடைக்குறது ரொம்பவே கஷ்டம். இங்க எதோ அதிசயமா கிடைச்சுருச்சு. இதெல்லாம் நார்மலான ரூல்ஸ் தான்!” சென்னையின் சட்ட திட்டங்களைப் பற்றி தனக்கு தெரிந்தவற்றை கூறினான். இது இப்படி தான் என மூவரும் மனதில் பதித்துக் கொண்டனர்.
பயண அலுப்பு தீர வேண்டும் என சற்று நேரம் ஓய்வெடுத்தவர்கள், மாலை அருகில் உள்ள கோவிலுக்கு சென்று வந்தனர். இன்னும் நான்கு நாட்கள் கழித்து தான் நிவி வேலையில் சேர வேண்டும். எனவே இரண்டு நாட்கள் தங்கிவிட்டு மற்றவர்கள் புறப்படலாம் என்ற எண்ணத்தில் தான் வந்தனர்.
முதல் நாள் காலையிலே சென்னையின் மெரீனா கடற்கரை அவர்களை அன்போடு அணைத்துக் கொண்டது. கையிலிருந்த மிளகாய் பச்சியின் காரத்தை சுவைத்துக் கொண்டே கடற்கரை மண்ணில் கால் புதைய நடந்து கொண்டிருந்தனர் இளையவர்கள் இருவரும். வீரபாண்டியும் நாகஜோதியும் ஓரிடத்தில் அமர்ந்து விட்டனர்.
ஒரு முனையிலிருந்து மற்ற முனை வரை காலார நடந்த நிவேதா, “சென்னை ரொம்ப மோசம் இல்லை மாமா. நல்லா தான் இருக்கு” தான் பார்த்த இரண்டு நாட்கள் காட்சிகளை வைத்து கூறியவளின் உதட்டில் லேசான புன்னகை.
தலையை அசைத்தவன், “எல்லா இடத்திலும் கெட்டவங்க, நல்லவங்க இருப்பாங்க நிவி. நம்ம பார்க்குறதுல தான் இருக்கு. எல்லாத்தையும் பாசிட்டீவா அப்ரோச் பண்ணு. எதுனாலும் எனக்கு முதல்ல போன் பண்ணிடு டி” என்றான் யுகி.
“உனக்கு பண்ணாம யாருக்கு மாமா கால் பண்ணுவேன்?” கேள்வி கேட்டவள், பஜ்ஜி சாப்பிட்ட காகித்தில் கையை துடைத்துவிட்டு அதை தூக்கியெறிந்தாள். பின் யுகியின் கைகளுடன் தன் கையை கோர்த்துக் கொண்டாள்.
அவள் கையை தட்டிக் கொடுத்தவன், “தனியா எங்கேயும் சுத்த கூடாது டி. ஃப்ரண்ட்ஸ் செட்டாகிடுச்சுன்னா, வெளிய சுத்து. ப்ராப்ளம் இருக்காது.” என்றவன் ஒரு நொடி நிறுத்தி, “இங்க என் ஃப்ரண்ட் மட்டும் தான் இருக்கான். அவனும் அடுத்த வாரம் அப்ராட் போறான். வேற ரிலேட்டீவ் யாரும் இல்லை!” என கூறினான். அவள் பாதுகாப்பே பிரதானமாகப்பட்டது ஆடவனுக்கு.
“மாமா, ஒன்னும் பிரச்சனை இல்லை. நான் எங்கேயும் தனியா போக மாட்டேன். பட், ஒரு கண்டிஷன்!” என குறும்பாக சிரித்தாள் நிவேதா.
“என்னடி? விவகாரமாக எதுவும் கேட்க போறீயா?” லேசான முறைப்பு குரலில் வெளிப்பட்டது ஆடவனுக்கு.
“மந்த்லி டூ டைம்ஸ் என்னை பார்க்க இங்க நீ வரணும். நம்ம அப்போ ஊர் சுத்திக்கலாம்!” கெஞ்சலாக கேட்டவளின் கண்ணிமைகள் அதன் இணையுடன் சேர்ந்து சேர்ந்து விரிந்து அவளது எதிர்பார்ப்பை மின்னிக் காட்டியது. மறுக்கத் தோன்றாது பெருமூச்சை விட்டவனின் ஒரு கை முழங்கையில் சட்டையை மடித்து விட்டுக் கொண்டிருந்தது.
“சரி, பட் ஐ யம் நாட் ஷ்யூர். வொர்க் வந்தா, என்னால வர முடியாம போகலாம். நீ அப்போ கோவிச்சுக்க கூடாது. டீல் ஓகே வா?” யுகி வினவ, அவன் வருகிறேன் என கூறியதே எதிர்பாராத தேன்மிட்டாயை வாயில் வைத்து சுவைக்கும் போது வரும் தித்திப்பை போல இனிக்க, சரியென்பதாய் தலையை அசைத்தவளின் முகம் விகசித்தது.
“சரி, நம்ம அங்க போகலாம். அத்தை, மாமா தேடுவாங்க” பேசிக் கொண்டே யுகி திரும்பிய நேரம், தூரத்தில் ஓடிவந்த இளைஞன் ஒருவன் மோதிவிட்டான்.
நிலைதடுமாறி கீழே விழ சென்ற யுகியை பட்டென பிடித்து இருந்தாள் நிவேதா. “சாரி ப்ரோ, சாரி. சாரி!” மன்னிப்பை வேண்டி தன் முன்னே நின்ற இளைஞனைப் பார்த்து யுகி ‘பரவாயில்லை!’ என்பதாய் தலையை அசைக்க, நிவேதா அவனை அசூயையாய் பார்த்தாள். வயது கிட்ட தட்ட 24 இருக்கும். ‘இந்த வயதில் இப்படியா ஓடி பிடித்து விளையாடுவது? சரி அது கூட தவறில்லை. அடுத்தவர் நடக்கிறார்கள் என்ற கவனம் கூடவா இல்லை?’ என யோசித்தவளின் கண்கள் நொடியில் அவனது தலை முதல் காலில் உள்ள காலணி வரை ஆராய்ந்தது. அவன் கையில் உள்ள கடிகாரமும், கழுத்திலிருந்த மெல்லிய தங்க சங்கிலியும் காலில் உள்ள விலை உயர்ந்த காலணியும் அவனது பகட்டை நொடியில் காட்டியது. எதற்கு ஆராய்ந்தோம் என தெரியாமல் பார்வையை அவள் விலக்கிக் கொள்ள, கணநேரம் என்றாலும் ஒரு பெண்ணின் பார்வை தன்னை துளைத்ததை அந்த வாலிபன் உணர, அவள் முகத்தை ஒரு நொடி சந்தித்து மீண்டன அவன் விழிகள்.
“டேய் சந்த்ரு! டைமாச்சு. வா டா!” என அழைத்த நண்பனின் கூற்றுக்கு இரண்டு எட்டுகள் நடந்த சந்த்ரு எனப்பட்ட அந்த வாலிபனின் பார்வை நிவேதாவை ஒரு முறை தழுவ மறக்கவில்லை. வெறும் முப்பது நொடிகளில் இந்த நிகழ்வு நடந்து முடிந்திருந்தது.
யுகி வேறு எதோ பேச்சிற்கு தாவி விட, நிவியும் அந்த வாலிபனை மறந்து போனாள்.
மறுநாள் காலையில் வடபழனி முருகனை தரிசித்து விட்டு, நிவியை வீட்டில் விட்டுவிட்டு மற்ற மூவரும் கிளம்பலாம் என திட்டமிட்ட படியே அன்றைய காலை அவர்களுக்கு முருகன் கோவிலில் தான் விடிந்தது.
யூ வடிவில் நின்ற வரிசை ஏழெட்டு ‘யூ’க்களை தன்னுள் அடக்கியபடி கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறிக் கொண்டிருக்க, மக்கள் அனைவரும் கடவுளை தரிசிக்க காத்திருந்தனர்.
வரிசையில் நின்றிருந்த நிவேதா தலைக்கு மேல உள்ள ராட்சத மின்காற்றாடியை பார்த்து வியந்தாள். சுற்றி சுவற்றிலுள்ள சிற்பங்களிலும் மந்திரங்களிலும் பார்வையை பதித்து இருந்தாள் பெண்.
சிறிது நேரத்தில் கோவில் சந்நிதியை அடைந்தவர்கள் சாமியை தரிசித்து விட்டு பிரசாதத்ததை வாங்கி அமர்ந்தனர்.
“கூட்டம் கம்மி போல இன்னைக்கு. அதான் நம்ம சீக்கிரமா சாமியை பார்க்க முடிஞ்சது!” தன்னை கடந்து செல்லும் பெண்மணியின் குரல் அனைவரது செவியிலும் நுழைய தான் செய்தது.
சிறிது நேரத்தில் நால்வரும் வெளியேற, நாகஜோதியின் சேலையின் நூல் அருகிலிருந்த பெண்மணியின் வளையலில் சிக்கிக் கொள்ள, அப்போது தான் அவர் தன் அருகில் நின்றிருந்த பெண்மணியை கவனித்தார். அதே நேரம் அந்த பெண்ணும் இவரை காண, இருவர் முகமும் யோசனையில் சுருங்கி பின் எதையோ கண்டெடுத்த திருப்தியில் விரிந்து பின் கண்கள் மிளிர்ந்தது.
“ஹே! நீ ஜோதி தானே?” ஆனந்தி சந்தோஷம் மின்ன வினவ, ஜோதி, “ஆனந்தி?” என்றார். நீண்ட நாட்கள் கழித்து கண்ட பள்ளி நட்பில் இருவரும் திளைக்க, “எப்படி இருக்கடி?” என ஆனந்தி ஜோதியின் கைகளைப் பிடித்தார்.
“நான் நல்லா இருக்கேன். நீ எப்படி இருக்க? இங்க எப்படி?” ஜோதி வினவ,
“இங்க தான் என்னை கல்யாணம் பண்ணிக் கொடுத்தாங்க. 25 வருஷமா சென்னை வாழ்க்கை தான்!”
“உன்னை இங்க எதிர்பார்க்கவே இல்லைடி… நீ சென்னை தான்னு ஊருக்குள்ள பேசிப்பாங்க. ஆனால், மத்த எதுவும் தெரியலை!” மேலும் சில பல முகமன் உரையாடல் நிகழ, வீரபாண்டி அமைதியாக மனைவியை பார்த்தார்.
நிவி தன் தாயின் தோழி என பார்க்க, யுகியும் அவர்களை கவனித்தான்.
“இது என் பொண்ணு நிவேதா. இங்க பேங்க்ல வேலை கிடைச்சு இருக்கு. அதான் விட்டுட்டுப் போகலாம்னு வந்தோம்!” ஜோதி தாங்கள் வந்த நோக்கத்தை கூற,
“உன் பொண்ணா இது? நல்லா லட்சணமா இருக்கா!” என நிவேதாவின் கைகளை உரிமையுடன் பற்றிக் கொண்டவரிடம் என்ன பேசுவது என தெரியாமல் விழித்தாள் பெண்.
வீரபாண்டியையும் யுகியையும் ஜோதி அறிமுகம் செய்ய, அவர்களிடம் பேசிய ஆனந்தி, தன்னுடன் அவர்களை வருமாறு அழைத்தார்.
“இல்லை ஆனந்தி, நாங்க ஊருக்குப் போகணும். கண்டிப்பா இன்னொரு நாள் வரோம்!” ஜோதி மறுக்க,
“கொஞ்சம் நேரம் கழிச்சு ஊருக்குப் போனா ஒன்னும் ஆகாது ஜோதி. வீட்டுக்கு வந்து சாப்ட்டு போங்க. அடுத்து எப்ப மீட் பண்ணுவோம்னு தெரியாது! நீங்களாவது சொல்லுங்க அண்ணா!” ஜோதியிடம் ஆரம்பித்து வீரபாண்டியிடம் முடித்தார் ஆனந்தி.
அவர் வற்புறுத்தல் வேலை செய்ய, “சரி, போய்ட்டு வரலாம் ஜோதி” என வீரபாண்டி சம்மதமாக தலையை அசைக்கவும், அனைவரும் ஆனந்தியுடன் புறப்பட்டனர்.
அவர்கள் சென்று நின்றது நுங்கம்பாக்கத்தின் சற்று வசதியானவர்கள் வசிக்கும் பகுதி. அந்த பெரிய வீட்டின் உள்ளே நுழைந்தனர் நிவி குடும்பம்.
“உள்ளே வாங்க!” என்ற ஆனந்தி, “கவிதாக்கா, ஜூஸ் எடுத்துட்டு வாங்க” என வேலைக்கார பெண்மணியை பணித்தார்.
வீட்டின் அமைப்பே அவர்கள் வசதியை எடுத்துக்காட்ட, அந்த நீள்விருக்கை மீது அமர்ந்தாள் நிவி. யுகி அவளை ஒட்டி அமர்ந்தான்.
“இதான் என் வீடு நிவிமா. நீ எங்க தங்கி இருக்க?” இயல்பான அவர் பேச்சில் ஒரு துளி கூட பகட்டின் சாயல் இல்லை. முகத்தில் கனிவும் உதட்டில் மெல்லிய புன்னகையுடன் தன்னிடம் கேள்வி கேட்பவரை பார்த்து சாந்தி நினைவு வந்தது நிவிக்கு. அவரும் எப்போதும் இப்படி தானே?
“என்னம்மா?” ஆனந்தி வினவ,
“நான் இங்க சைதாப்பேட்டைல இருக்கேன். பேங்க் பழவந்தாங்கல்!” என்றவள் அவரை எப்படி அழைப்பது என தெரியாமல் விழிக்க,
“அத்தைன்னு கூப்டு மா!” என்றவர் பழச்சாற்றை வீரபாண்டிக்கும் ஜோதிக்கும் கொடுத்தார்.
நிவி எழ, “இருமா! நானே வரேன்” என அவர்கள் இருவருக்கும் ஆனந்தி பழச்சாற்றை கொடுக்க, அன்பின் வெளிப்பாடாக தெரிந்ததில் அவரது விருந்தோம்பல் இனித்தது.
“ஜோதி, எப்படியும் காலைல சாப்ட்டு இருக்க மாட்டீங்க? அரைமணி நேரத்துல சமைச்சுட்றேன். சாப்ட்டு தான் போகணும்!” அன்பாய் கட்டளையிடும் தோழியை மறுக்க முடியாது ஜோதி அவருடன் சமையலறைக்குள் சென்று விட்டார்.
தன் அறையில் இருந்து வெளிவந்த அழகர்சாமியிடம் ஆனந்தி அனைவரையும் அறிமுகம் செய்தது ஆண்களுக்கு தங்கள் பேச்சின் ஆதியாகி விட, இருவரும் பேச்சில் ஆழந்தனர்.
நிவியும் யுகியும் அந்த வீட்டை நோட்டமிட, “வீடு ரொம்ப பெருசா இருக்குல்ல மாமா?” என வினவிய நிவிக்கு தலையை அசைத்தான் ஆடவன்.
“வாசு, இங்க வா. அவங்களுக்கு வீட்டை சுத்தி காமி” அழகர் சாமி யுகி, நிவியின் பார்வையை கவனித்து கூற, எட்டு வயது சிறுவன் ஒருவன் ஓடிவந்தான்.
“ஐயோ! பரவாயில்லை சார்!” என யுகி கூற, “இவன் என் தங்கச்சி பையன் யுகேந்திரன். ரொம்ப பொறுப்பான பையன்!” என வீரபாண்டி கூறினார்.
“பார்த்தாலே தெரியுது.” என தலையை அசைத்த அழகர்சாமி, “நம்ம வீடு தம்பி. போய் சுத்தி பார்த்துட்டு வாங்க!” என்றார்.
இருவரும் மறுக்காமல் அப்படியே காலர நடக்க, அவர்களுக்கு முன்னே ஓடிய சிறுவன், “இது கெஸ்ட் ரூம். யாராவது வந்தா தங்குவாங்க!” தன் கீச்சுக்குரலில் கூற, அவனை பார்த்து நிவி சிரித்தாள். அந்த வேலைக்கார பெண்மணியின் உறவுக்கார பையன் என மனம் எண்ணிக் கொண்டது.
“மாமா, இந்த ரூம் இன்டீரியர் நல்லா இருக்கு இல்ல?” ஒரு அறையின் உள்ளமைப்பை நிவி குறிப்பிட, இந்த காலத்திற்கு தகுந்த படி நவீனமாக இருந்தது. அவனும் தலையை அசைத்தான்.
அப்படியே மாடியை அவர்கள் சுற்றிப் பார்க்க, “சாப்பாடு ரெடியாகிடுச்சு. அம்மா வர சொன்னாங்க மா!” என கவிதா கூற, இருவரும் கீழே சென்றனர்.
உணவு மேஜை மீது உணவை ஆனந்தி எடுத்து வைக்க, ஜோதியும் அவருக்கு உதவினார். இத்தனை வருடம் பேசாத கதை எல்லாம் பேசி தீர்த்துக் கொண்ட மகிழ்ச்சி இருவர் முகத்திலும் தெரிந்தது.
“வாங்க அண்ணா! வா மா நிவி… நீயும் வாப்பா!” என அனைவரையும் அமர வைத்து ஆனந்தி பரிமாறினார். அழகர்சாமியின் பார்வை வாசலை தொட்டு மீள, “அவன் வெளிய போய்ட்டான்… கொஞ்சம் லேட்டாகும்னு சொன்னான்!” என அவரிடம் உரைத்தவர், “என் பையன் சந்த்ரு… அவனோட ஃப்ரண்ட் ஊர்ல வந்ததால, கிரிக்கெட் மட்டையை தூக்கிட்டுப் போய்ட்டான்!” என புன்னகையுடன் கூறினார்.
சந்த்ரு என்ற பெயரை கேட்டதும் நேற்றைய ஆடவன் ஒரு நொடி தோன்றி மறைய, அவனாக இருக்காது என பெண்மனம் கணக்கிட்டது. ‘ஒரு வேளை ஸ்கூல் படிக்குற பையனா இருப்பானோ? லேட் மேரேஜ் ஆர் லேட்டா குழந்தை பிறந்து இருக்கலாம்!’ மனதின் ஆராய்ச்சி நீண்டு கொண்டே செல்ல, அதன் பாதையை சட்டென உணவிற்கு கொண்டு வந்து உண்டு முடித்தாள்.
“ம்மா… தண்ணீ!” குரலில் சோர்வுடன் கூறிக் கொண்டே தன் காலணியை கழட்டி நிமிரும் அந்த இளைஞனின் முகத்தில் பார்வை நிலைத்தது நிவிக்கு. நேற்றைய அவன் தான், மனம் கூறியது.
அவன் கையிலிருந்த மட்டையை அந்த சிறுவன் ஓடிச் சென்று வாங்க, “ஏய்! க்ளவுஸ் யாரு டா வாங்குவா?” என கேட்டவன் கையுறையை அகற்றி அவனிடம் கொடுக்க, அது அதட்டல் மொழி போல நிவிக்கு தோன்ற, அவன் மீது லேசாக எதிர்மறை எண்ணங்கள் தளிர்விட துவங்கியது.
“மணி, கேட்ச் திஸ்!” கையிலிருந்த எதையோ அந்த சிறுவனை நோக்கி சந்த்ரு எறிய, அந்த பையன் அதை தவறவிட்டு இருந்தான்.
அவன் கையில் லேசாக கிள்ளியவன், அவனிடம் குனிந்து எதையோ முணுமுணுக்க, அந்த பையன் முகம் வாடி விட்டது. முகத்தை அத்தனை அசாதாரணமாக வைத்துக் கொண்டு அந்த பையனை மிரட்டுவது போல தோன்றிய சந்த்ருவை அதற்கு மேல் பார்க்காமல் திரும்பி விட்டாள்.
“இந்தா டா” சந்த்ரு கையில் குளிர்ந்த நீரை கொடுத்த ஆனந்தி, “இது தான் என் பையன் சந்த்ரு. படிச்சு முடிச்சிட்டு அவரோட பிஸ்னஸை பார்த்துக்குறான்!” என்றார். அவரின் கூற்றில் தான் தன்னை சுற்றி அத்தனை பேர் இருப்பது அவனுக்கு உரைக்க, நிமிர்ந்தவனின் விழிகள் ஒரு நொடி நிவேதாவின் விழிகளுடன் சந்தித்து மீண்டது.
அவனை துளியும் மதிக்கவில்லை பெண். அவளது முகத்தில் எதையோ கண்டான். என்ன என மூளை கேட்க, நேற்றிருந்த புன்னகை. நொடியில் விடை கிடைத்தது.
“சந்த்ரு, இது என் ஸ்கூல் ப்ரெண்ட் ஜோதி. அவளோட பொண்ணு நிவேதா. அது அவளோட ரிலேட்டீவ்.” ஒவ்வொருத்தராக ஆனந்தி அறிமுகம் செய்ய, அவர்களைப் பார்த்து புன்னகைத்தான். நிவியின் பெயரை மனம் மனனம் செய்ய துவங்கிய வேளை, அவளைப் பார்த்து சந்த்ருவின் இதழ்கள் சிநேக பாவத்தில் புன்னகைக்க, அதற்கு பதிலுக்கு புன்னகைக்காது உதட்டை பூட்டிக் கொண்டாள் பெண். நெற்றியை சுருக்கியவன், யுகியை பார்க்க, யுகி தலையை அசைத்தான்.
“ம்மா… நான் ரூம்க்கு போறேன்” என்றவன் படிகளில் விறுவிறுவென ஏறினான். அவனுடைய பார்வை யுகியின் கையுடன் கோர்த்திருந்த நிவியின் விரல்களில் படர்ந்து மறைந்தது.
“சரி ஆனந்தி, நாங்க கிளம்புறோம். நேரமாச்சு” ஜோதி கூறினார்.
“ஆமா மா, நாங்க இப்ப போனா தான் ட்ரெயினை பிடிக்க வசதியா இருக்கும்!” என்ற வீரபாண்டி, “வரேங்க அழகர்சாமி!” என கூற, அழகர்சாமி புன்னகையுடன் அவரிடம் கையை குலுக்கினார்.
“இந்த டைம் மாதிரி இல்லாம, பொறுமையா இருந்து போற மாதிரி நெக்ஸ்ட் டைம் வந்துட்டு போங்க அண்ணா!” ஆனந்தி கூற்றிற்கு வீரபாண்டி தலையை அசைத்தார்.
“நிவி, உன் போன் நம்பர் கொடுத்துட்டு போ. உங்க அம்மாவோடதும் கொடு. உனக்கு எதுனாலும் இந்த அத்தையை தான் கேட்கணும். சரியா? வாரத்துல ஒரு தடவை இங்க வா டா. இருபது நிமிஷம் தான் ட்ராவல்?” கனிவான குரல் அவள் வசியம் செய்ய, சற்று முன் சந்த்ருவின் நடவடிக்கையை இவருடன் ஒப்பிட்டு பார்க்க விழைந்தது மனது.
“சரிங்க அத்தை. கண்டிப்பா வரேன்” என நிவி புன்னகைக்க, வாசலில் நின்று இரண்டு நிமிடங்கள் தோழிகள் இருவரும் பேசிக்கொண்டிருந்தனர்.
“மாமா, தலைல ஏதோ இருக்கு” அவனது முன் கேசத்தை கலைத்தாள் நிவி.
“முடியை தொடாத டி!” செல்லமாக அவளை அதட்டினான் யுகி.
கையிலிருந்த குளிர்ந்த பானம் எனோ சூடுவது போல உணர்ந்தான் சந்த்ரு. மாடியில் உள்ள பால்கனியில் இருந்து நிவியை தான் பார்த்துக் கொண்டிருந்தான். யுகியின் அவளுடனான நெருக்கம் எதோ ஒரு உணர்வை உள்ளிருந்து பொங்க செய்ய, அவளை விழிகள் அளவெடுத்தது.
மாநிறத்தில் சற்று பூசிய உடல்வாகு. இடை வரை தொங்கிய கூந்தல். சற்று முன் கோவிலில் வாங்கிய மல்லிகை அவள் கூந்தலுடன் உறவாடியது. நெற்றியில் சிறு பொட்டு, அதற்கு மேல் குங்குமம். சிறிய கழுத்தணி, கையில் மெல்லிய வளையல். சுடிதார் அணிந்திருந்தவளிடம் லேசாக ஊர்சாயல் தென்பட, தலையை ஒரு முறை உதறிக் கொண்டவன், யுகியை ஏனென்றே தெரியாமல் முறைத்தான். அவர்கள் விடைபெறும் வரை பார்வை பாவையை விட்டு அகலவில்லை.