நேரம் இரவு பதினொன்றை கடந்திருந்தது, ஒருவரும் உறங்கியதாகத் தெரியவில்லை மகள் உண்ணாமல் இருப்பதால் ஒரு கிளாசில் பாலை எடுத்துக்கொண்டு ஹிமானியின் அறைக்குச் சென்றார் சல்மா.
மகளின் அருகில் சென்று பார்க்கச் சுருண்டு படுத்திருந்தாள், உறங்கி இருக்கவில்லை “ஹிமா” என்ற தாயை பார்த்ததும் எழுந்து அமர்ந்தாள்.
கொண்டுவந்த மஞ்சளை கன்னத்தில் தடவிவிட்டவர் காய்ச்சல் அடிப்பதை உணர்ந்துகொண்டார்.
“கொஞ்சமா சாப்பிட்டு டேப்லெட் போடுடா” என்க.
“வேண்டாம்” என்றாள், சல்மாவின் கன்னத்தைப் பார்க்க அதுவும் சிவந்து வீங்கி இருந்தது.
“ஒன்னும் இல்ல அம்மாக்கு சரி ஆயிடும், நீ இந்தப் பாலை குடி டேப்லெட் போடு” என்க அதைமட்டும் செய்தாள்.
“எதைப்பத்தியும் யோசிக்காத தூங்கு” என்றவர் கீழே சென்றார், கணவனின் முகத்தைக் கூடப் பார்க்க விரும்பாமல் இளைய மகன் ரன்வீரின் அறைக்குச் சென்று படுத்துக்கொண்டார்.
அதிகாலை இரண்டு மணிபோல வீடே விழித்துக்கொண்டது, தேவகியின் மூத்த மகள் மஹிமாவின் கணவர் மாரடைப்பால் மருத்துவமனையில் இருப்பதாகப் பேரன் அழைத்துக் கூறியிருக்க தேவகி புலம்பத் தொடங்கிவிட்டார்.
“அப்போவே சொன்னேன் எதோ அபசகுனமா தெரியுதுன்னு, சீக்கிரம் பாருங்க உடனே போகணும் என் பொண்ணு எப்படி இருக்களோ” என்று அவர் கண்ணீர் விட மகன்களுக்குக் கவலையாகிவிட்டது.
அவர்களின் அக்காள் கணவன் வீட்டின் மூத்தவர், உடனடியாக எந்தப் பிளைட் உள்ளது? எப்படி? எல்லாம் பார்த்தனர், யார் யாரையோ அழைத்துத் துரிதமாக வேலை நடந்தது.
தேவகி மூத்த மகன் முன்ஜல் மனைவி ரமீலா, இரண்டாவது மகன் பிரவன் மனைவி வம்ஷி, விராலி மற்றும் மகன் ஆன்சல் செல்வது என்று முடிவானது.
ஹிமாவிற்கு உடல்நிலை சரி இல்லை என்பதால் அவளையும் சல்மாவையும் இந்த முறை கொண்டுசெல்லவில்லை, இங்கே பிசினெஸ் பார்த்துக்கொள்ள ஹிமாவின் தந்தை ப்ரனதும் அன்சலும் இருப்பதாக முடிவு செய்யப்பட்டது.
உடல்நிலை சரி ஆனதும் அங்கிருந்து இருவர் வந்துவிட்டு இவர்கள் அங்குச் செல்வது என்று முடிவு செய்து வேலைகள் நடந்தது.
புறப்படுவதற்கு முன் ஹிமாவை அழைத்த தேவகி அவள் கையால் விளக்கேற்றி வேண்டிக்கொள்ள சொல்ல அவள் முகத்தைப் பார்த்த அனைவருமே அதிர்ந்துவிட்டனர், ஒரே இரவில் முகமே வீங்கி ரத்தம் கட்டியதை போல இருந்தது.
மகளைப் பார்க்கவே முடியவில்லை ப்ரணதால், நல்ல மனதோடு வேண்டிக்கொண்டாள் அவர் குணமாகிவிட வேண்டும் என்று அதன் பிறகு உறக்கமே வரவில்லை.
வலி ஒருபுறம், விராலிக்கு என்ன பிரச்சனையாக இருக்கும் என்ற கவலை ஒருபுறம் அனைத்தையும் விட அவளுடைய இதயாவின் அணைப்பை வாசத்தை தேடியது உள்ளம்.
எழ முடியவில்லை வெகுநேரம் படுத்தே கிடந்தவள் மெல்ல குளியலறை சென்று முகம் கழுக காந்தியது ஒரு பக்கம் முழுதும், அப்படியே அமர்ந்துவிட்டாள் குளித்தால் கொஞ்சம் புத்துணர்வு வரும் என்று எண்ணியவள் எப்படியோ தடுமாறி குளித்து வந்து மீன்டும் கட்டிலில் படுத்துவிட்டாள்.
யாரையும் கூப்பிடவும் இல்லை அவளுக்கு எழவும் முடியவில்லை, மகளைத் தேடி அறைக்கு வந்த சல்மா அவளை வந்து தொட்டுப்பார்க்க உடல் நெருப்பாய் சுட்டது.
“ஹிமா… ஹிமா…” என்று தட்டி பார்க்கக் கண்கள் சொருகியது வேகமாக அறையிலிருந்து வெளியில் வந்தவர் “அன்சல் சீக்கிரம் டாக்டர் கூப்பிடு” என்க.
அன்சல் வேகமாகப் படி ஏறி மேலே வந்தான் “என்னாச்சு” என்றவன் அவளை நெருங்கி அழைத்துப்பார்த்தான் “ஹ்ம்ம்” என்ற முனகல் மட்டுமே.
தேவகியை பார்க்க வரும் குடும்ப மருத்துவரை உடனே அழைத்துவிட்டான், சரியாகப் பதினைந்து நிமிடத்தில் வந்துவிட்டார், அவளைப் பார்த்தவர் வீட்டில் அனைவரையும் ஒரு முறை திரும்பிப் பார்த்தார் என்ன இது என்பதாக அவள் கன்னத்தைக் காண்பித்து.
அவர்கள் சங்கடமாக நிற்பதை பார்த்தவர் “பாட்டி எங்க” என்றார் அன்சலிடம், அவன் விவரங்களைக் கூற அமைதியாகக் கேட்டுக்கொண்டார் கொண்டவர் சிகிச்சையைத் தொடங்கி இருந்தார்.
காய்ச்சலுக்கு இன்ஜெக்ஷன் இட்டவர், கன்னத்தின் காயத்திற்கு கிரீம் ஒன்றை எழுதிக் கொடுத்தார்.
சிறிது நேரம் சென்று அனைவரும் அவர் அவர் வேலையைப் பார்க்கச் சென்றுவிட்டனர்.
பட்டறை மட்டுமில்லாமல், தனியாக ஷோரூம், தேனியில் சிறிய அளவில் ஒரு நகை கடையும் ஷாப்பிங் காம்ப்லெஸ் ஒன்று வாடகைக்கும் விடப்பட்டுள்ளது, அதோடு மேகமலையில் இரண்டு பங்களா உள்ளது அவர்களுக்கு, சுற்றுலா பயணிகளுக்கு ஏற்ப மாற்றி அதை உபயோகப்படுத்துகிறார்கள் இப்பொழுது இருவர் மட்டும் அனைத்தையும் பார்க்க வேண்டும்.
ரன்வீர் பள்ளிக்குச் சென்றுவிட, சல்மா வீட்டில் வேலை செய்யும் சுதாவிடம் “மனசு சரியில்லை அவளைப் பார்த்துக்கோ கோவிலுக்குப் போயிட்டு வரேன் எங்கேயும் போகாத” என்று கூறி விட்டுச் சென்றார்.
வீட்டில் ஆட்கள் இல்லை என்பதால் சுதாவுக்கு பெரிதாக வேலை இல்லை கீழே அமர்ந்து டி.வி பார்த்துக்கொண்டிருக்க, காலைப் பத்து மணி கடந்த சமயம் அந்தத் தெருவில் மெதுவாகத் தொடங்கிய சத்தம் மெல்ல மெல்ல அதிகமாகியது.
தெருவே போர்க்களமாக எங்கும் கூச்சல் “என்ன” என்று இவள் வந்து பார்க்கச் செல்வராணியின் வீட்டின் முன் பெரும் படையே நின்றது என்ன பிரச்சனை என்று இவளும் வெளியில் வந்துவிட்டாள்.
அதிகமான சத்தத்தில் விழித்துக்கொண்ட ஹிமானி அறையின் ஜன்னலிலிருந்து பார்க்க ஊரில் பாதிபேர் அங்கிருப்பதாகப் பட்டது, அவள் விழிகள் அவனைத் தேடி அலைந்தது.
பண்ணையிலிருந்து வந்து குளித்துக் காலை உணவை அப்பொழுதுதான் உண்டுகொண்டிருந்தான் இமயன், இன்று வங்கிக்குச் செல்ல வேண்டும்.
அவர்களின் பண்ணையிலே தரமாகத் தயாரிக்கும் பால்கோவா நல்ல வியாபாரம் ஆகிறது, மக்கள் விரும்பி வாங்கி செல்கிறார்கள் அதை இன்னும் கொஞ்சம் விரிவு படுத்த விரும்பினான்.
முக்கியமான இடத்தில் கடை தொடங்கினால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது, சுருளி பால்ஸ் அருகில் தொடங்கினால் சுற்றுலா பயணிகள், அருவிக்கு வருபவர்கள் மற்றும் கோடி லிங்கம் சிவன் கோவில் வருபவர்கள் அனைவரையும் கவரலாம்.
அங்கே கடையை வாடகைக்கு எடுப்பதை விட ஒரு சிறிய கடையைச் சொந்தமாக வாங்குவதே நல்லது என்ற முடிவில் தேடி கண்டுபிடித்து விளையும் பேசிவிட்டான்.
கையிருப்பு மொத்தமாகக் கொடுக்க விரும்பவில்லை, அவசர தேவைக்குக் கொஞ்சம் வைத்துக்கொண்டு மீதியை பேங்கில் வாங்க லோன் அப்ளை செய்திருந்தான், இன்று வந்து பெற்றுக்கொள்ள சொல்லி அழைத்திருந்தார் மேனேஜர்.
மாணிக்கமும் உடன் செல்வதாக இருக்க அவர் தயாராகி வெளியில் அமர்ந்திருந்தார்.
அதே நேரம் ஓட்டமும் நடையுமாக வந்தார் தங்கராணி “என்ன புள்ள” என்று பதறி எழுந்து வந்தார் மாணிக்கம், அவர் சத்தம் கேட்டு வர்ணமும் இமயனும் வெளியில் வந்தனர்.
“என்ன சித்தி” என்றான் அவரின் பதட்டதை பார்த்து, பயத்தில் அவர் முகம் வியர்த்து வழிய “ஏய்யா நான் சொல்லுவேன், ஆனா நீ கோவப்பட்டு எதுவும் செஞ்சுட கூடாது” என்க.
அவன் அழுத்தமாக அவரைப் பார்த்தான், “என்னன்னு சொல்லுத்தா பயந்து வருது” என்றார் மாணிக்கம்.
“ஐயோ” என்று அலறிவிட்டார் வர்ணம், இவர்கள் திரும்பிப் பார்ப்பதற்குள் வேட்டியை மடித்துக்கட்டி நடந்துவிட்டான்.
“ஐயோ சாமி நில்லுயா வேண்டாம்” என்று அவன் பின்னே ஓட, அவன் நடைக்கு ஈடு கொடுக்க முடியவில்லை அவர்களால்.
“ஐயோ… ஐயோ… நான் என்ன பண்ணுவேன், என்னடி செஞ்ச என் பையனை ஆள் மயக்கி, என் பேச்சை மீறாத புள்ள இப்படி பண்ணிட்டானே” என்று வாயில் வந்த அணைத்து வசவுகளையும் அவர்களைப் பார்த்துக் கொட்டிக்கொண்டிருந்தார் செல்வராணி.
செட்டியார் ஒருபக்கம் அருவாளோடு அவனைக் கொல்லாம விடமாட்டேன் என்று நிற்க, அவர் பக்க ஆட்கள் இவனை அடிக்கப் பார்க்க, இவர்கள் பக்கம் ஆட்கள் அவர்களைத் தடய என்று ஒரே கலவரமாக இருந்தது.
அவன் தெறித்து நிலை தடுமாறி முன்னில் இருந்த தூணில் முட்டிக் குப்புற விழுந்து கிடந்தான், அங்கேயே அவனைப் போட்டு மிதி மிதி என்று மிதிக்க, அருகில் செல்ல முடியாமல் அனைவரும் ஒதுங்கி நின்றனர்.
“டேய் நிறுத்துடா…..” என்ற செல்வராணியை திரும்பிப் பார்த்த பார்வையில் கப்சிப் என்று வாயை மூடிக்கொண்டு ஒதுங்கி நின்றார்.
“ஏய் புடிங்கப்பா வேடிக்கை பாக்குறீங்க” என்று பதறி ஓடி வந்தார் மாணிக்கம், பிடித்தவர்களை உதறிவிட்டு மீண்டும் அவனை மிதிக்க.
“நாச்சொன்னா கேக்க மாட்டியாடா” என்றார் மாணிக்கம்.
அவனுக்கு நிதானம் வந்தது “ஏய்யா உன்னவிட்டா எங்களுக்கு யார் இருக்கா, வேணாம் சாமி” என்ற வர்ணத்தைப் பார்த்தவன் மூச்சுகளை இழுத்துவிட்டு தன்னை சமன் செய்தான்.
வலியில் முனகிக்கொண்டே கிடந்தவனை பார்க்கப் பார்க்க வெறி ஏறியது, நொடியில் மாறிவிட்ட சூழலைப் பார்த்து அழுகை கூட மறந்துவிட்டது கவிதாவுக்கு.
அவனை அவள் பயத்தோடு பார்த்து நிற்க “இங்கவா” என்றான், அவள் தயங்கி தயங்கி வர “உன் சம்மதம் இருக்கா” இதுல என்க.
“இல்லை” தலை ஆட்டினாள் மீண்டும் விழிகள் நிறைய, அவனுக்கு அவன் தங்கைகள் நினைவு வந்தனர், இப்படியொரு நிலையில் அவர்கள் நின்றால் தான் என்ன செய்திருப்போம் என்று யோசித்தான்.
“இதுக்கு ஏதாவது மதிப்பு குடுக்குறியா” என்றான் அவள் கழுத்தில் கிடந்த மஞ்சள் கயிறை காண்பித்து “இல்லை” என்றாள் அதற்கும்.
“அப்போ கழட்டி அவன் மூஞ்சில வீசு” என்றான்.
“எப்பா, என்ன சொல்ற!! ஆயிரம்தான் இருந்தாலும் தாலிப்பா நம்ம பண்பாடு அப்படிலாம் கழட்ட கூடாது, கொஞ்சம் கொஞ்சமா ஏத்துக்கிட்டு வாழப் பழகிக்க தாயி” என்றார் பெரிய மனிதர் ஒருவர்.
சிலர் அதை ஆமோதிக்க “சரிதான் அது உங்க பேத்தி தானே…” என்றான் பின்னல் நின்ற ஒரு பெண்ணைக் காண்பித்து, அவர் “ஆமாம்” என்க.
“இந்தத் தாலி உங்க பேத்தி கழுத்துல இதே மாதிரி தொங்கியிருந்தா அப்பாவும் இதே நியாயம் தான?” என்க.
“கட்டுனவன் குடலை உருவிடுவேன்” என்றார் அந்தப் பெண்ணின் தந்தை, “கேட்டியா” என்பதாக அவரையும் மற்றவர்களையும் பார்த்தவன்.
“பஞ்சாயத்தை பாத்தோமா வீட்டுக்குப் போய் மதியம் சாப்பிட்டு தூங்கினோமான்னு இருக்கணும்” என்க.
மற்றவர்கள் அனைவரும் “அவன் சொல்றது சரிதானப்பா நம்ம புள்ளைங்களுக்கு நடந்தா ஒத்துப்போமா” என்று இமயனுக்கு ஆதரவாக நின்றனர்.