“வீட்ல சொல்லிக் கட்டிக்குறோமோ, நாமளே புடிச்சு கட்டிக்குறோமோ கழுத்துல தாலி ஏறுறது ரெண்டு மனசு சம்மத்ததோட இருக்கணும், உன் கழுத்துல கிடக்குறதுக்கு எந்த மதிப்பும் இல்ல, கழட்டி வீசிட்டு போய் வேலைய பாரு” என்றான்.
“அவகிட்ட இப்படி பேசி நல்லவனா நடிச்சுதான அவளைக் கட்டிக்கலாம்னு பாத்த” கவியரசனை யோசனையோடு இமயன் திரும்பிப் பார்க்க.
“லெட்டர் குடுத்தது நா….. ஒன்னு எனக்குக் கட்டிக்கொடுக்கணும் இல்லையா வேற எவனுக்காவது கட்டிக்கொடுக்கணும், ஆனா உனக்குக் கட்டிக்குடுக்கணும்னு இந்த ஆளு ஏன் முடிவு பண்ணான், என்ன அவமானப்படுத்த தான?” என்றான் செட்டியாரைக் காண்பித்து.
அவரை முறைத்து பார்த்தவன், சித்தப்பாவை பார்க்க “நா அப்போவே சொல்லிட்டேன்டா சரியா வராதுன்னு” என்றார் அவர் பாவமாக.
“ஏன் இப்படி இருக்கீங்க? ஒரு பொண்ணு பின்னாடி எவனாவது சுத்தினா உடனே அந்தப் பொண்ணை அடிக்கிறது அவளைப் பத்தி தப்பா பேசுறது, காதல்ன்னு சொன்ன அப்பாவும் பொண்ணுங்கதான் தப்புனு பேசறது”.
“எதுவா இருந்தாலும் அப்பா உன்கூட இருப்பேன்ன்ற நம்பிக்கையை இந்தப் புள்ளைக்கு நீங்கக் குடுத்திருந்தா, இவன் கட்டாய தாலி கட்டினப்பாவே அதைக் கழட்டி அவன் மூஞ்சில விசிறி இருக்கும், ஏன் செருப்பால அடிகூட குடுத்துருக்கும்” என்றவன்.
“இதெல்லாம் ஒன்னும் இல்ல படிப்பை முடி, வேலைக்குப் போ உன்னோட தைரியம் தன்னபிக்கையே உன் அப்பாவுக்கு எல்லாத்தையும் புரியவைக்கும்” என்றான் அவரைப் பார்த்துக்கொண்டே.
ஒரு நொடி விழிகள் மூடி ஆழ்ந்த மூச்செடுத்தவள் கழுத்தில் கிடந்த மஞ்சள் கயிறை கழட்டி கவியரசனின் முகத்திற்கு நேரே விட்டெறிந்தாள், அவளை மெச்சுதலாகப் பார்த்தவன் தங்கராணியின் பின்னே நின்ற நித்யாவை கை நீட்டி அழைக்க அவன் அருகில் வந்தாள் அவள்.
தன் அருகில் அவளைப் பிடித்து நிறுத்தியவன் “இவ யாருன்னு தெரியுமா” என்க.
“தெரியும்” என்று தலை அசைத்தவள் “உங்க தங்கச்சி” என்றாள்.
“ஹ்ம்ம்…. இன்னும் ரெண்டு பேர் இருக்காங்க, நீயும் எனக்கு அப்படிதான், அப்பா சொன்னாங்க அம்மா சொன்னாங்கன்னு மனசுல எதுவும் நெனப்பு வேண்டாம்” என்றான் அழுத்தமாக.
தன்னை யாரும் அப்படி நினைப்பதை கூட அவன் விரும்பவில்லை, முகம் மெல்ல தெளிந்தது கவிதாவுக்கு “சரிண்ணா” என்றாள் உடனே.
“நீயும் தங்கச்சியா!! அப்போ என் அண்ணனுக்கு யார் வாழ்க்கை கொடுப்பா” என்ற தீவிர சிந்தையில் மூழ்கினாள் நித்யா.
அவன் கூட்டத்தை விட்டு வெளியேறி வெளியில் வர அவன் குடும்பம் பின்னையே வந்தது, நித்யாவின் காதைப் பிடித்துத் திருகியவன் “ஊர்ல எங்க கூட்டம் பாத்தாலும் மொத ஆளா உள்ள போய்டுவியா” என்றான்.
“சித்தி மதியம் இவ சமைக்கட்டும் நீங்க ரெண்டு பெரும் தோப்புக்கு போங்க” என்க.
விட்டால் போதும் என்று முதல் ஆளாக ஓடினாள் நித்யா, அவளைப் பார்த்து அனைவரும் சிரிக்க அவனும் மெலிதாகப் புன்னகைத்துக்கொண்டே, சித்தப்பாவை பார்த்து “வாங்க கொஞ்சம் பேசணும்” என்றான்.
அவர் பாவமாக மனைவியைப் பார்க்க “பேசிட்டு சீக்கிரம் வாங்க மாமா நாட்டுக்கோழி அடிச்சு கொழம்பு வைக்கச் சொல்றேன் புள்ளைகிட்ட” என்று சொல்லிச் சென்றார் வர்ணம்.
கூட்டத்தில் ஒருத்தியாக நின்று பார்த்திருந்த மல்லியின் விழிகளில் அவன்மீதான ரசனை கூடி கூடி வந்தது, நித்யா சென்றபிறகும் வீட்டிற்கு செல்லாமல் தூரே நின்று அவனைப் பார்த்திருந்தாள்.
ஊர் ஆட்கள் சிலர் கவியரசனை ஒரு வண்டியில் அள்ளிப்போட்டுக்கொண்டு சென்றனர், உடன் செல்வராணியும்.
சித்தாப்பாவுடன் பேசிக்கொண்டே வந்தவன் இடையில் இருந்த ஒரு சந்தில் நுழைந்து ஹிமானியின் வீட்டின் எதிரில் வந்து நின்றான்.
“அவர் கேட்டப்போவே வேண்டாம்னு சொல்லிட்டேன் டா, அவர்தான் திரும்பத் திரும்பத் தொல்லை பண்ணினார், ஆனா இந்த விஷயம் எப்படி வெளில வந்துச்சு இவனுக்கு எப்படி தெரிஞ்சுச்சு” என்றவர் யோசனை செய்ய.
“செவுருக்கு கூடக் காத்திருக்குனு சும்மாவா சொன்னாங்க, ஒரு பொண்ணோட வாழக்கை சித்தப்பா நாளைக்கு இது அந்தப் புள்ளையோட வாழ்க்கைல பிரச்சனையா வரும்” என்றான் தலையை அழுந்தக் கோதி.
பார்வை மாடியில் இருக்கும் அவள் அறையில் பதிய ஜன்னலில் தலை சாய்த்து அவனைப் பார்த்திருந்தாள் ஹிமா, ஏதோ சரி இல்லை என்று அவன் மனம் கூறியது.
“சித்தப்பா பேங்க் மனேஜர்கிட்ட பேசிடுங்க நாளைக்கு வரேன்னு” என்றவன், அவர் பதிலுக்குக் காதிர்க்காமல் வண்டியைப் பறக்கவிட்டான்.
“ஆண்டவா அந்தப் புள்ளைக்கு ஒன்னும் ஆகக் கூடாது, இவன் தாங்கமாட்டான் போலிருக்கே” என்று சரியாகக் கணித்தார் மாணிக்கம்.
சுதா கூறியதால் அவர்களின் குடும்ப டாக்டர் வேலை பார்க்கும் மருத்துவமனைக்கே சென்றனர், வண்டியில் எறியதிலிருந்து சுதா புலம்பிக்கொண்டே வந்தார், நேற்று வீட்டில் நடந்த பிரச்னையிலிருந்து, தான் சண்டையை வேடிக்கை பார்க்கச் சென்றதுவரை.
அவள் தந்தை அடித்ததில் இப்படி என்றபோது கைமுஷ்டிகள் இறுகியது, என்ன மனிதர் இவர் அதட்டி ஒரு சொல்லைக் கூடத் தாங்கமாட்டாள் என்று தெரியாதா என்று ஆத்திரமாக வந்தது.
மருத்துவர் அதிர்ப்பதியை காண்பித்தார் முகத்தில் “என்னமா இது… சொல்லிட்டுதானே வந்தேன், என்னாச்சு அந்த வீட்ல எல்லார்க்கும், எங்க ஹிமாவோட அம்மா” என்றார்.
“அவங்க கோவில் போயிருக்காங்க டாக்டர்” என்க.
“வீட்ல எல்லாத்துக்கும் பைத்தியம் புடிச்சுடுச்சு போல” என்று முணுமுணுத்தவர் பரிசோதனை செய்துவிட்டு, வேறு மருத்துவரை அழைக்க.
அவர் வந்து பார்த்து “பிராக்சர் இல்ல ஸ்ப்ரைன் ஆயிருக்கு, பேண்டேஜ் போட்ட போதும்” என்றவர் அனைத்தையும் முடித்துக் காலைத் தலையணை வைத்து உயர்த்தி வைத்துவிட்டு இன்ஜெக்ஷன் எழுதிக்கொடுத்தார்.
நெற்றி காயத்துக்குக் காய்ச்சலுக்கும் மருந்து எழுதிய டாக்டர் “வாங்கிட்டு வாங்க நர்ஸ் பாத்துப்பாங்க” என்று சொல்லிச் சென்றார்.
ஒரு கையில் ட்ரிப்ஸ் ஏறிக்கொண்டிருக்க சாய்வாக அமர்ந்திருந்தாள் கட்டிலில் “நாப்போய் மருந்து வாங்கிட்டுவரேன் பாப்பா” என்ற சுதா வெளியில் செல்ல.
அறையில் நின்றிருந்தவன் “நான் போறேன்” என்றான்.
“இல்ல தம்பி வேண்டாம், நீங்கப் பண்ண உதவியே ரொம்ப பெரிசு எப்படி நன்றி சொல்லண்ணே தெரில, கொஞ்சம் நேரம் இருக்கீங்களா மருந்து வாங்கிட்டு வரேன்” என்றவரிடம் சம்மதமாகத் தலை அசைத்தான்.
தன்னையே அவள் பார்ப்பதை உணர்ந்தவன் அவளைத் திரும்பிப் பார்க்க, இடக்கையை அவனை நோக்கி நீட்டினாள் “ஏண்டா…” என்று தவிப்பாக அவளைப் பார்க்க, கையை இரக்கவே இல்லை.
“ஹிமா…” என்று அழைத்துக்கொண்டே இரண்டே எட்டில் அவள் அருகில் நெருங்கிக் கையைப் பற்றிக்கொள்ள, அவன் மார்பில் அப்படியே சரிந்தாள் ஹிமா.
“என்னடா இது ஏன்?” என்றான் அவள் தலையை வருடிக்கொண்டே, அவளிடம் பதில் இல்லை நேற்றிலிருந்து இந்த அணைப்புக்காகத் தவித்துக் கிடந்தாளே, அவன் சட்டையைப் பிடித்துத் தன்னை நோக்கி இழுத்து இன்னும் அழுத்தமாக அவனுள் புதைந்தாள்.
“பாத்து வரமாட்டியா…” என்றான் அதட்டலாக.
அவனை நிமிர்ந்து பார்த்தவள் “பார்த்துதான் வந்தேன் உங்கள பார்த்து , ரொம்ப தேடினேன் ஏன் வரல நேத்து” என்றவள் விழிகள் நிறைந்தது.
“ரொம்ப வலிக்குது எரியுது” என்றாள் கன்னத்தை காண்பித்து, அவளுக்கு வலிக்காமல் முகத்தை கைகளில் தாங்கி அவன் மெதுவாக காற்றை ஊத , அவனை அருகில் இழுத்து அவன் இதழில் தன் கன்னத்தை அழுந்த பதித்தாள்..
இப்படியே அவளை அள்ளிக்கொண்டு செல்ல ஏங்கியது மனது.
சிறிது நேரத்தில் அவனிடம் இருந்து விலகியவளை தன் அணைப்பில் வைத்தவன் “சரியாயிடும்” என்றான் தனக்கும் சேர்த்தே.
“இல்ல போகமாட்டேன் இங்கதான் இருப்பேன் தூங்கு” என்றவன் வெளியில் செல்ல , சில நிமிடங்களில் சுதா வந்து சேர்ந்தார்.
“ஏன் பாப்பா இப்படி பண்ண பயந்தே போய்ட்டேன் நான் , என்ன பதில் சொல்ல எல்லார்க்கும்” என்று அவர் மீண்டும் புலம்பலை தொடங்கினார் , அவள் விழிகள் தன்னாலே மூடிக்கொண்டது அசதியில்.
செய்தி அறிந்து ட்ரைவரை அழைத்துக்கொண்டு சல்மா வந்து சேர்ந்தார் மருத்துவமனைக்கு , மாலை நெருங்கியது இவர்களுக்கு உணவு எல்லாம் ட்ரைவர் வாங்கி வந்து தந்தார்.
மாலை வந்து பார்த்த டாக்டர் “இப்போ ஒகே , கொஞ்ச நாள் நல்லா ரெஸ்ட் குடுக்கணும் நல்லா சாப்பிடணும் சரியா” என்று அப்பொழுதே டிஸ்சார்ஜ் செய்தார்.
இரண்டுபேரும் பிடித்துக்கொள்ள மெல்ல நடந்து வந்து காரில் ஏறி அமர்ந்தாள் ஹிமா, சல்மாவும் சுதாவும் ஏதோ பேசிக்கொண்டிருக்க, இவள் விழிகள் இமயனை தேடியது.
“இருப்பேன் என்றானே…. நிச்சயம் இருப்பான்” என்றது மனது கொஞ்சம் தள்ளி அவள் பார்க்க வந்து நின்றான்.
அவள் இதழ்கள் புன்னகைக்க முயன்றது, இப்பொழுது கொஞ்சம் தெளிவாக இருந்தாள் அது அவனைப் பார்த்ததால் தான் என்பதை இருவருமே அறிந்திருந்தனர்.
கன்னத்தை தொட்டு காண்பித்து “எரியுது” என்றாள் வாய் அசைத்து , அவன் இதழ்கள் மெல்ல விரிய கன்னத்தை அவனை நோக்கி காண்பித்து “ஒண்ணே ஒன்னு” என்றாள் கண்களை சுருக்கி கெஞ்சலாக.
இமயனுக்கே வெக்கம் வந்து தொலைத்தது, தலையை அழுந்தக் கோதியவன் வெட்கத்தோடு புன்னகையையும் சுமந்து முகத்தை வேறு பக்கம் திருப்ப, கவிதையாக இருந்தது அந்தக் காட்சி.
கேண்டிட் போட்டோ போல அந்த சிரிப்பை அப்படியே மனதில் சேகரித்துக்கொண்டாள் அவன் தேவதை.