அதிசயமாகத் தனது அறைக்கு வந்திருந்த மூத்த தமயனை பார்த்து நின்றிருந்தான் ரன்வீர் “என்ன வீர் அப்படி பாக்குற?”.
“இல்ல தாதா …. ரூமுக்கெல்லாம் வர மாட்டீங்களே அதான்” என்றான் நின்றுகொண்டே.
“வா வா பக்கத்துல வந்து ஒக்காரு, வரமாட்டேன்னு இல்ல வீர் நேரம் இல்லை, முக்கியமான விஷயம் பேசணும் அதான் இங்கேயே வந்துட்டேன்” என்றபோது.
அது எத்தனை முக்கியமாக இருந்தால் தன்னை தேடி தன் அறைக்கே வருவார் என்றதுடன், தன்னை மதித்து முக்கியமான விஷயம் பேசப் போகிறாரா என்ற கர்வமும் வந்து சேர்ந்தது ரன்வீருக்கு.
“சொல்லுங்க தாதா ”என்றான் ஆர்வமாக.
“நம்ம வீட்டு பொண்ணுங்கதான் நம்ம கெளரவம், அவங்க எப்படியோ அத வெச்சுதான் ஊர்ல எல்லாரும் நம்மள நல்லவிதமாவோ கெட்டதாவோ பேசுவாங்க, விராலிக்கு நல்லபடியா கல்யாணம் முடிவாயிடுச்சு, ஹிமா இந்த வீட்டோட அதிர்ஷ்டம் அவளை நாம நல்லா பாத்துக்கணும்” என்றான்.
பிளஸ் டூப்படித்துக்கொண்டிருக்கும் இந்தக் கால தலைமுறைக்கு அவன் சொல்ல வருவதின் அர்த்தம் புரியாமல் இருக்குமா அமைதியாக அமர்ந்திருந்தான்.
“அவளுக்கு ஏத்த மாதிரி இன்னும் வரன் அமையல, அதுவரைக்கும் நம்ம வீட்டு பொண்ணு மனசை யாரும் கலைக்காம நாம பாத்துக்கணும்” என்ற தமையனை பார்த்திருந்த ரன்வீருக்கு வெகுநாட்களாக மனதை உருத்திய அந்தக் கேள்வியைக் கேட்கத் தோன்றியது.
“ஏன் தாதா மஹிமா அத்தை….. இப்போ விராலி அக்கா எல்லாரும் கல்யாணம் ஆகி வேற வீடு தான போறாங்க, ஹிமா அக்கா மட்டும் ஏன் இங்கேயே இருக்கணும்” என்றான்.
“அதுதான் சொன்னேன்…. அவ இந்த வீட்டோட லட்சுமி அவ இந்த வீட்டை விட்டுப் போய்ட்டா நம்ம ஐஸ்வர்யமும் போய்டும்” என்க.
“இத நீங்க நம்புறீங்களா தாதா !! அப்படியே இருந்தாலும் அக்காக்கு என்ன பிடிக்கும்னு கேக்காம நாமளே முடிவு பண்றது தப்பில்லையா” என்ற இளையவனை கூர்மையாகப் பார்த்தவன்.
“பெரிய மனுஷன் மாதிரி பேசாத வீர், நம்ம வீட்டு பொண்ணுங்கள நாம நல்லா வெச்சுக்கணும், அதுக்கு அர்த்தம் அவங்க விருப்படி எல்லாத்தையும் நாம செய்யணும்னு இல்ல”.
“நாம என்ன சொல்றோமோ அத அவங்க அப்படியே ஏத்துக்கனும், அவங்களுக்கு என்ன நல்லதுன்னு நாம பாத்து சரியா செய்வோம் அவங்களுக்கு ஒன்னும் தெரியாது”.
“ஹிமா அந்த மாதிரி முட்டாள் தனமான முடிவு எதையும் எடுக்கக் கூடாது அதுக்குதான் உன்கிட்ட பேசுறேன், என்கிட்டே இருந்து காசு வாங்கியிருக்கா, என்ன செய்யப் போறா… இல்ல என்ன வாங்க போறா? யாருக்குனு? நீ அவ கூடவே இருந்து பாத்து கண்டுபிடி, அவளுக்குத் தெரியக் கூடாது புரிஞ்சுதா” என்க சம்மதமாகத் தலை அசைதந்தது வீருக்கு.
கட்டிலில் படுத்து விட்டதை பார்த்திருந்த ரன்வீருக்கு ஆன்சலின் பேச்சு மனதை உறுத்தியது, வெகுகாலமாகத் தாய் சல்மாவின் புலம்பலையும் கண்ணீரையும் பார்த்தே வளர்ந்தவன்.
மிகவும் அமைதியான தன்னுடைய தமக்கை ஹிமானி இதுவரை மனம் திறந்து சிரித்து அவன் பார்த்ததில்லை, விராலியின் பிரச்சனை நடந்தபோது கூட அவள் அப்படி இல்லை என்று இவர்களுக்குத் தெரியாதா என்றுதான் அவனும் நினைத்தான், அனால் மனதில் நினைப்பதெல்லாம் இங்கே பேசிவிட முடியாது.
அன்று இரவு தன் அறையில் படுத்துறங்கிய தாய் புலம்பியதை கேட்டிருந்தானே “கட்டின பொண்டாட்டியும் பொண்ணையும் ஒழுங்கா பாத்துக்க தெரியல இன்னும் அம்மாக்கு பயந்துட்டு இருக்குற உன் அப்பாலாம் எதுக்குடா கல்யாணம் பண்ணிகிட்டார்”.
“மத்த பொண்ணுங்க எல்லாம் கௌரவமா புருஷன் வீட்டில போய் வாழ்வாங்க, என் பொண்ணு மட்டும் இந்த வீட்ல உங்க எல்லாருக்கும் அடிமையா கிடக்கணுமா, வீட்டோட மாப்பிள்ளையா வர ஒத்துக்கிட்டானா அவன் இவங்க சொல்ற எல்லாத்தையும் கேக்குறவனாதான இருப்பான்”.
“இவங்களுக்கு இன்னொரு அடிமை, என் பொண்ணுக்கு அப்படியொரு அடிமை மாப்பிளை வேணுமா?? என்ன மரியாதை இருக்கும் இந்த வீட்டில அவங்களுக்கு, பணம்… பணம்…. பணப்பேய்ங்க” என்றவர்.
ரன்வீரை பார்த்து “உன்கிட்ட போய்ச் சொல்றேன் பாரு நீயும் அவங்களோட சேர்ந்தவன் தானே, நீங்க எல்லாம் சுயநலவாதிங்க உங்களுக்கு நல்லது நடந்தா போதும் யாரை பத்தியும் கவலை இல்ல, இந்தக் கடவுளுக்குக் கூடக் கண் இல்லை” என்று அழுது கொண்டே இருந்தார்.
தன்னால் என்ன செய்ய இயலும் என்ற யோசனை அப்பொழுதே அவனுக்கு ஓடியது, பாட்டி சொல்வதை இந்த வீட்டில் தந்தையோ பெரியப்பாக்களோ மீறமாட்டார்கள், இறுதி முடிவு பாட்டியுடைய முடிவே யோசனையில் உறங்கி இருந்தான் ரன்வீர்.
“ஹலோ…” என்ற குரல் கேட்டவுடன் “சூப்பர்மார்க்கெட்ல வெயிட் பண்றேன் உடனே வாங்க” என்று வைத்துவிட்டாள் விராலி.
இவனுக்குச் சுறு சுறு என்று கோபம் ஏறியது “என்ன நெனச்சுட்டு இருக்கா இவ, இவங்ககிட்ட வேலை பாத்தா நாங்க என்ன இவங்களுக்கு கொத்தடிமையா, எத்தனை தடவை சொல்றது சரியா வராதுன்னு இன்னைக்கு ரெண்டுல ஒன்னு முடிவாகனும்” என்று முடிவு செய்த நிதின் முன்ஜலின் அறைக்குச் சென்று நின்றான்.
“என்ன?” என்றார் அவர் பார்வையாலே.
“ஒரு ஒருமணி நேரம் பெர்மிஷன் வேணும் சார்” என்க.
அவர் அமைதியாகவே இருந்தார் “திமிரு வாய தொறந்து எங்ககிட்ட பேசிட்டா இவங்க பவுசு கொறஞ்சிரும், உன் வீட்டு பொண்ணு என் பின்னாடி சுத்துது, சரின்னு சொல்லித் தள்ளிக்கிட்டு போய் உங்கள எல்லாம் தலைகுனிய வெச்சிருக்கணும், என்ன பண்ண கொஞ்சம் நல்லவனா வளந்துட்டேனே” என்று மனதில் அவர்களைத் தாளித்து கொட்டியவன்.
“தங்கச்சி வரா ஊர்ல இருந்து, வீட்ல விட்டுட்டு வந்துர்றேன்” என்றான்.
இரண்டு நாட்கள் முன்பே வந்துவிட்டாள் அவன் தங்கை, திருமணம் முடிந்து சென்னையில் இருக்கிறாள், குழந்தையையும் அவளையும் அவள் கணவன் கொண்டு வந்து விட்டுச் சென்றிருந்தான் பத்து நாட்கள் தங்குவதற்காக.
“போ” என்று முன்ஜல் கை அசைக்க முகம் இறுக வெளியில் வந்தான்.
அத்தனை கோபமும் அவள் புறம் திரும்பியது “என்ன நெனச்சுட்டு இருக்க” என்று பாய்ந்தான் அவளைக் கண்ட நொடி, விராலி ஓர் நொடி பதறிப் பின்னில் சென்றாள்.
“கொஞ்சம் பொறுமையா பேசினா உன் இஷ்டத்துக்கு ஆட வைக்கலாம்னு பாக்குறியா, என் குடும்பம் கஷ்டத்துல இருந்தப்போ என்னுடைய மாமா சிபாரிசு செஞ்சு உங்க பட்டறைல வேலை கிடைச்சுது”.
“என்னால அவருக்கு ஒரு களங்கம் வரக் கூடாதுன்னு நானும் பொறுமையா சொல்லிப் புரிய வெக்குறேன், திரும்பத் திரும்ப இரிடேட் பண்ற” என்றவனை புதிதாகப் பார்த்தாள் விராலி.
அவள் காதல் சொன்னபோது முதலில் அதிர்ந்தான், இது பெரிய பிரச்னையாக முடியும் என்று உள்மனம் எச்சரிக்க அவளிடமிருந்து விலகி நடந்தான், விடாமல் பின்னையே துரத்தும் பெண்ணை ஒரு கட்டத்தில் மனது விரும்பித் தொலைத்தது.
ஆனால் அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் நிதர்சனம் முகத்தில் அறைந்தது, குடும்ப சூழல் காரணமாகக் கல்லூரி படிப்பை இரண்டாம் வருடத்தோடு நிறுத்த வேண்டியதாகி விட்டது.
வேலையும் கிடைக்காமல் கஷ்டப்பட்டு கூலி வேலைக்குக் கூடச் செல்லலாம் என்ற முடிவுக்கு வந்தபோது அவன் மாமா இங்கே வேலை வாங்கி கொடுத்தார், இப்பொழுது தொலைதூரக் கல்வி மூலம் விட்டதை படித்துக் கொண்டிருக்கிறான்.
“இந்த ஊர்ல உங்க குடும்பத்துக்கு இருக்குற மரியாதை செல்வாக்கு தெரியும்ல, உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா என் குடும்பத்தையே அழிச்சுடுவாங்க, உங்க வீட்டாளுங்களுக்கு பயந்து ஊர் ஊரா என்னால ஓட முடியாது”.
“நானும் என் அம்மாவும் ரொம்ப சாதாரணமான வாழ்க்கை வாழறோம், இதுதான் கடைசி திரும்பவும் என்கிட்டே நீ பேச வந்தீன்னா நானே இங்க இருந்து கெளம்பிடுவேன், வேற எங்கயாவது போய் நிம்மதியா வாழ்ந்துக்குறோம்” என்றான் இறுதியாக.
“உங்க பின்னாடியே சுத்தினதால அவ்ளோ இளக்காரமா போய்ட்டேன்ல நான் உங்களுக்கு, இனிமே நீங்களா என்னைத் தேடி வராம நான் உங்க கண்லயே படமாட்டேன், போங்க…. போய் நல்லா நிம்மதியா சந்தோஷமா இருங்க”.
“அப்படியே உங்க அம்மாக்கு பிடிச்ச மாதிரி அடக்க ஒடுக்கமா ஒரு பொண்ணையும் பாத்து கட்டிக்கோ, போடாப் போ நா இல்லாம உனக்கு நிம்மதியே இருக்காது” என்று அழுதுகொண்டே அங்கிருந்து சென்றாள்.
உண்மையில் வருத்தமாக இருந்தது என்றாலும் இதில் அவன் செய்வதற்கு எதுவும் இல்லை, அவளுக்குப் பார்த்திருக்கும் மாப்பிள்ளை பெரிய இடம் திருமணம் முடிந்து விட்டால் தன்னாலே மாறிவிடுவாள்.
சிறிது சிறிதாகத் தன்னையும் மறந்துவிடுவாள் என்று தன்னைத்தானே சமாதானம் செய்து கொண்டான், அவன் அறியவில்லை அவளின் பிடிவாதத்தின் அளவை.
“சிவராத்திரி பூஜைக்கு எல்லார்க்கும் துணி எடுத்துக்கோங்க” என்று அலைபேசி மூலம் மூத்த மருமகளிடம் கூறிய தேவகி, நகைகள் வேண்டுமானால் அதயும் எடுத்துக்கொள்ளச் சொன்னார்.
மகன்களிடமும் பணம் கொடுக்கச் சொல்லி விட ஆண்கள் பணத்தை கொடுத்துவிட்டு ஒதுங்கிக் கொண்டனர், பெண்கள் அனைவருமாகத் துணி எடுக்கச் சென்றனர், ரண்வீர்க்கு விடுமுறை ஆனதால் அவனை உடன் செல்லக் கூறி இருந்தான் ஆன்சல்.
ஆடைகள் எடுத்துமுடித்து தேனியின் பெரிய நகைக்கடையில் நுழைந்தனர், இவர்களுடையது சிறிய அளவிலான கடை குறைவான தங்கத்தில் அழகான எடை குறைவான சிறிய குழந்தைகளுக்கான ஆபரணங்கள் அதிகம் இருக்கும், ஆகையால் பெரிய நகைக்கடைக்கே சென்றனர்.
செட்டாகத் தோடு நெக்லஸ் அப்படி பார்த்திருந்தனர், மயில் டிசைன் உள்ள ஒரு செட்டை பார்த்தவுடனே எடுத்துக்கொண்டாள் ஹிமானி, மற்றவர்கள் வேறு வேறு டிசைன் பார்த்துக்கொண்டிருக்க அவள் மெல்ல எழுந்து நடக்க தொடங்கினாள்.
ரன்வீரின் பார்வை அவள் மீதே இருந்தது, அவள் மேலே செல்வதை பார்த்தாலும் சிறிது நேரம் அமைதியாகவே அமர்ந்திருந்தான் பத்து நிமிடத்திற்கு பிறகு அவன் மேலே சென்று பார்க்க, அங்கிருந்த வயதான ஒருவரிடம் தீவிரமாக ஏதோ விசாரித்துக்கொண்டிருந்தாள்.
“சனிக்கிழமை வந்து வாங்கிக்கோமா” என்றார் அவர் “சரி” என்று திரும்பியவள் தம்பி வருவதை பார்த்துவிட்டு “வரேன்” என்று அவரிடம் விடைபெற்று முன்னே நடந்தாள்.
யோசனையாக அவளைப் பார்த்துக்கொண்டே உடன் நடந்தவன் அவள் படி இறங்கும்முன் “தீதி” என்று அழைத்து அவள் கையைப் பிடித்து நிறுத்தினான்.
“அவர்கிட்ட என்ன கேட்ட? என்ன பண்ற?” என்றான்.
“ஒன்னும் இல்ல வீர்”.
“பெரிய தாதா கிட்ட பணம் வாங்கினியா தீதி!!” என்று கேட்டவன், “அந்தப் பணத்தை நீ என்ன பண்றன்னு பாக்கத்தான் என்னை அனுப்பி இருக்கார், இங்க நடந்தத அவர் கிட்ட சொல்லவா” என்றவன்.
“ஆர் யு இன் லவ் தீதி!!” என்றான் அவள் விழிகளை ஊடுருவி, அவள் முகத்தில் ஆச்சர்யம் தம்பியின் புரிதலில், காதல் என்றவுடன் இமயனின் முகம் நினைவில் மின்ன இதழ்கள் விரிந்தது முகம் மலர்ந்தது.
“அது” என்று யோசித்துக்கொண்டே திரும்பியவள் பார்வையில் விழுந்தனர் கீழே பில் செக்ஷனில் கடை முதலாளியுடன் பேசிக்கொண்டிருந்த இமயனும் மாணிக்கமும்.
“சொல்லனுமா காமிக்கணுமா…..” என்றாள் தம்பியிடம்.
“இங்க இருக்காங்களா!!” என்றவன் வினவ.
அவனை அழைத்துக்கொண்டு கீழே இறங்கினாள், ஓனரிடம் பேசிக்கொண்டிருந்தவன் விழிகள் அவளில் பதிந்தது, குடும்ப உறுப்பினர்கள் தீவிரமாக டிசைன் தேடிக்கொண்டிருக்க தம்பியை அங்கே நிறுத்தியவள் இமயனின் அருகே நடந்து சென்றாள்.
அவனுக்குப் பக்கத்தில் பார்வைக்கு வைத்திருந்த நகையைப் பார்ப்பதுபோல நின்றவள் நகைகளைப் பார்த்துக்கொண்டே மெல்ல திரும்பி அவன் அருகில் நின்றாள், ஹிமானியை அங்கே பார்த்தவுடன் ஓனரின் கவனத்தை தன் பக்கம் திருப்பிக்கொண்டார் மாணிக்கம் அவரிடம் பேசிக்கொண்டே முன்னே நடக்க அவரும் உடன் நடந்தார்.
இருவரின் ஜோடி பொருத்தம் அத்தனை நிறைவாய் இருந்தது ரன்வீருக்கு, தமக்கையின் உண்மையான சந்தோஷம் எங்கே இருக்கிறது என்று அவனுக்குப் புரிந்துவிட்டது.
“தேவதை இங்க என்ன பண்றீங்க” என்றான் இமயன்.
“கன்னம் ரொம்ப எரியுது அதான் மருந்து வாங்க வந்தேன்” என்றாள் அன்று போல இன்றும் அவன் முகம் புன்னகையில் விரியும் அழகை பார்த்து ரசித்துக்கொண்டே.
செல்லும் அவனையே சிரிப்போடு பார்த்திருந்த தமக்கையின் அருகில் நெருங்கிய ரன்வீர் “இவரை எனக்குத் தெரியும் இமயவரம்பன் தானே இவங்க பேரு” என்க.
“ஹ்ம்ம்…” என்றாள்.
“எனக்குக் கொஞ்சம் தெரியும், ஆனா நா விசாரிப்பேன் எனக்குச் சரியா படலனா தாதா கிட்ட சொல்லிடுவேன்” என்ற தம்பியைப் பார்த்தவள்.
“விசாரிச்சுக்கோ….. எல்லார்கிட்டயும் விசாரி” என்றாள் அவன் கன்னத்தைக் கிள்ளி.
“இங்க நடந்த எல்லாத்தையும் நான் வீட்ல சொல்லிட்டா என்ன பண்ணுவ தீதி, உனக்குப் பயம் இல்லையா” என்றான் வீர்.
எப்படி இத்தனை தைரியமாக நிற்க்கிறாள், அதுவும் ஹிமா அக்கா!! என்று அவனால் ஆச்சர்யத்தை தாங்க முடியவில்லை.
“இது அவர் குடுத்த தைரியம் என்ன பிரச்னையா இருந்தாலும் என்னை விடமாட்டார், எங்கேயும் விட்டுகுடுக்கவும் மாட்டார், எல்லாத்தையும் பாத்துப்பார் அந்த நம்பிக்கை குடுத்த தைரியம்” என்றாள் நிமிர்வாக