“ஏம்மா தங்கராணி ஜாதகம் பாக்க வேண்டாமா?” என்று மாணிக்கம் கேட்டு முடிக்குமுன் “வேண்டாம் மாமா” என்று வந்து விழுந்தது மறுப்பு.
“பத்துக்கு எட்டு பொருத்தம் இருந்து, நாள் நட்சத்திரம் எல்லாம் பாத்துதான் கட்டிக்குடுத்தாங்க என் வாழ்க்கை என்ன ஆச்சுன்னு எல்லாருக்கும் தெரிஞ்சதுதானே, தலைல எழுதி அனுப்பினது என்னவோ அதுதான் நடக்கும்”.
“பாத்து நல்லதா சொன்னா பரவாயில்ல, ஒரு சொல்லு பழுதா போச்சுன்னா காலத்துக்கும் அது மனசுல குத்திகிட்டே இருக்கும் எல்லாரும் மனசார வாழ்த்தி நடத்தி வைப்போம் நல்லா இருப்பாங்க, என்ன மாமா சொல்றீங்க” என்றார் தங்கராணி.
“நூத்துல ஒரு வார்த்தை….. ஒத்த புள்ள வெச்சுருக்க எல்லாத்தையும் முறையா செய்யணும்னு உனக்கு நெனப்பிருக்குமே அதுக்காட்டி கேட்டேன்”.
“அப்போ நல்ல நாள் பாத்துடலாமா” என்றவர் நாள்காட்டியை எடுத்துப் பார்த்துவிட்டு.
“இன்னும் பத்து நாள்ல ஒரு முகூர்த்தம் இருக்கு அப்புறம் அடுத்த மாசம் இருக்கு” என்க.
“பேசி வெச்ச அப்பறம் நாள் கடத்த வேண்டாம் பக்கத்துல வரதுலயே வெச்சுடலாம்” என்க.
“அதுவும் சரிதான் ஆனா நாள் ரொம்ப கம்மி, இன்னும் ஆறு நாள்ல சிவராத்திரி வருது கோவில் வேலை கிடக்கே உங்களுக்கு அத முடிச்சுட்டு உடனே இது எப்படி?” என்றார் யோசனையாக.
“அட என்ன சித்தப்பா ஒரு குரல் குடுத்தா பாதி ஊரு வந்திடும், ஆளுக்கு ஒரு வேலையா பாத்து முடிச்சுடுலாம், எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன் நீங்க யார் யாரை அழைக்கணுமோ அத பாருங்க” என்றுவிட்டான் முடிவாக.
அந்த நாளையே முடிவு செய்துகொண்டனர், துணிமணி எடுப்பது கொஞ்சமாக நகை எடுப்பது என்று பெண்கள் வெகுசந்தோஷமாகச் சுற்றிக்கொண்டிருந்தனர்.
அன்று காலையே சித்தப்பனுக்கும் அவனுக்கும் வாக்குவாதம், அவன் முடியாது என்று நிக்க, இவர் முடிய வேண்டும் என்று நின்றார்.
“அப்படி என்னடா உனக்குப் புடிவாதம்” – மாணிக்கம்.
“எதுக்கு சொல்றேன்னு தெரிஞ்சும் திரும்ப அதையே சொன்னா எப்படி” என்று அவனும் முறுக்கி நின்றான்.
“என்ன? என்ன காலையிலே தகராறு ரெண்டு பேருக்கும்” என்று வந்தார் வர்ணம்.
“ஓ மவன் பண்ணிட்டு வந்திருக்கிற காரியத்தை நீயே கேளு, தனியா வீடு கட்டி போவ இடம் பேசி வெச்சுட்டு வந்திருக்கான், அதுக்கு கூட்டு உன் மறுமவன்” என்றார் மதியை பார்த்து முறைத்துக்கொண்டு.
“என்னய்யா இது என்ன பண்றீங்க” என்றார் வர்ணம் வேதனையோடு.
“மச்…. சித்தி அது அப்படி இல்ல, சித்தப்பா இங்கேயே கட்டிக்க சொல்றார் இன்னைக்கு இல்லனாலும் நாளைக்கு அது ஒரு சொல்லா வந்து விழும், கூடவே இருந்து அந்தப் புள்ளைங்களுக்கு சேர வேண்டிய சொத்தை இவனுங்க எடுத்துகிட்டாங்கன்னு”.
“வரப் போற மாப்பிளைங்க எப்படி என்னன்னு நமக்குத் தெரியாது ஒரு நாள் இல்ல ஒருநாள் இது ஒரு பிரச்னையா மாறி அது நம்ம வீட்டு பொண்ணுங்க வாழ்க்கைல தலைவலியா வரக் கூடாது, நம்ம வீட்டு பொண்ணுங்க பேர்ல சொத்து இருக்கணும் எப்பவுமே அது அவங்களுக்கு ஒரு பாதுக்காப்பு ஒரு பிடிப்பு அத மாத்த வேண்டாம்”.
“ராணி சித்தி இருக்குற வீட்டை இடிச்சுட்டு மதி நித்யா கல்யாணத்துக்குள்ள நல்லதா ஒரு வீடு கட்டறதுனு முடிவு பண்ணிட்டோம், அவன் உழைப்புல அவனே கட்டிப்பேன் சொல்லிட்டான் அது தான் அவனுக்கான மரியாதை, அதே மாதிரி என்னோட உழைப்புல எனக்கு ஒரு வீடு”.
“அது நமக்கு எல்லார்க்கும்தான் நாளைக்கே ரெண்டு பொண்ணுங்களையும் கட்டிக்குடுத்துட்டு மவன் கூடத்தான் வந்து நிக்கணும், சும்மா முறைக்க வேணாம்னு சொல்லு” என்க.
கணவரைப் பார்த்த வர்ணம் “அவன் சரியாத்தானே சொல்றான் எங்க போறாங்க எல்லாம் கண்ணுக்கெட்டன தூரத்துல தான் இருக்க போறாங்க, அவன் எல்லா பக்கமும் யோசிச்சுதான் சொல்றான் நம்மள மாதிரியே எல்லாரும் நினைப்பாங்களா தெரியாது”.
“ஒவ்வொருத்தருக்கும் விளக்கம் சொல்லிச் சொல்லி நாளை ஓட்ட முடியாது, பக்கத்துலே இருந்தாதான் பாசம்னு இல்ல அவன் விருப்பத்துக்கு அவன் இருக்கட்டும்” என்றவர் கணவன் காதில் “மவன் கல்யாணத்துக்கு சிறப்பா செஞ்சிருங்க, அவன் மறுக்கவும் முடியாது நம்ம மனசுக்கும் நிறைவு” என்க.
மனைவியைப் பார்த்தவர் முகத்தில் தெளிச்சம் வந்தது “என்ன சொன்ன சித்தி மீசை சிரிக்குது” என்றவனை பார்த்தவர், “என் மாமன்கிட்ட எனக்கு ஆயிரம் ரகசியம் இருக்கும் உனக்கு எதுக்குடா போப்போ வேலைய பாரு” என்று பஞ்சாயத்தை நிறைவு செய்து வைத்தார்.
நிச்சயம் முடிவு செய்யப்பட்டதும் நித்யா தன் தாயுடன் சென்று ஹிமா வீட்டில் அனைவரையும் அழைத்தாள், அவர்கள் வரப்போவதில்லை என்பது தெரியும் என்றாலும் தோழிகளைத் தனியே அழைக்க முடியாதே அவள் எதிர்பார்த்தபடியே ஹிமா விராலி இருவரையும் அனுப்புவதாக ஒப்புக்கொண்டான் ஆன்சல்.
மாலை ஆறு மணிக்கு மேல் கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் கோவிலுக்கு வந்துகொண்டிருந்தனர், பூஜை அமோகமாக நடந்துகொண்டிருந்தது, இரண்டு வண்டிகளில் வந்து இறங்கினர் தேவகி குடும்பத்தினர்.
ஆண்கள் கோவில் ஆட்களுடன் பேசிக்கொண்டே முன்னே நடக்க பெண்கள் பின்னே வந்து கொண்டிருந்தனர், விராலி அவள் தாயுடன் அமைதியாக வந்துகொண்டிருந்தாள்.
அனைவரையும் முன்னே விட்டு நிதானமாகப் பின்னில் வந்துகொண்டிருந்தாள் ஹிமானி, வெள்ளை நிறத்தில் லெஹன்கா அணிந்திருந்தாள் பல வண்ணங்கள் வாரி இறைத்த துப்பட்டாவும் அதற்க்கு பொருத்தமாகக் கம்மலும் கழுத்தில் ஆரமும் இருக்க அவன் விழிகள் ஏனோ அந்த மயில் மூக்குத்தியிலே நிலைத்தது.
அவனைக் கண்டவுடன் “எப்படி” என்று புருவங்கள் உயர்த்தி கேட்டவள், அவனைப் பார்த்து “சூப்பர்” என்றாள் சைகையில்.
“போ….” என்றான் விழிகளால் அவளிடம்.
“மாட்டேன்” என்று தலையை இடவலமாக அசைத்தவள் தன் வலது கையை அவனை நோக்கிக் கொஞ்சமாக நீட்டினாள் “பற்றிக்கொள் சேர்ந்தே போகலாம்” என்று.
அவள் செய்யும் சேட்டையில் புன்னகையில் விரிய துடிக்கும் இதழ்களைக் கடித்து முகத்தை வேறு புறம் திருப்பி வெகுநேரம் முயன்றவன் மதியிடம் “பாத்துக்கோ” என்றுவிட்டு கோவிலின் உள்ளே சென்றுவிட்டான்.
புன்னகையோடு அவளும் கோவிலுக்கு உள்ளே சென்றாள்.
அனைவரும் ஒன்றாக அமர்ந்துகொண்டனர், நித்யாவை அழைத்துத் தன்னோடு அமர்த்திக்கொண்ட ஹிமா அவளிடம் நிச்சயத்தின் ஏற்பாடுகளைப் பற்றி விசாரித்தாள், விழிமூடி அமைதியாக அமர்ந்து மனதார வேண்டிக்கொண்டாள்.
ஆயிரத்தி எட்டு விளக்கு போட வேண்டுமே வேண்டுதல் இருக்கிறதே சல்மாவிடம் கூறிவிட்டு நித்யாவை அழைத்துக்கொண்டு விளக்கு போடச் சென்றுவிட்டாள்.
விராலியை அழைக்கவில்லை அவள் ஏதோ மந்தரித்துவிட்ட நிலையில் இருந்தாள், நிதின் முற்றிலுமாகத் தன்னை மறுத்துவிட்டான், வீட்டில் முடிவு செய்த திருமணத்தை நிறுத்த ஒரே வழி இந்த ஊரைவிட்டே போவதுதான் அந்தத் திட்டமாவது சரியாக நடக்குமா என்ற பதட்டமும் யோசனையும் அவள் மூளை முழுதும் ஊர்ந்து கொண்டிருந்தது.
உஷாவும் ஜமுனாவும் கூட உடன் சேர்த்துக்கொண்டனர் அவர்கள் மூவரும் விளக்கில் என்னை ஊற்றித்திரி இட ஹிமா விளக்கை ஏற்றி ஒவ்வொரு இடமாக வைத்துக்கொண்டிருந்தாள்.
“நா அங்க வெச்சுட்டு வரேன் நீங்க உள்ள போங்க” என்றாள் ஹிமா “இல்ல நா வெயிட் பண்றேன்” என்ற நித்யா உஷா ஜமுனா இருவரையும் உள்ளே அனுப்பினாள்.
அவளைப் பார்த்திருக்க இரண்டு கண்கள் போதவில்லை அவனுக்கு, மதியின் பக்கம் பார்வை செல்ல “போறேண்டா” என்று நித்யாவின் அருகில் சென்றவன்.
“ஏய் கருவண்டு அங்க பூ எடுத்துக் குடுக்கஆள் இல்லனு கூப்பிடுறாங்க சீக்கிரம் போ” என்க அவள் ஹிமாவை திரும்பிப் பார்த்தாள்.
“நான் பாத்துக்குறேன் நீ போ” என்றவள் மும்முரமாகத் தீபம்ஏற்றினாள், அவள் முடிக்கும்வரை நகராமல் அங்கேயே நின்றிருந்தான்.
அனைத்தையும் முடித்தவள் அவனை நெருங்கி வர அவன் பார்வை சுற்றிலும் சுழன்றது “என்ன பண்ற யாரவது பாக்க போறாங்க” என்றவனிடம்.
“ரெண்டே நிமிஷம்” என்று மரத்தின் பின்னே அவனை நிறுத்தியவள், இடையோடு அழகாக ஆடிக்கொண்டிருந்த சிறிய சுருக்குப்பையிலிருந்து அந்தப் பரிசைஎடுத்து அவன் கைகளில் வைத்தாள்.
“என்னது!” என்றவன் அந்தத் தங்கநிற காகித்ததை பிரித்துப் பார்க்கஆண்கள் அணியும் கழுத்து சங்கிலி அதன் நடுவில் ருத்ராட்சம்.
“ஹிமா இது…..” என்றவனை முடிக்கவிடாமல் அவன் இதழில் விரல் வைத்துத் தடுத்தவள் “இது பிடிக்கலையா…. நான் குடுத்தா வாங்கிக்க மாட்டீங்களா” என்றாள் எதிர்பார்ப்போடு.
“என்ன பேசுற நீ, நா அதைச் சொல்லல” என்க.
“தெரியும்…. இது எங்க வீட்டு காசுல வாங்கினதுனு நெனச்சுதானே வேண்டாம் சொல்றீங்க” என்றவள் ஆன்சலிடம் சம்பளத்தை கேட்டு வாங்கிய விஷயத்தைக் கூறி “என்னோட காசு இது இப்போ வாங்கிப்பீங்களா” என்றவளை பார்த்தவனுக்கு என்ன சொல்ல என்றே தெரியல.
அவள் முகத்தைக் கைகளில்தாங்கியவன் “ஹிமா!! எனக்காக உங்க அண்ணாகிட்ட சம்பளம் கேட்டியா” என்றான் நம்ப முடியாமல்.
“ஹ்ம்ம்…” என்றாள் புன்னகைமுகமாக.
“நேரமாச்சு யாரவது வந்துடுவாங்க ப்ளீஸ்” என்க.
அவள் முன் கொஞ்சமாகக் குனிந்து நின்றான், செயினை அவன் கழுத்தில் இட்டு அழகு பார்த்தாள் ஹிமானி.
“ஹிமா…” என்ற நித்யாவின் அழைப்பு செவியைத் தீண்டியது “அச்சச்சோ நான் போறேன்” என்று வேகமாக இறங்கி ஒடியவள் மீண்டும் வந்து அவன் நெற்றியில் கீற்றாகத் திருநீறை வைத்துவிட்டு.
“ரொம்ப அழகா இருக்கு உங்களுக்கு” என்றாள் நிறைந்த புன்னகையோடு செயினை காண்பித்து, அவள் சென்றபிறகும் சுற்றியிருந்த மாயவலை அறுபடாமல் அவனைச் சூழ்ந்தே இருந்தது.
பல வருடங்களுக்குப் பிறகு மனம் நிறைந்த ஒரு சிவராத்திரி, அன்று துணை நின்று கண்ணீர் துடைத்தாள் இன்று… வேறு ஒருவருக்காகவும் செய்யாத ஒன்றை தனக்காகச் செய்திருக்கிறாள், அங்கேயே அமர்ந்துவிட்டான் அந்த நொடிகளின் சுகத்தை இழக்க விரும்பவில்லை.
நிச்சயத்திற்கு இன்னும் இரண்டு நாட்களே இருக்க மாணிக்கம் குடும்பத்தோடு தேவகி குடும்பத்தினரும் பஞ்சாயத்தில் நின்றிருந்தனர்.
அன்று அனைவரும் சேர்ந்து தன்னை அவமானப்படுத்தி அனுப்பிய கோபத்தில் இருந்த மதியின் தாய்மாமா பச்சையப்பன் இவர்களைப் பழிவாங்கக் காத்திருந்த தருணம், அவர் கண்களுக்கு விருந்தாக வந்து விழுந்தது இரவு தென்னந்தோப்பில் மதியோடு நின்றிருந்த முக்காடிட்ட பெண்ணின் உருவம்.
சேட்டு வீட்டு பெண் என்பது அவள் உடையிலும் நிறத்திலும் கண்டுகொண்டார் ஆனால் யார் என்று தெளிவாகத் தெரியவில்லை, கொஞ்சம் தள்ளி நின்று யாரவது வருகிறார்களா என்று நித்யா பார்த்து நின்றதும் அந்த இருட்டில் அவர் கண்களுக்குப் புலப்படவில்லை.
என்றாலும் உடன் இருந்த மச்சினன் மகனிடம் கூறி சில புகைப்படத்தை எடுத்துக்கொண்டார், அவர்கள் குடும்பம் ஊருக்குள் அவமானப்பட்டு நிற்க வேண்டும் இப்பொழுதும் மதி மாமா என்று புலம்பும் மகளிடம் அவனுடைய ஒழுக்கத்தை பாத்தியா என்று காட்ட வேண்டும் என்று திட்டம் போட்டார்.
அதைச் சிறப்பாகத் தொடங்கியும் வைத்தார் “என் பொண்ணை தொல்லை பண்ணினான், அதுக்கப்பறம் அத்த மகளை நிச்சயம் பண்ண பேசியிருக்கான், அதுக்கு இடையில இந்தப் பொண்ணுகூட ராத்திரில ரகசியமா பேசுறான் இவனை நம்பி எப்படி பொட்டப்புள்ளைகள படிக்க அனுப்ப” என்றவரின் கூற்றை ஏற்று பஞ்சாயத்தை கூட்டி விட்டனர்.
“ஏய் இருங்கப்பா பேசிட்டு இருக்கோம்ல” என்ற பஞ்சாயத்து தலைவர் “என்னப்பா மதி ரெண்டு நாள்ல நிச்சயத்தை வெச்சுகிட்டு வேற ஒரு பொண்ணுகூட நட்ட நடு ராத்திரி தென்னதோப்புல என்ன வேல” என்றார் அவனிடம்.
“சேட்டு வீட்டு பொண்ணு கூட நின்னுச்சே அதுக்கும் இந்தப் பையனுக்கும் என்ன சம்பந்தம் அத விசாரிங்கப்பா” என்றான் ஒருவன்.
“சேட்டு வீட்டு பொண்ணுனா எந்தப் பொண்ணு ரெண்டு பொண்ணுங்க இருக்கே இதுல யாரு” என்க நித்யா மதியின் பார்வை விராலியின் மீது பதிந்தது.
அவள் யாரையும் நிமிர்ந்து பார்க்காமல் தனக்கும் இதற்கும் சம்மந்தம் இல்லை என்று நின்றிருந்தாள்.
“என்னப்பா கேக்குறோம்ல…. அத்த மகளை நிச்சயம் பண்ணிட்டு வேற பொண்ணுகூட தோப்புல நின்னா அது என்ன கணக்கு, ஊருக்குனு ஒரு ஒழுக்கம் இருக்கா இல்லையா அந்தப் புள்ளய பிடிக்கலைன்னா பஞ்சாயத்துலே சொல்லு அத விட்டுட்டு பசங்களுக்கு பாடம் எடுக்குற வாத்தியார் இப்படி பண்ணலாமா” என்று அவர்களே பேசிக்கொண்டிருந்தனர்.
அவன் பார்வை நித்யாவை எரித்துக்கொண்டிருந்தது, அவனை நிமிர்ந்து பார்க்கத் தைரியம் இல்லாமல் பயத்தில் கைகளைப் பிசைந்துகொண்டு கண்ணீரோடு நின்றிருந்தாள் நித்யா.
“அட இந்த ரெண்டு பொண்ணுல எந்தப் பொண்ணுனுனாவது சொல்லுப்பா இவ்ளோ நேரம் கேக்குறோம் அப்படியே நின்னா எப்படி” என்று மீண்டும் மீண்டும் அவன் மீதே பழி சுமத்தப்பட, நித்யாவின் நிலையும் விராலியின் பதட்டமும் ஏதோ கொஞ்சம் புரிந்தது ஹிமானிக்கு.
இமயன் நிச்சயத்திற்கு பந்தல் இடும் விஷயமாகத் தேனி வரை சென்றிருந்தான்.
அனைவரையும் ஒருமுறை பார்த்த ஹிமானி “அங்க இருந்தது நான்தான்” என்றாள் மெல்லிய குரலில்.
அந்த நொடி ஏனோ அவளுக்கு அப்படி சொல்லத் தோன்றியது, இதனால் என்ன பிரச்சனை வரும் என்ன நடக்கும் எதுவும் தெரியவில்லை, பழியை தன் மீது போட்டுக்கொண்டாள்.
மதியே ஒரு நொடி பதறிவிட்டான் “என்ன செய்கிறாள் இவள்” என்று, “ஹிமா….” என்று நித்யா அழைக்க.
“இல்ல தேவையில்லாம அவங்க மேல ஏன் பழி விழணும், நான் உண்மைய சொல்லிடுறேன்” என்க, அவள் குடும்பத்தினர் அதிர்ந்து நின்றனர்.
“என்ன பேசுற ஹிமா, நீ எதுக்காக அங்க போன?? என்றான் ஆன்சல் ஆத்திரத்தோடு.
“நா இதயாவை பாக்க போனேன்” என்றாள் அவள்.
“யார??” என்றார்கள் குழப்பமாக.
“அவரைப் பாக்க போனேன்” என்றவள் கைக்காட்டிய இடம் அனைவரின் பார்வையும் திரும்ப, அவன் புல்லட் சீறிப்பாய்ந்து வந்து நின்றது பஞ்சாயத்தில்.