புது மஞ்சள் நூலில் கோர்க்கப்பட்ட தங்க தாலி நெஞ்சில் உறவாடத் தன்னை சுற்றி அமர்ந்திருந்த யாரையும் பார்க்காமல் மிக அமைதியாக அமர்ந்திருந்தாள் ஹிமானி.
கோர்க்கப்பட்ட கைகளின் மீது அவளின் விழிநீர் முத்துகளாக விழுந்து தெறித்தது, சூடாகக் காபி எடுத்து வந்த வர்ணம் தங்கராணியை பார்க்க அவர் “இல்லை” என்பதாகச் சைகை செய்தார்.
அனைவருக்கும் காப்பியை கொடுத்தவர் அவளிடம் நீட்ட “வேண்டாம்” என்று மறுத்தாள், வந்த நொடி முதல் இப்படியேதான் அமர்ந்திருக்கிறாள்.
காலடியோசை கேட்டுத் திரும்பிப் பார்த்தவர்கள் இமயனை கண்டதும் மெல்ல அறையிலிருந்து வெளியேறினர்.
“அழுதுட்டே இருக்குப்பா” என்றார் வர்ணம்.
“நாப்பாத்துக்குறேன்” என்று அவரை அனுப்பிவிட்டு உள்ளே நுழைந்தவன் கதவைக் கொஞ்சமாகச் சாற்றிவிட்டு அங்கேயே நின்றான்.
இறுக்கமாகப் பிணைந்திருந்த விரல்களில் நடுக்கத்தை அவனால் உணர முடிந்தது, அவளை நெருங்கவில்லை “ஹிமா…” என்றவன் அழைப்பில் இன்னும் அழுகை வெடிக்க முகத்தை அவனுக்குக் காட்டாமல் நன்றாகத் தலையைக் குனிந்துகொண்டாள்.
“என்ன பாக்க மாட்டியா ஹிமா” என்றவன் முடிப்பதற்குள் ஓடிவந்து அவனை இறுக கட்டிக்கொண்டாள், கண்ணீர் துளிகளும் விசும்பல் சத்தமும் அவன் மார்பில் புதைந்தது.
“என்ன பாருடாமா எதுக்கு அழுகை” என்றவன் அவள் முகத்தை நிமிர்த்தித் தன்னை பார்க்க வைத்தான்.
“இங்க பிடிக்கலையா” என்க.
“இல்லை” என்ற தலை ஆட்டலில் சிவந்து விட்ட மூக்கும் நிறைந்து நின்ற விழிகளுமாகச் சின்னக் குழந்தையாகத் தெரிந்தாள் அவனுக்கு.
“அப்பறம் என்னடா”.
“என்னால உங்களை எல்லாரும் தப்பா பேசுவாங்களா, நா அப்படி சொன்னது தப்புதானே உங்ககிட்ட கேக்காம நான் அப்படி எல்லார்கிட்டயும் சொன்னது தப்புதானே, என்னால தான அப்பா உங்கள….” என்றவளுக்கு வார்த்தைகள் வராமல் சிக்கிக்கொண்டது.
“ஷ்… ஷ்ஷ்… என்ன சொன்னார்? ஒன்னும் இல்ல, சாபம் எல்லாம் எனக்குப் புதுசு இல்ல, பெத்தவளே நிறையா குடுத்தாச்சு, வரமா நீ என் கூட இருக்கும்போது எதுவும் என்ன ஒன்னும் செய்யாது, எதுக்கு இந்த வாழ்க்கைன்னு யோசிச்சவனுக்கு, உசுர பிடிச்சுவைக்க ஒரு காரணத்தைக் குடுத்தவ நீ”.
“இப்படி நடந்தது சரியா தப்பா அதெல்லாம் எனக்குத் தெரியாது, எனக்குத் தெரிஞ்சதெல்லாம் ஒண்ணுதான், இனிமே நீ என்கூட என் பக்கத்துல அவ்ளோதான், இதனால என்ன பிரச்சனை வந்தாலும் நான் பாத்துக்குறேன்” என்றபோது அவளுக்கு மீண்டும் அழுகைதான் வந்தது.
“நீ எப்படி நல்லா வாழ்வ… எங்க வீட்டு பொண்ண ஏமாத்தி கட்டாயப்படுத்தி, பயமுறுத்தி எங்ககிட்ட இருந்து பிரிச்சிட்ட, நீ நல்லா இருக்கமாட்ட, எங்க கண்ணால பாக்கபோறோம் நீ உருப்புடாம தான் போவ” என்றார் அவள் தந்தை.
மனமெல்லாம் பதறியது ஹிமானிக்கு “இல்லை” என்று மறுக்கப் பார்த்தவளை தன்னோடு சேர்த்து அனைத்தவன் வேண்டாம் என்றான் விழியசைவில்.
பழியையும் சாபத்தையும் அவன் மீதே வாங்கிக்கொண்டான், தன்னால்தானே அவனுக்கு இந்த நிலை என்ற எண்ணமே அவளைக் கூறு போட்டது.
“சண்டை அடிதடி இதெல்லாம் இல்லாம நம்ம கல்யாணம் நடந்திருக்கு, நா முறைப்படி வந்து கேட்டிருந்தாலும் உங்க வீட்டில உன்னை எனக்குக் குடுக்க சம்மதிச்சிருக்க மாட்டாங்க” என்றான் தாலியை கையில் எடுத்து அவனை நிமிர்ந்து பார்க்க அவளை ரசனையோடு பார்த்திருந்தான்.
“எல்லாரும் என்னை வில்லன் மாதிரி பாக்க போறாங்க” என்றவனை விட்டுத் தள்ளி நின்றவள் “ஏன்” என்றாள்.
அவளை மீண்டும் தன் அணைப்பில் கொண்டுவந்தவன் “நீ வந்ததுல இருந்து அழுதுட்டே இருக்க அப்பறம் வேற எப்படி நினைப்பாங்க” என்க.
இப்பொழுது முற்றிலுமாக அழுகை நின்றுவிட்டது “இமயனோட ராணியை பாக்க எல்லாரும் காத்திருக்காங்க போலாமா” என்றவுடன் துப்பட்டாவால் முகத்தை நன்றாகத் துடைத்துக்கொண்டவள் அவனுடன் வெளியில் வந்தாள்.
“வாம்மா, பயப்படாத தாயி எல்லாம் நம்ம சொந்தம்தான் திடீர்ன்னு இப்படி நடக்கவும் எல்லாரும் வந்துட்டாங்க வேற ஒன்னும் இல்ல” என்றார் மாணிக்கம்.
“ஏய்யா பெரியவங்கள கும்பிட்டுக்கோங்க” என்றார் இருவரிடமும் மனைவியுடன் பொதுவாக அனைவர் முன்பும் விழுந்து வணங்கச் சுற்றி இருந்த சொந்தங்கள் அனைத்தும் மனமார வாழ்த்தியது.
இத்தனை கலவரத்திலும் ஒருத்தி மட்டும் திறந்த வாய் மூடாமல் அமர்ந்து அவர்களைப் பார்த்திருந்தாள், அவளின் தலையில் ஓங்கி கொட்டிய உஷா “வாய்க்குள்ள கொசு இல்ல யானையே போகும்போல அப்படி என்ன யோசனை உனக்கு” என்றாள்.
திரும்பி அவளைப் பார்த்தவள் “உனக்குத் தெரியுமா இது!!” என்றாள் இமயனையும் ஹிமாவையும் காண்பித்து.
“ஓட்டிகிட்டே சுத்துனது நீ என்ன கேக்குறியா?” என்றாள் அவள்.
“கூடவே இருக்கேன் என்கிட்டே ஒரு வார்த்தை சொல்லல யாருமே” என்றாள் தலையைத் தேய்த்துக்கொண்டே.
“இது எப்படி நடந்துச்சு!!” என்றவளுக்கு மண்டையை உடைத்துக்கொள்ளலாம் போல இருந்தது எப்படி யோசித்தும் இவர்கள் இருவரும் காதலித்திருப்பார்கள் என்று அவளால் நம்ப முடியவில்லை, மதியை பார்க்கக் கூடத் தைரியம் வரவில்லை.
இமயனின் பார்வை உஷாவின் மீது படிய வேகமாக அவன் அருகில் சென்றவள் “அண்ணா…” என்றாள்.
வெளியே உறவுகள் அனைவரும் ஆளுக்கு ஒரு கேள்வியாகக் கேட்டுக்கொண்டிருக்க அனைவருக்கும் பொறுமையாகப் பதில் சொல்லிக்கொண்டிருந்தார் மாணிக்கம்.
அவருடன் நின்றிருந்தவன் பெரிதாக யாருடனும் பேசவில்லை அவர்கள் பேசுவதை அமைதியாக நின்று கேட்டுக்கொண்டிருந்தான், இடையிடையே பார்வை ஜன்னலின் ஓரம் நின்றிருந்த தன்னவளின் மீதும் படிந்து மீண்டது.
“அண்ணி” என்ற ஜமுனாவை திரும்பிப் பார்த்தவள் புன்னகைக்க முயன்றாள், அவள் கையைப் பிடித்து அழைத்துவந்து கட்டிலில் அமர்த்தியவள் அருகில் அமர்ந்து “அண்ணாவை உங்களுக்கு எப்போல இருந்து தெரியும் அண்ணி” என்க.
“உங்க லவ் ஸ்டோரிய சொல்லுங்கண்ணி” என்று மறுபக்கம் வந்து அமர்ந்தாள் உஷா, இருவரையும் பார்த்து விழித்தவள் “அப்படிலாம் பெருசா ஒண்ணுமில்ல” என்றாள் வெட்கம் பூக்க.
கட்டிலின் மூலையில் அமர்ந்து இவர்களைப் பார்த்திருந்த நித்யாவிற்கு பதட்டம் கூடி கூடி வந்தது, மதி அவளிடம் பேசவில்லை என்பது போக இமயன் அவளைக் கொஞ்சம் கூடக் கண்டுகொள்ளவில்லை.
இந்த நொடிவரை அவளிடம் ஒருவார்த்தை யாரும் எதுவும் விசாரிக்கவில்லை, தங்கராணி கூட மகளிடம் இன்னும் பேசவில்லை, நேற்றய நிகழ்வுகள் மீண்டும் மீண்டும் மனதில் படமாக ஓடியது.
இரவு பதினோரு மணிபோல நித்யாவிடமிருந்து அழைப்பு வந்தது மதிக்கு “என்ன இந்த நேரத்துல கூப்டுறா” என்ற எண்ணத்தோடு எடுத்தவுடனே “என்னடி ஒன்னும் பிரச்னை இல்லையே” என்றான்.
அந்தப் பக்கம் சில நொடிகள் மவுனம் “நித்யா…” என்றவன் குரலில் “இல்ல மாமா, இங்க நம்ம தென்னந்தோப்புல இருக்கேன் உடனே வா” என்று வைத்துவிட்டாள்.
மீண்டும் மீண்டும் அவன் அழைத்துப் பார்க்க அழைப்பைத் துண்டித்தாள், என்னமோ ஏதோ என்று பதறி அறையிலிருந்து வெளியில் வந்தவன் முதலில் இமயனை அழைத்துச்செல்ல எண்ணி அவன் அரை வாயில்வரை சென்றான்.
கோவில் வேலை அதோடு நிச்சயத்திற்கான ஏற்பாடு என்று காலில் சக்கரம் கட்டி பறக்கிறான், இவனையும் ஒன்றும் செய்ய விடுவதில்லை “நீ இருடா நாப்பாத்துக்குறேன்” என்றுவிட்டான்.
அதிகாலை தேனி செல்ல வேண்டும் என்று கூறியிருக்க அவனைத் தொல்லை செய்யாமல் இவன் மட்டும் ஓட்டமும் நடையுமாகத் தென்னந்தோப்பை அடைந்தான், அந்தக் கும்மிருட்டில் இரு பெண்கள் தனியாக அமர்ந்திருக்க பார்த்தவுடனே அவனின் பொறுமை எல்லாம் பறந்தது.
“இல்லமாமா இவ இங்க வந்துட்டு எனக்குப் போன் போடுறா, தனியா இருக்க பயமா இருக்கு உடனே வா ரொம்ப அவசரம்னு” என்றாள் விராலியை காண்பித்து.
“அவ புத்திய வித்துட்டு திரியிறா உனக்கு என்ன கேடு, அத்த எப்படி விட்டாங்க உன்னை” என்க.
“அம்மா தூங்குது வீட்டை வெளில பூட்டிட்டு வந்தேன்” என்றவளை கொன்றால் என்ன என்று தான் தோன்றியது.
“உன்ன சல்லி சல்லியா நொறுக்காம உடமாட்டேன் கெளம்புடி வீட்டுக்கு” என்றவன் முன்னே நடக்க, அவன் முன்னில் வந்து வழியை மறித்தாள் விராலி.
“தள்ளிப்போ கோவத்துல கை வெச்சுற போறேன்” என்றான் பல்லைக் கடித்து.
“ஒரே நிமிஷம் ப்ளீஸ் வாழ்வா சாவான்னு நிக்குறேன், அந்தமான் போக எல்லா ஏற்பாடும் பண்ணிட்டேன் நீங்க என்கூட மதுரை ஏர்போர்ட் வரைக்கும் வந்தா போதும் அந்தமான்ல காலேஜில படிச்ச பிரென்ட் இருக்கா அவ வந்து பிக்கப் பண்ணிப்பா ப்ளீஸ்” என்றவளை “லூசா நீ” என்று பார்த்திருந்தான்.
“நீ அந்தமான் போ ஆப்ரிக்கா போ எனக்கு ஒன்னும் இல்ல, எங்களை எதுக்கு இதுல இழுக்கிற, அன்னைக்கே சொல்லிட்டேன் என்ன பிரச்சனையோ அதை வீட்ல முதல்ல பேசு புரிய வைக்க முயற்சி செய்”.
“எந்த நம்பிக்கைல உனக்கு உதவி பண்ண சொல்ற, இவ பிரெண்டுன்னா?? அங்க போய் ஏதாவது பிரச்னை ஆச்சுன்னா அனுப்பின நாங்க காலத்துக்கும் அந்தக் குற்ற உணர்ச்சியோட இருக்கணுமா”.
“காதலிச்சவன் கூடப் போறியா அதும் இல்ல, ஏதோ பிரெண்ட்னு சொல்ற அந்தப் பொண்ணால உனக்கு எவ்ளோ உதவி பண்ண முடியும், வேலை கிடைக்கும்னு நம்பிக்கை இருக்கா, தனியா தங்க தைரியம் இருக்கா” என்றான்.
எதற்கும் பதில் இல்லை அவளிடம் “என்ன பண்ணப் போறோம்னே தெரியல, என்னதான் நெனச்சுட்டு இருக்க” என்றவன்.
“உன்னை அடி வெளுத்தா எல்லாம் சரியா போகும்” என்றான் நித்யாவிடம்.
“கெளம்பு முதல்ல” என்று விராலியை முன்னே விட்டுப் பின்னே நடந்தான்.
“இவளை மாதிரிதான் நீயுமா வீட்ல எல்லாரையும் தூங்கவெச்சுட்டு வந்திருக்கியா” என்றான் அவள் வெளிப்பக்கமாகப் பூட்டி இருந்த வீட்டைப் பார்த்து.
விராலிக்கு உள்ளுக்குள் புகைந்து கொண்டு இருந்தது, நித்யா மூலம் எப்படியாவது இவனைச் சரிக்கட்டி உதவியை வாங்கி விடலாம் என்று நினைத்திருக்க கடைசியில் இப்படி காலை வாரி விட்டுவிட்டானே என்று எரிச்சல் வந்தது.
ஒன்றும் பேசாமல் அவள் உள்ளே சென்றுவிட்டாள், நித்யாவை வீட்டில் விட்டவன் அவள் பேச வருவதை கேக்காமல் வீட்டிற்கு நடந்தான்.
காலையிலே பஞ்சாயத்து கூடிவிட்டது, இறுதிவரை விராலி வாய் திறக்கவில்லை “அவரைத்தான் பாக்க போனேன்” என்றவள் கைக்காட்டிய இடத்தில் நின்றவனை அனைவரும் ஆச்சர்யமாகப் பார்த்தனர்.
“ஆமாங்க என்ன பாக்கத்தான் வந்தா” என்றவன் அவள் அருகில் நெருங்கி நடுங்கும் விரல்களை இறுக்கமாகப் பற்றிக்கொண்டான்.
“என்னப்பா இது!! நீ இப்படி பண்ணலாமா வயசு புள்ளய நடுராத்திரி வரச் சொல்றது தப்பு இல்லையா” என்க, மறுத்துப் பேச வந்த ஹிமானியின் கைகளில் அழுத்தம் கொடுத்துத் தடுத்தவன் அமைதியாகவே நின்றான்.
“சரிப்பா இப்போ என்ன பண்றது, ரெண்டுபேரும் விரும்பறதா சொல்றாங்க இதுக்கு மேல நாம சொல்ல என்ன இருக்கு” என்றார் ப்ரெசிடெண்ட்.
“இருக்கு” என்ற முன்ஜல் “எங்க வீட்டு பொண்ண எங்ககூட அனுப்புங்க நாங்க பாத்துக்குறோம்” என்றார்.
பெண்கள் அதிர்ச்சியில் நின்றனர், ஹிமா ஒருவனை விரும்பக்கூடும் என்று அவர்கள் கனவிலும் நினைக்கவில்லை, ஆண்கள் மொத்தமாகக் கொதிப்பில் இருந்தனர், அவனுடன் அவள் நிற்பதையே அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
தேவகிக்கு என்ன பதில் சொல்ல, குடும்ப கவுரவம் என்ன ஆகும் இப்பொழுது என்ன செய்ய என்று ஒன்றும் புரியவில்லை, முதலில் அவளை இங்கிருந்து அழைத்துச்செல்ல வேண்டும் அதுமட்டுமே அவர்கள் சிந்தனையில்.
அவனோடு இன்னும் ஒட்டி நின்றவள் பயம் நிறைந்த விழிகளோடு அவனைப் பார்த்தாள் “ஒண்ணுமில்ல ஒண்ணுமில்ல” என்றவன்.
“இல்லங்க அனுப்ப முடியாது, இனிமே என்கூடதான் யாருக்கும் விட்டுகுடுக்க முடியாது” என்றான் உறுதியாக.
“இங்க பாருங்கய்யா பஞ்சாயத்து வரைக்கும் வந்தப்புறம் இங்கயே பேசிடலாம்” என்ற மாணிக்கம் ஹிமானியின் பெரியப்பா முன்ஜலிடம் “அய்யா அந்த வீட்ல நீங்கதான் மூத்தவர் உங்ககிட்டயே கேக்குறேன், எங்க மவன் இமயவரம்பனுக்கு உங்க வீட்டு பொண்ண கட்டிக்குடுங்க” என்று அனைவர் முன்பும் கேட்டுவிட்டார்.
தேவகி குடும்பத்தினர் அதிர்ச்சியிலிருந்து விலகாமல் அப்படியே நிற்க.
“அப்படிலாம் முடிவெடுக்க முடியாது எங்க பொண்ண அனுப்புங்க” என்ற ஆன்சலுக்கு அவளைக் கன்னம் கன்னமாக அறைய வேண்டும் என்று தோன்றியது, எப்படி அவளை மகாராணியாகப் பார்த்துக்கொன்டோம் இப்படி செய்துவிட்டாளே என்று உள்ளுக்குள்ளே எரிமலையாகக் கொதித்துக் கொண்டிருந்தான்.
“இதுல எதுக்கு பிடிவாதம், எங்க ஊரு பையனுக்கு என்ன குறை சல்லடை போட்டுத் தேடினாலும் இந்த மாதிரி தங்கமா ஒரு புள்ளய பாக்க முடியுமா உங்களால, சொந்தமா தொழில் இருக்கு ஊருக்குள்ள நல்ல பேரு, எல்லார்க்கும் நல்லதை யோசிச்சு சொந்தபந்தத்தை அரவணைச்சு போற நல்ல குணம் இருக்கு வேற என்ன வேணும் நம்பி கொடுங்கப்பா” என்க.
ஊரே அவனுக்கு வேண்டி அவர்களிடம் சிபாரிசு செய்தது, இதற்குள் மதியை அழைத்த மாணிக்கம் அவனிடம் செய்தி கூறி அனுப்பினார், இங்கே பேச்சுவார்த்தை முடிவதற்குள் கையில் மாலையோடும் தாலியோடும் வந்துவிட்டான்.
அவர்களுக்கு வேறு வழி இருக்கவில்லை தேவகி குடும்பத்தினர் தவிர மற்ற அனைவரின் ஆசிர்வாதத்தோடு ஹிமானி ஸம்ருத்தியை தன்னுடைய சரிபாதி ஆக்கிக்கொண்டான் இமயவரம்பன்.