“அன்னைக்கு எல்லாரும் என்னை வில்லி மாதிரி பாத்தீங்க, இப்போ என்னாச்சு அமைதியா இருந்து எவ்ளோ பெரிய வேலை பாத்துட்டா” என்று சொல்லிச் சொல்லி மற்றவர்கள் மனதில் நஞ்சை விதைத்துக்கொண்டிருந்தாள் விராலியின் தாய் வம்ஷி.
மகள் செய்ததை இன்னும் நம்ப முடியாமல் இடிந்து போய் அமர்ந்திருந்தார் சல்மா.
“இந்த அம்மா கொஞ்ச நேரம் பேசாமல் இருந்தால் தேவலாம்” என்ற எண்ணமே விராலிக்கு, தனக்கு நடக்க வேண்டும் என்று எண்ணிய அனைத்தும் ஹிமணிக்கு நடந்துவிட்டது.
இந்த வீட்டிலிருந்து விடுதலை அதோடு விரும்பிய வாழ்வு கிடைத்துவிட்டது அடுத்து என்ன என்ற யோசனையோடு அவளின் அறையில் சென்று முடங்கினாள்.
வம்ஷிக்கு இதை அப்படியே விட மனம் இல்லை உடனே அழைத்துவிட்டாள் மாமியாருக்கு, அன்றே புறப்பட ஏற்படு செய்யச் சொல்லிவிட்டார் பேரனிடம், மகன்கள் மாற்றி மாற்றி அழைத்தும் எந்த அழைப்பையும் எடுக்கவில்லை.
மாலை மங்கி இரவும் வந்தது பேருக்கு உண்டுவிட்டு அமர்ந்திருந்தாள் ஹிமானி, இமயனும் மதியும் தங்கி இருக்கும் வீட்டில் இவர்களைத் தங்க வைப்பது என்று மற்றவர்கள் முடிவு செய்திருந்தனர்.
மதி வேறிடம் பார்த்துக்கொள்கிறேன் பிரச்சனை இல்லை என்று சொல்லிவிட்டான், இமயனுக்கு அவர்கள் எண்ணம் புரிந்தது, படுக்கை விரிப்புகள் மாற்றப்பட்டு அறையில் மாற்றம் நிகழ்ந்துகொண்டிருந்தது.
“அண்ணிய வரச்சொல்லு” என்றான் உஷாவிடம்.
தோட்டத்தில் நின்றிருந்தவனின் அருகில் சென்றவள் அவனைப் பார்த்து நிற்க வேறு எங்கோ பார்வை பதித்து நின்றிருந்தான் “அங்க…… தங்கச்சிங்க கூடப் படுத்துக்குறியா?” என்றான் குரல் இறங்கி இருந்தது கேட்பதற்குள் நிறைய தடுமாறினான்.
அவள் கைகள் அவன் தோளைத் தொட அழுத்தமாகப் பற்றிக்கொண்டான் “இங்க வசதி கம்மி இந்த வீட்டில நானும் மதியும்….” என்றவனை தன்னை நோக்கித் திருப்பினாள்.
“இங்க எந்த வசதியும் கம்மி இல்ல” என்றாள் அவன் நெஞ்சில் கரம் பதித்து “நா அங்கேயே இருந்துப்பேன் எனக்கு எந்தப் பிரச்னையும் இல்ல, நீங்க எல்லாத்தையும் யோசிச்சு கவலை படாதீங்க, நா இந்த வீட்டுக்கு வந்ததால மதி அண்ணா வெளில போனா அதுதான் எனக்குக் கஷ்டமா இருக்கும்” என்க.
அவள் கரங்களைத் தன் கைகளுக்குள் பொதிந்து கொண்டான், அவனால் எதையும் பேச இயலவில்லை.
பெரிய வீட்டில் நல்ல வசதியோடு வாழ்ந்தவள், அவளைத் தன்னுடன் வாழ அழைத்து வரும்போது அத்தனை வசதிகள் இல்லை என்றாலும் தங்களுக்கென்று ஒரு வீடு அதில் தேவையான வசதிகள் அவளை ராணியாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற கனவு அனைத்தும் இருந்தது.
வீட்டிற்கு இடம் வாங்கியதுகூட அதை முன்னிட்டே இப்படியொரு நிகழ்வு அவன் எதிர்பாராதது, சட்டென்று மாறிவிட்ட சூழ்நிலையில் அவனால் ஒன்றும் செய்ய இயலா நிலை.
“தேங்க்ஸ்” என்றவனை பார்த்தவள் விழிகளில் இனிமேல் இதைச் சொல்லாதே என்ற கண்டிப்பு, ஆழ்ந்த மூச்செடுத்தவன் “சொல்லமாட்டேன் போப்போய்த் தூங்கு” என்றான் மெலிதான புன்னகையோடு.
சில அடிகள் நடந்தவள் திரும்பி அவனைப் பார்த்தாள் “என்னம்மா…” என்றவன் அருகில் வர “உங்கள ஒரு தடவ கட்டி புடிச்சுகிட்டுமா” என்றாள் ஏக்கமாக.
அவளை இழுத்து அனைத்தவனுக்கு நெஞ்சை அடைத்தது, யாரோ பிடித்து நெறிப்பதை போலத் தொண்டை எரிந்தது, அவளுக்கு அப்பொழுதும் அழுகைதான் வீட்டை எண்ணி பெற்றவரை எண்ணி அவர்களின் கோபத்தையும் சாபத்தையும் எண்ணி.
ஹிமானிக்கு எப்படியோ அவனுக்கு இது பலவருட தவம் மனதில் அவளைச் சுமக்க தொடங்கி வருடம் பல கடந்துவிட்டது, நடக்குமா நடக்காத என்பதை தாண்டி அவள்தான் தன் வாழ்வு என்ற எண்ணமே அவனை ஓடவைத்தது.
அவன்மீதான விருப்பம் தொடங்கி சிறிது காலமே ஆனாலும் சட்டென்று அவள் மனதில் நிறைந்துவிட்டான் இமயன், வேறு யாரோடும் தோன்றாத நெருக்கமும் பிணைப்பும் நம்பிக்கையும் அவனிடம் வந்தது பெண்ணுக்கு.
இருவருக்கும் இப்பொழுது உடல் சார்ந்த தேடல் இல்லை, ஒருவருக்கு மற்றவரின் அருகாமை தேவைப்பட்டது கைக்கோர்க்க, தோள் சாய்த்துக்கொள்ள தலைகோத நெற்றி முத்தம் வைக்க.
சில நொடிகளில் தெளிந்துவிட்டாள் பெண் அவனிலிருந்து விலகி நிற்க அவள் நெற்றியில் அழுந்த முத்தமிட்டவன் “போ” என்றான் விழிகள் மூடி நின்று.
ஹிமானியிடம் பேசிவிட்டு வீட்டிற்குள் நுழைந்தவனை பார்த்த மதி “மாப்ள” என்று அழைக்க.
“ரொம்ப டயர்ட் தூங்கணும்” என்றவன் அறைக்குள் சென்று கட்டிலில் விழுந்தான், உடல் உறக்கத்திற்கு கெஞ்ச மனம் விழித்தே கிடந்தது உறங்க முடியவில்லை நேரம் இரவு ஒரு மணியைக் கடந்திருக்க வீட்டிலிருந்து வெளியேறி அந்த வீட்டை நெருங்கினான்.
சுற்றிவந்து ஜன்னலின் வழி பார்க்க உஷாவும் நித்யாவும் கீழே பாய் விரித்துப் படுத்திருந்தனர், கட்டிலின் நடுவில் ஜமுனா உறங்கச் சுவற்றை ஒட்டி உடலைக் குறுக்கி படுத்திருந்தாள் ஹிமானி.
இங்கே எ.சி ஒன்றும் கிடையாது மின் விசிறி உண்டு அதோடு ஜன்னலைத் திறந்து வைத்தே உறங்குவது வழக்கம் காற்று கொஞ்சம் வரும், அவள் உறங்குவதை பார்த்து நின்றான் வெகுநேரம், பிறகு திண்ணையில் அமர்ந்துவிட்டவன் நாலரை மணிபோலத் தயாராகி பண்ணைக்குச் சென்றுவிட்டான்.
காலை எப்பொழுதும் போல நேரத்தோடு எழுந்துவிட்டாள் ஹிமா, இங்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லையே உஷாவும் ஜமுனாவும் நல்ல உறக்கத்தில் இருந்தனர் நித்யாவை காணவில்லை எழுந்து வெளியில் வந்து பார்க்க வெளி திண்ணையில் பேச்சுக்குரல்கள் கேட்டது.
இவளைப் பார்த்தவுடன் “வாம்மா” என்ற வர்ணம் “வா” என்று பின்னால் அழைத்துச்சென்று குளியலறையை காண்பித்தார்.
“பல்லு தேச்சுக்கோ” என்று புதிய பிரஷ் ஒன்றையும் அவள் கையில் கொடுத்தவர் “காலைல என்னமா குடிப்ப காப்பியா டீயா” என்றார்.
அவள் கன்னத்தை வழித்தவர் “இங்க அப்படிலாம் எதுவும் இல்ல, உனக்கு வெக்கனும்னா நீயே வை மறுமவ கையாள டீக்குடிக்க கசக்குமா என்ன” என்றவர்.
“நாளைல இருந்து நீ வை இன்னைக்கு நான் செய்றேன்” என்று உள்ளே சென்றார் இத்தனை நேரம் இருந்த பதட்டம் தணிந்தது, அனைத்தும் முடித்து முகம் கழுகி முடி ஒதுக்கி உள்ளே வர அவளிடம் துண்டை எடுத்து நீட்டினார் தங்கராணி.
என்ன சொல்லி அழைக்க இவர்களை என்று யோசித்து நிற்க “உன் புருஷனுக்கு சித்தி அத்தை சொல்லிக் கூப்பிடு இவங்களும் அத்தைதான் புள்ளைங்க கூப்பிடுற மாதிரி வர்ணம் அத்தை ராணி அத்தை கூப்பிட்டிரு” என்றார் அவர்.
“குளிக்கணும்” என்றவள் மெல்ல சொல்ல.
“அதுக்கென்ன, இரு இந்த டீயை குடி தோ வரேன்” என்ற வர்ணம் உஷாவை தட்டி எழுப்பி நிச்சயத்திற்கு என்று புதிதாக வாங்கி வைத்திருந்த உடைகளிலிருந்து அவளுக்குத் தேவையானதை தேடி பிடித்து எடுத்துச் சென்று கொடுத்தார், குளித்து வந்தவள் கையால் விளக்கையும் ஏற்ற வைத்தனர்.
அனைவரும் எழுந்துவிட்டனர் எல்லோருக்கும் உஷா டீயை கொடுத்துக்கொண்டிருக்க மதியும் மாணிக்கமும் வெளியில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர், நித்யா ஒரு ஓரமாக அமர்ந்து அனைவரையும் பார்த்திருந்தாள்.
ஹிமாவின் பார்வை நொடிக்கொருமுறை வாயிலைத் தொட்டு மீண்டது அவனை மட்டும் காணவில்லை இதுவரை.
“தம்பி விடியகாலையிலே பண்ணைக்குப் போய்டும் அங்கேயிருந்து தோட்டத்துக்குப் போயிட்டு எட்டு மணிக்கு மேலதான் வரும்” என்றார் தங்கராணி, தலையைக் குனிந்துகொண்டாள் அனைவர் முகத்திலும் புன்னகை நிறைந்தது.
அவள் நித்யாவின் அருகில் சென்று “அண்ணிக்கு என்ன ரொம்ப பிடிக்கும் சாப்பிட” என்று கேட்க.
“எனக்கு எப்படி தெரியும் அவளுக்கு நம்ம அண்ணனைப் பிடிச்சிருந்ததே எனக்குத் தெரியல” என்றாள் பட்டென்று.
ஏதோ ஒரு கோபம், கூடவே இருந்தும் தன்னிடம் சொல்லவில்லையே தனக்கு தெரியவில்லையே என்ற வருத்தம், சொந்த தங்கை ஊரை விட்டு ஓடிப் போகத் திட்டம் தீட்டித் தன்னிடம் உதவி கேட்டு அதைத் தான் செய்ய ஒப்புக்கொண்டதை இதுவரை ஹிமாவிடம் தான் பகிரவில்லை என்பதை அவள் மறந்துபோனாள்.
ஹிமாவின் மனம் காயம் கண்டது அனைவரும் பதறி அவளைத் திரும்பிப் பார்க்க விழிகள் நிறைந்துவிட்டது.
“அம்மா…” என்ற நித்யாவின் அலறலில் அனைவரும் திரும்பிப் பார்க்க இன்றுவரை மகளை ஒரு வார்த்தை பேசியிராத ராணி கை நீட்டியிருந்தார்.
“அந்தப் புள்ள கடைசி வரைக்கும் உண்மைய சொல்லி இருக்காது, நீங்களும் அந்தப் பொண்ண காட்டி கொடுத்திருக்க மாட்டீங்க, அப்போ அவன் நிலைமை? பொண்ணுங்க மட்டும் படிக்குற பள்ளிக்கூடத்துல வாத்தியார் அவன் அவனுக்கு என்ன பேரு வந்துருக்கும்னு யோசிச்சியா”.
“சரி ஹிமாவுக்கும் எனக்கும் எந்தச் சம்மந்தமும் இல்ல அப்படி இருந்திருந்தா, இல்ல சம்மந்தம் இருந்தாலும் வீட்டுக்கும் ஊருக்கும் பயந்து அவளும் வாயே தொறக்காம இருந்திருந்தா” என்க.
மூளைக்குள் மெல்ல மெல்ல தன் தவறின் தீவிரம் உரைத்தது.
“இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி கல்யாணத்தை நடத்திக்கலாம்னு அவ அத்தனை பேர் முன்னாடி அப்படி சொல்லல, மதியையும் உன்னையும் மட்டும் யோசிச்சு சொல்லியிருக்கா, தல போற பிரச்னையா இருந்தாலும் நாப்பாத்துப்பேன்ங்கிற என்மேல அவளுக்கு இருக்குற நம்பிக்கை”.
“அந்த நம்பிக்கையை என் தங்கச்சிக்கு நாக்குடுக்க தவறிட்டேனா??” என்க.
“இல்லண்ணே இல்ல” என்றவள் அவன் கால்களின் கீழே மடிந்து அமர்ந்தாள்.
“உன் பிரெண்ட்க்கு நீ செய்ய நினைச்சது தப்பு இல்9லை அந்த நட்புக்கு அவங்க தகுதி ஆனவங்களானு யோசி” என்றவன் தன் அறை நோக்கி நடந்தான் ஒரு நொடி நின்று அவளைத் திரும்பிப் பார்த்தவன்.
“என்னை எதுவும் சொல்ல உனக்கு உரிமை இருக்கு நான் கேட்டுப்பேன் அவளை யாரும் ஒரு சொல் சொன்னா அப்பறம் என்னை நீங்க வேற மாதிரி பாக்க வேண்டிவரும், அவளைக் கைப்பிடிச்சு கூட்டிட்டு வரணும்னு நெனச்சது இப்படி இல்ல”என்ற கூற்றில் இப்படியொரு நிலையை உருவாக்கியவர்கள் நீங்கள் என்ற பொருள் இருந்தது.
“அவ யார்முன்னாடியும் தல குனிஞ்சு நிக்க வேண்டியவ இல்ல, அதோட இப்போ உன்னோட அண்ணி அதுவும் ஞாபகம் இருக்கட்டும்” என்று அவனின் அறைக்குச் சென்றுவிட.
நித்யா கைகளில் முகத்தைப் புதைத்து அழுது கொண்டிருந்தாள், ஒரு கரம் அவளின் தலையை வருடியது நிமிர்ந்து பார்க்க அவளின் அருகில் அமர்ந்திருந்தாள் ஹிமா.
“சாரி” என்ற நித்யாவை தன்னுடன் சேர்த்து அனைத்துக்கொண்டவள் “விராலி பண்ண தப்புக்கு நீ என்ன பண்ணுவ, நான்தான் சாரி சொல்லணும் அவளால தான இங்க இவ்ளோ பிரச்சனை” என்றாள்.
எங்கே தவறினேன் இவளைப் புரிந்து கொள்வதில் என்று தோழியின் மனம் வருந்தியது.
“இத சொல்ல உனக்கு வெக்கமா இல்ல, உண்மையிலே விரும்பினாளா இல்ல அவன் நம்ம காசுக்கு ஆசைப்பட்டு அவளை மிரட்டி இருப்பானா” என்க.
“எல்லாரையும் இவங்கள மாதிரியே நினைக்கவேண்டியது” என்று எண்ணிய ரன்வீர் படியில் சென்று அமர்ந்துகொண்டு இவர்கள் பஞ்சாயத்தை பார்த்திருந்தான்.
“அப்படிலாம் தெரியல அத்தை, என்னமோ நம்மள விட அவன் தான் அவளை நல்லா பாத்துக்குற மாதிரி அவனோட ஒட்டிக்கிட்டு அவன் கையைப் பிடிச்சுட்டே நின்னா, மானமே போச்சு இப்போ விராலி மாப்பிள வீட்ல என்ன சொல்லனு எனக்குப் பயமா இருக்கு, இதால என் பொண்ணு வாழ்க்கைல எதுவும் பிரச்னை வந்தா நாங்க என்ன பண்றது” என்றாள் வம்ஷி சல்மாவை ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டே.
“கொஞ்சநேரம் பேசாம இரு” என்று அதட்டினான் கணவன், அனைவரின் மனதிலும் அந்தச் சிந்தனையும் ஓடியது.
“கேவலம் பத்து மாடு வெச்சுருக்கவன கைக்காமிச்சுருக்கா, உன் பொண்ணை நாங்க என்னமோ கொடுமை படுத்துறோம்னு எங்க மேல கோவப்பட்டியே அவ பண்ண காரியத்தைப் பார்த்தியா”.
“போச்சு எல்லாமே போச்சு அந்த ஜோஸ்யக்காரன் சொன்ன மாதிரியே நடந்துடுச்சு, கண்ணு முன்னாடியே கொஞ்சம் கொஞ்சமா நம்ம செல்வாக்கு எல்லாம் போகப்போகுது என்னடா பண்ண போறீங்க, இத்தனை ஆம்பளைங்க இருந்து என்ன பிரோயோஜனம், அவளை அடிச்சு இழுத்துட்டு வரத் துப்பில்லை தாலி எடுத்துக் குடுத்திட்டு வந்தீங்களா” என்றவரின் கேள்வியில் அவமானமாக உணர்ந்தனர் பிள்ளைகள்.
“நீங்க நல்லா இருக் ணும்னா அவ இங்கதான் இருக்கணும் இந்தப் படிய தாண்டுற தைரியம் அவளுக்கு இனிமே வரக் கூடாது, இழுத்துட்டு வந்து காலை ஒடச்சு மூலைல போடுங்க, இவ்ளோ செல்வாக்கு இருந்து என்ன? நீங்கெல்லாம் ஆம்பளைங்க தானா” என்று கத்தி முடித்தவர் அவரின் அறைக்குச் சென்று கதவை ஓங்கி அடித்துச் சாற்றினார்.
சல்மாவின் மனதில் மகளின் செயலில் விளைந்த அதிர்ச்சி போய் அவளை இந்த அரக்கர் கூட்டத்திலிருந்து எப்படி காப்பது என்ற பயம் பிறந்தது.