ஒருவித பதட்டமும் பரபரப்பும் ஹிமானியிடம் முதல்முறையாகப் பைக்கில் செல்கிறாள் அதிலும் முதல் பயணமே மனம் விரும்பியவனுடன்.
புதிய உடை மஞ்சள் மனம் வீசும் தாலியுடன் அழகாகப் பின்னலிட்ட கூந்தலில் மனம் பரப்பியது தோட்டத்தின் ஜாதிமல்லி.
விழிகள் ஏனோ ரோடில் பதிய மறுத்தது இமயனுக்கு, இடையோடு சுற்றியிருந்த அவள் கரங்களைத் தன் கரம் கொண்டு பொதிந்திருந்தான், அவள் இதழில் உறைந்திருக்கும் புன்னகையும் நாணத்தில் சிவந்த கன்னங்களும் அவனை நிமிர்ந்து பார்க்கத் தயங்கும் நயனங்களும் அவன் இம்சயை கூட்டியது.
அவளுக்குத் தேவையான பொருட்களை வாங்குவதற்காகத் தேனிக்கு அழைத்துச் செல்கிறான், இருவரிடமும் பேச்சுக்கள் இல்லை இருவரின் மனமும் இனைந்து கிடக்க மொழிகள் மவுனமானது.
முதலில் துணி எடுக்கவே சென்றனர் துணிக்கடை வாயிலில் வண்டியை நிறுத்தினாலும் அவன் பார்வை எதிரே இருந்த நகைக்கடையில் இருந்தது, வீட்டிலிருந்து அணிந்து வந்திருந்த நகைகளைக் கழட்டி வைத்திருந்தாள்.
காதிலும் கழுத்திலும் அணிந்திருந்தது வைரம் கைகளில் தங்க வளை அணிந்திருந்தாள், இப்பொழுது வெறும் கண்ணாடி வளவிகள் கழுத்தில் அவன் கட்டிய தாலி காதில் உடைக்குப் பொருத்தத்தமாக உஷா வாங்கியிருந்த தோடு ஒன்று அணிந்திருந்தாள்.
அடிமட்டத்திலிருந்து மிகவும் போராடி இந்த நிலைக்கு வந்திருக்கிறான், எத்தனையோ நாட்கள் பட்டினி கிடந்திருக்கிறான் பணம் இல்லாமல் அடுத்து என்ன என்று தெரியாமல் தடுமாறி இருக்கிறான், ஆனால் இன்று கையில் பணம் இல்லை என்பதில் முதல் முறையாகத் தன்னையே வெறுத்தான்.
ஒரு நல்ல கம்மல் கூடத் தன்னால் அவளுக்கு இப்பொழுது வாங்கி கொடுக்க இயலவில்லையே என்று மனம் நொந்தது, கையில் இருந்ததெல்லாம் கடை வாங்குவதற்கும் நித்யாவின் நிச்சய செலவிற்கும் சரியாக இருந்தது.
“என்னாச்சு…” என்று அவன் அருகில் வந்து நின்றவள் கையைப் பற்றிக்கொண்டவன் “ஒன்னும் இல்ல” என்று அவளுடன் உள்ளே சென்றான்.
“என்ன எடுக்கட்டும்” என்றவளிடம் “உனக்கு என்ன போடப் பிடிக்குமோ எடுத்துக்கோ” என்றான்.
அவனை நிமிர்ந்து பார்த்தாள் “என்ன கலர் ரொம்ப பிடிக்கும்” என்றான் மீண்டும்.
“தெரியாதே!” என்ற பதிலில் அவனுக்குப் பேச்சு மறந்து போனது “புரியல” என்றவனிடம் “எனக்கு எப்போவும் பாட்டிதான் எடுப்பாங்க, சில கலர் மட்டும்தான் எடுப்பாங்க எனக்கு எந்தக் கலர் பிடிக்கும்னு எனக்கே தெரியல” என்றாள்.
அவள் மீண்டும் உடை எடுப்பதில் கவனம் வைக்க, இளம் பச்சை நிறத்தில் தங்க ஜரிகை வைத்த உடை ஒன்றை அவளிடம் எடுத்துக் காண்பித்தான்.
“எனக்குப் பிடிச்ச கலர்” என்க ஆசையாக வாங்கிக்கொண்டாள், அடுத்த நாள் நித்யா மதியின் நிச்சயம் புடவை எடுக்க அவன் விரும்பவில்லை, விசேஷத்தில் புடவை மட்டும் நன்றாக உடுத்தி என்ன செய்ய.
“நாளைக்கு கட்ட சாறி எடுக்க அத்தை சொன்னாங்க” என்றாள் தயங்கி கொண்டே, “இப்போ வேண்டாம்” என்றவனை அவள் ஆச்சர்யமாகப் பார்க்க.
அவள் முடி இழைகளைக் காதின் ஓரம் ஒதுக்கியவன் “புடவை எடுக்கலாம் இப்போ இல்ல… நிச்சயமா இப்போ இல்ல….” என்க.
அவன் சொன்ன விதத்தில் மனதில் ஏதோ முடிவு செய்திருக்கிறான் என்று புரிந்தது அதைப் பற்றி மேலே அவள் பேசவில்லை தேவையானவற்றை வாங்கி கொண்டு வீட்டிற்க்கே வந்துவிட்டனர்.
உடைக்குப் பொருத்தமாகத் தோடு வளையல் வாங்கும்போது சில மெஹந்தி கோணும் வாங்கிக்கொண்டாள், அனைவருக்கும் இடலாமே என்று.
வீட்டிற்கு வந்து மாலை தேநீர் அருந்தியபிறகு ஆளுக்கு ஒரு வேலையாகச் செய்துகொண்டிருந்தனர், பந்தல் இடும் ஆட்கள் அந்த வேலையில் இருக்க பெண்கள் பூக்கட்டுவது பழங்கள் இனிப்பு எடுத்து வைப்பது என்று வேலை இருந்துகொண்டே இருந்தது.
அறையில் அமர்ந்திருந்த நித்யாவிடம் சென்ற ஹிமானி “வா” என்று அவளைக் கைபிடித்து அழைத்துக்கொண்டு தோட்டத்திற்கு சென்றாள், அவர்கள் ஏதோ பேசச் செல்கிறார்கள் என்று மற்றவர்கள் நினைத்துக்கொடு அமைதியாக இருந்துவிட்டனர்.
இரண்டு நாற்காலிகளை எடுத்துப் போட்டவள் வாகாக அமர்ந்துகொண்டு நித்யாவின் கையைப் பிடித்து மெஹந்தி போடத் தொடங்கினாள், இதை நித்யா எதிர்ப்பார்க்கவில்லை நாளை நிச்சயம் ஆனால் மனதில் அந்த உற்சாகமே இல்லாமல் இருந்தது.
தங்கராணி மகளிடம் வந்து பேசிச் சமாதானம் செய்துவிட்டாலும், மனம் கொஞ்சம் வருத்தத்தில் தான் இருந்தது நித்யாவிற்கு, மதி பேசாதது, அண்ணன் பேசியது என்று.
மருதாணி எப்பொழுதும் வேண்டும் நித்யகல்யாணிக்கு அரைத்து அரைத்து வைத்துக்கொண்டே இருப்பாள், ஆனால் இன்று அதையெல்லாம் மறந்துவிட்டு அமர்ந்திருந்தாள், மருதாணியின் குளிர்ச்சி கைகளில் படர “சாரி” என்றாள் ஹிமாவிடம்.
“இல்ல அப்போ ஏதோ ஒரு கோவம் என்கிட்டே சொல்லலன்னு, நா அப்படி பேசியிருக்க கூடாது” என்றவளை நிமிர்ந்து பார்த்த ஹிமா “உன் அண்ணாகிட்டயே இதுவரைக்கும் நா அவரை விரும்புறேன்னு சொன்னதில்லை நித்யா” என்க.
அவள் அதிர்ச்சியோடு தோழியைப் பார்த்தாள் “என்னோட ஒரு துளி கண்ணீர் என் காதலை உன் அண்ணாக்கு சொல்லிடுச்சு” என்றவள்.
“நித்யாவுக்கு மருதாணி வெச்சுக்க ரொம்ப பிடிக்கும், அம்மா செய்ற இட்லியை சின்ன சின்னதா வெட்டிப் பிரை பண்ணி வீட்டில செஞ்ச பொடி நெறய போட்டு நல்லெண்ணெய் சேர்த்து சாப்பிட ரொம்ப பிடிக்கும்” என்றவளை திறந்த வாய் மூடாமல் பார்த்திருந்தாள் நித்யா.
“நித்யாவுக்கு மட்டும் இல்ல விராலிக்கு… வீட்டில இருக்குற எல்லார்க்கும் என்ன பிடிக்கும் பிடிக்காது தெரியும், ஹிமானிக்கு என்ன பிடிக்கும்னு யாருக்கும் தெரியாது, என் அம்மாவுக்குக்கூட அவங்க மேல தப்பில்ல நா அவங்களோட இருந்ததில்லை இருக்க பாட்டி விட்டதுமில்லை”.
“கொஞ்சமா நினைவு தெரிஞ்ச நாள்ல இருந்து எனக்கு எப்போவும் தனிமைதான், அவங்க யாருக்கும் என்னோட பேச எதுவும் இருக்காது, பாட்டி எப்போவும் இந்தச் சுலோகம் படி இந்தப் பாட்டுப் படி இந்தப் பூஜை….
விரத நாள்ல இதுதான் சாப்பிடணும் இதெல்லாம் சாப்பிட கூடாது, விரதம் இல்லாத நாள்ல இந்த உணவு இத்தனை மணிக்கு எழனும் இந்தக் கலர் மட்டும்தான் டிரஸ் போடணும்” என்றவள் நிறுத்தி ஆழமூச்செடுத்தாள்.
“முதல் தடவையா பிடிச்சது சொல்லுடா சமைச்சு தரேன்னு சொன்னது உன் சித்திதான்” என்றபோது அவள் விழியிலிருந்து சில துளிகள் நித்யாவின் கையில் விழுந்தது.
“ஹிமா…” என்றவள் கைப்பிடிக்க.
“சாரி” என்று டிஷு பேப்பர் வைத்துத் துடைத்தாள்.
“அவங்க எல்லாரையும் மாதிரி தான் நானும், ஹிமானிக்கு ஆசைகள் இருக்கு பிடித்தங்கள் இருக்கு ஆனா அதை யாரும் கேட்டதில்லை, கூடப் பேச ஆள் இல்லாம நான்….. எனக்கு நானே பிரென்ட் ஆயிட்டேன், எனக்குள்ளேயே பேசிப்பேன் அது அப்படியே என்னை என் உலகத்தைச் சுருக்கிடுச்சு”.
“எப்போவாது உங்களோட ஸ்கூல் வரும்போதும் நா ரொம்ப அமைதினு நெனச்சுட்டு நீங்க மட்டும் பேசுவீங்க, என்னால எனக்குள்ளேயே பேசிக்கிற நிலையிலிருந்து உடனே வரமுடியல, உங்ககூட நான் கொஞ்சம் பேச ஆரம்பிக்கும்போதே என்னை மறுபடியும் பாட்டி கூட்டிட்டு போய் அந்தப் பெரிய வீட்ல தனியா விட்டுருவாங்க”.
“அம்மாகிட்ட கதைகள் கேட்டதில்லை அப்பா கொஞ்சினதில்ல தம்பிகூட விளையாண்டதில்லை, என்ன சாமியோடு சேத்து நிறுத்திட்டு அவங்க எல்லாம் ஒண்ணா இருப்பாங்க” என்றபோது மிகவும் உடைந்து விட்டாள் கண்ணீர் நிற்காமல் வழிய மூச்சு வாங்கியது.
“வேண்டாம் ஹிமா ப்ளீஸ், எனக்கு இவ்ளோலாம்…. நா யோசிக்கல, நீ யாரோடயும் பேசமாட்டன்னு நெனச்சு இருந்துட்டேன்” என்றாள் நித்யா வருத்தத்தோடு.
“இல்ல நீ என்ன பண்ணுவ, நா அப்படிதான் ஆயிட்டேன், என்னைப் பத்தி தெரிஞ்சுக்க யாருக்குமே நேரமோ விருப்பமோ இல்லாதப்போ, யார்கிட்ட நாப்போய்ச் சொல்ல எல்லாரும் இருந்தும் நாம அனுபவிக்கிற தனிமை ரொம்ப கொடுமை”.
“என் வாழ்க்கையிலேயே முதல் முறையா ரொம்ப ஆசைப்பட்டு விரும்பி… ஏங்கி… என்ன வந்து சேர்ந்தது” என்றவள் தாலியை கையில் எடுத்து இரு கைகளால் முகத்தை மூடி உதடு கடித்து அழுகையை அடக்கப் பார்த்து முகமெல்லாம் சிவந்து தேம்பிக்கொண்டே இருந்தவளை தன்னோடு சேர்த்து அணைத்துக்கொண்டாள் நித்யா.
“வேண்டாம் வேண்டாம் அழாதடி” என்ற நித்யாவிற்கும் விழிகள் நிறைந்தது “ப்ளீஸ்” என்ற நித்யா பேசிக்கொண்டே இருக்க ஹிமானி நிறுத்த நினைத்தாலும் அணை உடைந்த வெள்ளமாக விழிநீர் வழிந்தது.
எத்தனையோ வருடங்களாகத் தன்னுடைய தேவை என்ன விருப்பம் என்ன என்று ஒருவரிடமும் சொல்லமுடியாமல் தனக்குள்ளேயே அனைத்தையும் புதைத்துக்கொண்டவள் இன்று வெடித்திருந்தாள்.
பலவிதமாக நித்யா சமாதானம் செய்தும் அவள் அழுகை நிற்கவில்லை, அவளைச் சரி செய்ய எண்ணியவள் “அடியே இன்னைக்கு மறுபடியும் அடி வாங்கினா நாளைக்கு நிச்சயத்துல என் மூஞ்சி எப்படி இருக்கும்” என்றாள் பாவமாக.
“ஏன்?” என்று அழுகையை குறைத்துக்கொண்டு ஹிமா அவளைப் பார்க்க “காலைல அண்ணா திட்டினதே இன்னும் காதுக்குள்ள சங்கூதுது, நீ அழுறதை பார்த்தா என் கன்னம் பழுத்துடும், அடி வாங்க தெம்பு இல்ல ராசாத்தி மன்னிச்சு விட்டுரு” என்க மெல்ல அவளின் இதழ்கள் விரிந்தது.
முகத்தை நன்றாகத் துடைத்துக்கொண்டு மீண்டும் அவளுக்கு அழகான டிசைனில் மெஹந்தி இட்டாள் “அவங்க அப்படிலாம் அடிக்கமாட்டாங்க” என்க.
“பார்றா புருஷனுக்கு சப்போர்ட்டா” என்றாள் நித்யா அவள் கன்னத்தைக் கிள்ளி, அழுகை நின்றிருந்தாலும் விசும்பல் நிற்கவில்லை, தன் கைவண்ணத்தை அழகாக நித்யாவின் கைகளில் காட்டி இருந்தாள், இரண்டு கைகளிலும் முழங்கை வரை வரைந்திருந்தாள் மிகவும் அழகாக இருந்தது.
“சாரி” என்றாள் நித்யா மீண்டும், அவளை முறைத்து பார்த்தவள் “அடி வாங்க போற” என்க.
“இந்த விஷயத்துல ரெண்டு பெரும் சரியான ஜோடி பொருத்தம்” என்றவளை பார்த்துச் சிரித்தாள் ஹிமா.
“இப்படியே இரு… அங்க நடந்த எதுவும் நமக்கு இனிமே வேண்டாம், இனிமே இப்படி அழாத அண்ணா பார்த்தா ரொம்ப வருத்தப்படும், நீ ஆசைப்பட்ட வாழ்க்கை அத எங்க அண்ணனோட சந்தோஷமா வாழணும் சரியா…” என்க மெல்ல தலை அசைந்தது ஹிமாவிற்கு.
அதற்குமேல் அங்கே நிற்க இயலவில்லை இமயனால் தளர்ந்து அமர்ந்துவிட்டான் வீட்டின் படியில் அவன் அருகில் அமர்ந்தான் மதி.
“அவனுங்க கிடக்குறானுங்க அவளுக்கு எல்லாத்தையும் நீ செய்வ, அந்தக் கவலையும் தனிமையும் எல்லாம் போய்டுச்சு இனிமே அது இல்ல, நம்ம வீட்டில அவளுக்கு எந்தக் குறையும் இருக்காது மாப்ள நீ பாத்துக்கோ” என்க இமயனிடம் பதில் இல்லை அப்படியே பின்னால் சரிந்து விழி மூடிக்கொண்டான்.
“சரி இந்த அழகான டிசைனை மதி அண்ணாகிட்ட போய்க் காட்டி ரெண்டு பெரும் பேசிச் சமாதானம் ஆகிடுங்க” என்றாள் ஹிமா நித்யாவிடம்.
“அய்யயோ அண்ணா திட்டினதோட விட்டுச்சு இது என் மண்டையை கொட்டி கொட்டி வடிவேலு தல மாதிரி பொடச்சுக்க வெச்சுடும்” என்றாள் பயந்தவளாக.
“அப்படிலாம் செய்யமாட்டாங்க போச்சீக்கிரம் போய்ப் பேசு, நா உஷா ஜமுனாக்கு எல்லாம் மெஹந்தி போடணும்” என்றவள் அடுத்த டிசைனை மனதில் யோசித்துக்கொண்டிருந்தாள்.
அங்கிருந்து நகர்ந்து வந்த நித்யா வீட்டைச் சுற்றி வர இமயன் படுத்திருந்தான் அருகில் மதி அவனையே பார்த்து அமர்ந்திருப்பதை பார்த்தாள், மதியின் அருகில் சென்று நிற்க “சத்தம் போடாதே” என்று சைகை செய்தவன் அவளுடன் எழுந்து நடந்தான்.
வீட்டின் அந்தப் பக்கம் சென்றவுடன் “சாரி மாமா நா அப்படி போய் இருக்க கூடாது, ஹிமாகிட்ட அப்படி பேசி இருக்க கூடாது” என்றபோது அவள் குரல் இடறியது.
“விடு பரவாயில்ல, நீ அங்க போயிட்டு எனக்குச் சொன்னதுக்கு பதிலா போறதுக்கு முன்னாடியே என்கிட்டே சொல்லி இருக்கலாம் அதுதான் எங்க கோவம், போட்டும் முடிஞ்சு போச்சு” என்றவன்.
“உன்ன அவன் திட்டினது மட்டும் தான் உனக்குத் தெரியும் சித்திகிட்ட அவன் பேசினது உனக்குத் தெரியாது” என்றவன் இமயன் தங்கராணியிடம் பேசியதை அவளுக்குக் கூறினான்.
“எதுக்கு சித்தி அவள அடிச்ச, இவ்ளோ வருஷமா இல்லாம ஹிமானிய காரணமா வெச்சு இவளை அடிச்சா அது அவ மனசுல தப்பாதானே பதியும், போறதுக்கு முன்னாடி நம்மகிட்ட சொல்லி இருக்கலாம் அந்தக் கோவம்தான் அவமேல, மத்தபடி இப்படி நடக்கும்னு அவளுக்கும் தெரியாது அந்த ஆளு கண்ணுல படாம இருந்திருந்தா இந்த எந்தப் பிரச்னையும் வந்திருக்காது”.
“இன்னைக்கு வரைக்கும் நம்ம பசங்க மேல யாரும் ஒரு குத்தம் சொன்னதில்லை சொல்றமாதிரி அவங்க நடந்ததில்லை, இது ஒரு பாடம் இனிமே அப்படி செய்ய மாட்டா” என்றவன்.
“நா அவங்கள திட்டறது வேற, நா இப்டித்தான்னு அவங்களுக்கு தெரியும் , நீங்க யாரும் உங்க குணத்தை மாத்திக்காதீங்க, கண்டிக்க ஒரு ஆள் போதும் நாளைக்கு நிச்சயம் இன்னைக்கு அடிச்சு வெச்ருக்க , போப்போய் அவகிட்ட பேசு” என்று தங்கராணியை அனுப்பினான்.
கேட்டவளுக்கு இன்னும் அழுகை கூடியது “போதும் நித்யா அழாத ஒன்னும் இல்ல , யாருக்கும் உன்மேல கோவம் இல்ல” என்றவனை அவள் நிமிர்ந்து பார்க்க.
“எனக்கும்தான்டி கருவண்டு” என்றபோது அவன் நெஞ்சில் தலையை முட்டி நின்றாள் நித்யகல்யாணி அவளை அணைத்து ஆறுதலாகத் தட்டிக்கொடுத்தான்.
அவள் கைகளை விரித்துப் பார்த்தவன் “ரொம்ப அழகா இருக்கு” என்றான் அதன் மனத்தை உள்வாங்கி , நித்யாவின் முகம் செம்மை பூசியது.
நினைவு வந்தவளாக “அண்ணாக்கு எப்படி ஹிமாவை இவ்ளோ பிடிச்சது அவங்க ரெண்டு பேருக்கும் ஒருத்தர ஒருத்தர் சரியாகூட தெரியாதே” என்றாள் அவனிடம்.
“சில விஷயங்களை நம்மால புரிஞ்சுக்க முடியாது நித்யா” என்றவன் “சில சொல்லப்படாத ரகசியங்களுக்கு உள்ளே மறக்கமுடியாத வலிகள் இருக்கலாம் , அதை நமக்குச் சொல்லவேண்டிய எந்தக் கட்டாயமும் இல்லை , அவங்களுக்கு இடையில இருக்குற பந்தத்தோட ஆழத்தை எல்லாராலயும் புரிஞ்சுக்க முடியாது” என்றபோது அது உண்மை என்று அவளுக்கும் தோன்றியது.
“இவ கூப்பிட்டா அவ கூப்ட்டான்னு லூசு மாதிரி இனிமே இப்படி போகாத” என்றான் அவளிடம்.
“ஐயோ காப்பாத்துங்க என்ன அடிக்க வருது மாமா” என்றவள் ஓட அனைவரின் மனதிலும் நிம்மதி படர்ந்தது கல்யாண வீட்டின் கலை இப்பொழுது தான் வந்தது அங்கே.
உஷா ஜமுனாவுக்கு மெஹந்தி இட அனைத்தையும் எடுத்து வைத்துக்கொண்டிருந்தாள் ஹிமா அவள் கரத்தைப் பற்றி மெதுவாக இழுத்து தன் முன்னே நிறுத்தினான் இமயன்.
அவனைப் பார்த்தவள் முகம் மலர்ந்தது அதரங்கள் அழகாக விரிந்தது , அவள் வதனத்தை கைகளில் தாங்கியவனுக்கு அவள் முன் உடைந்து விடுமோ என்ற பயம் நெஞ்சை அடைத்தது.
“என்னைக் கொஞ்சம் அனைத்துக்கொள்ளேன் என் காதலே” என்று கெஞ்சியது அவன் மனது , அந்த விழிகளின் ஏக்கம் என்ன என்று புரியவில்லை என்றாலும் அவன் இடையோடு கையிட்டு அணைத்து எக்கி அவன் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டாள்.
அவளைத் தன்னை நோக்கி இன்னும் இழுத்து தன்னுள் அவளைப் பொதிந்து அவள் கழுத்து வளைவில் முகத்தைப் புதைத்துக்கொண்டான் , அவன் அணைப்பு இறுகி கொண்டே சென்றது.
அவள் முகத்தை நிமிர்த்தித் தன்னை பார்க்க வைத்தவன் தடித்த அந்த இமைகளில் இதழ்களைப் பதித்தான் , மீண்டும் நிறைந்த அவளின் விழிநீர் அவனின் இதழ்களை நனைத்தது.