மதி , நித்யா திருமணத்தை ஆறு மாதங்கள் கழித்து வைப்பதாக முடிவு செய்திருந்தார்கள் , அதற்குள் தங்கராணி இருக்கும் வீட்டை இடித்துவிட்டு இரண்டு படுக்கை அறைவைத்து கீழே மட்டும் இப்பொழுது கட்டுவது திருமணம் முடிந்த பிறகு மேலே கட்டுவது என்று முடிவு செய்து இன்ஜினியரிடம் பேசிவிட்டனர்.
கடை தொடங்க இடம் சொந்தமாக வாங்கியிருந்தான் இமயன், அதோடு நிலமும் அவனின் பணம் நிறைய , மிச்சம் பேங்க் லோன் போட்டிருந்தான் கடைக்கு கட்டடம் எழுப்ப வேண்டும் அதற்கான தொகை மட்டுமே கையில் உள்ளது.
கணிசமாக கையில் பணம் சேர எப்படியும் நான்கு மாதங்கள் உழைப்பு தேவைப்படும் , பண்ணையில் வரும் வருமானத்தோடு கடையும் கொஞ்சம் செயல்பட தொடங்கிவிட்டால் நின்றுவிடலாம்.
தங்களுக்கான வீடு கட்டும் வேலையும் தொடங்க வேண்டும் வேறு வழி இல்லை மீண்டும் லோன் எடுக்கத்தான் வேண்டும் , மேனேஜரை சென்று பார்ப்பது என்று முடிவு செய்துகொண்டான் , இரவெல்லாம் என்ன? எப்படி? செய்ய வேண்டும் என்று முழுதாக மனதில் ஒரு சித்திரம் வந்த பிறகே உறக்கம் வந்தது.
“மாப்ள ஏன்யா இப்படி கிடந்து கஷ்டப்படுற உனக்கு சேரவேண்டிய சொத்து அப்படியே கிடக்குது வீட்ல பேசி நா உன் நிலத்தை வாங்கித்தரேன் வெச்சு என்ன பண்ணணுமோ பண்ணிக்கோ” என்றான் முத்துவேல்.
“வேண்டாம் மாமா அவங்களோடது எதுவும் எனக்கு வேண்டாம், சொந்த உழைப்புல முட்டி மோதி வரது ஒரு மாதிரி கர்வமா இருக்கு மாமா எனக்கு இதுதான் பிடிச்சிருக்கு , எல்லாம் பாத்துக்கலாம்…. மலைக்கு தெக்கால மூலைல கிடக்குற அந்த நிலத்தோட பத்திரத்தை குடுங்க ஒரு வர்ஷத்துக்குள்ள மீட்டு தரேன்” என்க.
“அட யாருடா இவன் எங்க கையெழுத்து போடணும் சொல்லு , பூதம் புதையலை காவ காத்த மாதிரி நானும் அத காவகாக்குறேன் சல்லி காசுக்கு பிரோயோசனம் இல்லை , அந்த மூலைக்கு தண்ணி கொண்டு போறதுக்குள்ள என் தாவு தீந்து போவுது வெளஞ்சத விட தண்ணி விட்ட காசுதான் கழுத்தை நெறிக்குது” என்றான் முத்துவேல்.
சிறிது நேரம் யோசனை செய்தவன் “ஏன் மாமா… அந்த இடத்தை மீட்டு நானே வாங்கிக்கிட்டா குடுப்பியா” என்றவனை பார்த்தவன்.
“உனக்கு என்ன கிறுக்கா அந்த எடத்துல விவசாயம் செஞ்சா நஷ்டம்னு சொல்றேன் காசு போட்டு வாங்கி கடனாளி ஆவப்போறியா” என்றான் முத்துவேல்.
“நா ஏன் விவசாயம் பாக்குறேன் இங்க ஒரு பால் பண்ணை தொடங்கிடுவேன் , அங்க இருக்குறத மொத்தமா சொசைட்டிக்கு ஊத்திட்டு இங்க ஊருக்குள்ள குடுக்கலாம்” என்க.
“மாப்ள அடிதூள் போ….. பெரிய பிசினெஸ் மாக்னெட்டா நீ” என்றவன் பத்திரத்தை அவன் கையில் குடுத்து “அமோகமா வருடா மாப்ள” என்று வாழ்த்தி அனுப்பினான்.
“நா உங்ககிட்ட ஒன்னு கேட்டு வாங்கிட்டு போக வந்திருக்கேன்” என்றவனை பார்த்த தேவகி “நா சொல்லல நம்ம வசதிய பாத்துதான் அவளை ஏமாத்தி கட்டியிருப்பான் , என்ன வேணும் பணமா சொத்தா இல்ல விலை மதிக்க முடியாத ஏதாவதா” என்று இளக்காரமாக கேட்டுக்கொண்டு சோபாவில் அமர்ந்தார் தேவகி.
புன்னகைத்துக்கொண்டவன் “விலை மதிக்க முடியாதது இந்த வீட்ல ஒண்ணே ஒண்ணு தான் என் மனைவி , நீங்க சொல்ற மத்த எல்லாமே வெறும்**** எனக்கு தேவ ஹிமானியோட செர்டிபிகேட்ஸ் , என் மனைவி படிக்க ஆசைப்படுறா , எனக்கு அவ செர்டிபிகேட் வேணும்” என்க.
“உங்ககிட்ட வேற என்ன எதிர்பார்க்க முடியும்” என்று எண்ணியவன் சட்டை பாக்கட்டில் இருந்து சிறிய பொட்டலத்தை எடுத்து பிரித்து வைத்தான் , ஹிமானி அணிந்திருந்த நகைகள் எல்லாம்.
“சரியா இருக்கான்னு பாத்துக்கோங்க” என்றவன் ஹிமாவின் தந்தை பிரனத்தை பார்த்து “உங்ககிட்ட ஒன்னு கேக்கலாமா?? உங்களுக்கு ஒரு அம்பது வயசு இருக்கும்ல , அம்பது…. நாப்பது வயசு பசங்க வாழ்க்கைக்காக ஒரு சின்ன பொண்ணோட ஆசைகளை கனவுகளை அழிச்சு அவளை ஒரு பொம்மை மாதிரி வெச்சு இருந்திருக்காங்க உங்க அம்மா நீங்க எல்லாரும் அதுல கூட்டு”.
“தன்னோட பசங்க நல்லா இருக்கணும்னு நெனச்சு ஒரு அம்மாவா அவங்க ஜெயிச்ச எடத்துல ஒரு அப்பாவா நீங்க தோத்து போய்ட்டிங்க, இவங்க அவங்க பசங்களுக்காக யோசிச்சத ஏன் உங்களால உங்க பொண்ணுக்கு யோசிக்க முடியல! எவ்ளோ பெரிய சுயநலவாதி நீங்க”.
“ஒரு பெண்ணுக்கு குழந்தையை கொடுக்குறதால ஒருத்தன் ஆம்பளையா ஆகிட முடியாது , அம்மா கை காட்டறதால மட்டும் ஒருத்தன் அப்பாவாவும் ஆயிட முடியாது , அது ஒரு வரம் தேவதை மாதிரி ஒரு பொண்ணு கிடைச்சும் கேவலம் இந்த வசதிக்காக அவளை அடிமையா வெச்சு இருந்தீங்க” என்றவன்.
ஆன்சல் அன்சல் இருவரின் அருகில் சென்றவன் “மாசத்துல ரெண்டு தடவ மேகமலை போறீங்களே எதுக்கு உங்க பிசினெஸ்க்கு மட்டுமா? உங்க தனிப்பட்ட விஷயத்துல நா தலையிடுல ஆனா உங்களுக்குனு இருக்குற ஆசைகளை நிறைவேத்திக்க வழி பாக்குறீங்கல்ல ஆனா பொண்ணுங்க நியாயமான விஷயங்களை கூட ஆசைப்பட கூடாது இல்ல”.
“வெறும் குடும்ப பேரு செல்வாக்கு காசு பணம் மட்டும் வெச்சு எல்லா கல்யாணமும் நடக்குறதில்ல , உங்கள பத்தின விஷயங்கள் தெரிஞ்சா உங்க ரெண்டுபேருக்கும் முடிவான கல்யாணம் நடக்கும்னு நம்பிக்கை இருக்கா?” என்க.
இருவரிடமும் அதிர்ச்சி அதிகம் இல்லை என்றாலும் ஒரு ரிலாக்சாஷன் என்ற நிலையில் அப்படி செல்வதுண்டு , என்றாலும் சம்மந்தம் பேசிய வீட்டில் இருப்பவர்கள் இது தெரிந்தால் நிச்சயம் திருமணத்தை நிறுத்தி விடுவார்கள்.
“உங்ககிட்ட ரகசியமா சொன்ன இந்த விஷயத்தை கூடி நிக்குற உங்க மொத்த குடும்பத்துக்கும் என்னால சொல்ல முடியும்” என்றவன் பொதுவாக அனைவரையும் பார்த்து.
“கடைசி வரைக்கும் நீங்க யாரும் சொந்த உழைப்புல முன்னேறுல என் மனைவியோட பூஜை விரதம் அதிர்ஷ்டத்துல தான் இவ்ளோ செல்வாக்கா இருந்து இருக்கீங்க” என்றான் எதை சொன்னால் அவர்கள் தன்மானம் சீண்டப்படும் என்பதை உணர்ந்து.
ஹிமானியின் தந்தைக்கு சுருக்கென்று குத்தியது , அவர் திரும்பி மனைவியை பார்க்க கணவனை கண்டுகொள்ளாமல் அவர்களின் அறைக்கு சென்று சில நொடிகளில் திரும்பி வந்தவர் கைகளில் ஹிமானியின் செர்டிபிகேட்ஸ் அனைத்தும் இருந்தது “இந்தாங்க தம்பி” என்று அவன் கையில் வைத்தார்.
அவன் பேசியதில் அனைவரும் ஒவ்வொரு மனநிலையில் இருக்க ஒருவரும் சல்மாவை தடுக்கவில்லை “ஹிமானி நல்லா இருக்காளா” என்ற சல்மாவை பார்த்தவன்.
“அத நீங்களே வந்து பாருங்க அத்த , அங்க உங்கள யாரும் தடுக்க மாட்டாங்க எப்போ வேணுனாலும் நீங்க வரலாம்” என்றவன் ரன்வீரை ஒருநொடி பார்த்துவிட்டு திரும்பி நடந்தான்.
வாயில் வரை சென்றவன் “இன்னொரு விஷயம் சொல்ல மறந்துட்டேன், அன்னைக்கு தோப்புல இருந்தது ஹிமா இல்ல” என்றவன் பார்வை விராலியில் பதிந்தது.
“வீட்டை விட்டு போய்ட்டா பிரச்னை முடிஞ்சுறாது , உனக்கு என்ன தேவையோ இப்போ சொல்லு அவங்க கேப்பாங்க” என்று வெளியில் நடந்தான்.
இதற்குமேல் இவர்களிடம் பேசி என்ன பயன் என்று எண்ணிய சல்மா அறைக்குள் சென்றுவிட , அப்படி விட விருப்பம் இல்லாத ரன்வீர் “பெரியம்மா விராலி தீதிக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லன்னு சொன்னதுக்காகத்தான என் அம்மாவும் தீதியும் அடி வாங்கினாங்க , அன்னைக்கு ஹிமா தீதி பொய் சொல்றதா நீங்கதானே சொன்னீங்க, இப்போ கேளுங்க யார் பொய் சொன்னதுன்னு” என்றான்.
தேவகியின் பார்வை விராலியில் அழுத்தமாக பதிய உடல் நடுங்கியது அவளுக்கு, ஒன்றும் புரியாமல் தளர்ந்து அமர்ந்திருந்தார் பிரணத்.
“விராலி” என்ற தேவகியின் குரலில் அவரை அவள் திரும்பி பார்க்க “என்ன நடக்குது இந்த வீட்ல” என்றவருக்கு பதிலில்லாமல் நின்ற அவள் மவுனம் பொறுமையை இழக்க செய்தது.
டக்கென்று எழுந்து அவளை நோக்கி அடிவைக்க “எனக்கு இந்த கல்யாணம் பிடிக்கல” என்றாள் குரல் உயர்த்தி.
என்ன இது என்றுதான் பார்த்திருந்தனர் அனைவரும் “ஐயோ ஐயோ புத்தி கெட்டவளே எவ்ளோ வசதியான வீட்ல உனக்கு சம்மந்தம் பேசி முடிச்சிருக்கோம், இப்படி அறிவில்லாம நம்ம கிட்ட வேலை பாக்குறவன பிடிச்சுருக்கு சொல்ற இதெல்லாம் வெறும் பைத்தியக்காரத்தனம் கல்யாணம் ஆனா எல்லாம் சரி ஆயிடும்” என்றாள் வம்ஷி.
“மா…. காசுக்காக பிடிக்காதவன் கூட வாழ முடியாது , எனக்கு அவனை பிடிக்கல”.
“அவனை காதலிச்சா…. எதுக்குடி அன்னைக்கு தோப்புக்கு அந்த மதி பையன பாக்க போன” என்று வம்ஷி கேட்க.
“நிதின் என்னை விரும்பல சொல்லிட்டான் , அவனுக்கு என்னை பிடிக்கும் ஆனா உங்களுக்கு பயந்துட்டு வேண்டாம் சொல்லிட்டான், இங்க இருந்தா நீங்க எனக்கு கல்யாணம் செஞ்சு வெச்சுடுவீங்க அதான் இந்த ஊரைவிட்டு போக அவர்கிட்ட உதவி கேட்டேன் , அவரும் செய்ய மாட்டேன் சொல்லிட்டாரு”.
“என்னை கட்டாயப்படுத்தி செஞ்சுவெக்க நினைசீங்க மண்டபத்திலேயே எனக்கு இது பிடிக்கலன்னு கத்துவேன் , அப்படியே கல்யாணம் நடந்தாலும் அந்த வீட்டில இருந்து ஓடிப் போவேன் , எனக்கு பிடிச்சமாதிரி வாழ முடியல நீங்க மட்டும் நிம்மதியா இருப்பீங்களா” என்று மனதில் உள்ளதை அனைத்தையும் கொட்டினாள்.
கேட்டவர்கள் ஸ்தம்பித்து நின்றனர் , வெகுநேர அமைதிக்கு பிறகு பிரணத் தாயிடம் “மா என் பெண்ணுக்குத்தான் நியாயம் செய்யல விராலி வாழ்க்கை அவ ஆசை பட்டமாதிரி நடக்கட்டும் , இதுக்கு அப்புறமும் இந்த கல்யாணத்துக்கு அவளை கட்டாயப்படுத்துறது முட்டாள் தனம் , நிதின் வீட்டில பேசுங்க அப்படியே நாம பார்த்த மாப்ள வீட்டுலயும் நேர்லயே போய் பேசிட்டு வந்திடலாம்” என்றவர்.
மற்றவர்களை பார்த்து “நா சொல்லவேண்டியதை சொல்லிட்டேன் இனிமே உங்க இஷ்டம்” என்று தங்கள் அறைக்கு சென்றார்.
ஆன்சல் மற்றும் அன்சலுக்கு கூட அதுவே சரி என்று பட்டது , மூத்த மகன் யாஷுக்கு அழைத்து விவரங்களை பகிர்ந்தார் முன்ஜல்.
“போனவ அப்படியே போகட்டும் இனிமே அவளுக்கும் நமக்கும் சம்மந்தம் இல்லை” ஹிமாவின் திருமணம் முடிந்த போதே கூறியிருந்தான் , இன்று விராலியின் விஷயம் கேள்விப்பட்டதும் “அவளை முதல்ல வீட்ல இருந்து வெளில அனுப்புங்க போய் கஷ்டப்படட்டும் , இவங்க ரெண்டு பேரும் இனிமே நம்ம வீட்டுக்கு வர கூடாது” என்று எகிற.
“என் மகளை வரக்கூடாது என்று நீ எப்படி சொல்லலாம் , நீங்க எல்லாம் பணத்துல கிடந்து உருளத்தான என் மகளை இப்படி வெச்சு இருந்தீங்க என் பொண்ணுக்கு உரிமை இருக்கு முடியாதுன்னா எங்க பங்க தனியா பிரிச்சுக்குடு” என்றார் சல்மா , அவருக்கு எதிராக ஒன்றும் பேசாமல் நின்றார் பிரணத்.
“என் பொண்ணு ஒன்னும் ஓடி போகலேயே அவளுக்கு குடுக்கமாட்டேன்னு எப்படி சொல்லுவ , என் புருஷனும் பசங்களும் சேந்துதானே இந்த சொத்தை சேர்த்தது” என்று வம்ஷியும் ஒருபக்கம் வம்புக்கு நின்றாள்.
கண்முன்னே தன் குடும்பம் சிதைந்து கொண்டிருப்பதை பார்த்து கண்ணீர் வடித்தார் தேவகி , ஹிமானி போனதோட என் வீட்டோட ஐஸ்வர்யம் போய்டுச்சு என்று அவர் மனது உறுதியாக நம்பியது.
“நீங்க செய்ற உதவிக்கெல்லாம் எப்படி நன்றி சொல்லன்னே தெரியல” என்ற மல்லியை பார்த்து புன்னகைத்த கவியரசன் “நா என்ன செஞ்சேன் ஒண்ணுமில்ல உன்கூட வந்து நானும் நெறய விஷயங்களை கத்துக்கிட்டேன்” என்றான்.
“வா டீ குடிச்சுட்டு போலாம்” என்க அவனுடன் அந்த சிறிய ஹோட்டலின் உள்ளே நுழைந்தாள் , இப்பொழுது அவனுடன் பேசுவது பழகுவது எளிதாக இருந்தது அவளுக்கு.
நிலத்தின் பத்திரம் கிடைத்துவிட்டாலும் என்ன செய்ய எப்படி செய்ய ஒன்றும் தெரியவில்லை , மலையில் விவசாயம் செய்ததுபோல இங்கு முடியவில்லை , வயிற்று பிழைப்புக்காக செந்தில் வேலைக்கு செல்ல, அரசு அலுவலகங்களுக்கு சென்று யார் காத்திருந்து பிரச்சனைகளை சரி செய்ய.
ஒருமுறை தாயுடன் மல்லி சென்றாள் , அவளால் அவர்கள் கேட்பதற்கு சரியாக பதில் சொல்ல முடியவில்லை , இவர்கள் எதை பயிர் செய்தால் லாபம் வரும் அதை எப்படி செய்ய ஒன்றும் தெரியவில்லை, அடுத்தமுறை தானாகவே முன்வந்து அவர்களுக்கு உதவினான் கவியரசன்.
அவளுடன் செல்ல தொடங்கியவனுக்கு தங்கள் நிலத்திலும் பயிர் செய்தால் என்ன என்ற ஞானோதயம் வந்தது , அவனும் நிறைய விஷயங்களை கேட்டு அறிந்துகொண்டான் இந்த இரண்டு மாதத்தில் நிலத்தை சீர் படுத்தி வேலைகளையும் தொடங்கிவிட்டான்.
செந்திலின் வீட்டில் கவியரசனுக்கு நல்ல மரியாதையும் மதிப்பும் வந்தது அவனை நம்பினர், மல்லியின் நம்பிக்கையையும் பெற்றுவிட்டான் , மகன் பொறுப்பாக இருப்பதை பார்த்து செல்வராணியால் நம்பவே முடியவில்லை இன்னும் மகனின் மாற்றத்திற்கான காரணம் அவள் செவிகளை அடையவில்லை.
தங்கராணியின் இடத்தில வீடு கட்டும் வேலை நடப்பதால் அவரும் நித்யாவும் மாணிக்கத்தின் வீட்டிலே தங்கிக்கொண்டனர் , மல்லியை நித்யா ஒதுக்கவெல்லாம் இல்லை அவளிடம் முன்பு போலவே பேசினால் , கவியரசன் உதவி செய்வதை அறிந்து வீட்டில் அண்ணனிடமும் மதியிடமும் கூறினாள்.
அவர்களும் அறிந்தே இருந்தனர் , சில விவரங்களை பட்டும் படாமலும் மல்லியிடம் கூறிய நித்யா கவனமாக இருக்க வலியுறித்தினாள்.
மல்லிக்கு முழுதான நம்பிக்கை கவியரசன் மீது , சில சமயம் வேலை நடப்பதை பார்க்க நித்யா வரும்போது அவளுடன் ஹிமானியும் வருவதுண்டு மல்லியிடம் அவளும் எந்த வேறுபாட்டையும் காட்டவில்லை நல்ல தோழிகளாக மனம் விட்டு பேசி நேரத்தை கழித்தனர்.
தினம் தினம் புது புது சந்தோஷங்கள் அங்கே அன்பால் அனைவரையும் அணைத்துக்கொண்டாள் ஹிமானி , அவளின் தனிமை உணர்வை போக்கிய குடும்பம் மனம் கவர்ந்தவனின் குடும்பம் ,எங்கேயும் விட்டுக்கொடுக்காமல் தன்னை தாங்கும் உறவுகள்.
பரீட்சை முடிந்து விடுமுறை விட்டிருக்க உஷா ஜமுனா நித்யா மற்றும் ஹிமாவின் கொண்டாட்டம் தான் அந்த வீட்டில் , தங்கராணி மற்றும் வர்ணத்திற்கு முழுதாக ஓய்வு கொடுத்துவிட்டு இவர்கள் வீட்டு பொறுப்பை எடுத்துக்கொண்டனர்.
ஹிமானி அவர்கள் பக்க சமையல் , நித்யா இவர்கள் பக்க சமயல் என்று இரண்டு வகையான சாப்பாடு தினமும் அனைவருக்கும், பாத்திரம் கழுவுவது துணி துவைப்பது வீட்டை சுத்தப்படுத்துவது என்று பாட்டும் பேச்சுமாக கலை கட்டியது வீடு , அதிலும் ஹிமாவை அதிகம் பாட சொல்லி கேட்டு ரசித்தனர்.
இவர்களுடன் தோட்டத்திற்கும் செல்ல தொடங்கினாள் , அன்று கத்தரிக்காய் பறிக்க அனைவரும் சென்றனர் “ஹிமா நீ அந்த நிழல்ல ஒக்காரு நாங்க பறிச்சுட்டு வரோம்” என்று நித்யா செல்ல இவளும் அவள் பின்னையே சென்றாள்.
“ஏய் போ…. வெய்யில்ல நின்னா உனக்கு ஒத்துக்காது அண்ணாக்கு பதில் சொல்ல முடியாது போ” என்க.
“அவர்கிட்ட நா சொல்லிக்கிறேன்” என்றவள் அவர்களுடன் நின்று மாலை வரை வேலை செய்தாள் , வீட்டிற்கு வந்து அனைவரும் குளித்துவர ஹிமானியின் முகம் எல்லாம் சிவந்து தடித்து இருந்தது அனைவரும் பதரி விட்டனர்.
“என்னடி செய்ய இதுக்கு” என்று வர்ணம் பதற.
“மா நா ரெண்டு நாள் எங்காவது தலைமறைவா போறேன்” என்று நித்யா கூறிமுடிக்க வந்துவிட்டான் உள்ளே.
விழிகள் மனைவியின் முகத்தில் இருக்க பதறிவிட்டது உள்ளம் “ஹிமா” என்று அவள் அருகில் சென்று முகத்தை கைகளில் தாங்க , கையை பிசைந்துகொண்டு நின்றனர் அனைவரும்.
“நான் தான் பிடிவாதமா தோட்டத்துக்கு போனேன் கத்தரிக்காய் பறிக்க, எல்லாரும் சொன்னாங்க நா கேக்கல” என்றாள் அவன் விழிகளை பார்த்து “தவறு என்மீது மட்டுமே” என்று கணவனுக்கு உணர்த்தி.
“நித்யா கொஞ்சம் கத்தாழை ஒடச்சுட்டு வா” என்றவன் அவள் எடுத்து வந்ததும் மனைவியின் கை பற்றி அழைத்துக்கொண்டு அவன் இருக்கும் வீட்டிற்கு சென்றான் , திரும்பி நித்யாவை பார்த்து கண் சிமிட்டியவளை கையை கொண்டு கழுத்தை நெறிப்பதை போல செய்தாள் நித்யா.
சிரித்துக்கொண்டே அவனுடன் சென்றுவிட்டாள் , கத்தாழையை வெட்டி அதன் ஜெல்லை தனியாக எடுத்து கொடுத்திருந்தாள் நித்யா அதை கொஞ்சமாக எடுத்து மிக மென்மையாக அவள் முகத்தில் தேய்த்துவிட்டவன் “எரியுதா….” என்க.
“ஹ்ம்ம் இங்க” என்று கன்னத்தை காட்ட சிரித்துவிட்டான் “ஏன் இப்படி” என்க.
“இல்ல கத்தரிக்காய் உடைக்கும்போது டக் டக்குன்னு சவுண்ட் சூப்பரா இருந்துச்சு அதோடா நல்ல கலர் அவங்க செய்யும்போது ரொம்ப ஆசையா இருந்தது , நல்லா என்ஜாய் பண்ணி செஞ்சேன் , இது நாளைக்கு சரியா போய்டும்” என்றவளை பார்த்தவன்.
“உனக்கு பிடிச்சுருக்குன்னா செய் ஒன்னும் பிரச்சனை இல்ல எதுவா இருந்தாலும் நா பாதுர்க்குறேன்” என்றவன் அவள் கன்னத்தில் முத்தம் வைக்க.
“இன்னும் பேஸ் வாஷ் பண்ணல” என்றாள்.
“பரவாயில்ல…. இந்த தேன் எப்படி இருந்தாலும் இனிக்கும்” என்று அவளை தன் மடிக்கு மாற்றிக்கொண்டான்.
“எவ்ளோ அழகா மாறிடுச்சு தெரியுமா இந்த வீடு , புது உயர் குடுத்துருக்க இந்த குடும்பத்துக்கு , உனக்கு என்னை ஞாபகம் இருக்கும்னு நான் நினைக்கவே இல்லை , தன்னையே காப்பாத்திக்க முடியாத ஏதோ ஒரு கோழைன்னு நீ அதை மறந்திருப்பன்னு நெனச்சேன்”.
“ஆனா உங்க பட்டறைல அன்னைக்கு கேட்டியே எப்படி இருக்கீங்கன்னு உசிர் வரைக்கும் அப்படியே தித்திச்சுது” என்றான் விழிமூடி.
“என்ன நம்பிக்கைல காத்திருந்தேன்னு இன்னைக்கு வரைக்கும் தெரியல , இந்த விரல்களை கோத்துக்குற வரம் வேணும்னு உள்ளுக்குள்ள தவிக்கும்” என்றவன் வார்த்தைகளில் அவன் கடந்து வந்த இத்தனை வருட வலியை உணர்ந்து கொண்டாள் ஹிமானி உள்ளுக்குள் என்னமோ செய்தது.
“அன்னைக்கு கோவில்ல சொல்ல வந்ததை சொல்லமுடியாம இந்த கண்கள் தவிச்சு நின்னுச்சே….. அந்த நிமிஷம் தெரிஞ்சிடுச்சு இந்த மனசுல நான் இருக்கேன்னு , எப்படி இருந்துச்சு தெரியுமா…..” என்று தலையை அழுந்த கோதிக்கொண்டான்.
“உசுர அப்படியே உருவி உன் கிட்ட குடுத்திட்டு மொத்தமா உனக்குள்ள சரணடையனம் போல…” என்றவன் அவள் கழுத்துவளைவில் அழுத்தமாக முகம் புதைத்து பற்தடம் பதித்தான் , சூடான அவன் மூச்சு காற்றோடு இரு துளி கண்ணீரும் சிதறி விழுந்தது அவளுள்.
அவன் பின் கழுத்தில் கை நுழைத்து தன்னுள் அவனை இன்னும் புதைத்தாள் ஹிமானி.