“நாப்போகல” என்று கண்ணில் நீரோடு கெஞ்சியவளை பார்க்க மனம் பொறுக்கவில்லை, எங்கும் போக வேண்டாம் படிக்கவும் வேண்டாம் என்று சொல்லிவிடலாம் என்று தான் அவன் சிந்தனை ஓடியது, ஏனோ அந்த விழிகள் நிறைவதை மட்டும் பார்க்கமுடியவில்லை.
“மாப்ள” என்று அவன் பின்னே வந்து தோளில் தட்டிய மதி “பாக்காத…” என்றான் அவனுக்கு மட்டும் கேக்குமாறு, நொடியில் தன்னை மீட்டுக்கொண்டவன்.
“ஹிமா… முதல்ல அப்படி இருக்கும் ஆனா கொஞ்ச நாள்ல உனக்கு ரொம்ப பிடிச்சுடும்” என்றவனை பார்த்தவள் “அங்க எல்லாரும் எப்படி இருக்காங்க பெருசு பெருசா பாக்கவே பயமா இருக்கு, நாக்காலேஜ் எல்லாம் போகல நித்யா கூட இங்கவே இருக்கேன்” என்க.
“விட்டுவிடு அவள் எங்கேயும் போக வேண்டாம்” என்று அவனிடம் சண்டையிட்டது அவன் மனது, சிரிப்புச் சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்க்க நித்யா வாய்பொத்தி சிரித்துவிட்டு அண்ணன் பார்ப்பதை உணர்ந்து மதிக்கு பின்னே ஒளிந்துகொண்டாள்.
உஷா அண்ணியை பரிதாபமாகப் பார்த்து நின்றிருந்தாள், காலேஜுக்கு போய் அப்ளிகேஷன் வாங்கிய நாள் தொட்டு இப்படித்தான் போகிறேன்…. போகவில்லை என்று புலம்புகிறாள், அங்கு வந்திருந்த முதல் வருட மாணவர்களைப் பார்த்து அவளுக்குப் பயம்தான் வந்தது.
மூன்று நாட்கள் முன்பிருந்து இதே புலம்பல்தான், பைக் வந்து நிற்க அதிலிருந்து இறங்கி வந்த ரன்வீர் “என்ன மாமா இன்னும் பாட்டை மாத்தலயா” என்றான் இமயனிடம்.
“தீதி உஷாவை பாரு, உஷாவும் இன்னைக்குத்தான் பஸ்ட் டைம் காலேஜ் போறாங்க, நாங்க ரெண்டுபேருமே உன்கூட தானே வரோம் அப்பறம் என்ன பயம், நாப்பாத்துக்க மாட்டேனா” என்றான் அவளிடம்.
இமயன் அன்று ஹிமானியின் வீட்டிற்கு சென்று வந்த இரண்டாம் நாள் ரன்வீர் இமயனின் வீட்டிற்கு வந்து நின்றிருந்தான், அவ்வளவு சந்தோஷம் ஹிமானிக்கு, சில நாட்களிலே பிணைப்பு வந்துவிட்டது ரன்வீருக்கு இமயன் மதியுடன், நித்யாவுடன் வம்பு வளர்க்கவும் தொடங்கிவிட்டான், உஷா நல்ல தோழியாக மாறிவிட்டாள்.
கொஞ்ச நாட்களில் சல்மாவும் மகளைத் தேடி வந்துவிட்டார் அடுப்படி வரை சென்று தனக்கு வேண்டியதை உரிமையாக எடுத்துக்கொள்ளும் அளவு நெருக்கம் வந்துவிட்டது இந்த வீட்டோடு சல்மாவுக்கு.
“அண்ணி… ஆல் தி பெஸ்ட்” என்று ஹிமானியின் கைப்பிடித்துக் குலுக்கினாள் ஜமுனா, “நா ஸ்கூல் கிளம்புறேன், உஷா அக்கா கூடவே போய்ப் பழகிட்டேன் இப்போ தனியா போக ஒரு மாதிரி இருக்கு” என்றவள்.
“அக்கா அண்ணியை நல்லா பாத்துக்கோ” என்றுவிட்டு சென்றாள், அவளின் பின்னே ஒரு நொடி பயணித்த ரன்வீரின் விழிகள் மீண்டும் தன் தமக்கையிடம் நிலைத்தது.
கல்லூரி போகப் பயம் அது ஒரு காரணம் மட்டுமே, மற்றொரு காரணத்தை அவள் மட்டுமே அறிவாள், காலை மதியம் இரண்டு நேரமும் எங்கு இருந்தாலும் சாப்பிடும் நேரம் வந்துவிடுவான், அவர்களுக்கான நேரம் அது.
தானே தன் கையால் உணவு கொடுத்தால் மட்டுமே ஒரு தாய்க்கு மனம் நிறையும், அப்படி கொடுக்காவிட்டால் தன் குழந்தை சரியாகச் சாப்பிடாது என்று என்னும் தாயின் மனநிலையில் நின்றாள் ஹிமானி, படிப்பைவிட அவளுக்கு அவனே பிரதானமாக இருந்தான் இப்பொழுது.
“அண்ணி பஸ்க்கு நேரம் ஆகுது” என்ற உஷாவை பார்த்தவள் மீண்டும் இமயனை பார்த்தாள், “உங்க புள்ளைங்க கூடப் பள்ளிக்கூடம் போக இப்படி அழுவாது போல” என்று ஹிமாவிடம் கூறிய நித்யா மீண்டும் சிரிக்க அவள் தலையில் வலிக்கக் கொட்டினான் மதி.
“அடியே பாத்து மெதுவா அப்படியே திரும்பிக்க போகுது” என்ற மதி “அம்மாடி இங்க பாரு நீ படிக்கணும்னு அவன் ரொம்ப ஆசைப்படுறான்” என்றதும் ஒன்றும் பேசாமல் உஷாவுடன் அவனைத் திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டே நடந்தாள்.
பஸ்ஸ்டாப் வரை நடந்து சென்று அங்கிருந்து பஸ்ஸில் சென்றுவிடுவார்கள், அவர்களை முன்னே விட்டு ரன்வீர் பைக்கில் சென்றான், பின்னையே போகத்துடித்த மனதை அடக்கி நின்றான் இமயன்.
நித்யாவிற்கு உண்மையில் ஹிமானியை அப்படி பார்க்க வருத்தமே, தானும் கொஞ்சம் இலக்கம் காட்டினாள் போகவே மாட்டாள் என்பதால் சிரித்து அவளை வெறுப்பேற்றினாள், அனைவரும் அவர் அவர் வேலைக்குச் சென்றுவிட்டனர்.
அன்று மட்டும் அல்ல அதற்க்கு பின் வந்த நாட்களும் இமயன் மதியம் உணவுண்ண வீட்டிற்கு வருவதில்லை, காலைக் கல்லூரிக்குச் செல்லும் முன் தட்டில் உணவை எடுத்துக்கொண்டு அவனிடம் சென்றுவிடுவாள் ஹிமானி.
தானும் உண்டு அவனுக்கும் ஊட்டிவிடுவாள், இரவில் எப்பொழுது வருகிறான் என்றே தெரியாது, தேனி வரை பஸ்ஸில் சென்றுவரும் அசதியோடு வீட்டிற்கு வந்தபிறகு நித்யாவிற்கு உதவியாக நின்று அனைத்தையும் அவளும் உஷாவும் செய்வர், ஒன்பது மணிக்கெல்லாம் தூக்கம் கண்ணைச் சுழற்ற அவளை அறியாமலே உறங்கி விடுவாள்.
அவனுக்கான உணவை மதி எடுத்துச் சென்றுவிடுவான், அவனுடன் இருக்கும் நேரம் வெகுவாகக் குறைந்துவிட்டது, பார்க்கக் கூடப் பஞ்சமாகிப்போனது அதனாலே அவள் கல்லூரி செல்லும் முன் அவனுடன் உணவுண்ண வந்துவிடுவாள்.
பத்து நாட்கள் ஆகிவிட்டது கல்லூரி திறந்து இன்னமும் அவளுக்குச் சரியாக அங்கே யாருடனும் ஒட்டவில்லை என்றாலும் முயன்று தன்னை அங்கே பொருத்திக்கொண்டாள், மெல்ல மெல்ல மாறிவிடும், பயந்ததை போல அங்கே ஒன்றும் பிரச்னை இல்லை அனைவரும் நல்ல விதமாகவே நடந்தனர், கல்லூரி கலாட்டாக்கள் இருந்தது பெரிதான பிரச்சனைகள் இல்லை.
சில நாட்களாக நித்யாவின் வாட்டத்தை கவனித்தான் மதி, அன்று காலை அவனுக்கு உணவை எடுத்து வைத்துக்கொண்டிருந்தவளை பிடித்து அருகில் அமர்த்தியவன் “என்னாச்சு?” என்க.
“என்ன ஒண்ணுமில்லயே…”.
“சும்மாவே பாக்க கருவண்டு நீ, இப்போ தேனீ கொட்டுன மாதிரி உப்பி வேற இருக்கு” என்றவனை பார்த்து முறைத்தவள் எழுந்துகொள்ள பார்க்க அவள் கைப்பிடித்து இழுத்து அருகில் அமர்த்தினான் “சொல்லு என்ன பிரச்சனை” என்க.
“தனியா இருக்குற மாதிரி இருக்கு மாமா”.
“ஆமா யாருமே இல்ல தனியாத்தான் இருக்கோம் ரெண்டு பேரும்” என்று அவளை நோக்கிக் குனிய.
திரு திரு என்று விழித்தாள் “எல்லாம் உன் அண்ணனைச் சொல்லணும் படிச்சுட்டா வேலைக்குப் போகணும்னு இல்ல, சும்மா காசு செலவாயிடுச்சு செலவாயிடுச்சு அவகிட்ட சொல்லக் கூடாது, நான்தானே செலவு செஞ்சேன் எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லன்னு எல்லார் வாயையும் அடைச்சுட்டான்” என்றபோது அவள் இதழில் புன்னகை.
இதைச் செய் அதைச் செய் என்று இதுவரை கட்டாயப்படுத்தியதில்லை இமயன் யாரையும்.
“எல்லாம் உன் சொந்தம்தான் உன் பாசமலர் இமயவரம்பன்” என்க.
“ஆத்தீ!! , தனியா இருக்கேன்னு உன்கிட்ட பொலம்பினா என்னை உசுரோட குழிதோண்டி பொதைக்க வழி சொல்றியா நீ” என்று கரண்டியால் அவன் கையைப் பதம் பார்த்தாள்.
“அடியே ராட்சசி ஒழுங்கா நீ வேலை செஞ்சா அவன் ஏண்டி கேள்வி கேக்க போறான், தேவ இல்லாம என்னைக்காவது உங்க யாரையாவது ஒரு வார்த்தை பேசியிருப்பானா”.
“நீ ஒன்னும் என் அண்ணனைப் பத்தி எனக்குச் சொல்ல வேண்டாம், அது என்னமோ அதுகிட்ட பயம் மட்டும் போக மாட்டுது” என்றவள் பாவமாக அவனைப் பார்த்து விழிக்க.
“அவனுக்கு உதவியா இதைச் செய், ஓட்டமா ஓடிட்டு இருக்கான் பண்ணைய பாக்கணும் கடை வேலை போயிட்டு இருக்கு, அவங்க வீட்டு வேலை ஆரம்பிச்சாச்சு, இதோட நம்ம கல்யாணத்துக்கு முன்னாடி கோவில்ல இமயனுக்கும் ஹிமாவுக்கும் மாலை மாத்துற சடங்கை வைக்க அவன்கிட்ட பேசி இருக்கார் மாமா”.
“சடங்குக்குத் தங்கத்துல தாலிக்கொடி செய்ய நினைக்கிறான், எல்லாருக்கும் துணி சொந்தத்துக்கெல்லாம் கல்யாண சாப்பாடு எவ்ளோ இருக்கு, இந்த ஓட்டம் எல்லாம் அதுக்காகத்தான்”.
“உனக்குத் தெரியும்ல நா ஸ்கூல் முடிச்சுட்டு போய்ப் பாத்தாலும் யாரவது அங்கேயே பொறுப்பா நம்பிக்கையா நின்னு பாத்துக்கிட்டா நல்லா இருக்கும், திட்டினா வாங்கிக்கோ…. திட்டாத அளவுக்கு வேலை செய்யக் கத்துக்கோ” என்றான்.
இமயனுக்கு படிப்பு வரவில்லை கணக்கு வழக்கு அவனுக்கு மிகவும் கஷ்டம், மனதில் லாப கணக்கைப் போட்டுப் பார்ப்பவனுக்கு அதைப் பேப்பரில் போட்டால் செய்யத் தெரியாது.
கணக்கு விஷயத்தில் அவன் முழுதாக நம்புவது மாணிக்கத்தையும் மதியையும் மட்டுமே பேங்க் லோன் வட்டி எல்லாம் ஒருவருக்கு மூன்று நான்கு பேரிடம் விசாரித்துத் தெரிந்து கொள்ளுவான்.
என்னவானாலும் சரி இன்று பார்க்காமல் உறங்குவதில்லை என்ற முடிவோடு அமர்ந்திருந்தாள் ஹிமானி, அலாரம் வைத்துகூட பார்த்துவிட்டாள் நால்வரில் யாரேனும் ஒருவர் அணைத்துவிட்டு உறக்கத்தை தொடர்ந்தனர்.
அதிகம் உறக்கம் வரும்போது வெளியில் நடை பயின்றாள் பெரியவர்கள் உறங்கச் சென்று விட்டனர், அனைவரும் உள்ளே சென்றுவிட்டார்கள் என்பதால் மதியும் அவன் அறைக்குச் சென்றுவிட்டான்.
நேரம் பதினொன்றை கடந்திருந்தது “ஹிமா வந்து தூங்கு நேரம் ஆச்சு, அண்ணா எப்போ வருவாங்க தெரியல, இவ்ளோ நேரம் முழிச்சிருந்தா திட்டப் போறாங்க” என்றாள் நித்யா.
“எங்க தூங்க….. அன்னைக்கு கத்திரிக்காய் பறிக்கப் போய் மூஞ்சிய வெயில்ல காட்டி மேக்கப் போட்டு வந்தியே, அண்ணனுக்கு எங்கமேல செம கோவம், வார்த்தையை விடாம பள்ள கடிச்சுட்டு போய்டுச்சு”.
“ரெண்டுநாள் யாரோடயும் பேசல, அந்த வாரம் வெண்டைக்காய் பறிக்க எங்க யாரையும் போகக்கூடாதுன்னு சொல்லிடுச்சு, அதுவே ஆளுங்கள வெச்சுடுச்சு” என்று நித்யா கூற இவள் ஆச்சர்யமாக அவளைப் பார்த்தாள்.
“அன்னைக்கு அம்மா என்னை அடிச்சாங்கல்ல, உன்ன அப்படி பேசிட்டேன்னு அப்போ சொன்னுச்சாம் என் பொண்டாட்டிக்கு பாத்து அவளை அடிசீங்கன்னா அது ஹிமா மேல வெறுப்பை வளர்க்கும், என் பொண்டாட்டிய சொல்லி யாரும் யாரையும் திட்டாதீங்கன்னு” என்றவள்.
“நடந்ததுக்கு உங்க யாரையும் நான் ஒன்னும் சொல்லல என்னால என்ன செய்ய முடியுமோ நான் செஞ்சுக்குறேன்னு காமிச்சிருச்சு தோட்டத்துல வேலைக்கு ஆள் வெச்சு” என்றவளை சங்கடமாகப் பார்த்தாள் ஹிமானி தன்னால் தானோ என்று.
அவளின் கையைப் பற்றிய நித்யா “இதுல… அதுக்கு உன்மேல இருக்குற அன்பைத்தான் நாங்க பாக்குறோம், அதே மாதிரி உன்ன சொல்லி இந்தக் குடும்பத்துல பிரச்சனை வரக்கூடாதுன்னு யோசிக்குது, அத நல்லா பாத்துக்கோ ஹிமா” என்ற நித்யாவின் விழிகள் நிறைய ஹிமா பெரிதாக அழத் தொடங்கினாள்.
“அய்யய்யோ என் குடிய கெடுத்த போ கண்ணைத் தொட வந்துர போகுது” என்றவர்கள் மீண்டும் இருபது நிமிடம் கதைபேசியும் காத்திருந்தும் அவனைக் காணவில்லை, நித்யாவின் தலை ஒரு பக்கமாகச் சாய்ந்துகொண்டு இருந்தது தூக்கத்தில்.
“நித்யா போ போய்த் தூங்கு” என்க.
“இல்ல நீ தனியா இருப்ப” என்றாள் கண்ணைத் திறக்க முடியாமல்.
“இல்ல நீ போ இங்க என்ன பயம்”.
“இல்ல நீயும் வா உள்ள வெயிட் பன்னு” என்று கையேடு அழைத்துச் சென்ற நித்யா பாயை கண்டதும் விழுந்துவிட்டாள்.
அவனின் வண்டி சத்தத்திற்காகக் காத்திருந்தாள் ஹிமானி, மெல்ல மெல்ல கேட்கத் தொடங்கிய சத்தம் மிக அருகில் வந்து சேர்ந்தது, சத்தம் போடாமல் மெதுவாக வந்து கதவைத் திறந்து வெளியில் வந்தாள்.
உண்மையில் திக்கென்றானது அவனுக்கு முன்னே வந்து நின்றவளை பார்த்து “ஏய் ஹிமா…” என்றவன் திண்ணையில் அமர்ந்துவிட்டான்.
“பயந்துடீங்களா…” என்று அவள் அருகில் அமர “மணி என்ன தெரியுமா! இப்படி வந்து நிப்பேன்னு சத்தியமா நினைக்கல, இன்னும் தூங்காம என்ன பண்ற” என்றவனை பார்த்தவள்.
“கொஞ்சம் இல்ல நெறய வேலை, ஏன் இப்படி எல்லாத்தையும் தலைல போட்டுக்குறீங்க? மதியம் எங்க சாப்பிடுறீங்க வீட்டுக்கு வரதில்லை” என்றவள் அவன் கையைப் பற்றிக் கன்னத்தில் வைத்து.
“எனக்கு நகை பணம் இது எதுவும் வேண்டாம் இதெல்லாம் நெறய இருந்தப்போ நாச்சந்தோஷமா இருந்தேனா? ஆனா இப்போ சந்தோஷமா இருக்கேன், என்கூட இருங்க, எவ்ளோ மிஸ் பண்றேன் தெரியுமா….. பக்கக்கூட முடியல” என்றவளுக்கு அழுகையில் பேச்சே வரவில்லை.
“ஹிமா கடை வேலை முடிஞ்சிடுச்சுன்னா பிசினெஸ் ஸ்டார்ட் பண்ணிடலாம், கொஞ்ச நாள் மட்டும்தான் ப்ளீஸ் இனிமே நைட் சாப்பாட்டுக்கு வந்துட்டு போகவா”என்க.
“ஒன்னும் வேண்டாம், எங்கயோ தூரமா வேலைக்குப் போறீங்கதானே என்கிட்டே சொல்ல மாட்றீங்க, மதி அண்ணா மாமாகிட்ட பேசும்போது கேட்டேன்” என்றாள்.
மேகமலைக்கு செல்லும் வழியில் புதியதாக மால் ஒன்று கட்டப்படுகிறது அதற்க்கு தேவையான பொருட்களை எடுத்துச்சென்று இறக்குகிறான், ப்ரெசிடெண்ட் வழி அந்த வேலையை வாங்கிக்கொண்டான்.
நல்ல வருமானம் கிடைக்கிறது காலைப் பண்ணை வேலைகள் முடிந்த பிறகு எப்பொழுதும் தோட்டத்திற்கு செல்வது வழக்கம் இப்பொழுது அந்த வேலையைச் சித்தப்பாவிற்கு கொஞ்சம் மாற்றி விட்டிருக்கிறான்.
அவளின் அருகாமையில் தினம் தினம் வெந்து உருகுகிறான், மனைவியைத் தேடும் மனதை அடக்க இது ஒரு வழி, முயற்சி மட்டுமே…. நாள் முழுதும் ஓடும் ஓட்டத்தில் உடலும் மனமும் ஓய்விற்கு கெஞ்சும் நொடியில் வீட்டிற்கு வந்துவிடுவான்.
தங்கையின் திருமணம் இருக்கிறது, தங்களின் திருமண வேலை இருக்கிறது கனவு வீட்டின் அஸ்த்திவாரம் இப்பொழுதுதான் எழுப்பியிருக்கிறான் நிறைய பொறுப்புகள் உள்ளது.
அவளுக்கு இது எதுவும் தேவையிருக்கவில்லை “இப்போ கூட என் பக்கத்துல வரல நீங்க” என்றவளுக்கு தொண்டை அடைத்தது.
மண் சிமெண்ட் அனைத்தும் எடுத்துச் செல்லும் வண்டியை ஓட்டுகிறான் உடல் எல்லாம் மண்ணும் பொடியுமாக இருந்தது, உன்னைத்தானடி தேடுகிறது என்ற அவனின் மனதின் குரல் அவளுக்குக் கேட்கவில்லை
“ஹிமா மா… மேல எல்லாம் மண்ணுடா அதனாலதான்….” என்றவன் கூறும்போதே அவனை இழுத்துக்கொண்டாள்.
“கருப்புதான் இன்னும் ஒட்டல மண்ணாவது ஒட்டட்டும்” என்று அவள் முணுமுணுக்க அவன் செவிகளில் நன்றாகவே விழுந்தது, இதழ்கள் சிரிப்பில் விரிய இத்தனை நேரம் உடலை வருத்திச் செய்த வேலையின் அலுப்பு எல்லாம் காற்றோடு கரைந்துபோனது.
காலை இருவரும் அமைதியாக உணவை உண்டுகொண்டிருக்க “அண்ணா” என்று வந்து நின்றாள் நித்யா.
அவன் நிமிர்ந்து அவளைப் பார்க்க “பண்ணைக்கு நா வரட்டுமா வேலைக்கு” என்றாள் அவள்.
இமயனின் விழிகள் பின்னில் வந்த மதியை பார்க்க “நா ஒன்னும் சொல்லல, அவளேதான் வீட்ல தனியா இருக்கேன் வேலைக்குப் போகணும்னு சொன்னா” என்க.
அவளையே கூர்மையாகப் பார்த்தவன் “வேலைக்கு வரதுல எனக்கு ஒன்னும் பிரச்னை இல்ல, இங்க போர் அடிக்குதுன்னு அங்க வேலைக்கு வரக் கூடாது, ஒழுங்கா வேலை செய்றதா இருந்தா மட்டும் வந்தா போதும், என்னோட மொத்த உழைப்பையும் அதுல போட்டுருக்கேன் அங்க சின்னத் தப்ப கூட என்னால பொறுத்துக்க முடியாது”.
“சம்மதன்னா போய் ரெடி ஆகு நானே கூட்டிட்டு போய்ச் சொல்லிக் குடுக்குறேன்” என்றான்.
“ரெடி ஆகி வரேன்ண்ணா” என்று ஓட்டமாக ஓடினாள், அவளைப் பார்த்து இப்பொழுது சிரிப்பது ஹிமாவின் முறையானது.
நித்யாவின் முகத்தில் பெரிதாகப் பதட்டம் “உன்மேல எங்களுக்கு நம்பிக்கை இருக்கு நிச்சயமா நல்லா பண்ணுவ, மதி அண்ணா ஹெல்ப் பண்ணுவாங்க தெரியாதத அண்ணாகிட்ட கேட்டுக்கோ”என்ற ஹிமானி அவளைத் தன்னை நோக்கித் திருப்பி.
“வேண்டாம்னா விட்டுடு அவர் ஒன்னும் சொல்லமாட்டார், இப்படி பயத்தோட போகாத ரிலாக்ஸ் ஆகு” என்க.
ஹிமாவின் கைகளைப் பற்றிக்கொண்டு சிறிது நேரம் நின்றவள் தன்னை நிலை படுத்திக்கொண்டாள் “செய்வேன் கண்டிப்பா செய்வேன், போய்ட்டுவரேன்” என்று இமயனுடன் பண்ணைக்குப் புறப்பட்டாள்.
பெரியவர்களுக்கும் சந்தோஷமே படித்துவிட்டு இப்படி வீட்டில் இருக்கிறாளே என்று வருந்தியவர்கள் அனைவரும் மனநிறைவோடு வாழ்த்தி அனுப்பி வைத்தனர்.
மதி ஹிமாவின் அருகில் வந்தவன் “எல்லாரும் எப்படி வாழ்த்தி அனுப்புறாங்க அங்க போய் என்ன என்ன திட்டு வாங்க போறாளோ, வந்து எனக்கு டின்னு கட்டப்போறா” என்று அவர்கள் போன வழியைப் பார்த்துச் சிரிக்க, ஹிமானியும் சிரிப்போடு பார்த்திருந்தாள்.