என்ன யோசிக்குற யாஷ்” என்ற தந்தையை பார்த்தவன் “நீங்க என்ன யோசிக்கிறீங்க பாப்பா” என்றான்.
“எதுவுமே சரியா இல்ல, சின்னவனுக்கு பொண்ணு பாசத்துல பைத்தியம் பிடிச்சுருக்கு, சல்மா நாம சொல்ற எதையும் கேக்குறதில்ல இப்போ, அவ பொண்ணை பார்க்க அங்க போக ஆரம்பிச்சுட்டா இவனும் ஒன்னும் சொல்றதில்லை, அப்படியே இவனுக்கு என்ன பிரச்சனைன்னு நீயே கேளு” என்று விராலியின் தந்தை பிரவனை காண்பித்து தலையைப் பிடித்துக்கொண்டு அமர்ந்துவிட்டார் முன்ஜல்.
மனைவியின் பிரசவம் நல்ல படியாக முடிந்த உடனே வீட்டிற்கு வந்துவிட்டான் யாஷ்.
“நா என்னண்ணா சொல்றது, இவளை வெட்டிப் பொதைச்சாலும் புதைப்பேனே தவிர கேவலம் என்கிட்ட கை நீட்டிச் சம்பளம் வாங்குறவனுக்கு இவளைக் கொடுப்பேனா, ஹிமானிய நாம விட்டு வெச்சுருக்கறதே தப்பு நம்ம மானம் மரியாதை எல்லாம் போச்சு”.
“இப்போ என் பொண்ணு இப்படி கல்யாணம் செஞ்சுக்கிட்டா, இதோட போய்டுமா என் பசங்க வாழ்க்கை இருக்கே அவங்களுக்கு பாத்துருக்குற இடம் எவ்ளோ செல்வாக்கானவங்க இந்த விஷயம் தெரிஞ்சா கல்யாணம் நடக்குமா, ஊருக்குப் போய் நல்லது கெட்டதுல கலந்துக்க முடியுமா” என்க, யாஷின் முகம் தெளிந்தது.
“ஹிமானி பிரச்னையை நாப்பாத்துக்குறேன் இப்போ விராலி விஷயத்தைச் சரி செய்யணும், இவளுக்கு இப்போ வந்திருக்கறது ஒரு குருட்டு தைரியம் அவன் வந்து பேசிட்டு போனதுல கொஞ்சம் நம்பிக்கை வந்திருக்கும், அந்த நம்பிக்கையை நாம உடைக்கணும் அவ குருட்டு தைரியத்தை அழிக்கணும், அப்போ தானா நம்ம வழிக்கு வந்துடுவா” என்றவன்.
நிதினை பற்றிய விவரங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டான், தம்பிகள் ஆன்சல் மற்றும் அன்சலுக்கு சரியான மண்டக்கப்படி கிடைத்தது, இரு பக்கமும் அடி என்ற நிலையில் கலங்கி போய் நின்றனர் இருவரும் அவர்களுக்கு அவர்கள் குடும்பமே பெரிது இந்தச் சொத்துக்கள் பெரிய இடத்திலிருந்து சம்பந்தம் அனைத்தும் வேண்டுமே என்ன செய்யணும் என்று கேட்டுத் தங்களுக்குள் முடிவு செய்துகொண்டனர்.
இரண்டு நாட்களுக்குப் பிறகு வேகமாக விராலியின் வீட்டிற்குள் நுழைந்த நிதின் “உன்கிட்ட சொன்னேனா உன்னை விரும்புறேன்னு? தெளிவா தானே சொன்னேன் எனக்கு விருப்பம் இல்லைன்னு அப்புறம் யாரை கேட்டு நிதினை விரும்புறேன் அவனைத்தான் கட்டிப்பேன்னு சொன்ன உன் வீட்டில??” என்று அவளைப் பார்த்து உச்ச பட்ச கோவத்தில் கத்தினான்.
“என்னாச்சு நிதின்!” என்றவள் பதறிக் கீழே வர.
போனை எடுத்து அவள் முன் நீட்டினான் “என் தங்கச்சி புருஷன் காலொடிஞ்சு ஆஸ்பத்திரில கிடக்கார், அப்பா இல்லாம போராடி முட்டி மோதிக் கொஞ்சம் எங்க லைஃப் இப்போதான் நல்லா போய்ட்டிருக்கு”.
“தங்கச்சிக்கு நல்ல புருஷன் அவளை நல்லா வெச்சுருக்கார், இன்னும் நாலு மாசத்துக்கு அவராலா நடக்க முடியாது வேற ஏதாவது பெரிசா ஆயிருந்தா? எம்மா சாமி இப்போதான் கொஞ்சம் நல்லா வாழ்ந்துட்டு இருக்கோம் அதையும் கெடுத்துடாதீங்க”.
“நீ என்னைத்தான் கல்யாணம் செஞ்சுப்பேன்னு சொன்னதுக்கு கிடைச்ச பரிசு இது, எனக்கு என் தங்கச்சி லைப் முக்கியம் உன்ன கை எடுத்துக் கும்பிட்டு கேக்குறேன் விட்ரு, எனக்கு வேற எடத்துல நல்ல வேலை கிடைச்சிருக்கு நானும் எங்க அம்மாவும் அங்கேயே போறோம் உனக்கும் உன் ஊருக்கும் ஒரு கும்புடு இந்த ஜென்மத்துல உன் கண்ணுல படமாட்டேன்” என்றவன்.
சில அடிகள் நடந்து விட்டு அதிர்ந்து நின்றவளை திரும்பிப் பார்த்தான் “ஆசைப்படறதுக்கு கூட ஒரு தகுதி வேணும், இல்ல தைரியமாவது வேணும் எதுவந்தாலும் பாத்துப்பேன்னு, எனக்கு அது இல்ல” என்றான்.
அவனை நோக்கிக் கண்ணீரோடு நின்ற விராலியின் முகம் மனதை வதைத்தது அவனால் ஒன்றும் செய்ய இயலாது திரும்பிப் பாராமல் சென்றுவிட்டான்.
பிடித்திருக்கிறது என்றதற்காக இப்படி என்றால் தன் மகளின் வாழ்வு என்னவாகும், மருமகனை ஏதேனும் செய்து விடுவார்களோ அவர்கள் குடும்பத்தை ஏதேனும் செய்வார்களோ என்ற பயம் பிடித்தது சல்மாவுக்கு.
யாஷிக்கு கோபம் இருந்தது அதிகமாகவே ஆனால் இப்பொழுது ஏதேனும் செய்தால் முதலில் கவனம் தங்கள் மேல் திரும்பும் என்பதாலே அமைதியாக இருந்தான்.
யாஷ் விராலியிடம் பேசவேயில்லை அவளின் தாய் தந்தை மற்றும் சகோதரர்கள் வைத்தே பேசவைத்தான், பேசிப் பேசிக் கரைத்தனர்.
“பாத்தியா சின்னதா ஒரு பிரச்சனை வந்ததும் ஊரை விட்டே போய்ட்டான் இவனையா நம்பின”.
“இல்லனாலும் அவனுக்கு இவ மேல விருப்பம் இல்லையே இவதான் அவன் பின்னாடியே போயிருக்கா, நாங்க பாத்த மாப்பிள எவ்ளோ வசதி உன் மாமியார் உனக்குப் பாஸ்போர்ட் எதுக்கு எடுக்கச் சொன்னாங்க, மாப்ள பிசினெஸ் ட்ரிப் பாரின் போவாராம் உன்னையும் கூட அனுப்புவாங்க”.
“ஹிமாவை பாத்தியா நடந்து போய் அங்கேயிருந்து பஸ் ஏறிக் காலேஜ் போறா, உங்கள நாங்க அப்படியா வெச்சுருந்தோம் எங்க போனாலும் எ.சி கார், பிளைட் அரண்மனை மாதிரி வீடு கைநிறைய காசு, அவ படிச்சு வேலைக்குப் போனாதான் குடும்பமே நடத்த முடியும் போல”.
“உன் அண்ணங்க கல்யாணம் இருக்கு அதை யோசிச்சியா நீ இப்படி செஞ்சா அது எப்படி நடக்கும் இவ்ளோ வசதியா வாழ்ந்துட்டு வெளில போய் யார்கிட்டயாவது வேலைக்குப் போவியா, உனக்கு அதெல்லாம் செட் ஆகாது குடும்பம்னா கொஞ்சம் அப்படி இப்படித்தான் இருக்கும் நீ கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டா அந்த வீட்ல நீதான் ராணி”.
இது அது என்று அவள் மண்டையை நன்றாகக் கழுவி பத்தே நாளில் வீட்டில் பார்த்து நிச்சயித்த மாப்பிளைக்கு கழுத்தை நீட்டி விட்டாள் விராலி, அவர்கள் திருமணம் ஆடம்பரமாகவே இருக்கும் இப்பொழுது இமயனின் குடும்பம் பார்க்க வேண்டும், ஹிமானி பார்க்க வேண்டும் எப்படி பட்ட வாழ்வை தொலைத்து விட்டோம் என்று அவள் வருந்த வேண்டும் என்றே மிக மிக ஆடம்பரமாக நடத்தினர்.
ஹிமாவின் பெற்றோரையும் திருமண கொண்டாட்டத்தில் இழுத்துக்கொண்டனர், அவர்களிடமும் பொறுப்புகள் கொடுக்கப்பட்டது, “அவங்க வருத்தப்படணும் பாப்பா இத எல்லாத்தயும் பாத்து பாத்து ஏங்கனும்” என்று யாஷ் கூறியபோது அவன் முகத்தில் அத்தனை வன்மம்.
இதில் அதிகம் தடுமாறியது ஹிமானியின் தந்தை பிரணத், சகோதரர்கள் அவர்களின் ரகசிய கூட்டத்தில் இவரைச் சேர்த்துக்கொள்ளவிலை, வேலை விஷயம் மட்டுமே அவரிடம் பேசினர், தேவகி கணவன் மனைவி இருவரிடமும் பேசுவதில்லை தேவகிக்கு பெருமை பிடிபடவில்லை பேரன் தன்னுடைய மானத்தை காப்பாற்றிவிட்டான் என்று பூரித்துப்போனார்.
ஆன்சல் அன்சல் திருமணமும் அடுத்துவரும் முகூர்த்தத்தில் முடித்துவிடலாம் என்று முடிவு செய்துகொண்டனர் ஹிமானியை பற்றி ஒரே பதில் அனைவரின் கேள்விக்கும் அப்படி ஒருத்தி எங்கள் குடும்பத்தில் இல்லை.
திருமணத்தில் வைரத்தில் ஜொலிக்கும் மகளைக் காண கண் இரண்டு போதவில்லை வம்ஷிக்கு “எங்க பொண்ணு நாங்க சொல்றத கேட்டு நடக்குற பொண்ணு மத்தவங்களை மாதிரி காதலிச்சு ஓடிப் போயிருந்தா அவங்க போட்டிருக்க மாதிரி மஞ்ச கயிறுதான் இருந்திருக்கும்” என்று பலரின் காதுப்படவே பேசினார்.
மாணிக்கத்தின் வீட்டிற்கும் செய்தி வந்து சேர்ந்தது, அதை அவன் எப்படி எடுத்துக்கொண்டான் என்று மற்றவர்களால் கண்டறிய முடியவில்லை.
காலை வேலைக்குக் கிளம்பிக்கொண்டு இருந்தவன் “மதி நித்யாவ விட்டுட்டு நீ ஸ்கூல் போ” என்றுவிட்டு வண்டியை எடுக்க, அவன் முன்னே வந்து நின்றாள் ஹிமானி.
“ஓஹ்….” என்றவனின் மனதின் தவிப்பை அவளால் உணர முடிந்தது, இவனின் மனநிலையை புரிந்துகொண்டு மதி ஒன்றும் சொல்லாமல் சென்றுவிட்டான், அனைவரும் விலகிச் சென்றுவிட்டனர் தனிமை கொடுத்து.
அவன் கைபற்றி வீட்டிற்குள் அழைத்துசென்றவள் அவனை அமர்த்தி மடியில் அமர்ந்துகொண்டாள், அவன் கைகள் தன்னாலே அவள் இடையை சுற்றி படர்ந்த்தது, அதற்க்கு மாறாக வந்து விழுந்தது அவன் வார்த்தைகள் “நேரம் ஆச்சு ஹிமா நாப்போகணும்” என்றவன் விழிகள் முதல்முறையாக அவள் முகத்தில் பதியாமல் எங்கோ இருந்தது.
“என்னைப் பாத்து பேசுங்க” என்றவள் தன் கைகளில் அவன் முகத்தைத் தங்கினாள்.
“அவங்களுக்கு எப்போவும் தங்கம் வைரம்தான் முக்கியம் அது இருந்தா ரொம்ப அதிர்ஷ்டம்ன்னு நினைப்பு, அப்படியே பார்த்தாலும் ஹிமானிதான் இப்போவும் பெரிய அதிர்ஷ்டக்காரி உலக்கத்துலயே விலை மதிக்க முடியாத வைரம் என்கிட்டே தான் இருக்கு எனக்கு மட்டுமே சொந்தமா” என்றவள் முடிக்கும்போது அவளின் அதரங்களை தனதாக்கிக்கொண்டான்.
இமயன் கரங்கள் அவள் இடையில் வன்மையாகவே அழுந்தியது, இதழ்வழியே அவளை மொத்தமாய் தின்றுவிட பார்த்தான் மூச்சுக்கு தவித்தவளை மெல்ல விடுவித்தவன் அவள் மார்பில் முகத்தைப் புதைத்துக்கொண்டான்.
“காப்பாத்த என்ன பண்ணட்டும் இதயா” என்றவளை இறுக்கமாக அனைத்துக்கொண்டவன்.
“ஒரே நேரம் என்னைக் கொல்லவும் உயிர் கொடுக்கவும் உன்னால் மட்டுமே முடியும்” என்று மீண்டும் அவள் இதழில் புதைந்தான், சில நொடிகளில் அவளை விடுவித்து “போ” என்றவனை அவள் பார்த்தே அமர்ந்திருக்க.
“ஒண்ணுமில்லடா நல்லா இருக்கேன் ரொம்ப நல்லா இருக்கேன் இப்போ” என்றான் அவள் நெற்றி முட்டி அதரங்களில் மெல்லிய புன்னகைகூட விரிந்தது.
“போங்க பொண்டாட்டி” என்றவன் கைகள் மீண்டும் அவளைத் தன்னுடன் சேர்த்து ஒரு முறை இறுக்கமாக அணைத்து விடுவித்தது செல்லும் அவளைப் பார்த்தே நின்றிருந்தான் மனதின் அலைப்புறுதல் குறைந்துவிட்டது, மனது கொஞ்சம் லேசானது அழுத்திய பாரத்தை எடுத்துசென்றுவிட்டாளே.
பெரிதாகத் திட்டு வாங்காமல் தப்பித்துக்கொண்டாள் நித்யா, சின்ன சின்னத் திட்டுகளும் முறைப்புகளும் அவனிடமிருந்து கிடைத்தது, முதலில் தடுமாறினாலும் மெதுவாகக் கற்றுக்கொண்டாள், கடை வேலை முடிந்துவிட்டது திறப்பு விழாவைக் கோவில் சடங்கு முடிந்த பிறகு வைத்துக்கொள்ளலாம் என்று மாணிக்கம் சொல்லிவிட்டார்.
நித்யா மதியின் திருமணத்திற்கு ஒரு வாரம் முன்பு நல்ல நாள் இருக்க அன்றே இவர்களுக்குச் செய்துவிடுவது என்று முடிவு செய்து கோவிலில் சொல்லிப் பணம் அடைத்துவிட்டார்கள், மதி நித்யா கல்யாணம் மண்டபத்தில் என்பதால் பணத்தை முன்பே கட்டிவிட்டார்கள்.
துணிமணி நகைகள் வாங்கும் வேலை மட்டுமே மண்டபம் வேண்டாம் எளிமையாகக் கோவிலில் வைத்துக்கொள்ளலாம் என்று மதி கூறியும் இமயன் மறுத்துவிட்டான்.
ஹிமாவின் வீட்டிற்க்கே சென்று மாணிக்கமும் தங்கராணியும் பத்திரிக்கை வைத்து அழைத்தனர், சல்மா பத்திரத்தை வாங்கிக்கொண்டார், வேறு யாரும் அவர்களிடம் உரையாடவில்லை.
“போகக் கூடாது” என்ற இமயனை மீறியே வந்திருந்தனர், அவள் பக்கம் யாரும் இல்லாமல் மருமகள் வருந்தக்கூடாதே என்று அழைக்க வந்தனர், அவமானமே என்றாலும் எதிர்பார்த்த ஒன்றுதானே என்று மனதை தேற்றிக்கொண்டனர்.
மகள் அங்கு வாழும் நிலை என்ன என்பதை பற்றிய எந்த வருத்தமும் இல்லை, இவர்கள் என்னதான் மூடி மறைத்தாலும் விஷயம் அவர்களுக்குச் சிறிது தெரிந்தே இருந்தது, என்னை வேண்டாம் என்று ஓடப் பார்த்தாயா என்று அவளைக் கொட்டிக்கொண்டுதான் இருக்கிறான்.
“ஒருவழியா விராலி கல்யாணம் நல்ல படியா முடிஞ்சது அந்த மாட்டுக்கார பயல ஒண்ணுமே செய்யப்போறதில்லயா” என்ற தந்தையை பார்த்த யாஷ்.
“அத என்கிட்டே விட்டுருங்க நாப்பாத்துக்குறேன், அவனோட அடையாளத்தை அழிக்கணும், அடிச்சா அவன் எழக் கூடாது அப்புறம் அவளை இங்க இழுத்துட்டு வரலாம்” என்றான் குரூரமாக.
“செந்தில் மற்றும் குடும்பத்திற்கு அழைப்பு இல்லை, நித்யாவும் ஹிமாவும் மிகவும் வற்புறுத்தப் பிள்ளைகளை மட்டும் அழைக்க ஒத்துக்கொண்டனர் இமயனும் மதியும்.
அண்ணனின் திருமணத்திற்கு உடுத்த பட்டுப் புடவை ஹிமானி மற்றும் நித்யாவின் வழி மல்லிக்கு சென்றது, மணிக்கும் புது உடை வாங்கி இருந்தார்கள் “இந்தப் பிரச்சனை எல்லாம் விட்டுடு தம்பியும் நீயும் கண்டிப்பா வந்துடுங்க” என்றவள், அதற்க்கு முன்பு நடக்கும் தங்களின் திருமண விசேஷத்திற்கும் அவர்களை அழைத்தாள்.
செல்வராணியின் செவிகளில் எட்டிவிட்டது செய்தி, அவளுக்குச் சரியாகத் தகவல்கள் தெரிவிக்கும் நபர் இதுவரை ஊரில் இல்லாமல் போனது மல்லியின் அதிர்ஷ்டம்.
“என்னடி சொல்ற” –செல்வராணி.
“ஆமாக்கா ஒண்ணா போய் வாரங்க, உன் மவன் பொறுப்பா இப்போ மாறிட்டான் நீயும் எவ்ளோ நாள் பொண்ணு தேடுற, இது அப்படி இப்படி பாத்தாலும் மதி தங்கச்சி, அவ அம்மாக்காரி ஒரு வெவரம் கெட்டவ ஒரு மண்ணும் தெரியல, ரெண்டு பேரும் சேந்து நாலு ஆளு வேல செய்வாங்க”.
“அதோட உன் ரெண்டாவது மவன் பொண்டாட்டி இவகூட நல்லா பேசிப் பழகுறா, இவளுக்குச் சீர் செனத்தி எல்லாம் செஞ்சு அனுப்புவாங்களா இருக்கும் நல்லா யோசி” என்று கூறி செல்ல, அவள் மண்டைக்குள் வண்டு குடைய தொடங்கியது.
“இது சரியாக வருமா செய்யலாமா வேண்டாமா” என்று பலவாறாக யோசனை ஓடியது.
“இந்தாக்கா மல்லி புள்ளய பத்தி என் அம்மாகிட்ட நாலு வார்த்தை நல்லதா சொல்லு, எனக்கு அந்தப் புள்ளய கட்டிக்கிடனும் நீ சொல்றதுல என் அம்மா கல்யாணத்துக்கு ஒத்துக்கிச்சுன்னா உனக்கு என் கல்யாணத்துக்கு பட்டுச் சேலையும் அரைப்பவுன்ல மோதிரமும் வாங்கி தர வேண்டியது என் பொறுப்பு”.
“ஆனா நீ பேசிப் பேசி என் அம்மா மனச கரைக்கனும் எத்தனை தடவ என்னை மாட்டிவிட்டுருப்பா இந்தத் தடவ எனக்கு நல்லது செய், செஞ்சா உனக்கும் நல்லது” என்று அவளுக்கு ஆசை காண்பித்திருந்தான் கவியரசன், அரை பவன் சும்மாவா மெல்ல மெல்ல செல்வராணியை தேய்த்துக்கொண்டிருந்தாள்.
எலுமிச்சை மஞ்சளில் இளம் பச்சை பார்டர் வைத்து மெல்லிய ஜரிகை இழையோடிய பட்டுபுடவையில் மயில் முகப்பு வைத்த தங்க தாலி கழுத்தில் ஒளிர, அவன் தீட்டிய உச்சி குங்குமம் மிளிர, புது தேஜஸில் ஜொலித்தாள் இமயனின் தேவதை.
உறவுகள் அனைவரும் மனமும் வயிறும் நிறைந்து வாழ்த்தி நின்றனர், தங்கத்தில் மனை வியை முழுதாக மூடவில்லை என்றாலும் கழுத்துக்கு காசு மாலை அட்டிகை, ஜிமிக்கி கைகளுக்கு வளவிகள் என்று பூட்டிவிட்டான்.
அதிகாலை பூஜை முடிந்து மாலை மாற்றி, தாலிக்கொடி மாற்றி ஆசிபெற்று, உறவுகளுக்கு எல்லாம் விருந்தளித்து அவர்களை வழியனுப்பி இப்பொழுதுதான் கொஞ்சம் தளர்ந்து அமர்ந்தனர்.
நேரம் பதினொன்றை கடக்க வெயில் ஏறுகிறது, சூரியனின் கதிர்கள் அவள் மேனியில் பட்டுத் தெறிக்க, நகருவேனா என்று அடம் பிடித்தது அவன் விழிகள்.
மருதாணியில் சிவந்த கைகளை ஆட்டி ஆட்டி அவள் பேசிக்கொண்டிருக்க “கொல்லாம விடமாட்டா போல” என்று பின்னங்கழுத்தை அழுத்தமாகக் கோதிக்கொண்டவன், மெல்ல எதிர் திசையில் நடந்தான்.
வீட்டு ஆட்கள் மட்டுமே இப்பொழுது, அப்படியே பொடிநடையாக வீட்டிற்கு போய் விடலாம், வீட்டைக் கட்டி முடிக்கிற வரைக்கும் என் கட்டுப்பாடு போகாம என்னைய காப்பாத்தி உட்டுரு சாமி என்று வேண்டுதல் வேறு.
சட்டென்று அவன் விரல்களைக் கோர்த்துக்கொண்டது தளிர் கரங்கள், அவன் விரதத்தை சோதிக்க வந்துவிட்டாள் அவன் மனைவி.
“என்ன விட்டுட்டு போறீங்க” என்றாள் வந்து விழுந்துவிடு என்று அவனை இம்சிக்கும் விழிகளைச் சுருக்கி.
“உன்ன விட்டுட்டு எங்க போகப்போறேன், நீ தங்கச்சிங்ககூட பேசிட்டு வந்த அதான்” என்றான் தன்னை சாதாரணமாகக் காட்டிக்கொண்டு.
நகை எதுவும் வாங்காதீர்கள் நான் எதையும் போடமாட்டேன் என்று சொல்லிவிட்டான் என்ன முறை செய்ய என்ற உறவுகளிடம், அவன் தங்கம் அணிவதில்லை இதுவரை சிறிய மோதிரம் கூட அணிந்து யாரும் பார்த்ததில்லை.
“சரி மாப்ள, இந்தச் செயின் கொஞ்ச மாசமா உன் கழுத்துல கிடக்கே இது தங்கத்துல வராதோ…..” என்றான் முத்துவேல் அனைவரும் சிரிக்க அவன் பின்னையே ஒளிந்துகொண்டாள் ஹிமானி.
அதனால் அனைவரும் பணமாகவே கொடுத்துவிட்டார்கள், யார் என்ன கொடுத்தார்கள் என்பதை பற்றி எல்லாம் அவன் கவலைப்படவில்லை உஷாவிடம் சரியாகக் கணக்கை எழுதச் சொல்லிவிட்டான் நாளை நாம் அதற்க்கு குறையாமல் திருப்பிச் செய்ய வேண்டிய கடமை இருக்கிறதே.
ஹிமாவின் பெற்றோரிடம் பெரிதாக எதையும் செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொண்டான் “உங்க குடும்ப பணத்துல இருந்து எதுவும் செய்யாதீங்க, உங்க மனத்திரிப்திக்கு சின்னதா ஏதாவது செஞ்சுக்கோங்க, நீங்க என்ன செஞ்சாலும் உங்க பணத்துக்காக நா அவளைக் கட்டிக்கிட்டதா தான் சொல்லுவாங்க என் காதல் களங்கப்படுறத என்னால அனுமதிக்க முடியாது” என்றுவிட்டான்.
மகளுக்கு ஒரு நகை செட்டோடு நிறுத்திக்கொண்டார்கள் ஹிமாவின் பெற்றோர், அங்கே தங்கள் பெருமையைப் பறைசாற்ற விரும்பவில்லை அவன் கூறியதில் இருந்த உட்பொருளையும் புரிந்துகொண்டார் சல்மா என் உறவுகள் கொடுப்பதை விட அதிகம் செய்து அவர்களைச் சண்டப்படுத்தாதீர்கள் என்பது தான் அது.
மல்லி சொல்லிப்பிறகு தம்பியின் திருமணத்தில் ஏதேனும் செய்ய வேண்டும் என்று கவியரசன் விரும்பினான், ஆனால் நிச்சயம் அவன் வாங்கி கொள்ள மாட்டான் என்பது தெரிந்ததால் கொண்டு வந்த பணத்தை கையிலே வைத்துக்கொண்டான்.
வீட்டிற்கு வந்தபோது இரண்டு பெரிய லாரி நின்றிருந்தது வீட்டின் முன்பே, மொத்தம் எட்டு மாடுகள் நான்கு சிகப்பு சிந்தியும் நான்கு கிர் வகையும் அனைவரும் ஆச்சர்யமாகப் பார்த்து நிற்க மதி தங்கராணி மாணிக்கம் முகங்களில் ரகசிய புன்னகை.
“என்ன சித்தப்பா இது” என்ற இமயனின் அருகில் வந்தவர் “என் மவனுக்கு கல்யாண பரிசுப்பா” என்க நெகிழ்ந்துவிட்டது அவனுக்கு “சித்தப்பா” என்றவனுக்கு வார்த்தைகளே வரவில்லை அவரை அணைத்துக்கொண்டான்.
மாணிக்கத்திற்கு விழிகள் நிறைந்துவிட்டது “எதுக்கு சித்தப்பா இது நெறய செலவாயிருக்கும்” என்க.
“பேசாம இரு எங்க புள்ளைக்கு நாங்க செய்ரோம் கணக்கு பாப்பியா நீ” என்ற தங்கராணி “பாதுக்கய்யா நல்லா இருக்கான்னு” என்றார்.
சில நொடிகள் தேவைப்பட்டது அவனுக்கு அதிலிருந்து மீள “இது இங்க ஊருக்குள்ள ஒரு பண்ணை தொடங்கணும்ன்னு நெனச்சல்ல அதுக்காக” என்றார் மாணிக்கம்.
அவனுக்கு அதைப் பற்றிய யோசனை இப்பொழுது இல்லை, இந்த வேலைகள் முடிந்து நிமிரவே இரண்டு மூன்று வருடங்கள் ஆகலாம் அதன் பிறகு இதைப் பார்த்துக்கொள்ளலாம் என்று எண்ணியிருந்தான்.
அவனுக்குப் பிடித்தமான வேலை, மாடுகளைத் தடவி தடவி பார்த்துக்கொண்டான் ஹிமானி அதன் அருகில் நெருங்கப் பயந்து பின்னையே நிற்க அவளைத் தன்னுடன் சேர்த்து நிறுத்தி அவள் கரத்தால் அவைகளின் நெற்றியை தடவிவிட சாதுவாக நின்றது அனைத்தும்.