“அட என்னடா அண்ணனும் தம்பியும் அடிதடியா தான் கல்யாணம் செய்வீங்களா! இத்தன பேர் இருக்கோம் ஒரு வார்த்தை சொன்னா என்ன நாங்களும் வர மாட்டோமா?” என்றான் முத்துவேல் கவியரசனிடம்.
இமயனின் பார்வை தன் மீது இருப்பதை உணர்ந்தவன் அவன் புறமே திரும்பவில்லை “அண்ணே நீங்கத் தான் தைரியமான ஆள் ஆச்சே கொஞ்சம் இந்தப் பக்கம் பாக்குறது” என்ற மதியை பார்த்தவன் “ஏண்டா” என்க அவன் சிரித்துவைத்தான்.
செந்திலுக்கு இந்தச் சூழ்நிலையை எப்படி கையாள என்று தெரியவில்லை ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம், மகளும் சொல்லவில்லையே என்று அவர் யோசனை சென்றது.
அவருடைய மகளுக்கே அவன் சொல்லவில்லை கோவிலுக்குப் போகலாம் என்று அழைத்துச் சென்று அவளுக்கு யோசிக்க அவகாசம் கொடுக்காமல் நடத்திக்கொண்டான்.
“எங்க அம்மா ஒத்துக்காது எல்லார்கிட்டயும் பேசிச் சம்மதம் வாங்கி செய்ய முடியாது, எனக்கு நீதான்னு நா முடிவு பண்ணிட்டேன் உனக்கு என்னைக் கட்டிக்க சம்மதமா?” என்றவனை பார்த்து “சம்மதம்” என்றவள் சொல்லி முடிக்கத் தாலியை கட்டிவிட்டான்.
கவிதா வாயைப் பிளந்து இதைப் பார்த்திருந்தாள் “அடப்பாவி இன்னும் நீ திருந்தலையா” என்றவள் பார்வை அவனிடம் கேள்வி எழுப்ப.
இப்பொழுது நெஞ்சில் கை வைத்துக்கொண்டாள் “ஏய் ஆத்தி ஒரே நாள்ல எம்புட்டு அதிர்ச்சி” என்ற கவிதா மல்லியை பார்த்து “உங்களுக்குச் சம்மதமா” என்க.
அவனை விட்டுக்கொடுக்க மனம் இல்லாமல் “ஆம்” என்றாள் மல்லி.
அவனை மணந்துகொள்ள சம்மதமே ஆனால் அது இப்படி அல்ல, உறவுகள் இல்லாமல் யாருக்கும் சொல்லாமல், அனைவரும் தன்னையும் தப்பாக நினைப்பார்கள் என்று கவலையாக இருந்தது அவளுக்கு.
“சரி இப்போ என்ன செய்ய முடியும் வீட்டுக்குக் கூப்டுக்கோ செல்வராணி” என்றார் பாண்டியன்.
“சும்மா இருய்யா மண்டைய பொளந்துடுவேன் வீட்டுக்குக் கூப்பிடணுமாம், என்ன வெளயாடுறீங்களா இவன் இஷ்டத்துக்கு போய்ப் பண்ணிப்பான் நா ஆரத்தி எடுத்து அழைக்கணுமோ, எப்படி எல்லாம் வளத்தேன் உன்னை? கடைசில என் பேச்சை மீறிப் போய்ச் செஞ்சுக்கிட்ட இவளோட வந்தா என் வீட்டு வசப்படிய மிதிக்கக் கூடாது” என்றாள்.
“எங்கேயும் போல வாடகைக்கு வீடு எடுத்து என் பொண்டாட்டிய கூட்டிட்டு போவேன், ஆனா அதுக்காகச் சொத்து வேண்டாம்னு சொல்லுவேன்னு நினைக்காத அது ஒன்னும் நீயோ உன் புருஷனோ சம்பாரிக்கல என் தாத்தாவோடது, என் பங்குல நா விவசாயம் செய்வேன் வேற வேலைக்கும் போவேன் என்னாலயும் சுயமா வாழ முடியும்” என்றவனை நக்கலாகப் பார்த்த செல்வராணி.
“அச்சி என்றால் உச்சி குளிருமா? அழவனம் என்றால் கைச்சிவக்குமா?, சரிதான் போடா வெறும் பேச்சுதான் உனக்கெல்லாம் பத்தே நாள்ல என் கால்ல வந்து கிடப்ப” என்று கணவனை முறைத்துவிட்டு முன்னே நடக்க, வாய் மூடி அவள் பின்னே நடந்தார் பாண்டியன்.
“அவ கெடக்குறா கூறு கெட்டவ, பிடிச்சவளை கட்டிக்கிறது இல்ல பெருமை அவளை நாலு பெரு முன்னாடி தல நிமிர்ந்து வாழ வைக்குறதுதான் பெருமை பார்த்துப் பொழச்சுக்கோ” என்ற வர்ணம்.
“ஏன் மாமா எங்க தங்க வைக்க” என்று யோசனை செய்தார்.
“ஹ்ம்ம் பாப்போம் வீடு கிடைச்சுடும், கல்யாணம் தான் இப்படி பண்ணிகிட்டான் வீடாவது நல்ல நாள் பார்த்துப் போகட்டும் அதுவரைக்கும் அண்ணனும் தம்பியும் ஒண்ணா அங்க இருக்கட்டும் மூத்த மருமகளும் சின்ன மருமகளும் இங்க இருக்கட்டும்” என்று கூற மதி சிரித்துவிட்டான்.
அண்ணனும் தம்பியும் அவனைத் திரும்பிப் பார்க்க “அது எப்படிடா ரெண்டு பேருக்கும் எல்லாம் ஒரே மாதிரி நடக்குது” என்றவனின் கழுத்தில் கை இட்டு அருகில் இழுத்த இமயன்.
“அது அங்க இருந்தா புரியாது, அவனுக்கு வீடு கெடச்சு….. என் வீடும் வேலை முடியற வரைக்கும் என்கூட இங்கேயே இரு அப்போ புரியும்” என்க.
வேகமாக அவனிடமிருந்து துள்ளி குதித்து தள்ளி நின்றவன் “உங்க சங்காத்தமே வேண்டாம்டா, கல்யாணம் பண்ணி நிம்மதியா இருக்க முடியுதா தினம் ஒரு பஞ்சாயத்து, நா என் பொண்டாட்டிய கூட்டிட்டு ஹனிமூன் போகலாம்னு இருக்கேன்” என்க.
“தனியாத்தான் போகணும்” என்று முணுமுத்துக்கொண்டே மல்லியையும் ஹிமாவையும் அழைத்துக்கொண்டு அறைக்குள் சென்றாள் நித்யா.
“ஏய் நித்யா அண்ணா ஆசையா சொல்றாங்க போயிட்டு வா” என்றாள் ஹிமானி.
“சும்மா இரு இங்க என்ன பிரச்சனை போய்ட்டுருக்கு இப்போ ஹனிமூன் முக்கியமா”.
“பிரச்சனை எப்போவும் இருக்கு அதுக்காகப் பாத்தா முடியுமா நீ போய்ட்டுவா” என்றாள் அவள்.
“ஐயோ ஹிமா மாமா சும்மா சொல்லுது, ஊட்டிப் போகணும் ஆனா இப்போ இல்ல முன்னாடியே சொல்லிடுச்சு கொஞ்ச நாள் கழிச்சு போலாம்னு எனக்குப் பெருசா அப்படி போகணும்னு ஆசைலாம் இல்ல, கூட்டிட்டு போனாலும் சரி இல்லனாலும் சரி எனக்கு இங்கதான் பிடிச்சிருக்கு ஊரை விட்டு வெளில போய் நிக்குறதெல்லாம் எனக்குச் சரி வராது” என்றவள்.
“என்னாச்சு உனக்கு ஏன் இப்படி சோர்வா இருக்க” என்றாள் ஹிமாவிடம்.
“ஒண்ணுமில்ல நல்லாத்தான் இருக்கேன்” என்றவள் குரலே வெளிவரவில்லை “பேசிட்டு இருங்க வரேன்” என்று அடுப்படிக்கு சென்றாள் ஹிமானி, அவளின் உணர்வுகள் புரிந்தது நித்யாவிற்கு இதில் முடிவு இமயனுடையது யார் சொன்னாலும் அவன் கேட்கப் போவதில்லை.
“ஆண்டவா சீக்கிரம் இருவரும் ஒன்றாக வாழத் தொடங்க வேண்டும்” என்று வேண்டிக்கொண்டாள், அவள் அறியவில்லை ஹிமாவின் மனதை அறுக்கும் விஷயம் கணவனுக்கு ஏதேனும் ஆபத்து நேருமோ என்ற பயமே என்பதை.
“காலைல ஆறு மணிக்கு ரெடியா இரு” என்றான் ஹிமாவிடம் இமயன்.
“ஏன்?” என்று அவள் பார்க்க “ஆறு மணி” என்று சொல்லிச் சென்றான்.
ஆறுமணிக்கு முன்பே தயாராகி அவன் முன்னில் நின்றாள், முதலில் கோவிலுக்குச் சென்றனர் அவள் கைகளால் திருநீறு வைத்துக்கொண்டான், அங்கிருந்து மீண்டும் வீட்டிற்கு செல்லும் வழியில் பயணம் செய்தனர்.
“கோவில் போறதுக்கா சொன்னீங்க” என்க, புன்னகை மட்டுமே பதிலாகக் கிடைத்தது, கொஞ்சம் தூரத்தில் வேண்டிய நிறுத்தியவன் அவள் கண்களைத் துணி கொண்டு கட்டினான்.
“என்ன செய்றீங்க” என்க “ஷ் சொல்றேன் நல்லா பிடிச்சுகோ” என்றான் அவள் கையைத் தன் இடையோடு சுற்றி வைத்து அழுத்தி.
சிறிது நேரத்தில் “மெதுவா இறங்கு” என்றவன் வண்டியை நிறுத்திவிட்டு அவளை அழைத்துவந்து ஒரு இடத்தில் நிறுத்திக் கட்டை அவிழ்த்தான், விழிகள் திறந்தவள் பார்த்தது முழுதாகக் கட்டிமுடிக்கப்பட்டு வர்ணம் பூசப்பட்ட அவர்களின் கனவு வீட்டை, பார்த்தது பார்த்தபடி நின்றாள் விழிகளால் வீட்டை முழுதாகத் தழுவினாள்.
அவள் கையைப் பற்றி வீட்டின் உள்ளே அழைத்துச் சென்றான் அகமும் புறமும் மகிழ்ச்சியில் திளைத்தது ஹிமானிக்கு, முன்னிலும் பின்னிலும் நிறைய இடம் இருந்தது அவள் விரும்பும் வகையில் தோட்டம் அமைக்க, கீழே இரண்டு படுக்கை அறையோடு அடுக்களையும் பூஜை அறையும் சமையல் அறை பக்கத்தில் உணவு மேசை போட இடம் மேல ஒரு அறை மட்டும் இப்பொழுது கட்டியிருந்தான் மற்றது நீண்ட ஹாலாகக் கிடந்தது.
“பிடிச்சிருக்கா” என்றான் அவளைப் பின்னிலிருந்து அணைத்துக்கொண்டு, அவன் கைகளை இன்னும் இறுக்கியவள் “ரொம்ப அழகா இருக்கு” என்றாள் புன்னகையோடு.
“இந்தச் சிரிப்பைப் பார்த்து எவ்ளோ நாள் ஆச்சு” என்க திரும்பி அவன் மார்பில் தலை சாய்த்து அணைத்துக்கொண்டாள்.
“பிறந்தநாள் வாழ்த்துக்கள் இதயான்னு எப்போ சொல்லுவ” என்றான் அவன் விழிகளில் இதழ் பதித்து.
“நா… சாரி….” என்றவளுக்கு மிகுந்த வருத்தமாகிவிட்டது எப்படி மறந்தேன் என்று.
“ஏய்… இதுவரைக்கும் இந்த நாளை நாக்கொண்டாடினதில்ல அத பத்தி பெருசா நெனச்சதும் இல்ல, ஆனா நீ விஷ் பண்ணி கேக்கணும்னு ஆசையா இருக்கு” என்றவனின் நெற்றியில் எக்கி முத்தம் வைத்தவள்.
“பிறந்தநாள் வாழ்த்துக்கள் இதயா…. ஐ லவ் யு” என்றாள் காதலாக.
“கொஞ்சமா ப்ளீஸ்” என்றவன் மெல்ல அவள் முகத்தைத் தன்னை நோக்கி இழுக்க, அவள் புன்னகை அவன் இதழ்களுக்குள் சங்கமித்தது அன்று முழுவதும் கனவுலகில் மிதந்துகொண்டிருந்தாள் ஹிமானி.
வெகுநாட்களுக்குப் பிறகு அவள் முகத்தில் விரிந்திருக்கும் புன்னகையில் அனைவரும் மகிழ்ந்தனர், வியாழக்கிழமை உடுத்திக்கொள்ள கதிரிப்பூ நிறத்தில் பட்டுப்புடவை மனைவிக்குப் பரிசாகக் கொடுத்திருந்தான்.
அன்று கல்லூரிக்குச் செல்லவில்லை நித்யாவுடன் ப்ளவுஸ் தைக்க கொடுத்து வந்தாள், மலை மண்டபத்தில் அமர்ந்து “அவனை யாருக்கும் கொடுக்கமாட்டேன்” என்று குழந்தையாக அழுததை நினைத்துச் சிரித்தாள்.
“உனக்குக் கிறுக்கு புடிச்சுடுச்சு, எங்க அண்ணன் மேல இப்படி பித்து பிடிச்சு சுத்துவன்னு நாக்கனவுலயும் நினைக்கலடியம்மா” என்றாள் நித்யா அதற்கும் நாணப் புன்னகையே.
காலைச் சென்றவன் இரவு பத்து மணி கடந்தும் வரவில்லை, மதி அந்தநேரம் வர ஹிமாவை பதட்டம் சூழ்ந்தது “அவர் எங்கண்ணா என்றாள்” பதட்டமாக.
“ஏன் இப்போ டென்ஷன் ஆகுற, அவன் ஒரு முக்கியமான வேலையா சென்னை போயிருக்கான், ரொம்ப அர்ஜென்ட்” என்றவனை அவள் நம்பாமல் பார்த்தாள்.
“போன் கூட எடுக்கல” என்றபோது கொஞ்சம் தடுமாறியவன் “பைக்ல நாக்கூட்டிட்டு போகும்போது உனக்குக் கால் பண்ண எடுத்தான், அப்போ ஒருத்தன் வேகமா கிராஸ் பண்ணப்போ தட்டி விழுந்துடுச்சு”.
நேற்றுவரை அதிகப்படியான மனழுத்ததில் இருந்தாள், இன்று மகிழ்ச்சியில் திளைத்தாள், மாலை முதல் பதட்டத்தில் உழன்றாள், அவனுக்கு அழைப்பு போகவில்லை என்றபோதே பாதி உயிர் போய் விட்டது, இப்பொழுது இவன் சொன்ன எதையும் நம்ப இயலவில்லை.
காலைக் கண்விழித்தபோது மருத்துவமனையில் இருந்தாள், அருகில் சல்மா கவலையோடு அமர்ந்திருக்க வர்ணமும் அருகில் இருந்தார் “அம்மாடி” என்ற வர்ணம் அவள் எழுந்து அமர உதவி செய்தார்.
பார்வை வாயிலிலே இருந்தது “வந்துட்டாரா அத்த” என்றவளுக்கு என்ன பதில் சொல்ல என்று தெரியாமல் அவர் நிற்க.
“எழுந்துட்டியா இப்போதான் அண்ணா கேட்டுச்சு, எங்க எல்லார்க்கும் செம திட்டு என் புருஷன் காதுல ரத்தம் வருது” என்று இலகுவாகப் பேசிக்கொண்டே வந்தாள் நித்யா.
“மல்லி கேஸ் முடிஞ்சாலும் அந்தப் போலீஸ்காரன் விடாம தொல்லை குடுக்குறான் அதான் முக்கியமான ஆள பாக்க போயிருக்கார், அவர் கூடப் பேசப்போறேன் அப்பறம் கூப்பிட்டுடுறேன் சொன்னார், போன் இனிமேதான் வாங்கணுமாம்” என்றவள் முகத்தை வேறு எங்கும் திருப்பாமல் ஹிமாவின் கண்களைப் பார்த்தே பேசினாள்.
உள்ளே அழுந்திய பாரத்தை அவளிடம் காட்டாமல் எப்படியோ போராடி அவளிடம் பேசி நம்ப வைத்துவிட்டாள், அவள் சொன்னதை நம்பி, நித்யா சொன்ன அனைத்தையும் செய்து சாப்பிட்டு முடித்ததும் உறக்கம் சுழற்றியது ஹிமானிக்கு, தூக்க மாத்திரை கொடுத்திருந்தார் மருத்துவர் அவள் சரியாக உறங்கியே பல நாட்கள் ஆகிறதே.
தொப்பென்று கீழேயே அமர்ந்துவிட்ட நித்யாவிற்கு கண்ணீர் நிர்க்கமால் வழிந்தது, இனி எழுந்து கேட்டால் என்ன சொல்ல என்ற பயம் அனைவரையும் பிடித்து ஆட்டியது.
வெளியில் மாணிக்கத்தை தவிர யாரும் இல்லை, மதி முத்துவேல் கவி அனைவரும் நீதிமன்றத்தில் இருந்தனர்.
அன்று மாலை யாஷுடன் போலீஸ் அதிகாரி வரும்வரை அவன் புன்னகை வாடாமல் சுற்றிக்கொண்டிருந்தான், பால் பண்ணையைச் சுற்றிவந்தவன் அவனின் அறையை அடைய தகவல் வந்தது போலீஸ் வந்திருக்கிறது என்று.
“மீண்டுமா” என்ற யோசனையோடு வெளியில் வர, போலீசுடன் யாஷும் இருந்தான், புரிந்துவிட்டது மல்லியின் பிரச்சனை அல்ல என்று.
“என்ன?” என்றவனை பார்த்த யாஷ் “உன்னை உண்மையான மாமியார் வீட்டுக்குக் கூட்டிட்டு போக வந்திருக்காங்க” என்றான் ஏளனமாக, இமயனிடம் அமைதி.
“புரியலையா? பால் பண்ணை முதலாளி லாபம் பத்தலன்னு கடத்தல் பண்றீங்க போல, உங்க பால்கோவா கடைல இருந்து போதை மருந்து கிடைச்சிருக்கு, இனிப்புக்குள்ள மயக்கத்தை மறச்சு வெச்சு கடத்துற…” என்றான்.
இவன் உள்வாங்க முயன்றான், என்ன செய்திருக்கிறார்கள் என்று நிச்சயம் சி.சி.டி.வி தகர்க்கப்பட்டிருக்கும் என்று புரிந்தது.
“அன்னைக்கு என்ன சொன்ன? ஒருபக்கம் மட்டும் கேட்டுக் கேஸ் போடுவீங்களான்னு கேட்டல்ல, இப்போ ஒரே சைட்தான் நீ மட்டும்” என்றவனை பார்த்து இமயனின் முகம் மாற.
“என்னடா முறைக்குற” என்று அவனை அறைந்தான் யாஷ்.
“அண்ணே…” என்று அங்கு வேலை செய்யும் பிள்ளைகள் பதற, யாஷை மார்பிலே எட்டி மிதித்தான் இமயன் தெறித்து விழுந்தவனை பார்த்துக்கொண்டே இவன் வேட்டியை மடக்கி கட்டி முன்னேறக் காவலர்கள் அவனை வந்து பிடித்தனர்.
அவர்களை அவன் உதறி போகப் பார்க்க “இமயா” என்று அவன் அருகில் ஓடி வந்தான் மதி “விடுங்க விடுங்க அவனை, கேஸ் போட்டுருக்கீங்க அவ்ளோதானே, இவன் யாரு அடிக்க” என்க.
இமயனின் கையில் விலங்கு மாட்டி அழைத்துச்சென்றனர், “மதி ஹிமாவுக்கு தெரியக் கூடாது” என்றான் அழுத்தமாக.
யாரை அழைக்க என்று தெரியாமல் ஒருநொடி தடுமாறியவன் கவியரசனை அழைத்தான், முதலில் வக்கீலை அழைத்துவரச் சொன்னவன் நேராகக் கடைக்குச் சென்று விசாரித்தான், அவர்கள் வந்து சென்ற தடயமே இல்லை வீடியோ ஒன்றும் இல்லை கடையில் சி.சி.டி.வி வைக்கவில்லை என்ற நிலைக்கு மாற்றி விட்டனர், மீண்டும் அங்கிருந்து ஸ்டேஷன் சென்றான் உள்ளே அனுமதிக்கவில்லை.
“அப்படி சொல்ல முடியாது பார்த்தே ஆக வேண்டும்” என்று வழக்கறிஞர் சொல்ல, ஒருவருக்கு மட்டும் அனுமதி என்றனர்.
மதி உள்ளே செல்ல, முகம் இறுக அமர்ந்திருந்தான் அருகில் லத்தி உடைந்து கிடந்தது அதைப் பார்த்ததும் மதிக்கு வெறி ஏறியது “இமயா அடிச்சாங்களா” என்றான், அவனிடம் அமைதி முகம் இன்னும் இறுகியது.
யாஷ் மேல் கை வைத்ததற்காக இது, இதையும் வாங்கியிருக்க மாட்டான், கடை ஹிமானியின் பெயரில் இருக்கிறது உனக்குப் பதில் அவளை அரெஸ்ட் செய்ய முடியும் என்றதும் கைகளைக் கட்டிக்கொண்டு நின்றுவிட்டான் அத்தனை அடிகளையும் வாங்கிக்கொண்டு.
“என்ன நினைச்சுட்டு இருக்கீங்க அடிக்கற உரிமையை யார் குடுத்தா உங்களுக்கு” என்றவன் உடல் கோபத்தில் விறைத்தது, அவன்மேல் கை வைத்திருக்கிறார்கள் என்பதை மதியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
“என்னடா ரொம்ப துள்ளுற அவன் கூட்டாளி தானே நீ உன்னையும் சேர்த்து உள்ள வைக்கணுமா போடா, அவனை யாராலயும் காப்பாத்த முடியாது” என்றான் யாஷ்.
“மதி…” என்றான் இமயன் அருகில் வந்தவனிடம் “ஈசன் காப்பாத்துவார் தைரியமா போ” என்றான் அத்தனை நம்பிக்கையாக, “ஈசன்…” என்று சந்தேகமாக அவனை மதி பார்க்க.
அடுத்த நாள் நீதிமன்றத்தில் அவனுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு வந்தது, பொருளைக் கைப்பற்றிய வீடியோவைக் காண்பித்து இமயனின் மீது குற்றம் சாற்றப்பட்டது.
“என்னப்பா உன் மேல சுமத்தப்பட்ட குற்றத்தை ஒதுக்குறியா” என்றார் நீதிபதி.
“இல்லங்க என் மேல தப்பு இல்லை” என்றான் அவன்.
“ஆதாரம் இருக்கு உன் கடை பொருள்ல இருந்து போதை பொருள் வெச்சிருந்த பாக்கெட் எடுக்குற வீடியோ அவங்க காமிச்சிருக்காங்க, எப்படி அதை இல்லன்னு சொல்லுவ” என்க.
அவனுடைய வழக்கறிஞர் “அய்யா… அதைச் சொல்லத்தான் நாங்களும் காத்திருந்தோம்” என்றார்.
“என்ன இந்த வீடியோ பொய்னு சொல்றீங்களா” என்றார் அவர்.
“எஸ் யுவர் ஹொனோர்” என்க.
“மாட்டிக்குற எல்லாரும் சொல்றதுதான் இது, வேற ஏதாவது இருக்கா” என்றவர் வினவ.
“இருங்குங்க நேத்து அந்தக் கடையில உண்மைல என்ன நடந்ததுன்னு இந்த வீடியோல இருக்கு” என்று கொடுக்க அதைப் பார்த்த நீதிபதிக்குக் கட்டுக்கடங்காமல் ஆத்திரம் வந்தது.
“என்னய்யா நினைச்சுட்டு இருக்கீங்க வெக்கமா இல்ல, ஏற்கனவே காரி துப்புறாங்க போலிசை” என்றவர் “இதுல உங்ககூட நிக்குறது யாரு” என்றார் காவல் அதிகாரியிடம்.
அவன் குரல் எழும்பாமல் “யாஷ்” என்க.
“எங்க இருந்தாலும் உடனே அரெஸ்ட் பண்ணுங்க” என்று உத்தரவிட்டவர் “உன் பதவியைப் பறிச்சு உன்மேல விசாரணைக்கு உத்தரவிடுறேன்” என்றதோடு “இமயவரம்பனை விடுதலை செய்கிறேன்” என்க.
“அய்யா இன்னும் ஒரு விஷயம் சொல்ல வேண்டும்” என்றார் வழக்கறிஞர், நீதிபதி “சொல்லுங்க” என்க.
“இமயன் சட்டையைக் கழட்டுங்க” என்றார் அவர்.
அவன் அமைதியாக நிற்க “கழட்டுங்க” என்றார் நீதிபதி, மெல்ல கழட்டி திரும்பி நிற்க முதுகில் முழுவதுமாகத் தடித்து சிவந்து கிடந்தது “என்ன இது!?” என்றவர் “உங்க மேலதிகாரியை உடனே நான் பாக்கணும்” என்றதோடு.
“நீங்க நஷ்டஈடு கேட்டு மனு போடலாம்” என்றார் இமயனிடம், வெளியில் வந்தவன் ஒரு மரத்திட்டில் அமர்ந்து விட்டான் அருகில் வந்த மதி நண்பனை அணைத்துக்கொண்டு “வாடா வீட்டுக்குப் போகலாம்” என்றான்.
“இல்ல இன்னைக்கு வேண்டாம் பண்ணைக்குப் போகலாம்” என்றவன் முகமே கருத்து கிடந்தது “சரி” என்ற மதி வக்கீலிடம் கண் காண்பித்துவிட்டு இமயனை அழைத்துக்கொண்டு சென்றான்.
யாஷ் என்ன செய்ய நினைக்கிறான் என்று தெரியாததால் அவனுடைய கவனம் குடும்பம்மீதும் தொழிலின் மீதும் அதிகம் இருந்தது, அறிமுகம் இல்லாதவர்களைத் தன்னுடைய அனுமதியின்றி பண்ணையில் விடக் கூடாது என்று கட்டளையையாகவே சொல்லி இருந்தான்.
சிறிய பட்டன் கேமராக்களை வேலை செய்பவர்களுக்குத் தெரியாமலே சில இடங்களில் வைத்திருந்தான், அப்படியே கடையிலும் ஈசனின் சிறிய சிலை ஒன்று பில் கவுண்டர் அருகில் இருந்தது அதன் நெற்றிக்கண்ணில் பதித்து வைத்திருந்தான்.
சி.சி.டி.வி கேமராக்களை எடுத்து அழித்தவர்கள் அதை அறியவில்லை, கடைக்குள் வந்து பால்கோவா பாக்கெட்டை திறந்து அதற்குள் போதை மருந்தை ஒளித்துவைத்து மீண்டும் அழகாகப் பார்ஸல் செய்வது அப்படியே பதிந்திருந்தது.