துணி பைகளும் தகர பெட்டியும் கொஞ்சம் தட்டுமுட்டு சாமான்களும் மூளைக்கு ஒன்றாய் சிதறி கிடந்தது, அன்னையும் மகளும் பயத்தில் ஒடுங்கி போய் நிற்கத் தமக்கையை வயிற்றோடு கட்டிக்கொண்டு முன்னில் நிற்பவனை பார்க்க அஞ்சி விழிமூடி நின்றான் அந்தப் பாலகன்.
“தம்பி…. வாழ வழி இல்லாம திக்குத்தெரியாம இங்க வந்து நிக்குறோம், பொறந்து வளர்ந்த மண்ணுல ஒரு பாதுகாப்பு இருக்கும்னு நம்பி வந்திருக்கோம் வேற எங்க போகனு தெரில தம்பி” என்று கைகூப்பி நின்றவரைப் பார்க்க வெறி ஏறியது.
“இதே மாதிரி அடுத்தது என்னனு தெரியாம தோ… இதே எடத்துல ஒருத்தன் நாலு நாள் பட்டினி கிடந்தான், யார் பாத்துப்பா நாம யார்கூட போகணும்னு கூடத் தெரியாம பைத்தியக்காரன் மாதிரி கிடந்தான்”.
“அவனுக்குத் தேவைப்பட்டபோது வராத நீ இப்போ எதுக்கு வந்த” என்றவன் கர்ஜனையில் அவர் ஒரு அடி பின்னே சென்றார்.
சுற்றிலும் வேடிக்கை பார்த்தவர்களை அவர் பரிதாபமாகப் பார்க்க ஒருவரும் முன்னே வரவில்லை.
“அவன் கேட்பதும் நியாயம் தானே, நமக்கு எதுக்கு வம்பு” என்று ஒதுங்கி நின்றனர்.
“சித்தி…” என்ற நித்யாவின் அலறலில் கையில் இருந்த இட்லி குண்டான் கீழே விழுந்து உருண்டது.
விஷயம் அறிந்த மாணிக்கம் மனைவியை நெருங்கி “வாப்புள்ள, அவன் அங்க என்ன பிரச்சனை பண்றானோ தெரியல” என்றவர் முன்னே நடக்க அவர் பின்னையே ஓடினார் வர்ணம்.
“இமயா…” என்ற மதியின் அழைப்பில் திரும்பாமல் இறுகி போய் நின்றான் அவன்.
“வாடா, உனக்கு இங்க என்ன வேல யார் இருக்கா இங்க? கண்டவங்க கிட்ட நமக்கு என்ன பேச்சு” என்று நண்பனைப் பிடித்து இழுக்க செந்திலை முறைத்துக்கொண்டே மதியுடன் நடந்தான் இமயன்.
வர்ணமும் மாணிக்கமும் வருவதை பார்த்து “சித்தி உன் முகத்துக்காக அந்த ஆளு மேல கை வைக்காம போறேன், இல்ல கால வெட்டிக் காட்டுக்கு உரமா போட்டிருப்பேன், என் கண்ணுல படக் கூடாது சொல்லிவை”.
“சொந்தம் கொண்டாடிகிட்டு வீட்டு பக்கம் யாரவது வந்தாங்க…” என்றவன் பாதியில் நிறுத்திவிட்டு புல்லட்டை எடுக்க மதியும் ஏறிக்கொண்டான்.
இருவருக்கும் இடையில் ஆழ்ந்த அமைதி நேரே பண்ணைக்குச் சென்றுவிட்டான், சிறிதுநேரம் மாடுகளைப் பார்த்து இருக்க மனம் சமன்பட்டது.
“நீ எதுக்குடா அந்த ஆள்கிட்ட போய்ப் பேசுற” என்றான் மதி அவன் தோளில் அடித்து.
“நீ எதுக்கு டா என்ன தடுத்த? தைரியமா குடும்பத்தையே கூட்டிட்டு வந்து நிக்குறான் அந்த ஆளு” என்றான் மீண்டும் கோபம் கொண்டு.
“அந்த ஆள் யார் கூட இருந்தா நமக்கென்ன எனக்குக் குடும்பம் இருக்கு நான் சந்தோஷமான இருக்கேன், நமக்குச் சம்மந்தம் இல்லாதவங்கள பத்தி என்ன பேச்சு, என்னைக்கு என்னையும் என் அம்மாவையும் விட்டுட்டு போனானோ அன்னைக்கே என்ன பொறுத்தவரைக்கும் அப்பன்ற உறவு முடிஞ்சுடுச்சு” என்ற மதி.
“வா… தேனிக்கு போலாம் படம் பாத்துட்டு சாப்பிட்டு வரலாம், செல்வம் அண்ணா பரோட்டா சாப்பிட்டு ரொம்பநாள் ஆச்சு” என்று எழுந்தவனை பார்த்தபோது மனம் வலித்தது.
உள்ளுக்குள் அவன் சுமக்கும் வேதனையை இமயனால் உணர முடிந்தது, அவன் தாய் இருக்க வேண்டிய இடத்தில வேறொருவர்.
மனைவியை இழந்த பிறகு துணை தேடவில்லை, தனக்கு வேறு துணையை தேடியதாலேயே மதிக்கு அன்னை இல்லாமல் போனார்.
ஆழ மூச்செடுத்தவன், தான் இப்படி இருந்தால் அவன் இன்னும் வருந்துவான் என்பதால் மதியை அழைத்துக்கொண்டு தேனிக்கு புறப்பட்டான்.
இனி எப்பொழுதுமே வரப்போவதில்லை என்று எண்ணிய உடன் பிறந்தவர் கண்முன்னில் வந்து நிற்கிறார் அதுவும் இரண்டாம் மனைவி மகள் மகனுடன்.
ஆத்திரத்தில் உடல் விறைக்க முகம் எல்லாம் சிவந்து விட்டது வர்ணத்திற்கு “எங்க வந்த? அந்த மவராசி நீ என்னைக்காவது திரும்பி வருவேன்னு வாசலைப் பாத்து காத்து கிடந்தா…”.
“அவங்களுக்கு கொல்லி போட்டு மோச்சம் குடுக்க வராத நீ இப்போ யாருக்கு வாய்க்கரிசி போட வந்த” என்று பெருங்குரலெடுத்து அழுதார் வர்ணம்.
மனைவியைச் சமாதானம் செய்ய முடியவில்லை மாணிக்கத்தால்.
“மச்சான்…” என்று அழைத்த செந்திலை பார்த்த மாணிக்கத்தின் விழிகளில் வெறுப்பு மண்டிக்கிடந்தது, அவரிடம் ஒன்றும் பேசவில்லை அவரைப் பேசவும் விடவில்லை.
வெகுநேரமாக அறையில் அமர்ந்து யோசனை செய்த விராலிக்கு இன்று அவனை எப்படியாவது பார்த்து விட வேண்டும் என்ற எண்ணம் அதிகமாகியது.
அடிக்கடி வெளியில் செல்ல இயலாது, அப்படியே சென்றாலும் நிம்மதியாகப் பேச முடியாது, எந்தத் தீர்மானமும் எடுக்காமல் காதல் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது.
இன்று ஒரு முடிவு தெரிய வேண்டும், தீவிரமாக யோசித்தவளுக்கு தேனியில் நடக்கும் கண்காட்சி நினைவு வந்தது, நித்யாவிற்கு அழைத்தவள் கண்காட்சிக்கு அவனை வரச் சொல்லித் தகவல் சொல்லச் சொன்னாள், பிறகு நேரே தேவகியின் முன் சென்று நின்றாள்.
“அவ்ளோ கூட்டத்துல போய் வாங்கணுமா? என்ன வேணும் சொல்லு கடையே இங்க வரும் இல்லனா எப்போவும் வாங்குற கடைல போய் வாங்கலாம் , இதுலாம் என்ன பழக்கம்” என்க.
கட்டுக்கடங்காமல் ஆத்திரம் வந்தது இதற்குக்கூட போகக்கூடாதா என்று.
“வீட்ல ஒரு கிணறுகூட இல்ல கிழவியை புடிச்சு தள்ளிவிட” என்று பொறுமியவள் கால்களை தரையில் வேகமாக அடித்து தன் ஆத்திரத்தை கட்டுப்படுத்தினாள்.
இது வரை ஒன்றும் பேசாமல் இருந்த ஹிமானி வாழ்வில் முதல் முறையாக தங்கைக்காக பாட்டியிடம் வேண்டுதல் வைத்தாள்.
“விராலி கல்யாணம் முடிஞ்சு போய்ட்டா இந்த மாதிரி நினைச்ச நேரம் வந்து போக முடியாது , இந்த ஒரு தடவ நாங்க போயிட்டு வரட்டுமா” என்றவளை ஒரு நொடி ஆழ்ந்து பார்த்தார் தேவகி.
“காதல் திருமணம் நடக்க வாய்ப்பிருக்கு , அந்த பார்வதிதேவி எப்படி தவம் இருந்து பரமசிவனை மணந்தாலோ அதே மாதிரி மனசுக்கு பிடிச்சவனை தான் உங்க பேத்தி மணம் முடிப்பா” என்ற ஜோசியரின் வார்த்தைகள் அவர் மனதில் மீண்டும் எதிரொலித்தது.
அப்படி ஏதேனும் இருக்குமோ!! வாய்ப்பில்லை , அவள் வீட்டிற்கு வெளியிலே போவதில்லையே யாரையும் தெரியாது , பிடித்திருக்கவும் வாய்ப்பில்லை , நாமே அவள் மனதிற்கு பிடித்த ஒருவனை பார்த்து கொடுத்துவிட்டால் மனதுக்கு பிடித்தவனை மணந்ததாக தானே அர்த்தம் என்று அவரே பட்டிமன்றம் நடத்தி தீர்ப்பும் எழுதிவிட்டார்.
“நீங்களும் கூட போங்க” என்றார் தேவகி மருமகள்களிடம்.
“மறுபடியுமா??” என்று ஆயாசமாக இருந்தது விராலிக்கு , முக்கியமாக அவனை பார்க்கவே அங்கு செல்கிறாள் இவர்கள் உடன் வந்தால் எப்படி என்ற பதட்டம் சூழ்ந்தது.
“இல்ல அத்த வேலை இருக்கு , பசங்க எல்லாரும் ஒண்ணா போயிட்டு வரட்டும் நாங்க என்ன பண்ணப்போறோம் , ரொம்ப நேரம் நடக்க முடியாது கால் வலி இருக்கே” என்றார் மூத்த மருமகள் ரமீலா.
மூத்த பேரன் யாஷின் மனைவி பாயல் பிரசவத்திற்காக தாய் வீட்டுக்கு மஹாராஷ்ட்ரா சென்றிக்க மனைவியை பார்க்க அவனும் சென்றிருக்கிறான், அங்கிருக்கும் சில பிசினெஸ்ஸை யாஷ் பார்த்துக்கொள்வதால் இன்னும் கொஞ்சம் மாதங்கள் கழித்தே வருவான்.
அவன் இங்கிருந்தால் பொய் பேசுவதை பற்றி யோசிக்க கூட முடியாது , எமகாதகன்… அவன் இங்கில்லாத நாட்களை சரியாக பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்று முழுமூச்சாக முயற்சி செய்கிறாள் விராலி.
“சரி” என்ற தேவகி பட்டறைக்கு அழைத்து ட்ரைவரை அனுப்ப சொன்னார் , வீட்டு தேவைக்கு ஒரு கார் இங்கு உள்ளது, மற்றொன்று காலை வேலைக்கு செல்கையில் மகன்கள் கொண்டு செல்வர் , அன்சல் மற்றும் ஆன்சல் தனியாக வண்டி வைத்திருக்கிறார்கள்.
நித்யாவையும் அழைத்திருக்க அவளும் உடன் உஷா ஜமுனாவும் வந்திருந்தனர் .
கூட்டம் மிகுதியாகவே இருந்தது என்னதான் கடைகளில் சென்று வாங்கினாலும் இதுபோல கண்காட்சிக்கு செல்வது அனைவருக்கும் பிடித்தமான விஷயமே , அனைவர் முகத்திலும் மகிழ்ச்சியே .
ஹிமானையை பார்த்துக்கொள்ள சொல்லி நித்யாவிடம் கண் காண்பித்த விராலி வேகமாக கூட்டத்தில் நுழைந்து மறைந்தாள்.
“விரா எங்க?” என்ற ஹிமானியிடம் “அவ அந்த பக்கம் என்ன என்ன கடை இருக்குனு பாக்க போயிருக்கா , எல்லாரும் ஒரே எடத்துல சுத்துனா என்ன என்ன இருக்குனே கண்டுபிடிக்க முடியாது” என்றாள் நித்யா.
எப்பொழுதும் போல அவள் சொன்னதை நம்பி தன்னுடைய உலகில் மூழ்கி இருந்தாள் ஹிமானி , சிந்தனை எங்கெங்கோ சுழன்று கொண்டிருந்தது, யோசனையில் இருந்து கலைந்தபோது உடன் வந்த யாரையும் காணாமல் தனியே நின்றாள்.
பேசிக்கொண்டே நடந்தவர்கள் இவளை கவனிக்கவில்லை அமைதியாக பின்னே வருகிறாள் என்று நினைத்து நடந்தவர்கள் திரும்பி பார்க்க ஹிமானியை காணவில்லை.
ஒரு பயம் சூழ்ந்தது மனதில் , இதுபோல தனியே எங்கும் நின்றதில்லை , எந்த பக்கம் செல்லவேண்டும் என்று தெரியவில்லை அவளிடம் அலைபேசிக்கூட கிடையாது , அழுகை வரும் போல இருந்தது.
சட்டென்று அந்த மலர் கரங்களை கோர்த்துக்கொண்டது ஒரு வலிய கரம் , அதிர்ந்து விழியுயர்த்தி பார்க்க அவள் கரங்களை இன்னும் அழுத்தமாக பற்றியவன் “எப்போவும் விட மாட்டேன்… பயப்படாத” என்றான் அவள் விழிகளில் தன்னை தொலைத்து.
உடல் சிலிர்த்தது பெண்ணவளுக்கு , பற்றிய அவள் கரங்களை விடாமல் தன்னுடன் அவளை அழைத்துசென்றவன் ஒரு சிறிய கடையின் உள்ளே சென்றான்.
அழகான சிறு சிறு பெட்டிகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது பால்கோவா , அவனுடைய பண்ணையில் தயாரிக்க பட்டது சிறிய அளவில் அதை வியாபாரம் செய்கிறான்.
மரசட்டத்தில் அமைக்கப்பட்ட அந்த ஷெல்பின் பின்னே அவளை நிறுத்தியவன் அவள் முகத்தை கைகளில் ஏந்தி தன்னை பார்க்க வைத்தான் , விழிகளை அகற்ற முடியவில்லை அவனால் , அந்த மூக்குத்தி அவனை பித்தம் கொள்ள செய்தது.
ஹிமானியின் கன்னங்களும் மூக்கின் நுனியும் மெல்ல மெல்ல சிவக்க தொடங்கியது “ஹிமா…” என்றவன் குரல் தென்றலாக அவளை தழுவ , அவள் கையை எடுத்து தன் நெஞ்சில் பதித்தான்.
இமயனின் இதயத்தின் தாளம் அவன் ஹிமானியின் விரல்கள் வழி அவள் இதயத்தை நிறைத்தது.
“இங்க துடிப்பு இருக்குற வரை உன் நெனப்பும் இருக்கும்” என்றவன் நெஞ்சில் தன் கரத்தை அழுந்த பதித்தவள் விழிகள் நிறைந்தது.
அவள் முன் நெற்றியில் தன் முதல் முத்தத்தை பதித்தான் இமயன் , நிறைந்து நின்ற துளிகள் கன்னம் தாண்டி சிதறி விழுந்தது.