இரவு நேர போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொண்டு திணறியபடி பைக்கை உறுமவிட்டுகொண்டு இருந்தான் வம்சி சைத்ரயேஷ்.
கால்மணி நேரமாக அவன் காத்திருக்க இன்னும் வாகனங்கள் நகராமல் அவன் பொறுமையை சோதித்தபடி இருந்தது.
“வம்சி வாட் ஹேப்பன்ட் மேன்?…” காதில் சொருகியிருந்த ப்ளூடூத்தில் நண்பர்கள் மாறி மாறி கேட்டவண்ணம் இருக்க,
“கட் பண்ணுங்கடா. சும்மா சும்மா கால் பண்ணிட்டு. இங்க ட்ராபிக் குறையவே இல்லை. நீலாங்கரை வரை, மை காட்…” என தலையில் கை வைக்காத குறையாக பேசிய அவனின் உறுமல் குரல் அவன் அணிந்திருந்த ஹெல்மெட்டிற்குள் சுழன்றது.
“ஓகே, ஓகே. வா…” என அழைப்பை துண்டித்துவிட்டனர்.
மறுநாள் தோழன் ஒருவனின் திருமணம். அதற்கு பேச்சிலர்ஸ் பார்ட்டி ஏற்பாடு செய்திருக்க அதற்கு கிளம்பியவன் இன்னும் செல்ல முடியாமல் தவித்துக்கொண்டு இருந்தான்.
“இந்த ட்ராபிக். ப்ச், மை ஃபுட்…” என்று கடுப்புடன் மொழிந்தவன் விழிகள் சிக்னலையும், தனக்கு முன்னின்ற வாகனத்தையும் பார்த்துக்கொண்டு இருந்தது.
மேலும் ஐந்து நிமிடத்திற்கு பின் ஆமை வேகத்தில் வாகனங்கள் நகர கிட்டத்தட்ட பைக்கை உருட்டியபடி தான் நகர்த்தினான்.
பேசாமல் அடுத்த வளைவில் வண்டியை திருப்பிக்கொண்டு வந்தவழியே சென்றுவிடுவோமா என்று கூட நினைத்துவிட்டவன் பொறுமை பறந்துகொண்டிருந்தது.
“பார்ட்டி குடுக்க வேற இடமே கிடைக்காத மாதிரி இவன் அவ்வளோ வாங்க்ல தேடி போய் வச்சிருக்கானே?…” முணுமுணுப்பு ஓய்ந்தபாடில்லை.
மெல்ல மெல்ல நகர்ந்து இதோ என்று தாண்டும் முன் அடுத்த சிகப்பு நிற சிக்னல் விழுந்துவிட்டது.
“ஷிட்…” என பெட்ரோல் டேங்கில் ஒரு அடி வைத்துவிட்டு மீண்டும் வாட்சை பார்த்தான்.
மீண்டும் நண்பனிடமிருந்து அழைப்பு வர இந்த கடுப்பில் எடுக்கவே இல்லை வம்சி சைத்ரயேஷ்.
கைகளை மார்பின் குறுக்கே கட்டியபடி காலை ஊன்றி நின்றவன் விழிகள் எதிரிருந்த நேர குறிப்பீட்டை பார்த்தபடி மெல்ல நகர்ந்து பக்கவாட்டில் சுழன்று மீண்டும் உயர்ந்தது.
சட்டென மீண்டும் விழியை அப்பக்கம் திருப்ப அங்கே அந்த காருக்குள் அவள் அமர்ந்திருந்தாள் முன்னிருக்கையில்.
பார்த்ததும் ஒரு நொடி தேவையிருக்கவில்லை. கண்டு கொண்டுவிட்டான் அவள் ஷ்ராவணிதேவி என்பதை.
தன்னை போலவே சிக்னலில் முன்வரிசையில் நின்ற காரில் அமர்ந்திருக்க விளக்கின் வெளிச்சம் அவளை காட்டியது.
அவளுடன் காரில் இருந்தவனை கவனித்தவன் மீண்டும் ஷ்ராவணியை பார்த்தான்.
அத்தனை தூரத்தில் கண்கள் வேறு வெளிச்சத்தில் கூச மீண்டும் மீண்டும் பார்த்தான்.
முதல் வரிசையில் இருந்தவனை கடந்து கார் செல்ல இப்போது இன்னும் அருகில் பார்க்க முடிந்தது அவனால். உள்ளே ஷ்ராவணியின் முகத்தில் அசௌகரியம்.
அதனை கண்டதும் உணர்ந்துகொண்டவன் அதற்குமேல் நொடியும் யோசிக்கவில்லை வம்சி.
அவர்கள் செல்லும் திசையில் தனது பைக்கை செலுத்தினான். பார்ட்டி எல்லாம் மறந்து போக நினைவில் அவளுக்கு என்ன பிரச்சனையோ என்பது மட்டுமே இருந்தது.
அவனுக்கு மேல் அந்த கார் வேகமெடுக்க இன்னும் சீற்றத்துடன் செலுத்தியவன் அடுத்த வளைவில் கார் திரும்பவும் தானும் ஒடித்து திருப்பி காரை நெருங்கினான்.
முதலில் காரில் இருந்தவன் கவனிக்கவில்லை. வம்சியின் அழைப்பு கூட கேட்கவில்லை.
ஆனால் உள்ளிருந்த ஷ்ராவணி தன் உள்ளுணர்வில் திரும்பி பார்த்துவிட ஒரு கையால் ஹெல்மெட்டை கழற்றியபடி காரை நிறுத்தும்படி சைகை செய்தவனை கண்டு திகைத்துப்போனாள்.
காரை நிறுத்த சொல்லும் முன் வம்சியே முன்னால் வந்து பைக்கை நிறுத்திவிட்டு இறங்கி வர,
“மில்ட்டரி…” என்றாள் பயத்துடன்.
கூடவே ஒரு ஆசுவாசமும் அவளுக்கு. பெரும் சங்கடத்தில் இருந்து தப்பித்ததை போல நிம்மதியானது.
அவன் அழைக்காமலே காரிலிருந்து இறங்கி அவனை நோக்கி ஷ்ராவணி வர கடுமையாக முறைத்தான்.
“ஹாய் ஸார், நான்…” என பேசும் முன் காரோட்டியவனும் இறங்கி ஒற்றை காலை மட்டும் தரையில் ஊன்றி,
“தென்?…” இடுப்பில் கைகளை ஊன்றியபடி அவன் நின்ற தோரணை ஷ்ராவணிக்கு அச்சத்தை தர,
“எங்க ஆபீஸ் தான். சைலேஷ். டீம் லீடர். என்னை ட்ராப் பண்ண…” என்றபொழுதே அவளை தாண்டிக்கொண்டு அவனை நெருங்கினான் வம்சி.
“நான் ஷ்ராவணி கார்டியன்…”
“ஓஹ், ஷ்ராவ் சொல்லவே இல்லை இங்க அவளுக்கு கார்டியன் இருக்கறதா…” அவன் பல்லை காட்டினான்.
“அதான் இப்ப சொல்லிட்டேனே? இங்க தான் இருக்கேன். சொல்லலைன்ன என்ன?…” என்றவன்,
“ஓகே லேட் ஆகுது. நீங்க கிளம்புங்க….” என சைலேஷை கத்தரிக்க அவன் திகைத்தான்.
“நோ ப்ராப்ளம், நான் வெய்ட் பன்றேன். நான் ஷ்ராவ்க்கு ட்ராப் பன்றேன்னு ப்ராமிஸ் பண்ணிட்டேன்…” என சொல்ல கடுமையாக முறைத்தவன்,
“தேவையில்லை, நான் ட்ராப் பன்றேன். நீ கிளம்பு…” என்றான் உடனே ஒருமையில்.
“ஸார்…” சைலேஷ் திகைக்க,
“என்ன?…” என்ற உச்சகட்ட அதட்டலுடன் வம்சி கேட்கவும் ஒன்றும் பேசாமல் காரில் ஏறியவன் கிளம்பி செல்ல ஷ்ராவணி ஒன்றும் புரியாமல் நின்றாள்.
“என்னாச்சு ஸார்?…” என வர,
“உன்னையெல்லாம் யார் இங்க வேலைக்கு வர சொன்னா? யூஸ்லெஸ் யூஸ்லெஸ். சொன்னா மட்டும் உடனே கோவம் வருது, முகம் மாறுது. ஆனா பன்றது எல்லாம் அப்படித்தானே இருக்கு…”
“ஸார் அவர் என் ஆபீஸ்ல…”
“அவன் குடிச்சிருக்கான். உனக்கு தெரியலை…” என வம்சி இன்னும் கடுமையாக கேட்க,
“அவன் குடிக்காமலே இருக்கட்டும். ஏன் பஸ்ல தானே போவ இத்தனை நாளும்? இன்னைக்கு என்ன?…” என்றான் கடுப்புடன்.
அத்தனை ஆத்திரம். முதலில் என்னவோ சரியில்லை என்று தோன்றவே பின் தொடர்ந்து வந்தவன் இப்போது வேறு பாதை மாறி காரை செலுத்தியது, அதிலும் அவன் குடித்திருக்க முற்றிலும் நிதானம் தவறியது வம்சிக்கு.
“நான் வரலைன்னு தான் சொன்னேன். அவங்க தான் மழை வரமாதிரி இருக்குன்னு சொல்லி மறுக்க முடியலை. ஒரு மரியாதைக்கு…”
“மரியாதை டேஷ்…” என்றான் உதட்டை மடித்தபடி.
“ஸார், சும்மா எதுக்கு இவ்வளோ கோவப்படறீங்க? நான் இத்தனை நாள் அவரை பார்த்திருக்கேன். நல்ல டைப் தான். அதான்…”
“என்ன அதான்? நல்ல டைப்ன்னா? எதுக்காக அந்த நல்லவன் இந்த ரூட்ல வந்தான்? இது எங்க போற வழின்னு தெரியுமா உனக்கு?…”