“அதை உன்கிட்ட எதுக்கு சொல்லனும்? எனக்கு தேவை இருக்கு…”
“அனுப்பறது நான். எனக்கு தெரிய வேண்டாமா? சொல்லாம இருந்தா நீ கேட்கவே கூடாது…” என்றவள் குமுதாவை பார்க்க தானிருந்தால் இதை கூட பேச யோசிப்பாள் என்று குமுதா வெளியேறிவிட்டாள்.
“நான் ஒன்னும் உன்கிட்ட கேட்கலை. அப்பாக்கிட்ட கேட்டேன். உன்கிட்ட பேசறதா சொன்னார். உன்னால முடியலைன்னா நான் அப்பாட்ட கேட்டுக்கறேன்…” இரக்கமின்றி மூத்தவள் பேச கண்கள் கரித்தது ஷ்ராவணிக்கு.
“உனக்கெல்லாம் மனசாட்சியே இல்லையாக்கா? எப்படி இன்னும் கஷ்டப்படுத்தி பார்க்க நினைக்கிற நீ?…” குரல் உடைந்து போனது ஷ்ராவணியிடம்.
“நான் என்ன பெருசா கஷ்டப்படுத்திட்டேன்? ஊர் உலகத்துல பொண்ணுக்கு அப்பா செய்யறது புதுசா என்ன? அந்த கடமை அவருக்கு இருக்கு…”
“உன்னை கல்யாணம் செஞ்சு குடுத்தார், அதுக்கான கடனே கழுத்தை பிடிக்குது. இதுல இன்னும் கேட்டேனா? அதுவும் நாற்பதாயிரம். அவ்வளவு சாதாரணமா உனக்கு?…”
“இங்க பாரு, முடியாதுன்னா நீ விடு, நான் பார்த்துக்கறேன்…”
“நான் சொல்லாம? இப்ப அங்க வீட்டு நிலைமை என்னன்னு தெரியும் தானே உனக்கு? கடன்காரங்களை விட மோசம் நீ….”
“வணி…”
“வாய மூடுக்கா. இதுக்கு மேல அப்பாட்ட பேசின…”
“உன் பேச்சை நான் ஏன்டி கேட்கனும்? அப்பாட்ட கேட்க கூடாதுன்னு நீ ஏன் சொல்ற?…”
“சரி, நானே அந்த நாற்பதாயிரம் தரேன்…” இளையவள் சொல்லவும் உடனே இறுமாப்பை எல்லாம் விட்டவளாக,
“நிஜமாவா வணி?…” என்றாள் சிவரஞ்சனி.
“நிஜமா தான். ஆனா எனக்கு ஒரு ஃபேவர் பண்ணனும் நீ…”
“என்ன?…” குரலில் அத்தனை உஷார்.
“உன்னோட ஜ்வேல்ஸ ப்ளட்ஜ் பண்ணி கடன்களை எல்லாம் அடைச்சுட்டா வட்டி அதிகமிருக்காது. ஒரு வருஷத்துல நகையை மீட்டு குடுத்திருவேன். என்ன சொல்ற?…” என ஷ்ராவணி கேட்க,
“என்னது நகையை தரனுமா?…”
“ஆமா, வட்டி வட்டின்னு அசலுக்கு பதில் வட்டியே காசையெல்லாம் முழுங்கிட்டு போய்டுது. பேங்க்ல நகையை வச்சா பேங்க் வட்டி கட்ட ஒன்னும் பெருசா பிரச்சனை இருக்காதுக்கா…” என சொல்ல கொஞ்சமும் யோசிக்கவில்லை சிவரஞ்சனி.
“என்னால தர முடியாது. நீ என்னவும் பண்ணு…”
“அப்ப இனிமே எந்த காசும் கேட்காத அப்பாட்ட. உனக்கு சீர் நேரத்துல அது தானா வரும். அதை தவிர இப்ப வேற எதுவும் எதிர்பார்க்காத…” என்று சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டாள் ஷ்ராவணி.
மனது கொதித்தது. அவ்வளவும் சுயநலம். வீட்டில் பொட்டு தங்கம் மிச்சமில்லாமல் அத்தனையும் அக்காவின் திருமணத்திற்கு என்று நகையாய் அவளுக்கு கொடுத்திருக்க போதாததிற்கு ஊரை சுற்றி கடன் வேறு.
எனக்கு இதை எல்லாம் செய்தே ஆகவேண்டும் என்றுவிட்டாள் அத்தனை கறாராக.
“என்னால சும்மா அங்க போய் கஷ்ட ஜீவனம் பண்ண முடியாது. இங்க தான் பஞ்சப்பாடுனா அங்கயும் போய் அப்படி இருக்கமுடியாது. மாப்பிள்ளையும் இப்படி பார்த்து கட்டி வைக்கறீங்க. அதை செழிம்பா செய்ங்க…” என அத்தனை பேச்சுக்கள்.
இல்லையென்றால் திருமணத்திற்கு சம்மதிக்கவே மாட்டேன் என பத்திரிக்கை எல்லாம் கொடுத்து முடித்த பின்பு பிடிவாதமாய் நின்று அத்தனையும் வாங்கிக்கொண்டவளுக்கு அதிலும் திருப்தி இல்லை.
போதாததிற்கு ரமேஷை வேறு பைக்கை கேட்க சொல்லி, அவன் தனக்கு பைக் வாங்கி தரும்படி கேட்டு என ஆட்டிவைத்தாள்.
“இப்படி செஞ்சா தான் உண்டு. இல்லன்னா கடைசி வரைக்கும் ஒன்னும் இல்லைன்னு வெறுங்கையை தான் காமிப்பாங்க கஷ்டம் கஷ்டம்ன்னு சொல்லியே…” என அவனை முடுக்கிவிட்டாள்.
இப்படி ரஞ்சனியின் ஆட்டத்திற்கு கொஞ்சமும் யோசிக்காமல் கை நீட்டி வட்டிக்கு வாங்கி இப்போது வட்டிக்கே வட்டி கட்டும் அளவிற்கு வந்துவிட்டது சூழ்நிலை.
கொஞ்சமும் பாசமின்றி எல்லாம் தெரிந்தும் பணம் கேட்டு பிரச்சனை செய்யும் அக்காவின் மீது அத்தனை ஆத்திரம் பொங்கியது.
‘என்னன்னு இவ எங்களோட பிறந்தாளோ? எல்லாம் இந்தம்மாவை சொல்லனும் செல்லம் குடுத்து வளர்த்துவிட்டுட்டு’ என மனதிற்குள் புலம்ப சந்துரு அழைத்துவிட்டான்.
“சொல்லுடா தம்பி…”
“வணிக்கா, இங்க அக்கா ஒரே ஆர்ப்பாட்டம். அம்மாவுக்கு போன் போட்டு அத்தனை திட்டு. பணம் குடுத்தா தான் வீட்டுக்கு வருவேன்னு சொல்ல அம்மா அழுகை. அப்பா யார்கிட்டையாச்சும் கேட்டு பார்க்கறேன்னு சொல்லிட்டிருக்காங்க…”
தம்பி சொல்லவும் இன்னும் மூச்சை பிடித்தது ஷ்ராவணிக்கு. ‘இவர்களுக்கு புரியவே புரியாதா?’ என ஆயாசம் கூட,
“அம்மாக்கிட்ட குடு சந்துரு…” என்றாள்.
“வணிம்மா…” தாய் அழுகையுடன் அழைப்பில் வர,
“என்னம்மா என்ன செய்யலாம்ன்னு இருக்கீங்க?…”
“வணிம்மா…”
“இப்படி அவ மிரட்டிட்டே இருப்பா. நீங்க கேட்டுட்டு இன்னும் கடன் வாங்கனும்னு நினைப்பீங்களா? எவ்வளவு தான் கட்ட முடியும்?…” கோபமில்லாமல் சோர்வுடன் கேட்க மகளின் குரலே தாயை கலங்கடித்தது.
சரியான சாப்பாடு கூட அங்கே இல்லை என அவளின் உடல் மெலிவில் கண்டுகொண்டார் தாய்.
இங்கேயும் பெரிதாய் விருந்து சாப்பாடு இல்லை என்றாலும் சத்தான ஆகாரங்கள் தான் உணவாக இருந்தது.
இத்தனை கஷ்டத்தையும் அனுபவித்துக்கொண்டு தங்களுக்காக தானே அங்கே இருக்கிறாள் என தோன்ற மௌனமாக இருந்தார் அதன் கனத்தில்.
“சொல்லுங்கம்மா, கடன் வாங்க போறீங்களா?…”
“அப்பா தான்…”
“அப்ப முதல்லையே சொல்லிருங்கம்மா, அதுக்கும் சேர்த்து எவ்வளவு அனுப்பறதுன்னு பார்க்கறேன். இப்பவே கைல சுத்தமா இல்லாம தான் குடுத்தனுப்பறேன். திடீர்ன்னு இந்த பணமும் சேர்ந்தா…”
“அம்மாடி வணி…”
“என்னம்மா செய்ய? உங்களுக்கு அவளை எதுவும் சொல்ல முடியாது. வரமாட்டேன்னு சொன்னா வராமலே இருந்திருவாளா? அதை நீங்க யோசிக்கமாட்டீங்களா?…”
“நீ ஒன்னும் கவலைப்படாத வணிம்மா, நான் பேசிக்கறேன் அப்பாட்ட…”
“எனக்கு அக்கா போன் பண்ணினா…” என்று பேசியவற்றையும், தான் கேட்டதையும் சொல்ல,
“நீ ஏன் அவக்கிட்ட நகையை கேட்ட? என்ன பழக்கம் வணி? இதையே வேற சொல்லி சொல்லி காண்பிப்பா…” அதட்டலாய் வந்ததும் தாயின் குரல்.
“வேற என்னம்மா செய்ய? நான் நிஜமாவே உதவியா தான் கேட்டேன்…”
“போச்சு, இங்க அதுக்கும் சேர்த்து ஆடுவா…” என்றவர்,
“வரட்டும். நான் பேசிக்கறேன். நீ கவலைப்படாம இரு. உடம்பை பார்த்துக்கடா குழந்தை…” கனிவும் கவலையுமாய் கண்ணை கசக்க,
“இங்க நான் சமாளிச்சுப்பேன்ம்மா…”
“இந்தா தம்பி பேசறான்…” என சந்துருவிடம் தந்தார்.
“வணிக்கா…” மெல்லிய குரலில் கிசுகிசுப்பாய் அவன் பேச,
“என்னடா? ஏதாவது வேணுமா?…” என அவன் குரலை வைத்தே.
“சொன்னா திட்டமாட்டியே?…”
“நிஜமா இல்லடா. சொல்லு…”
“இல்ல, நானும் சென்னைக்கு வேலைக்கு வரட்டா? எதாச்சும் கிடைக்கிற வேலையை பார்த்துட்டு…” என்றதும் திடுக்கிட்டு போனவள்,
“டேய் என்ன பேசற நீ? ஒழுங்கா படி நீ. அது போதும்…”
“க்கா, உனக்கு புரியலை…” என்றவன்,
“காலேஜ் போகனும்னா பீஸ் நிறைய ஆகும். இங்க இதுக்கே உன் சம்பளம் கரைஞ்சிருது. இதுல பெரியக்கா வேற அந்த பட்சணம் செய்ஞ்சு தா, இது சாப்பிடனும் போல இருக்குன்னு பாடா படுத்தறா அம்மாவை…”
“போதாததுக்கு இங்க இருந்து பலசரக்கு கூட எடுத்துட்டு போறா. என்னால அலைஞ்சு வாங்க முடியாதுன்னு வீட்டுல இருக்கறதை தூக்கிட்டு போய்டறா…” சந்துருவின் குரலில் அவ்வளவு ஆதங்கம்.
“அவ திருந்தமாட்டா டா…” ஷ்ராவணி சலிப்பாய் சொல்ல,
“அம்மா அடுத்த மாசம் பார்க்கலாம்ன்னா அதான் சின்ன மக நல்லா சம்பாத்தியம் பன்றாளே? எனக்கு செஞ்சு தர என்ன உனக்கு? இப்பவேவா கட்டி குடுக்க போற? அதுக்குள்ள பணத்தை சேர்த்து வைக்கிறன்னு பேசறா க்கா….” என்றான்.
“பேசட்டும் டா. அதுக்கு நீ பெரியமனுஷனா இந்த முடிவுக்கு வருவியா?…”
“பின்ன என்ன செய்ய? அம்மாவுக்கு ஒரேடியா ஒதுக்கவும் முடியலை. அப்பாவுக்கு வர வேலையில பாதி அத்திம்பேரே வாங்கிடறார். அப்பா முழிச்சிட்டு வரார்…”
“சந்துரு அழறியா?…”
“இல்லக்கா, கஷ்டமா இருக்கு, என் பங்குக்கு நானும் உன்னை பிடிச்சு இழுக்கனுமா? அதோட…” என வார்த்தையை அவன் விழுங்க,
“என்னடா…”
“இந்த சம்பளத்துல என்னை படிக்க வைக்கிறதெல்லாம் நடக்கற விஷயமில்லைக்கா…” என உடைத்து சொல்லிவிட்டான்.
“அட படவா? இதுக்கா இத்தனை கவலைப்பட்ட?…” என்ற ஷ்ராவணி,