“இல்ல, அம்மா எதுத்த வீட்டுக்கு டூரிஸ்ட் வந்திருக்காங்கன்னு அவங்களுக்கு சமைச்சு எடுத்துட்டு போயிருக்காங்க. இதுல இந்தக்கா எனக்கு தனியா எடுத்து வச்சு குடுத்தனுப்புன்னு சொல்லிருக்கா…”
“ஹ்ம்ம், சரி விடு. இங்க பார் சந்துரு. நான் ஒன்னு சொல்லுவேன், யார்க்கிட்டயும் சொல்ல கூடாது…” என்று தான் தனியே வகுப்பெடுக்கும் விஷயத்தை தம்பியிடம் சொல்ல,
“க்கா, என்ன இது? இன்னொரு வேலை பார்த்திட்டு இருந்தா என்னாகும் உன் உடம்புக்கு? எதுக்கு இழுத்து வச்சு செய்யற?…”
“ப்ச், அதெல்லாம் இல்லை. ஆபீஸ்ல இருந்து வர வழி தான். அலைச்சல் கூட இல்லை…” என்று பொய்யுரைக்க,
“நிஜமாவா? பத்திரமா இருக்கா. புது இடம், அங்க யார் என்னன்னு தெரியாது. இப்படி அன் டைம்ல ட்யூஷன் சொல்லி தர போற. பத்திரம்க்கா…” என்றவன் சொல்லியது வம்சியை ஞாபகப்படுத்தியது.
“நம்பிக்கையான இடம் தான் சந்துரு. பார்த்துக்கறேன்…” என்றாள்.
“சரி க்கா. நான் போய் இந்த சாப்பாட்டை அக்கா வீட்டுல குடுத்துட்டு வரேன், நீ உன் வேலையை பாருக்கா…”
“சரிடா, வீட்டை பார்த்துக்கோ. அக்கா பேசினா அம்மா, அப்பா கண்டிக்கனும்னு நினைக்காதே. நீயும் பெரிய பையன் தான். இன்னும் கொஞ்ச நாள்ல குடும்ப பொறுப்பு எடுத்துக்கனும். தப்புன்னா சொல்லலாம்…”
“ஆமா சந்துரு. நீயும் படிச்சு இப்படி ஒரு பொசிஷன்ல இல்லை இதைவிட பெரிய பொசிஷன்ல வரனும்…”
“ஆமா, அதுக்கப்பறம் அப்பாவும் வேலைக்கு போக வேண்டாம். அம்மாவும் சமைச்சு குடுக்க வேண்டாம். நீயும் அங்க போய் தனியா கஷ்டப்பட வேண்டாம். நானே பார்த்துப்பேன். அன்னைக்கு இருக்கு இந்த பெரியக்காவுக்கு…” என அவன் உறுதிமொழி எடுக்க,
“சரிடா, அதுக்கு முதல்ல நல்லா படிக்கனும்…” என பேசி முடித்து விட்டு போனை வைத்தவள் அப்படியே படுக்கையில் சாய்ந்துகொண்டாள்.
வகுப்பெடுக்கும் பணத்தை சிறுக சிறுக வீட்டிற்கு தெரியாமல் சேமித்து வரும் விபரத்தை தம்பிக்கு மட்டும் சொல்லியிருக்க இனி அவன் இன்னும் உத்வேகத்துடன் படிப்பான் என்னும் நம்பிக்கை உண்டானது.
இதற்கு முன்பும் நன்கு படிப்பவன் தான். தனக்கும் மேல் கஷ்டம் அறிந்து நடந்துகொள்பவன்.
வீட்டில் பெற்றோருக்கு தெரிந்தால் அந்த பணமும் ஏதோ ஒரு காரணத்தின் மூலம் கரைய வாய்ப்பிருக்கும்.
தாய்க்கு மட்டும் தெரிந்தாலும் கூட தனியே சேமிப்பாக இருக்கட்டும் என்றாலும் நிச்சயம் ஏதேனும் ஒரு சூழ்நிலையில் அதில் கைவைக்க நேரிடும்.
“பேசியாச்சா? உள்ள வரலாமா?…” வெளியிலிருந்து குமுதா கதவை தட்ட,
“வாங்கக்கா…” என்றாள் சத்தமாக.
“ரொம்ப நேரமா சவுண்டே இல்லை. அதான் நாக் பண்ணேன். என்ன முடிஞ்சதா பஞ்சாயத்து…”
“ஹ்ம்ம் க்கா. பேசி முடிச்சாச்சு…” என மேம்போக்காய் விஷயத்தை சொல்ல,
“உன் தம்பி வேலைக்கு கிளம்பனும்ன்ற அளவுக்கு யோசிச்சிருக்கான். பாவம் சின்ன பிள்ளை…” என வருத்தப்பட்ட குமுதா,
“உன் அக்காவை மட்டுமில்லை, அம்மாப்பாவையும் கொஞ்சம் இறுக்கி பிடி. பாசம் பாசம்ன்னு இப்படி சுயநலத்துக்கு பின்னால தொலைஞ்சு போனவங்க தான் ஏராளம். இதுக்கு மேல என்ன சொல்ல நான்?…” என குமுதா சொல்லவும் தலையசைத்தாள்.
இனியும் சிவரஞ்சனியின் நடவடிக்கைகளை ஊக்குவிக்க விட கூடாதென்று மனதில் நினைத்தாலும் நடைமுறைப்படுத்த முடியுமா என்று தான் தோன்றியது தன் பெற்றோர்களை எண்ணி.
“சரி, தி.நகர் போகனும்னு சொன்னியே குறைஞ்ச விலைல ட்ரெஸ் எடுக்க. அடுத்த வாரம் போவோமா?…”
“போகலாம் குமுதாக்கா. என் பழைய ட்ரெஸ் எல்லாம் ரொம்ப போய்ருச்சு. எடுத்து வைக்கனும்…”
“இப்பவாச்சும் மனசு வந்துச்சே…” என்று சொல்லிவிட்டு குமுதா தன் வேலையை பார்க்க ஷ்ராவணி எத்தனை உடை? அதற்கான பணம் எவ்வளவு? என்று திட்டமிட ஆரம்பித்தாள்.
இந்த மாத ட்யூஷன் தொகையும் சேர்ந்தால் இன்னும் ஆயிரம் ரூபாய் கூடுதலாக கிடைக்க வம்சியிடம் கொடுத்துவிட வேண்டும் என அதையும் ஞாபகம் வைத்துக்கொண்டாள்.
அவனுக்கு கொடுத்துவிட்ட பின்பு எல்லாம் தம்பியின் படிப்பிற்கான சேமிப்பு மட்டுமே. அதில் ஒருவகை நிம்மதியும் கூடியது.
ஒருவரின் உதவி கடனாகும் நேரம் அதன் முன்னால் தங்களுடைய தன்மானம் எந்தளவிற்கு கூனி குறுகும் என உணர்ந்து வளர்ந்திருக்க இனி அந்த நிலை மாறவேண்டும் என்பதில் அத்தனை திண்ணமாக இருந்தாள்.
——————————————
ஆளுநர் மாளிகையின் வெளிப்புறத்தை நோக்கி வம்சி சைத்ரயேஷ் நடந்து சென்றுகொண்டிருந்தான் தன்னுடைய குடியிருப்பு பகுதிக்கு.
“கிளம்பிட்டியா வம்சி?…” ஆனந்த் கேட்க,
“ஹ்ம்ம், ட்யூட்டி டைம் ஓவர். போய் ட்ரெஸ் சேஞ்ச் பண்ணிட்டு நெல்லூர் கிளம்பனும்…”
“ஓகே, நாளைக்கே ரிட்டர்னா?…”
“என்ன மேன் புதுசா கேட்டுட்டு இருக்க நீ? அதான் சொன்னேனே?…”
மறுநாள் வருவதாக தம்பி, தங்கையிடம் சொல்லியிருக்க அவர்கள் நிச்சயம் காலை காத்திருப்பார்கள்.
ஆனந்த் வருகிறானா என பார்த்துவிட்டு சலித்துக்கொண்டவன் முன்னே நடந்தான். வந்தால் குடியிருப்பிற்கு தேடி வரட்டும் என்று.
அதற்குள் மொபைலில் அழைப்பு வர தம்பியாக இருக்கும் என எடுத்து பார்க்க லோக்கல் லேண்ட்லைனில் இருந்து அழைப்பு.
புதிதாய் வேறு அந்த எண் இருக்கவும் யோசனையுடன் தான் அட்டன் செய்தான் அதனை.
“ஹலோ வம்சி சைத்ரயேஷ்…” என்றதும் மறுபக்கம் சிறு மௌனமும் மூச்சு சத்தமும்.
“ஹலோ…” என்றான் மீண்டும்,
“ஸாரி தெரியாம கால் பண்ணிட்டேன். ஸாரி…” என்றவள் குரலை கண்டுகொண்டான்.
“நிலா…” என அவன் அழைக்கும் முன் அழைப்பை துண்டித்திருந்தாள் அவள்.
அன்று ரோட்டில் வைத்து திட்டிய பிறகு அவளின் அழைப்புகளை நிராகரித்து இதுவரை தள்ளியிருந்தவனால் இப்போது அந்த குரலை கேட்ட பின் அப்படி இருக்கமுடியவில்லை.
மழை வேறு பெய்துகொண்டிருக்க அதுவும் ஒரு லேண்ட்லைன், எங்கே என எடுத்து பார்க்க அவள் வகுப்பெடுக்கும் பகுதியின் எண் என்று சரிபார்த்ததில் தெரிந்துபோனது.
அந்த எண்ணிற்கு அவனே அழைத்தான் மீண்டும். வேறு ஒருவர் இப்போது எடுத்திருக்க,
“ஹலோ இப்ப இந்த நம்பர்ல இருந்து ஒரு பொண்ணு பேசினாங்களே? இருக்காங்களா?…” என கேட்க,
“இங்க தான்ங்க நிக்குது அந்த பொண்ணு. குடுக்கட்டுங்களா?..”
“இல்ல இல்ல, அவங்க எப்ப வந்தாங்க?…”
“நீங்க?…”
“நான் ஒரு ஆர்மி ஆபீசர். அவங்க என் ரிலேட்டிவ் தான். நீங்க சொல்லுங்க…”
“இப்பத்தானுங்க பத்து நிமிஷத்துக்கு முன்னாடி மழைக்கு ஒதுங்குச்சு. ரெண்டுமூணுபேருக்கு போன் போட்டுச்சு. எடுக்கலை…”
“உங்க கடை அட்ரஸ் சொல்லுங்க. நான் வந்திடறேன்…” என்றவன் கேட்டுவிட்டு,
“போனை குடுங்க அந்த பொண்ணுக்கிட்ட…” என்றான்.
“எம்மா, உனக்கு தான்…” என அந்த கடைக்காரர் அழைக்கவும் தான் அழைத்த அழைப்பில் இருந்து போல என வாங்க வம்சி மீண்டும் அழைத்திருப்பான் என எதிர்பார்க்கவில்லை.
“ஸாரி, நான் ஹாஸ்டல்க்கும், ப்ரண்டுக்கும் கூப்பிடும் போது அப்படியே ஒரு பதட்டத்துல உங்களுக்கு கூப்பிட்டுட்டேன். இங்க மழை, என் மொபைல் வேற மழையில கீழே விழுந்துருச்சு. வேற நம்பர் ஞாபகமில்லை…”
ஷ்ராவணி படபடவென்று அவனிடம் இதனை விளக்க வம்சி வேறு எதுவும் பேசவில்லை.
“நான் வர வரைக்கும் அங்கயே இரு…” என சொல்லி வைத்துவிட்டான்.
“போச்சு…” என்று போனை வைத்தவள் அங்கேயே நிற்க,
“எம்மா, இந்த பக்கம் வந்து உட்காரும்மா. ஏற்கனவே நனைஞ்சிருக்க. இன்னும் அங்கன நின்னு மழை காத்துல உள்ள வரைக்கும் அடிக்குது…” என சத்தமாக அழைக்கவும் நகர்ந்து உள்ளே வந்து அமர்ந்தாள்.
வம்சியின் மீது இதுவரை கூட தோன்றாத ஒரு ஆற்றாமை இப்போது பெருகியது ஷ்ராவணிக்கு.
“என்னோட நம்பர்னு தான் எடுக்கலை. அவாய்ட் பண்ணிருக்காங்க. இதுவே வேற நம்பர்ல இருந்து கூப்பிட்டா உடனே போன் அட்டன் பண்ண முடியுது இவங்களுக்கு…” என கழிவிரக்கமும் கோபமும் பொங்கியது.
தனக்கு தேவையில்லாத நினைப்பு என்று கூட உணராத நிலையில் இவன் எப்படி என்னை தவிர்க்கலாம் என அந்த நொடி அவளை பிடித்து ஆட்ட துவங்கியது ஒரு பெயரில்லா உணர்வு.
‘வரட்டும் பேசிக்கறேன்’ என்றுவேறு சொல்லிக்கொள்ள அவன் வந்த பொழுது வாயடைத்து தான் போனாள்.
அரைமணி நேரம் சென்றிருக்கும் வம்சி வந்து சேர்ந்தான் பைக்கில். தொப்பலாக நனைந்திருக்க மில்ட்டரி உடையில் பைக்கிலிருந்து இறங்கியவனை திகைப்புடன் பார்த்தாள்.
அவன் உள்ளே நுழைய ஷ்ராவணியின் விழிகள் அவனின் கையை தான் பார்த்தது.
“கிளம்பு…” என்றவனை பார்த்தபடி அப்படியே அவள் நிற்க,
“தேங்க்ஸ்…” என்றான் அந்த இட்லி கடைக்காரரிடம்.
“இருக்கட்டுங்க தம்பி…” என்றவரிடம் தலையசைத்துவிட்டு ஷ்ராவணியை பார்க்க அவளின் மிரண்ட விழிகளில் கடுப்பாகிவிட்டான்.
“நேனு நின்ன ஏ செய்ய போதுன்னானனி இலா சூஸ்துன்னாவ்…” என்றதும் இன்னும் அவள் புரியாது பார்க்க பின் தமிழில் கூறினான்.
“உன்னை என்ன பண்ணிட போறேன்னு இப்படி பார்க்கற?…” என்றான் அவளுக்கு மட்டும் கேட்கும்படி.
கடையில் கடைக்காரரும் இன்னும் இரு பையன்களும் மட்டுமிருக்க மழையில் யாருமில்லை.
வம்சி அழைத்தும் ஷ்ராவணி அசையாது நிற்கவும் இருவரையும் மாறி மாறி யோசனையுடன் பார்க்க எரிச்சல் மூண்டது.