“நாக்கு நுவ்வு நிலாவே. இனி எப்போ பார்த்தாலும் அப்படித்தான் கூப்பிடுவேன். ஏ செஸ்தாவு நுவ்வு (என்ன பண்ணுவ நீ)?…” மெல்லிய முணுமுணுப்பு மீசை ரோமங்களை சிலிர்த்தெழ செய்தது.
“என்னை கூப்பிட கூடாதுன்னு நீ ஏன் ஆடர் போடற? அதி நா இஷ்டம்…” முகத்தில் அத்தனை பிடிவாதம்.
“வம்சி…” ஆனந்த் அழைக்க,
“நீ கிளம்பலையா?…” என்றான் அவனிடம்.
“இதோ போறேன். சரி நீ கிளம்பவும் எனக்கு கால் பண்ணு…” என சொல்லி ஆனந்த் கிளம்பிவிட்டான்.
அவன் கிளம்பி அரைமணி நேரமானது. அதன் பின்னர் தான் கார் வந்தது. காபி மட்டும் சொல்லி வரவழைத்து குடித்தவன் கதவை பூட்டிவிட்டு பேக்கை எடுத்துக்கொண்டு கிளம்பினான்.
அதற்குள் பிரணவ், ஷைலஜா இருவரும் அவனுக்கு அழைத்து, குறுஞ்செய்தியும் அனுப்பியிருந்தனர்.
கார் சென்னையை விட்டு வெளியேறியதும் தான் அவர்களுக்கு அழைத்து பேசவே செய்தான்.
மனதை திசைதிருப்ப முயன்றவன் தன்னுடைய சொந்த ஊரை நெருங்கும் நேரம் அதில் வெற்றியும் கண்டான்.
“ஹேய் வந்துட்டியா வணி?…” என உறக்க கலக்கத்துடன் எழுந்தாள் குமுதா.
“ஹ்ம்ம், இப்பதான் க்கா…”
“நான் உன் நம்பருக்கு கூப்பிட்டு கூப்பிட்டு அப்படியே அசந்துட்டேன். சரி ட்ரெஸ் மாத்திட்டு வா. நனைஞ்சிட்ட போல…” என்றதும் ஷ்ராவணி உள்ளே நுழைய மீண்டும் வரும் முன் உணவை எடுத்து வைத்திருந்தாள் குமுதா.
பசி வேறு வயிற்றை கிள்ளியது. மழையின் நனைந்தது சூடாக எதையாவது சாப்பிடேன் என்று நாக்கை படுத்த சப்பாத்தியும், குருமாவும் ஆறி காய்ந்திருந்தது.
“இருக்கட்டும் க்கா…” என முயன்று அதனை விழுங்க ஆரம்பித்தாள்.
மனமெல்லாம் வம்சியின் பேச்சுக்கள் ஒவ்வொரு வார்த்தைகளும் அமிலங்களாக அவளை துளித்துளியாய் தொட்டுக்கொண்டிருந்தது.
சாப்பிட்டு முடித்து அதனை கழுவி வைத்துவிட்டு, பேக்கில் இருந்தவற்றை எல்லாம் ஈரம் போகுமாறு பிரித்து வைத்துவிட்டு ஒரு மாத்திரையை போட்டுவிட்டு படுத்துவிட்டாள்.
குமுதாவிடம் கூட எதுவும் பேசவில்லை. அவளும் சென்று படுத்துவிட ஷ்ராவணிக்கு உறக்கம் வரவில்லை.
‘நினைக்காத வணி, இனி அந்தாளுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. போன் ஆன் ஆனதும் நம்பரை ப்ளாக் பண்ணிடு’ என மூளை எடுத்து தந்தது.
மனதில் பதிந்துவிட்ட அந்த இலக்கங்களை எதை கொண்டு கருப்புவதாம் என புரியாமல் குழம்பியவளுக்கு கழிவிரக்கம் தவிர வேறு எதுவும் தோன்றவில்லை.
‘ஏன் நான் கூப்பிட்டா இவனுக்கு என்னவாம்? வரமுடியாதாமா? இப்ப வந்ததால என்னவாகிடுச்சாம்?’ என்றுவேறு ஒருபக்கம் தோன்றியது.
அத்தனை உரிமையான எண்ணம் எக்கணம் பிறந்ததோ? ஆனால் அவளுள் அது உருவாகியிருந்ததை வேதனையுடன் விழுங்கிக்கொண்டாள்.
“ம்ஹூம், எதுவும் நினைக்க கூடாது. இதெல்லாம் நிரந்தரமில்லை. வணி காம் டவுன்…” தனக்கு தானே சொல்லிக்கொண்டாள்.
தன்னை எப்போதும் மட்டம் தட்டும் ஒருவனின் மேல் தோன்றியிருந்த துளி பிடித்தம் கூட அவளுக்கு சுமக்கமுடியாத பாரமாகியிருந்தது.
“நத்திங், அவங்க பண்ணின ஹெல்ப். அட்வான்டேஜ் எடுக்காத கண்ணியம். இதுக்காகவெல்லாம் பிடிக்குமா? நோ வணி. ஜஸ்ட் அட்ராக்ஷன். வேற ஒண்ணுமில்லை…” என தன்னை சமாதானம் செய்தாள்.
எப்படி இப்படி ஒருவன் மேல் அபிமானம். அபிமானம் அன்பாகி இருக்க அந்த அன்பு அவனிடத்தில் காட்டப்பட்டால் நிச்சயம் அதுவுமே நகைப்புக்குரியதாகும்.
வேண்டவே வேண்டாம் என வாயை கைகள் கொண்டு மூடியவள் சத்தமாக கூட அழுதுவிடாமல் கழுத்து வளைவை பிடித்துக்கொண்டாள்.
‘எதுக்கும் குடுப்பினை வேணும். தன்னை பெரிதாய் மதிக்காதவன் மனதில் இன்னும் கீழிறங்க விரும்பவில்லை. போகட்டும். எத்தனையோ இல்லாமல் போனது என் வாழ்வில். அதில் இதுவும் ஒன்று’ என மனதை தேற்றினாள்.
நினைக்க நினைக்க தற்போது உணர்ந்த உணர்வுகள் எல்லாம் அவன் விட்டெறிந்த வார்த்தைகளில் உடைந்து போனது.
‘நான் தொல்லையா? போனால் போகுதா? தேவையே இல்லை. தேவைக்கு கூட இனி அவன் அருகாமை தேவையில்லை’ அவனின் வார்த்தைகளை கொண்டே தன் மனதிற்கு கடிவாளமிட்டாள்.
அதற்கடுத்த நாட்களும் இறுக்கத்துடன் செல்ல அந்த மாத இறுதியில் வகுப்பெடுக்க சென்ற இடத்தின் வருமானமும் சேர அவள் மனதில் கணக்கிட்ட குறிப்பிட்ட தொகை சேர்ந்துவிட்டது.
அதில் சொச்ச பணத்தை அப்படியே வைத்துக்கொண்டு மிச்சத்தை பேங்கில் இருந்து எடுத்தவள் அன்று விடுமுறை நாள் வகுப்பு முடியவும் ஆனந்த் வீட்டை நோக்கி சென்றாள்.
அவளின் வருகை நேரம் ஆனந்த் அப்போது தான் வெளியே வர கதவை திறக்க ஷ்ராவணி நிற்பதை கண்டு ஆச்சர்யமாய் பார்த்தான்.
“அண்ணா என்னை ஞாபகமிருக்கா?…” என கேட்க,
“வாம்மா, ஞாபகம் இருக்கே…” என்றவன்,
“உள்ள வாம்மா…” என்றழைத்தான்.
“இருக்கட்டும் ண்ணா. ஒரு உதவி வேணும். அதுக்காக தான்…” அவளின் குரல் வேறு சரியில்லாதிருக்க,
“சொல்லும்மா…” என்றான்.
சில நாட்களாக வம்சியையும் தான் கவனித்து வருகிறான். மாற்றங்கள் பெரிதாய் இல்லையென்றாலும் என்னவோ குறைந்தது அவனிடம்.
இப்போது இவள் வேறு இப்படி வந்து நிற்க என்னவென்று புரியவில்லை என்றாலும் தன்மையுடன் பார்த்தான்.
“இந்த பணத்தை அந்த மில்ட்டரி ஸார்கிட்ட குடுக்கனும்…”
“வம்சிக்கிட்டையா? என்ன பணம்?…” என திகைத்து பார்க்க,
“அவங்களோட பணம் தான். எனக்கு செலவு பண்ணினது…”
“என்ன?…”
“நான் அடிபட்டு ஹாஸ்பிட்டல்ல இருந்தப்போ செலவு பண்ணினது. அதை திருப்பி குடுக்கனும். அதான்…”
“இதை என்கிட்டே எந்த நம்பிக்கைலம்மா குடுக்க நீ? அதோட இதை வாங்கினா?…”
“அண்ணா ப்ளீஸ், எனக்கு இந்த ஹெல்ப் பண்ணுங்க…”
“இல்லம்மா, அவன் கோபப்படுவான். அதுவும் பணம். வேண்டாம்…” என முடிவாய் மறுத்துவிட ஷ்ராவணிக்கு முகமே சுண்டி போனது.
‘எனக்கு நீ யாருமில்லை. ஆனாலும் என்னவோ எனக்கு பெரிய ரெஸ்பான்சிபிலிட்டியை தருது உன்னோட போன் காலும், உன் அப்பா பேச்சும். ஐ ஹேட் இட்’ என்ற வார்த்தைகள் இன்னும் மனதை அறுத்தது.
அவன் காலத்தில் செய்த உதவி இப்போது மலையாய் தலைமேல் நின்று பாரம் கூட்டியது.
வெறுப்புடனான அந்த பேச்சும், கோபமும் ஷ்ராவணிக்கு ஒரு தள்ளாட்டத்தை தர பணத்தை மீண்டும் தன்னுடைய அக்கவுண்டில் போட்டுவிட்டு விடுதிக்கு சென்றாள்.
நேரில் பார்த்து தர விருப்பமில்லை. இனி அவனின் முகத்தை கூட பார்க்க கூடாதென்று முடிவாய் இருக்க மறுநாள் வம்சியே அழைத்துவிட்டான் ஷ்ராவணிக்கு.
“நிலா உன் ஆஃபீஸ் ஆப்போஸிட் காபி கஃபேல வெய்ட் பன்றேன். பர்மிஷன் போட்டுட்டு வா…” என அழைக்க கனவோ என்று அசையாமல் இருந்தாள் ஷ்ராவணி.