“நீ மில்டரி இல்லை, சரியான ஹிட்லர்…” என அழைப்பை துண்டிக்கும் முன் கடுப்பில் சொல்லிவிட வம்சியின் காதை எட்டிவிட்டது அவளின் வார்த்தைகள்.
பர்மிஷன் போட்டுவிட்டு குமுதாவிடமும் சொல்லிவிட்டு தனது பேக்குடன் எதிரிருந்த காபி ஷாப்க்கு சென்றாள்.
செல்லும் முன் அருகே இருந்த ஏடிஎமிற்கு சென்றவள் பணத்தை எடுத்துக்கொண்டு எதிர் திசை நோக்கி நடந்தாள்.
அந்த காபி ஷாப் மாடியில் முதல் தளத்தில் இருக்க கண்ணாடியினூடே அவள் இறங்கி வருவதையும் சாலை கடந்து அந்த கட்டிடத்தின் பகுதிக்குள் நுழைவதையும் கவனித்தபடி போனில் பேசிக்கொண்டிருந்தான் வம்சி.
கண்ணாடி கதவை திறந்து உள்ளே நுழைந்தவள் பார்வையால் வம்சி எங்கே துழாவ,
“நிலா…” என சத்தமாய் அழைத்தான்.
அவன் பகுதியை கண்டதும் அங்கே செல்ல செல்ல நேரில் பார்க்கும் முன் இருந்த கோபமெல்லாம் மெல்ல மெல்ல குறைவதை போல உணர்ந்தவள் அவன் எதிரே சென்று நின்றாள்.
“சிட்…” என இருக்கையை காட்டியவனிடம்,
“இல்ல எனக்கு வேலை இருக்கு. இந்தாங்க உங்க பணம்…” என டேபிளில் வைக்க,
“ப்ச்…” என்று அலட்சியமாய் சொல்லியவன்,
“உட்காருன்னு சொன்னேன்…”
“ம்ஹூம், பணத்தை எடுத்துக்கோங்க. அவ்வளவு தான். முடிஞ்சது…”
“ஓகே, நீ உட்கார வேண்டாம். நானும் கிளம்பறேன்…” பணத்தை எடுக்காமல் அவன் எழுந்ததும் பதறி அதனை தான் எடுத்துக்கொள்ள கண்ணீர் வந்துவிட்டது.
“இந்த காசை சம்பாதிக்க நான் எவ்வளவு கஷ்டப்படனும் தெரியுமா? உங்களுக்கு அவ்வளவு ஈசியாகிருச்சோ?…” என கேட்டவள்,
“இப்ப என்ன? உங்க ப்ரெண்ட்கிட்ட காசு குடுத்து உங்களுக்கு குடுக்க சொன்னது தப்பு தான். அதுக்கு திட்ட தானே கூப்பிட்டீங்க? உங்களுக்கு என்னை திட்டனும். அதானே?…”
“நிலா அமைதியா பேசு…”
“இங்க யார் இருக்க? யாருமில்லை. நீங்க, நான் தானே?…” என சொல்ல அதுதான் உண்மையும் கூட.
மதிய உணவு நேரத்தில் அந்த காபிஷாப்பில் வேறு ஆட்களும் இல்லை. இருவர் மட்டும் இருக்க அவளின் கோபம் குறையவில்லை.
“நாம மட்டும்னா இங்க பேரர் இல்லையா? இல்லை இந்த ஷாப்ல மத்த வொர்க்கர்ஸ் இல்லையா?…” என்றான்.
இத்தனையிலும் கோபம் என எதுவுமில்லை அவனிடத்தில். ஆனால் இதை தான் பேசுவான் என எதிர்பார்த்து வந்தவள் அவன் பேசும் முன்பே பொரிந்திருந்தாள்.
“உட்கார்ன்னு சொன்னேன் நிலா. ஒரு டென் மினிட்ஸ்..”
“உக்கார்ந்தா தான் திட்டுவீங்களா?…” மூக்கை உறிஞ்சியபடி கேட்டவள் அவ்விருக்கையில் அமர தானும் அமர்ந்தான்.
“எதுக்கு திட்டனும்?…” வம்சி கேட்க,
“அதான் நேத்து பணத்தை உங்க ப்ரெண்ட்கிட்ட ஏன் குடுத்தேன்னு கேட்டு திட்டுவீங்களே?…”
“உனக்கு தெரியுதா நான் அதுக்கு உன்னை பேசுவேன்னு…” என வம்சி கேட்கவும் வேகமாய் தலையை அசைத்தாள்.
“குட், அப்ப தப்புன்னு உனக்கே தெரியுதே? இனி எங்க திட்ட?…” என்றான் சின்னதாய் ஒரு புன்னகையுடன்.
இதனை சுத்தமாய் எதிர்பார்க்காதவள் வியப்பாய் பார்த்து விழி விரிக்க அவளின் திகைப்பும், ஆச்சரியமும் வம்சியின் புன்னகையை விரிய செய்தது.
“வாட்?…” என்றான்.
“ஒண்ணுமில்லை. நான் கிளம்பவா?…”
அவனின் புன்னகையும், அமைதியான பேச்சும் எல்லாவற்றையும் மறக்கடித்திருக்க தன்னை எப்படி வரவழைத்தான் என்பது கூட ஞாபகமில்லை பெண்ணிற்கு.
“என்ன அதுக்குள்ளே? வெய்ட் பண்ணு. ஒரு குட் ந்யூஸ். அதை உன்கிட்ட சொல்லி ஒரு சின்ன ட்ரீட்…” என சொல்ல இன்னும் நம்பமுடியவில்லை ஷ்ராவணியால்.
“எனக்கா ட்ரீட்?…”
“உன்னை கூப்பிட்டா உனக்கு தானே?…” என்றவன் மெனு கார்டை புரட்ட அப்போதுதான் அவனருகே இருந்த திருமண பத்திரிக்கையில் பார்வை பதிந்தது.
வந்ததிலிருந்து அவனை மட்டுமே கவனித்திருக்க அதன் மேல் பணம் வைத்த பொழுது கூட பத்திரிக்கையை பார்க்கவில்லை.
“கல்யாணமா?…” மெல்லிய குரலில் சொல்லியவள் இதயத்தில் கீற்றாய் பெரும் வலி.
நொடியில் உடலெல்லாம் ஒருவித வேதனை ஆட்கொள்ள லேசாய் நடுக்கம் கூட பிறந்தது.
“இதுக்கு தான் ட்ரீட்டா?…” என நினைக்க மனது கசந்துவிட்டது.
இதற்கு மேலும் இங்கே இருக்க முடியாதென அவனிடம் மறுப்பாய் சொல்ல விழி உயர்த்த மனதில் அடுத்த அதிர்வு.
வம்சி அவளைத்தான் பார்த்துக்கொண்டு இருந்தான் கையில் மெனுகார்டை வைத்து கன்னத்தில் கை ஊன்றியபடி.
ஷ்ராவணியின் முகம் சிவந்து கண்கள் ரத்தமென கலங்கியிருக்க மூக்கு நுனி அடக்கப்பட்ட அழுகைக்கு விடைத்து நின்றது.
“நான்… நான்.. எனக்கு வேலை இருக்கு. நான் போறேன்…” என சொல்லிவிட,
“என்ன காபி வேணும்னு ரொம்ப நேரமா கேட்டுட்டு இருக்கேன். நீ அந்த வெடிங் கார்டையே பார்த்துட்டிருக்க? என்னாச்சு நிலா?…”
“நிலான்னு சொல்லாதீங்க. இனி அதுக்கு அவசியமில்லை…” உதடு துடிக்க கூறியவளின் மனதின் வார்த்தைகள் உளறலாய் வர அவனின் புருவம் உயர்ந்தது.
பெண் மனதை ஓரளவு படித்துவிட்டவன் மனது மெல்ல தடுமாற்றத்துடன் அசைந்தது. மெதுவாய் அவளை ஏறிட ஷ்ராவணி தன்னை நிதானப்படுத்தினாள்.
“நீங்க எதுக்கு வர சொன்னீங்கன்னு இன்னும் சொல்லலை. எனக்கு… நான் ஆபீஸ் போகனும். ப்ளீஸ்…” விட்டால் கதறிவிடும் அளவிற்கு முகம் இருந்தது.
“ஓகே, கொஞ்சம் அமைதியா இரு. குட் ந்யூஸ் கேட்டியே? உன்கிட்ட சொல்லிட்டு கிளம்பலாம்ன்னு தான் வர சொன்னேன்…” என்றவன்,