ஷ்ராவணியின் இந்த தடுமாற்றம் வம்சியின் மனதில் கலக்கத்தை விளைவித்திருந்தது.
சிறு பெண்ணின் மனதை தானே எதோ ஒருவிதத்தில் கலைத்துவிட்ட குற்றவுணர்வு ஒருபுறம் இருந்தாலும் எங்கோ ஒரு இனிமையை அவன் வெளிப்படையாகவே உணர்ந்தான்.
‘இதி நாக்கு சரிகா ராது. ஈ அம்மாயி பாப்பம். குடும்பானிக்கனி இக்கடக்கி ஒச்சந்தி. நீக்கு செட்டாவாதூ.’ என மூளை எடுத்துரைக்க தெளிவில்லாமல் இருந்தான். (ம்ஹூம் இது சரிப்படாதுடா. இந்த பொண்ணு பாவம். குடும்பத்துக்காக இங்க வந்திருக்கா. உனக்கு செட்டாகமாட்டா)
“நிலா காபி…” என காபி வந்ததும் அவள் பக்கம் தள்ளியவன்,
“நெக்ஸ்ட் வீக் கிளம்பிருவேன் நான்….”
“ஹ்ம்ம்…” என அமைதியாக காபியை பருகினாள்.
“உன்னை இதை சொல்லை மட்டும் கூப்பிடலை. முக்கியமான விஷயம்…”
“வேறென்ன?…” என பார்த்தவளுக்கு திருமணத்திற்கு தன்னை அழைப்பானோ என்று தோன்றியது.
‘ம்ஹூம் போகவே கூடாது. நிச்சயம் பார்க்கமுடியாது. எங்கோ எப்படியோ இருக்கட்டும். ஆனா போகமட்டும் கூடாது’ என உள்ளுக்குள் அத்தனைமுறை உருபோட்டுக்கொண்டாள்.
“வேலை பார்க்க வந்த இடம். வேலை மேல மட்டும் கவனமா இருக்கனும்…” என்றான் அறிவுறுத்துவதை போல.
“அதான் பன்றேன்…”
“அப்படியா?…” என தலையசைத்தவன்,
“ஆனா சொல்லனும்னு தோணுச்சு. இங்க யாரும் என்னதான் நல்லா பழகினாலும் ரொம்ப கவனமா இருக்கனும். உன் குடும்ப சூழ்நிலை தெரியும் தானே?…”
“இப்ப எதுக்கு எனக்கு இந்த கிளாஸ் எல்லாம்?…”
“எல்லாம் ரீசனோட தான். அன்னைக்கு மாதிரி உன் கொலீக் கூப்பிட்டாங்கன்னு நம்ப வேண்டாம் யாரையும். எவ்வளவு பழக்கமாவே இருந்தாலும் பஸ்ல போ. அதே நேரம் லேட் நைட் அவாய்ட் பண்ணு…”
“எனக்கே இதெல்லாம் தெரியும்…”
“தெரிஞ்சு தான் உன் கொலீக் கூட கார்ல தவிர்க்க முடியலைன்னு போனியா நீ?…” என்று கேட்க ‘உங்களுக்கு ஏன் இது?’ என்று வந்துவிட்ட வார்த்தைகளை சொல்லும் முன்,
“அன்னைக்கு மாதிரி நான் வந்துட்டிருக்கமாட்டேன். இங்க நான் நீ நினைச்ச நேரத்துக்கு இருக்கமாட்டேன்…” என்றவன்,
“நான் இங்க இல்லைன்னு உனக்கு தெரியாதுல. ஏதாவது ஒரு சூழ்நிலையில என்னை நீ காண்டேக்ட் பண்ண நினைச்சா? அதான் இப்பவே சொல்லிவச்சா நீ கொஞ்சம் உஷாரா இருப்பன்னு தான். அதுக்காக தன பேச கூப்பிட்டேன்…” என்றதும் ஷ்ராவணிக்கு சுர்ரென்று கோபம் வந்துவிட்டது.
“நீங்க இப்படித்தான்னு தெரிஞ்சும் வந்தேன் பாருங்க. என்னை சொல்லனும்…” என தலையில் அடித்தவளை திகைப்பாய் வம்சி பார்க்க,
“என் நம்பரை அவாய்ட் பண்ணிட்டு ஏதோ ஒரு கால் அட்டன் பண்ணும் போதே பாதி புரிஞ்சது. இன்னைக்கு எனக்கு கால் பண்ணும் போது ட்ரூகாலார்ல உங்க நேம் வரவும் கன்பார்ம் பண்ணிட்டேன் நீங்க என்ன நினைச்சிருக்கீங்க என்னை அப்படின்னு….”
ஷ்ராவணி அவனை பேசவே அனுமதிக்கவில்லை. அதற்கடுத்த இந்த சந்திப்பும் கசப்பில் தான் முடிய போகிறது என்று நினைக்க அதுவேறு நெஞ்சை அறுத்தது.
“நான் உங்களை கண்டிப்பா கூப்பிடமாட்டேன். இப்பவும் நீங்க பணம் வாங்கனும்னு சொன்னதால தான் வந்தேன். உங்களை பார்க்க ஒண்ணுமில்லை…” என மிளகாயாய் காய அதை சிறுபுன்னகையுடன் மீசையை நீவியபடி பார்த்தான்.
“நான் கொஞ்சம் பேசட்டுமா? எப்ப பாரு அவசரம்…” என வம்சி கேட்டேவிட,
“நீங்களா கூப்பிட்டு இப்ப மட்டம் தட்டுறீங்க. எப்பவும் இதுதான் உங்க குணம். ப்ச், அது எனக்கு தேவையில்லாதது. பணம் குடுக்க மட்டும் தான் வந்தேன். இந்தாங்க…” என பேக்கில் வைத்த பணத்தை மீண்டும் எடுத்தாள்.
அவன் முன்னால் இருந்த பத்திரிக்கை மீது வைத்தவளின் விழிகளில் மீண்டும் நீர் படலம் அதனை பார்த்தது.
“இந்தாங்க இந்த காபிக்கும் சேர்த்து…” என மெனுகார்டை எடுத்து அவன் சொல்லிய காபி விலையை பார்த்து அதற்கும் எடுத்து வைத்தவள்,
“இப்ப இதுக்கும் குடுத்துட்டேன், இப்ப எல்லாம் ஓவர்….” என்று மிச்சமிருந்த காபியை சூட்டோடு வாயில் ஊற்றிக்கொண்டாள்.
“நிலா…” என்றவனை போதும் என்பதை போல கை கொண்டு நிறுத்தியவள்,
“சாப்பாட்டை வேஸ்ட் பண்ண கூடாது ஸார். இல்லாதவங்களுக்கு தான் அதோட அருமை தெரியும். அதான் குடிச்சேன். அதுவும் இதுக்கு காசு குடுத்துட்டேன்னு தான் குடிச்சேன்…”
அத்தனை சீற்றத்துடன் வம்சியிடம் சொல்லிவிட்டு பேக்கை எடுத்துக்கொண்டு அவள் நகர,
“அட நில்லும்மா…” என்றான் வம்சி.
‘நீக்கு எலா அர்தம் செய்யலானி நாக்கு தெலீலேது’ என தலையை பிய்த்துக்கொள்ளாத குறை வம்சிக்கு. (உனக்கு எப்படி புரிய வைக்கன்னே தெரியலை).
“இவ இப்படி கிளம்பறதையும் அக்சப்ட் பண்ண முடியலையே…” என தலையை கோதினான் அழுத்தமாய்.
அவளின் இந்த கோபம் கூட அவனுக்கு சுவாரஸியம் தந்தது அன்று. அவள் மனதை கண்டுகொண்டதால் கூட இருக்கலாம் என தனக்கு தானே சொல்லிக்கொண்டான்.
“அதான் எல்லாம் பேசிட்டீங்களே? திரும்ப திரும்ப நான் தான் அசிங்கப்படறேன்…” என மூச்சுவாங்க அழுகையை அடக்கிக்கொண்டு சொல்ல,
“இந்த இன்விடேஷன்…”
“நான் உங்க கல்யாணத்துக்கு வரமாட்டேன். ஒரு இன்விடேஷனை வேஸ்ட் பண்ணாதீங்க. எனக்கு வேண்டாம்…” அப்படி ஒரு கோபம் பொங்கியது அவளுக்கு.
இத்தனை தூரம் கோபத்துடன் பேசியும் அசராமல் சிரித்துக்கொண்டு நிற்பதும் இல்லாமல், பத்திரிக்கையை காட்ட எங்கே வெடித்துவிடுவோமோ என அஞ்சி நின்றாள்.
“கல்யாணம் தான். ஆனா எனக்கில்லையே? அதையும் கேட்டுட்டு போனா கொஞ்சம் கூலாவ தானே?…”
‘நிஜமாவா?’ என்பதை போல திகைப்புடன் அவனையும் அந்த பத்திரிக்கையையும் மாறி மாறி பார்க்க,
“என் தம்பி மேரேஜ். உன்னை இன்வைட் பண்ணவும் கொண்டு வரலை. இங்க அவன் ப்ரென்ட்க்கு என்னை குடுக்க சொன்னான். அதுக்காக எடுத்துட்டு வந்தேன். அப்படியே உன்னையும் பார்த்துட்டு போகலாமேன்னு…”
வம்சி சொல்லவும் அவனை பார்த்தபடி நின்றவளின் மனதில் பெரிதாய் தாக்கம் எதுவுமில்லை.
இப்போது இல்லை என்றாலும் அடுத்து இவனும் திருமணம் செய்வான் தானே என தோன்றியது.
இனி இதனை பற்றிய நினைப்பே கூடாதென மீண்டும் வேலியிட்டுகொண்டவள் முகத்தில் சந்தோஷத்தின் பிரதிபலிப்பை எதிர்பார்த்தவனுக்கு ஏமாற்றமே எஞ்சியது.
“சோ வாட்?…” என்றாள் அவன் கேட்டதற்கு.
“நிலா…”
“உங்களுக்கு கல்யாணம்ன்னா கூட நான் ஷாக் எல்லாம் ஆகமாட்டேன். அதுக்கும் சேர்த்து ஒரு கங்க்ராட்ஸ் தான்…” மிடுக்குடன் கூறிய அந்த பதிலில் பெரிதாய் கவரப்பட்டான் வம்சி.
‘வாவ்’ என மனதிற்குள் சொல்லிக்கொண்டாலும் தலையசைப்புடன் அவளின் பேச்சை ஏற்றவன்,
“ஓகே, லாஸ்ட் மீட் இப்படி கண்ணீரோட, கோபத்தோட வேண்டாமேன்னு தோணுச்சு…”
“நீங்க இப்படிலாம் பேசமாட்டீங்களே?…”
“இதுவரைக்கும் அப்படி டென்ஷனா தான் மீட் பண்ணிருக்கோம். இது நானா அரேஞ்ச் பண்ணின மீட். சோ கொஞ்சம் கூலா இருக்கட்டுமேன்னு…”
“அப்போ கூட நீங்க ஏற்பாடு பண்ணினதால தான். இதுவே நான் கூப்பிட்டிருந்தா?…” என கேட்க வம்சிக்கு இவள் இத்தனை பேசுவாளா என்றிருந்தது.
மனதிற்குள் தவிப்புகள் அலைமோத அதில் திசையறியாது தத்தளித்துக்கொண்டிருந்தவனால் அவள் மேல் கோபப்படவும் முடியவில்லை இந்த சூழலில்.
இதனை எப்படி கையாள்வது என்றும் தெரியவில்லை. ஒருவித இயலாமையுடன் தான் பார்த்தபடி நின்றான்.
ஆனால் ஷ்ராவணிக்கோ மனதில் அப்படி ஒரு விடுதலையுணர்வு அவளின் சிறகை விரிய வைத்திருந்தது.
அவனுக்கு பணத்தை திருப்பி தந்துவிட்டதில் அத்தனை மகிழ்ச்சி. மனதின் பாரம் தீர்ந்துவிட்ட நிம்மதி.
இதில் அவளின் ஆசை, நேசம் எல்லாம் பின்னால் சென்றுவிட்டது. ஒருவகையில் அவனை பேசவிடாது செய்துவிட்டதில் ஒரு பூரிப்பும்.
ஆனாலும் அவன் நேரத்தில் தனக்கு செய்த உதவிகளை அத்தனை சுலபத்தில் மறப்பவளும் இல்லை, துட்சமாக நினைப்பவளும் இல்லை.
இப்படி பல்வேறு பாவனைகள் அவள் முகத்தில் வந்து மின்னி மறைய அவற்றை அவதானித்தபடி வேறெங்கும் பார்க்கமுடியாமல் நின்றான் வம்சி.
“நான் கிளம்பறேன் ஸார்…” என்று திரும்ப போனவள்,
“நான் பேசினதுக்கு நீங்க தப்பா நினைச்சுக்காதீங்க ஸார். உங்களோட ஹெல்ப் எந்த காலத்திலையும், ஏன் நான் உயிரோட இருக்கற வரைக்கும் கூட மறக்கமாட்டேன். அதுக்கு எப்பவும் கடமைப்பட்டிருக்கேன். நன்றியுணர்ச்சி மட்டுமே…”
“ஆனா இத வச்சு என்ன வேணா பேசலாம்ன்னு நீங்க பேசினதை தான் என்னால தாங்கிக்கவும் முடியலை. ஏத்துக்கவும் முடியலை. உதவி செஞ்சுட்டீங்கன்னு நானும் எல்லாமே பொருத்து போக முடியாது தானே?…”
“உதவி செஞ்சவங்களுக்கு அது பெருமிதம். ஆனா அதை வாங்கிக்கிட்டவங்களுக்கு எவ்வளவு பெரிய சுமை தெரியுமா? நீங்க என்னை நல்லவிதமாவே பேசியிருந்தாலும் உங்க உதவி தான் உங்களுக்கு முன்னாடி அடையாளமா இருக்கும்…”
அவள் பேச பேச அமைதியாய் பார்த்திருந்தவன் மனதிற்கு என்னவோ பிசைந்தது.
ஷ்ராவணியின் தோற்றமும், பேசும் பொழுது தழுதழுத்த குரலும் வம்சியை முற்றிலும் புரட்டியிருந்தது.
“எனக்கு மனசுல பட்டதை சொல்லிட்டேன் ஸார். குட் பை..” என சொல்லிவிட்டு சென்றுவிட்டாள்.
மரம் போல அவள் திசை பார்த்து நின்றிருந்தவன் மனதில் நிலையாய் நின்றும்விட்டாள்.
“குட் பை? இதி கூட நீ இஷ்டமா? வெண்டே கலுஸ்தாம் நிலா…” (குட் பை? இதுவும் உன் இஷ்டமா? சீக்கிரம் மீட் பண்ணுவோம் நிலா) அவனிதழ்கள் அவள் செல்வதை பார்த்தபடி மொழிந்தது.