ஆறு மாதங்கள் சென்ற வேகம் தெரியவில்லை. அத்தனை மாற்றங்கள் ஷ்ராவணியின் வாழ்க்கையில்.
வழக்கம் போல வாழ்க்கையோட்டம் அவளை இழுத்து செல்ல பெரிதாய் எந்த சந்தோஷங்களும் இல்லை ஷ்ராவணிக்கு.
வீட்டில் பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தைகள் கூட குறைந்துபோனது கடந்த நான்கு மாதங்களில்.
ஷ்ராவணிக்கு வேலைக்கு சேர்ந்த புதிதில் என்ன நெருக்கடியோ அதே தான் இன்னும் அவளின் வீட்டில்.
அந்த சூழ்நிலை மட்டும் மாறவே இல்லை. இப்போது அக்காவின் பேர்கால செலவுகள் என்று மூன்றாம் மாதமே தலைசுத்தல், உணவு சேராமை என தாய் வீட்டில் தான் முழுநேரமும்.
காலை மனைவியை கொண்டுவந்துவிடும் ரமேஷ் இரவு உணவை முடித்துக்கொண்டு அழைத்து செல்வான்.
வீட்டில் பிள்ளைதாச்சி பெண் உறங்க வசதி போதவில்லை என்று வேறு குறைபடல் இருவருக்கும்.
“அதான் சுளையா சம்பாதிக்கிறாளே உங்க சின்ன மக. எனக்கு வந்தா போனா தங்க தனி ரூமை தர சொல்லுங்க. இருக்கறது ஒரு ரூம். அங்கயும் அம்புட்டு சாமான்செட்டுக. மனுஷி இருக்க முடியுதா?…” என பாட்டாய் பாடினாள் சிவரஞ்சனி.
“இன்னைக்கோ நாளைக்கோன்னு பிஞ்சு தொங்குது இந்த வயர்கட்டில். இதுலையா நான் பிள்ளையை பெத்துக்க முடியும்? டெலிவரிக்கு முன்ன ஒரு கட்டில், மெத்தை வாங்கி போடுங்க….” என அதிகாரம்.
“அங்க சொகுசா இருந்துட்டு இங்க பணம் அனுப்ப கஷ்டமா இருக்கா இவளுக்கு? அதுவும் நான் மாசமாருக்கும் போது கஞ்சத்தனம் பண்ணாம முழுமனசா செய்ங்க. இல்லன்னா வேண்டாம்…” சுருக்கென்ற பேச்சுகளும்,
“பெத்த மகன்னு நினைப்பிருந்தா செய்ங்க? இல்ல தல முழுகிட்டா சொல்லிருங்க. நான் என் கஷ்டத்தோட கஷ்டமா இந்த புள்ளைய என் வீட்டுல இருந்து பெத்துக்கறேன்…” என பெற்றவர்களின் மனதை கொஞ்சமும் இரக்கமின்றி தன் சுயநலத்திற்காக கூறு போட்டுக்கொண்டு இருந்தாள்.
இளைய மகளிடம் சொல்லி தாயும், தகப்பனும் புலம்ப கூடுதலாய் செலவுகளுக்கு எங்கே செல்வது என திணறி போனாள் ஷ்ராவணி.
“ம்மா, என்ன செய்யனும்னு நினைக்கிறியோ செய். ஆனா என் சம்பளம் இவ்வளவு தான். திடீர்ன்னு எல்லாம் பணம் கொட்டாதும்மா. உனக்கு தெரியும் தானே?…” என ஷ்ராவணி சொல்லிவிட்டாள்.
“என்னடா வணி சொல்ற? நாங்க என்ன பன்றது? அக்காவும் பாவம். இந்த நேரத்துல சிலருக்கு சிடுசிடுப்பு இருக்கத்தான் செய்யும்…” என தாயும்,
“ஊருக்குள்ள மாசமாருக்கற புள்ளையை பார்க்காம விட்டுட்டாங்களேன்னு பேச்சு பேசுவாங்கம்மா. நாம தான பார்க்கனும்…” என தகப்பனும் சொல்ல வெறுத்துவிட்டது.
“அப்பா எனக்குன்னு எதையுமே ஒதுக்கிட்டு நான் அனுப்பலைப்பா. உங்களுக்கு தெரியாதா?…” என ஆற்றாமையுடன் கேட்க,
“எதுவுமே ஒதுக்காம தான் புதுசு புதுசா ட்ரெஸ் எடுத்து போட்டுக்கிட்டாளா உங்க மக? எடுத்தவ எனக்கு எதாச்சும் எடுத்தாளா? அவளுக்கு மட்டும் தானே?…” என்று சிவரஞ்சனி பொருமினாள்.
எல்லாவற்றிற்கும் சிகரமாய் சந்துருவின் படிப்பை பற்றிய பேச்சு தான் ஷ்ராவணியை வெகுண்டெழ செய்தது.
பன்னிரெண்டாம் வகுப்பை முடித்து நல்ல மதிப்பெண்களில் சந்துரு தேர்ச்சிபெற்றிருக்க அதற்கான கல்லூரியையும் ஷ்ராவணி தேடி பார்த்திருந்தாள்.
தம்பியை நல்லவிதத்தில் படிக்க வைத்துவிட வேண்டும் என்பதில் அத்தனை முனைப்புடன் காஞ்சிபுரத்தில் கல்லூரியை பார்த்திருக்க வீட்டில் அதற்கும் தடா போடவும் தான் அத்தனை பேசிவிட்டாள்.
“என்ன நினைச்சிட்டு இருக்கீங்க? அவனை படிக்க வைக்க வேண்டாம்ன்னா?…” என ஊருக்கு சென்ற பொழுதில் கேட்டுவிட பெரிய பிரச்சனை தான்.
சந்துருவை கல்லூரியில் சேர்ப்பதற்காக அழைத்து செல்லவும், அப்படியே குடும்பத்தினையும் பார்த்துவிட்டு வர கிளம்பி ராமேஸ்வரம் மனதை வேதனைப்படுத்தி தான் அனுப்பியிருந்தனர்.
ஊர் வந்து சேர்ந்த பொழுது எத்தனை சந்தோஷமாக அவ்வளவு இனிப்புகளும், பழங்களும் என்று வாங்கி சென்றிருக்க சிவரஞ்சனியும் அங்கே தான் இருந்தாள்.
“வாங்கிட்டு வரும் போது என்ன வேணும்னு கேட்டு வாங்கமாட்டியா?…” என வாங்கி வந்தவற்றை குறை சொல்லியபடி தான் சாப்பிட்டாள்.
“நான் திடீர்ன்னு கிளம்பினேன் க்கா. அதான் சொல்லலை…” ஷ்ராவணி தமக்கை தாயாக போகிறாளே என தன்மையுடன் பதில் பேசினாள்.
“ம்க்கும், சொல்லாம கிளம்பி மட்டும் வந்துடு…” என சலித்துக்கொண்டாள்.
இரண்டு நாட்களுக்கு ஒன்றும் தெரியவில்லை. சாதாரணமாகவே இருக்க ராமன் தான் என்னவோ தயங்கியபடி வலம் வந்தார்.
சந்துரு முகத்தில் அத்தனை சந்தோஷம். கல்லூரியில் சேர போகிறோம் என நினைத்து நினைத்து மகிழ்ந்துகொண்டிருந்தான்.
அன்று இரவு பேருந்து. எல்லாம் எடுத்து வைத்துவிட்டு மதிய உணவை முடித்துக்கொண்டு அமர்ந்திருக்க முதலில் ராமன் தான் ஆரம்பித்தார்.
“தம்பி படிப்புக்கு பீஸ் எல்லாம் ரொம்ப ஜாஸ்தியாம்மா?…” என்று கேட்க,
“அப்படி இல்லைன்னு சொல்லமுடியாதுப்பா. வரும் தானே? இது கூட இல்லைன்னா எப்படி? பார்த்துக்கலாம்…” என்றாள் சந்துருவின் தலையை லேசாய் கலைத்தபடி.
“என்ன பார்த்துக்கலாம்? அப்பா உடைச்சு பேசுப்பா….” என்ற சிவரஞ்சனி,
“நானே சொல்றேன். இந்த வருஷம் காலேஜ்ல சேர்க்க வேண்டாம். ரெண்டுவருஷம் போகட்டும். அப்பறமா படிக்க வை. என்னவும் பண்ணு…” என சொல்ல அதிர்ந்து போனார்கள் ஷ்ராவணியும், சந்துருவும்.
ஆசையுடன் இருந்தவனின் முகம் அப்பட்டமாய் வாடி போக கண்ணீர் வந்துவிட்டது சந்துருவிற்கு.
“அக்கா என்ன பேசற?…” என ஷ்ராவணி அதட்ட,
“எல்லாம் நம்ம நல்லதுக்கு தான் பேசறேன். இப்பவே நமக்கு அவ்வளவு கடன் இருக்கு. வட்டி கட்ட முடியலைன்னு எனக்கு செய்யறதுக்கே இழுத்தடிக்கிற. இதுல இவன் படிப்பு அவசியமா?…” என்றாள்.
“ப்பா, என்னப்பா அக்கா இப்படி பேசறா?…” ஷ்ராவணி தந்தையிடம் கேட்க தாய் கூட வாய் திறக்கவில்லை.
சந்துரு பெற்றோரை தான் மாற்றி மாற்றி பார்த்தான். அவர்களாவது பெரியக்காவை தடுத்து பேசமாட்டார்களா என.
“யோசிச்சு பார்த்தா அக்கா சொல்றதும் சரின்னு படுத்து வணிம்மா. நம்ம சூழ்நிலைக்கு பையனை படிக்க வைக்கிறது நடக்கற காரியமா? ரெண்டுவருஷம் எங்கையாவது வேலைக்கு சேரட்டும்…”
“ப்பா, சும்மா இருங்க. என்ன பேசறீங்க? நான் எவ்வளவு சந்தோஷமா அவனை கூட்டிட்டு போக வந்தா…”
“ப்ச், வணி உனக்கு ஒன்னும் தெரியாது. நீ பேசாம இரு. அப்பாவுக்கு முன்னை போல வேலை பார்க்க முடியலை. உடம்பு ஒத்துழைக்களை. எனக்கு பேர்காலம், குழந்தைக்கு சீர், அதுக்கடுத்து இன்னும் எவ்வளவு இருக்கு? எல்லாம் முடிய ரெண்டுவருஷமாவது ஆகும்…”
சிவரஞ்சனி தான், தன் சுகம், தன் சுயநலம் என மட்டுமே யோசித்துக்கொண்டு பேச அதற்கு வீட்டில் இருப்பவர்களும் தலையாட்டினார்கள்.
“இப்பவே உன் சம்பளத்துல கடனுக்கும், செலவுக்குமே சரியா போகுது. கொஞ்சமாவது சேர்த்தா தான் ஒவ்வொரு விசேஷமா செய்ய முடியும். பின்ன முடியலைன்னு இங்கயும், அங்கயுமா இழுத்துக்கோ பறிச்சுக்கோன்னு துடைச்சாப்பல தான் செய்வீங்க…”
“க்கா, உனக்கு செய்யனும், அவ்வளவு தானே? அதுக்கேன் நீ சந்துரு படிப்புல கை வைக்கிற? உன் வேலையை மட்டும் பாரு…” என்றாள் ஷ்ராவணி.
“பார்த்தீங்களாப்பா? எவ்வளவு பேசறா உங்க சின்ன மக? அவ நல்லதுக்கு தானே சொல்றேன்…” என தந்தையிடம் சொல்லிய சிவா,
“இங்க பாரு சந்துரு. உனக்குத்தான் உன் அக்காவை ரொம்ப புடிக்குமே? அவள கஷ்டப்படுத்தி நீ படிக்கனுமா? ஏன் ரெண்டுவருஷம் கழிச்சு படிச்சா உன் தலையில ஏறாதா? படிக்கிற புள்ளைங்க எப்ப படிச்சாலும் படிப்பு வரும்…” என சொல்ல சந்துரு கலங்கிவிட்டான்.
“வணிக்கா,…” என அவள் கையை பிடிக்க,
“எனக்கு ஒரு கஷ்டமும் இல்லைடா. நீ பேசாம இரு…” என தம்பியின் கண்ணீரை துடைத்தவள்,
“நீங்க என்னப்பா சொல்றீங்க?…” என தகப்பனை பார்க்க,
“நான் சொல்லிட்டேனேம்மா?…” என தப்பித்துக்கொள்ள பார்த்தார்.
“எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலை வணிம்மா. ஆனா உனக்கு ரொம்ப கஷ்டம்டா. நீ தர பணத்தை வச்சு தம்பி படிப்புக்கும் ஒதுக்க முடியாதே? உனக்கு தெரியாதா?…” என்றார் அவர்.
“உங்களுக்கு தர பணத்தை யார் அவனுக்கு ஒதுக்க சொன்னா? அது எப்பவும் போல உங்களுக்கு வரும் தானே?…” என ஷ்ராவணி சொல்ல,
“அப்ப தனியா நீ பணத்தை பதுக்கி வைக்கிறியா?…” உடனே பிடித்துவிட்ட சிவரஞ்சனி,
“பார்த்தீங்களாப்பா?…” என தாயையும், தந்தையையும் பார்க்க அவர்கள் இருவருமே அதனை நம்பிவிட மனது விண்டுவிட்டது ஷ்ராவணிக்கு.
“என்னம்மா? அப்படியா?…” என்றார் ராமன் உடனே.
“அப்பா, நான் ஆபீஸ்ல லோன் போடுவேன். அவ சொல்றான்னு நீங்களும் நம்பி கேட்கறீங்களே?…” என்றவள் உண்மையை சொல்ல வந்த சந்துருவின் கையை பிடித்து தடுத்துவிட்டாள்.
ட்யூஷன் சென்று தனியே சம்பாத்தியம் என்று சொன்னால் அதையும் வாங்கி குடும்பத்திற்கு போட்டு ஒன்றுமில்லாமல் போய்விடும் என அதனை சொல்லவே இல்லை.
“லோன் போட்டா சம்பளத்துல பிடிப்பாங்கப்பா. கேளுங்க…” அதனையும் தூண்டிவிட ராமன் பேசும் முன்,
“பேசாம ஒன்னு பண்ணுறேன். நானும் வேலையை விட்டுட்டு வந்து இங்கயே இருக்கறேன். நீங்க சொல்றதெல்லாம் கேட்டுட்டு. போதுமா?…” என படபடப்புடன் கேட்டுவிட ராமன் வாயை மூடிக்கொள்ள சிவரஞ்சனி கோபத்துடன் பார்த்தாள்.
“ஏன் இந்த குடும்பத்துக்கு செய்யனுமேன்னு அவ்வளவு கஷ்டமா உனக்கு? உன் கடமையை தானே செய்யற?…” என கேட்க,
“ஏன்க்கா உனக்கில்லையா அந்த கடமை? நீயும் செய்யேன். செய்ய முடியலைன்னா குறைஞ்சபட்சம் தொந்தரவு செய்யாமயாச்சும் இரு…” என கடுப்பாய் சொல்லிய ஷ்ராவணி தந்தையையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு,
“ம்மா என்ன தான் நினைக்கறீங்க? நாலு வருஷம் கஷ்டப்பட்டா சந்துரு நல்ல வேலையில சேர்ந்திருவான். இத்தனை வருஷ கஷ்டத்துக்கும் சேர்த்து ஒரு விடிவு கிடைக்கும்ன்னு பார்த்தா இப்படியே தான் இருக்கனும்னு நினைக்கிறீங்க எல்லாரும்…” என கொந்தளிக்க,
“வணிம்மா…”
“ம்மா, யார் என்ன சொன்னாலும் சரி. நான் சந்துருவை கூட்டிட்டு தான் கிளம்புவேன்….” என முடிவாய் சொல்லிவிட,
“எல்லாம் சம்பாதிக்கிற திமிர். உன் கை ஓங்கியிருக்குன்னா இவ்வளவு பேச்சு?…” என முனங்கிக்கொண்டு ராமன் செல்ல ஷ்ராவணி வெறித்த பார்வையுடன் அமர்ந்துவிட்டாள்.
இரவு உணவு எதுவும் எடுத்துக்கொள்ளவில்லை. சந்துருவுடன் பஸ் நேரத்திற்கு முன்பே கிளம்ப அதுவரை ராமன் வீட்டிற்கு வரவில்லை.
தாயிடம் சொல்லிவிட்டு கிளம்பிய ஷ்ராவணி, சந்துரு இருவரும் சிவரஞ்சனியை தேட அவள் சொல்லாமலே அவள் வீடு சென்றிருந்தாள்.
“பார்த்தியா உன் பெரிய பொண்ணு லட்சணத்தை? அக்கா வந்து ரெண்டுநாளும் கொஞ்சமும் நிம்மதியா இருக்கவிடாம பண்ணிட்டு இப்ப கிளம்பும் போது சொல்லிட்டு போக கூட இருக்கலை…” என்று சந்துரு சொல்ல,
“பத்தரமா போய்ட்டு வாப்பா…” என்றார் அவர் அதனை கண்டுகொள்ளாமல்.
“ம்மா, ஆனா இதை மறக்கமாட்டேன் ம்மா. அப்பாவும், நீங்களும் பேசுவீங்கன்னு நினைச்சேன். பேசலை. அதுக்காக இதை மனசில வச்சு உங்களை பார்த்துக்காம போயிட மாட்டேன். இதை நினச்சு நீங்க வருத்தபடுவீங்க பாருங்க…” என்று சொல்ல,
“சந்துரு விடுடா…” என அவனின் முதுகில் தட்டிகொடுத்தாள் ஷ்ராவணி.
“இப்பயே இவன் இவ்வளவு பேசறான்?…” என்றவரை முறைத்தவள்,
“அவன் சின்னபையன். அவன் வயசுக்கு உங்களை நல்லா வச்சுக்கனும்னு நினைக்கிறானே? சந்தோஷப்படுங்க. என்ன செஞ்சாலும் நாங்க பேச கூடாதுன்னு நினைச்சா முதல்ல அதை அக்காவுக்கு சொல்லுங்கம்மா…” என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டாள்.
தம்பியை கல்லூரியில் சேர்த்து அவனுக்கு தேவையானவற்றை செய்துகொடுத்து என்று அடுத்தடுத்த நிகழ்வுகள் எல்லாம் ஷ்ராவணியை வலை போல பின்னிக்கொண்டே இருந்தது.