இத்தனை இன்னல்களுக்கு நடுவிலும் சிறு முள்ளாய் வம்சியின் நினைவு அவ்வப்போது எட்டிப்பார்க்கும்.
எங்கேனும் இராணுவ உடையில் யாரையும் பார்த்தால், அவர்கள் சந்திப்புகளில் சம்பந்தப்பட்டவற்றை கவனித்தாலோ அவன் தான் முதலில் மனதில் எழுவான்.
அனுதினமும் வகுப்பெடுக்க செல்லும் வழியில் ஆனந்தின் வீட்டை கடக்கையில் இதயத்துடிப்பு எகிறி அடங்கும்.
எப்போதாவது இங்கே வருவானா என ஆரம்பக்கட்டத்தில் இருந்த எதிர்பார்ப்புகள் கூட நாளடைவில் அடங்கித்தான் போயிற்று.
எதிலும் பற்றற்ற தன்மை. ரசனைகள் குறைந்து, புன்னகை சிறிதாகி என இன்னும் சுருங்கிக்கொண்டாள் ஷ்ராவணி.
வேலையிடத்தில் கூட நன்மதிப்புகள் கூடியது அவளின் சிரத்தையான செயல்பாட்டில்.
இதோ கிளம்பிவிட்டாள் டெல்லிக்கு. மனதெல்லாம் வம்சியின் நினைவுகள் ஆக்கிரமித்திருந்தது கடந்த மூன்று நாட்களாக.
வேலை விஷயமாக டெல்லி அலுவலகத்திற்கு ஒரு பயணம். நான்குநாட்கள் வேலை அங்கே.
பயண விஷயம் சொன்ன தினத்திலிருந்து திக்கற்ற திசையில் சோலைகள் மலர்வதை போல உள்ளூர ஒரு குறுகுறுப்பு.
‘பார்ப்பேனா அவனை?’ என தோன்றிய எண்ணங்கள் அவன் தன்னிடம் காட்டிய அலட்சிய பேச்சுக்களில் சுருண்டுவிட்டது.
‘ம்ஹூம், வாய்ப்பில்லை. எங்கே இருப்பானோ? பார்த்தாலும் பெரிதாய் அவன் தன்னை கண்டுகொள்வானோ என்னவோ?’ என்று தான் நினைத்திருந்தாள்.
ஷ்ராவணி, குமுதா அவர்களின் ஹெச்.ஆர். என்று மூவர் அணி வந்திருக்க முதல் இரண்டு நாட்களும் பார்க்கும் திசைகளில் எல்லாம் அவளறியாமல் வம்சியை தான் தேடியது.
அந்த ஆறடி முரடனின் அனுசரிப்பான கடைசி சிரிப்பும், புன்னகையும் பெரிதாய் இம்சிக்க விழி திறந்தே ஒரு உறக்கம் என்பதை போன்று இரவுகளில் நிம்மதியிழந்தாள்.
“வந்திருக்கவே கூடாது. தப்பு பண்ணிட்டேன்…” என்று தனியே புலம்பும் அளவிற்கு அவன் மீதான தேடல் அவளை ஆட்டிப்படைத்தது.
“லூசா நீ? இந்த நேரம் அவனுக்கு கூட லைஃப்ல ஒரு பொண்ணு வந்திருக்கலாம். இப்படி நினைச்சுட்டு இருக்க?…” என தன்னையே நிந்தித்துக்கொண்டாள்.
இரண்டு நாட்கள் விடுமுறை. அடுத்த இரண்டு நாட்கள் தான் அலுவலகம். இப்படி இடைநாளில் கிளம்பி வந்திருக்க இருநாட்கள் அறைக்குள் இருக்கமுடியாமல் வெளியே கிளம்பினார்கள் மூவரும்.
கார் புக் செய்துகொண்டு ஒவ்வொரு இடமாய் சுற்றி முடித்து கடைசியாக தாஜ்மஹால் வந்து சேர்ந்தனர்.
மற்ற இருவரும் இடங்களை பார்த்தனர் என்றால் அங்கே ஷ்ராவணி மனிதர்களை கவனித்தாள்.
‘செய்யாதே, பார்க்காதே’ என மூளை கட்டளை பிறப்பிக்க மனது அடங்குவேனா என்றது.
தன்னை எல்லாம் அவனுக்கு நினைவிலும் இருக்குமா என ஒரு எண்ணம் பிறக்க அடிமனதிலிருந்து ஒரு வலி கண்ணை நிறைத்து தொண்டையடைக்க செய்தது.
கைகளை கட்டியபடி அந்த கட்டிடத்தை பார்த்தாள். அவளை பொறுத்தவரை அப்படித்தான் தெரிந்தது.
அந்த சின்னம் எத்தனையோ பேருக்கு காதல் சின்னமாக தெரிந்தால் ஷ்ராவணிக்கு உயிரற்ற இடமாக தெரிந்தது.
“இன்னும் எவ்வளவு நேரம் குமுதா க்கா? கிளம்ப வேண்டாமா?…” என கேட்டாள்.
“அதுக்குள்ளையா? இப்ப தான் வந்திருக்கோம். இந்த யமுனையாற்று நீரோட்டத்துல தாஜ்மகாலோட ரிப்லெக்ஷன் தெரியுதே? நைட்ல லைட்டிங், நிலா வெளிச்சத்துல இன்னும் அழகா இருக்குமாம். மேம் ரூம்க்கு போய் என்ன செய்ய? பார்த்துட்டே போவோம்ன்னு சொல்லிட்டாங்க…”
குமுதாவின் குரலில் அத்தனை சந்தோஷம். இப்படியெல்லாம் எங்கும் சென்றிருக்கவில்லை. முதல்முறை வந்திருக்க செலவில்லா பயணம் வேறு.
அது இன்னுமே மகிழ்ச்சியை தந்திருந்தது. குமுதாவின் புன்னகையில் தானும் சிரித்தவள் தலையசைக்க,
அண்ணார்ந்து பார்த்த ஷ்ராவணி நிலவை பார்த்துவிட்டு மீண்டும் தாஜ்மஹாலை பார்க்க நெஞ்சில் அழுத்தம்.
அங்கே இருக்கவே முடியாமல் மூச்சு முட்டியது. இன்னும் சிறிது நேரத்தில் இருட்டிவிடும்.
இவர்களை விட்டு கிளம்பவும் முடியாமல் இருக்கவும் முடியாமல் மெல்ல நகர்ந்து திரும்பியவள் பார்வையில் அவன் கையில் கேமராவுடன்.
எதிர்பார்க்கவே இல்லை. துளி துளியாய் தேனை பருக ஆசைகொண்டவள் முன்பு மொத்தமாய் தித்திப்பை காட்டவென்று வந்து நின்றுவிட்டானோ?
அவள் நின்றதை அப்படியே படம் பிடித்துவிட்டு கேமராவை இறக்கியவன் புன்னகையுடன் பார்க்க, கால்கள் நிற்கவில்லை ஷ்ராவணிக்கு.
அத்தனை வேகத்தில் அவன் திசை நோக்கி நடந்தவள் நடை ஓட்டத்தில் ஆரம்பித்து மீண்டும் நடையில் நின்று எட்டுக்களாய் மாறி ஒருகட்டத்தில் அவனை நெருங்கும் முன் மீண்டும் திரும்பிவிட்டாள் தலையசைப்புடன்.
இதனை வம்சியும் எதிர்பார்க்கவில்லை. தன்னை பார்த்த நொடி அவள் காட்டிய ஜாலங்களும், முகத்தில் வந்துபோன தவிப்புகளும் அவன் விழிகளில் இருந்து தப்பவில்லையே.
வேகமாய் தன்னை நோக்கி வந்தவள் அருகே நெருங்கும் முன் மீண்டும் விலகி செல்ல தானே வந்துவிட்டான் அவளிடம்.
எத்தனை தான் சுதாரித்து, தன்னை தன் மனதை அடக்கிக்கொண்டு அவனை சாதாரணம் போல் பார்த்தாலும் அவள் விழிகள் அலைபாய்ந்தது அவனிடத்தில்.
“ஹ்ம்ம், குட். நீ எப்படி இருக்க?…”
“இருக்கேன் ஸார்…” என்றவளை ஆழ்ந்த பார்வை பார்த்தவன்,
“என்ன திடீர்ன்னு டெல்லி? சர்ப்ரைஸ்…”
“சர்ப்ரைஸ் தான். அபிஷியல்….” என்றவள்,
“இங்க உங்களை பார்ப்பேன்னு நினைக்கவே இல்லை…”
“ஹ்ம்ம், நானுமே…” என்னும் பொழுதே,
“சைத்ரயேஷ்…” என வந்துவிட்டார் அவனின் சித்தி சாந்தினி.
“ரண்டி பின்னி…” (வாங்க சித்தி) என்றவன் அவர் அருகே வரவும் அவர் தோளில் கை போட்டுக்கொண்டான்.
“என்னோட சித்தி. அம்மாவோட தங்கச்சி…” என அவளிடம் அறிமுகம் செய்து வைத்தான்.
“வணக்கம்….” ஷ்ராவணி கை கூப்ப,
“இவங்க நிலா…” வம்சி சொல்லவும்,
“இல்லை ஷ்ராவணிதேவி…” என்றாள் அவள்.
“இத்தரா?…” (ரெண்டு பேரா?)சாந்தினி அவனிடம் கேட்க,
“ஆமாம்…” என வம்சியும், புரியவில்லை என்றாலும் அவர் பெயரை தான் கேட்கிறாரோ என நினைத்து,
“ஷ்ராவணி தான்….” என ஷ்ராவணியும் சொல்ல அவர் திருதிருத்தார்.
“சைத்ரயேஷ் ஏமனி செப்பரா?…” (என்னன்னு ஒழுங்கா சொல்லுடா) என அவனின் தோளில் தட்டினார்.
“ஈ பேருக்கு காரணம் ஏமனி மல்லி செப்தானு…” (பேர் காரணம் அப்பறம் சொல்றேன் )என்றவன்,
“ஈ அம்மாயி சென்னையிலோ பணி சேஸ்துந்தி, இப்புடு பணி மீது இக்கடக்கி ஒச்சிந்தி…” (இவங்க சென்னையில வொர்க் பன்றாங்க. அபிஷியலா டெல்லி வந்திருக்காங்க) என்றான்.
வம்சி தெலுங்கில் சொல்ல ஷ்ராவணி அவன் சொல்லிய சென்னை, அபிஷியல், டெல்லி என்ற வார்த்தைகளை கவனித்தாள்.
“ஈ அம்மாய்யினி நேனு பெல்லி சேஸ்கோ போத்துன்னான்னு…” (சித்தி நான் இந்த பொண்ணை தான் கல்யாணம் பண்ணிக்க போறேன் நான்) என சாந்தினியிடம் சொல்லியவன்,
“ஆமா தானே நிலா?…” என கேட்க அதற்குமே என்னவோ தன் குடும்பத்தை பற்றி சொல்கிறானோ என தலையை ஆட்டி வைத்தாள் ஆமோதிப்பாய்.
சாந்தினியின் திகைப்பு என்னவென்று கூட புரியவில்லை. ஒருவேளை தான் வேலை பார்க்க வந்து இருப்பதும், தன் குடும்ப சூழ்நிலையையும் அறிந்து அப்படி பார்க்கிறாரோ எதுவும் புரியவில்லை என்றாலும் ஷ்ராவணி சிரிப்புடன் நிற்க,
“அப்போ நான் சாஃப்ட் இல்லையா? ரஃபா?…” என்றான் அதற்கு பதில் சொல்லாமல்.
“நான் அப்படி சொல்லலை…”
“பின்ன?…” என இன்னும் நெருங்கி நின்று கேட்க திகைத்து போனாள் ஷ்ராவணி.
இதென்ன இவன் பேச்சிலும், பார்வையிலும் இத்தனை உரிமை. ஒருவேளை தான் உணர்ந்தது பொய்யோ? என் எதிர்பார்ப்புகள் அப்படி தோற்றத்தை தருகிறதோ என்றவளுக்கு மறுநாள் தான் விஷயம் விளங்கியது.