வெளிச்சம் குறைந்து நன்றாக இருட்ட ஆரம்பித்திருக்க அந்த நிலாவெளியில் ஆற்றினோரம் மனதுக்கு பிடித்த பெண்ணுடன் அந்த பொழுதே ஏகாந்தமாய் இனித்தது வம்சி சைத்ரயேஷ்க்கு.
“உட்கார் நிலா…” என மணலில் அமர்ந்து கொண்டான்.
“இல்லை டீம் மேட்ஸ் இருக்காங்க. தேடுவாங்க…” ஷ்ராவணி இன்னும் நின்றுகொண்டே பேச,
“அங்க தான் இருக்காங்க. கூப்பிடுவாங்க. உட்கார். எவ்வளவு நாளாச்சு உன்னை பார்த்து…” என சொல்லவும் சற்றே எரிச்சல் மண்டியது ஷ்ராவணிக்கு.
‘பேசனும்னு நினைச்சா கூப்பிடனும். பார்த்ததால பேசறார். இல்லைன்னா?’ என தோன்ற மௌனமாக அமர்ந்தாள்.
குமுதாவை திரும்பி பார்க்க அவள் இங்கே எங்கே கவனிக்க? தனது சொந்தங்களுக்கு வீடியோ கால் செய்து தாஜ்மஹாலை காண்பித்து பெருமிதமாய் பேசிக்கொண்டிருந்தாள்.
“அவங்க எங்கயும் போகமாட்டாங்க…” வம்சி சொல்லவும் அவனை பார்த்தாள்.
“இல்லன்னா நானே நீ தங்கியிருக்கற இடத்துல ட்ராப் பன்றேன், அப்ப ஓகே வா?…” என கேட்க,
“ஹாங், இல்லை அதெல்லாம் வேண்டாம், நான் அவங்க கூடவே போய்ப்பேன்…” என்றவள்,
“உங்களுக்கு எதுக்கு சிரமம்?…” சாதாரணம் போல சொன்னாலும் அழுத்தமாய் சொல்லியவிதத்தில் அவனுக்கான குத்தல் என புரிந்துகொண்டவன் முகத்தில் மென் புன்னகை.
“நானும் மனுஷன் தானே? ஓகே லீவ் இட். நல்ல மூட். சண்டை போட்டு ஸ்பாயில் பண்ணிக்கனுமா?…” அவன் கேட்டவிதத்தில் இல்லை என தலையசைத்தாள்.
‘சரிதான். வேண்டாம், வேண்டாம். கொஞ்ச நேரம். அடுத்து எப்போவும் பார்க்கும் அவசியமில்லை. எதற்கு சண்டை?’ என அவளுக்கும் தோன்ற சிரித்தபடி இப்போது தெளிவுடன் பார்த்தாள்.
“ஹ்ம்ம், சரி சொல்லு. லைஃப் எப்படி போகுது?…” என்று கேட்க சிரித்த முகத்தில் சோகம் இழையோட,
“போகுது. அது வேகத்துக்கு என்ன குறைச்சல்?…” பிடிகொடுக்காமல் ஒரு பதில்.
“ஊர்ல எல்லாரும் எப்படி இருக்காங்க? உன்னோட அப்பா, அம்மா, தம்பி?…”
“ஹ்ம்ம் நல்லாயிருக்காங்க…” என்றவள், ‘நீங்க பார்த்தப்போ இருந்தமாதிரி இப்ப இல்லை’ என சொல்ல வந்த வார்த்தைகளை விழுங்கிக்கொண்டாள்.
‘இவன் யார்? இவனிடம் எதற்கு இதையெல்லாம் பகிரவேண்டும்?’ என மனதை மறைத்து பொதுவாய் சொல்ல,
“தம்பி இப்போ காலேஜ் ஜாயின் பண்ணியிருக்கனுமே? என்ன டிப்பார்ட்மென்ட்? எந்த காலேஜ்?…” எனவும் விவரம் சொல்ல,
“ஏன் சென்னையிலையே எடுத்திருக்கலாமே?…”
“அங்க தான் கிடைச்சது. அதான்…”
“ஓகே, யூர் விஷ். நெக்ஸ்ட்…” என வம்சி சிரிக்க,
“என்ன நெக்ஸ்ட்? அவ்வளோ தான். வேலை, தம்பி படிப்பு, பேமிலி. அவ்வளோ தான்…”
“நான் நீ பிறந்த ஃபேமிலி பத்தி கேட்கலை நிலா. அடுத்து உன் லைஃப்ல என்னன்னு கேட்டேன்…” என்றதும் அவன் ஏன் இதனை கேட்கிறான் என்று தெரியவில்லை என்றாலும் மௌனமாய் பார்த்தாள்.
“சொல்லுங்க. என்ன கேட்கனும்? எனக்கே தெரியலை. அதான் அமைதியா இருந்தேன்…”
“உன்னை இருக்க வச்சு கட்டாயப்படுத்தி பேச வைக்கிறேனோ?…” என கேட்ட இந்த வம்சி அவளுக்கு முற்றிலும் புதிது.
எப்போதும் அதட்டல், அதிகாரம், முறைப்பு என்று பரிணாமங்களை காட்டியிருந்தவனின் இந்த கனிவு ஷ்ராவணியின் மனதை இன்னும் அலைகழித்தது.
இப்படி இவன் அன்பாக பேசி அவனை விட்டு விலகி சென்றால் இன்னுமே தான் நிலைகுலைந்து போய்விடுவோமோ என பயந்து அமர்ந்திருந்தாள். எழுந்து விலகி செல்லவும் மனதில்லை.
‘இரேன். அவனுடன் கிடைத்த இந்த நிமிடங்கள் இனி எப்போது வாய்க்கபெருமோ? இன்னும் சிறிது நேரம் இரேன்’ என்றது அவன்மீது விருப்பம் கொண்ட மனது.
“நிலா…” எனவும் தன்னினைவுகளில் இருந்து மீண்டவள் அவனை தவிப்புடன் பார்க்க அதனை எதிர்கொள்ள வம்சி தடுமாறி போனான்.
விழிகளை அகற்றி கொண்டவன் மனது அவளை நெருங்கவும் முடியாமல் எதுவும் சொல்லவும் முடியாமல் தள்ளாடியது.
இப்போதே தனது மனதை வெளிப்படுத்திவிட ஆசை தான். ஆனால் அவளின் முகத்திலிருந்து என்னவோ சரியில்லை என கண்டுகொண்டான்.
ஷ்ராவணியின் குடும்பத்தில் எதுவும் பிரச்சனையாக இருக்குமோ என யோசனையுடன் இருக்க,