அவன் மொழியை கற்றுக்கொள்ள அவசியமில்லை என வெகு சாதாரணமாக சொல்லியவளை தலையசைப்புடன் பார்த்தவன்,
“ஹ்ம்ம், பார்க்க தானே போறேன்…” என மர்ம புன்னகையுடன் மொழிந்தான்.
“என்ன?…”
“உள்ள போகலாம் நிலா. லஞ்ச் சூடா இருக்கு…” என்றதும் அவள் தலையசைத்து உடன் நடந்தாள்.
அவளுடன் தோள் உரச லாபியில் நடந்தபடி வம்சி அந்த தருணத்தை வெகுவாய் ரசிக்க ஷ்ராவணி அவனிலிருந்து விலகி நடக்கவும், நடக்கையில் தானே இணைந்து செல்வதுமாயிருக்க முகமெல்லாம் புன்னகை தான் வம்சியிடம்.
“ரா ம்மா…” என சாந்தினி தலையசைத்து வரவேற்றதும் ப்ரணவ்வும் அவன் மனைவியும் புன்னகைத்து பேசினார்கள்.
“உட்கார் நிலா…” என அவளுக்கு இருக்கையை எடுத்து போட்டு தானும் அருகே அமர்ந்துகொண்டான்.
“நான் உங்க தங்கச்சி கூட உக்கார்ந்துக்கறேன்…”
ஷ்ராவணி எங்கே வம்சியின் சித்தி தவறாக எடுத்துக்கொள்வார்களோ என நினைத்து சொல்லியவள் ஷைலஜாவை பார்க்க,
“பேசாம இரு நிலா…” என அவளின் கையை தட்டி அமர வைத்தான்.
“என்னதிது?…” என அவனை யாரும் கேட்டுவிடாதவாறு கடிந்துகொள்ள,
“எதை கேட்கிற நீ?…” வம்சி புரியாததை போல அவளை போலவே பேச பார்த்திருந்தவர்களுக்கு வேறு விதமாக தான் தோன்றியது.
“ஒன்னும் இல்லை. கொஞ்சம் சும்மா இருங்க ஸார். உங்க சித்தி என்ன நினைப்பாங்க?…” என்றவள் குரலில் அத்தனை சங்கடம்.
ஷ்ராவணி அவனின் அருகே தலைசாய்த்து மெல்லிய குரலில் கேட்டதும், கேட்ட விதமும் குறும்பாய் புன்னகைக்க செய்தது வம்சியை.
“நினைச்சா நினைக்கட்டும்…” என சிரிப்புடன் சொல்லியவன்,
“அதை விடு. உனக்கு என்ன வேணும்? என்ன சாப்பிடற?…” என்று கேட்க அதற்குள் ஷைலஜா தங்களுக்கு ஆடர் செய்ய ஆரம்பித்திருந்தாள்.
அதில் ஷ்ராவணியின் முகம் லேசாக மாறினாலும் அதனை காண்பித்துகொல்லாமல் இருக்க வம்சி கொடுத்த மெனு கார்டை பார்த்தபடி தலையை குனிந்துகொண்டாள்.
“ஷைலு, இன்னைக்கு வெஜ்…” என வம்சி சொல்ல,
“இல்லை இல்லை, அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்லை…” என அவனின் விரல்கள் மீது தன் கரத்தை அழுத்தி ஷ்ராவணி பதறி சொல்ல,
“பர்வாலேதம்மா, நீ தோடுகா மனம் கூட வெஜ் திண்ட்டாம்…” (இருக்கட்டும் ம்மா. உன்னோட நாங்களும் வெஜ் சாப்பிடறோம்) என்றார் சாந்தினி.
“நோ ஆன்ட்டி, ப்ராப்ளம் இல்லை. ஆபீஸ்ல ப்ரெண்ட்ஸ் கூட சாப்பிட்டு பழகிருச்சு. நீங்க சாப்பிடுங்க…” என்ற ஷ்ராவணி,
“மர்யாதா, மீரு அந்தரு உண்ணாரணி ஸார் செப்துந்தி…” (மரியாதை. நீங்க எல்லாம் இருக்கீங்கன்னு ஸார் சொல்றா) என்று சமாளித்தவன் ஷ்ராவணியிடம்,
“ஸார் சொல்லாத நிலா…” என்றான்.
“வேற எப்படி கூப்பிட?…”
“அதான் போன்ல சொன்னியே, ஹிட்லர்…” என ஒற்றை புருவம் உயர்த்தி சிரிக்க,
“ஸார்…”
“இப்ப தானே சொல்லாதன்னேன்…” என லேசாய் அதட்ட ஷ்ராவணி சாந்தினியை பார்த்தாள்.
“ஓகே, உனக்கு சூரா? நிஜமா இஷ்யூஸ் இல்லையே?…” என கேட்க,
“ஹ்ம்ம், நிஜமா தான்…”
“ஓகே…” என்றவன் ஷைலஜாவை ஒரு பார்வை அழுத்தமாய் பார்த்துவிட்டு ஒன்றும் சொல்லவில்லை.
“உனக்கு…” ஷ்ராவணியிடம் கேட்க,
“தயிர் சாதம்…” என தயக்கமாய்.
“இந்த லஞ்ச் உனக்காக தான். வெறும் தயிர்சாதமா?…” என்றவன்,
“வெஜ்ல வேற ஏதாவது சொல்லு நிலா…” என கேட்டும் மறுத்துவிட்டாள்.
“நேத்தும் வெளில குமுதாக்கா நிறைய ட்ரை பண்ணி பார்க்க சொல்லி ஸ்டமக் ஒருமாதிரியாகிட்டு. அதான் தயிர்சாதம் போதும்….” என்றவளை கட்டாயப்படுத்த முடியவில்லை.
ஷைலஜாவிற்கு வருத்தமாக இருந்தது. ஒருவேளை அனைவரும் சைவம் எடுத்திருந்தால் வேறு சாப்பிட்டிருப்பாளோ என்று தோன்ற அவளுக்கு உணவு இறங்குவேனா என்பதை போலிருந்தது.
“இது சவுத் இந்தியன் ரெஸ்டாரன்ட் தான் வதினா. வேற ட்ரை பண்ணி பாருங்களேன்…” ஷைலஜா சொல்ல,
“ஹ்ம்ம், இல்லை. இது போதும். ஏன் இவ்வளோ யோசனை பண்ணனும்?…” என சாதாரணம் போல சொல்ல வம்சிக்கு அந்த நிமிடம் சாந்தினியின் பார்வைக்கான அர்த்தம் புரிந்தது.
எத்தனை சந்தோஷமாக அழைத்துவந்து இப்போது இப்படி ஆரம்பமே மனசங்கடத்தில் சேர்ந்துவிட்டதே என மௌனமாக இருந்தான்.
“உங்க மேரேஜை எப்போ வச்சுக்கலாம்ன்னு கேட்காங்க வதினா…” ஷைலஜா சொல்ல இதை ஏன் இவர்கள் பேசுகிறார்கள் என்று தோன்றியது ஷ்ராவணிக்கு.
“புரியலை…” ஷைலஜாவிடம் சொல்லியவள் வம்சியை பார்க்க அவன் பார்வை அவளிடத்தில் தான் சிறு புன்னகையுடன்.
“என்ன புரியலை? உங்க வீட்டுல வந்து எப்போ பேசலாம்ன்னு அம்மா கேட்டாங்க…”
“எதுக்கு?…” ஷ்ராவணி இன்னும் குழப்பத்துடன் கேட்க ஷைலஜா தன் அண்ணனை திகைப்பாய் பார்த்தாள்.
“கேளு, சித்தி என்ன சொன்னாங்களோ அதையே கேளு. என்னை ஏன் பார்க்கிற?…” வம்சி தமிழில் அலட்டிக்கொள்ளாமல் சொல்ல ஷைலஜாவிற்கு ஓரளவு புரிந்துபோனது.
“வதினான்னா என்ன தெரியுமா?…” ஷைலஜா நேரடியாக ஷ்ராவணியிடம் கேட்க,
“ம்ஹூம்…” ஷ்ராவணி மறுப்பாய் தலையசைத்தாள்.
“அண்ணி, உங்களை நான் அண்ணின்னு கூப்பிட்டேன்…” என சொல்ல,
“அண்ணியா? அப்ப வதினான்றது பேர் இல்லையா?…” என அதிர்ச்சியுடன் அப்பாவியாக ஷ்ராவணி கேட்டதும்,
“ஹவ் க்யூட்?…” என்றான் வம்சி ரசனையுடன்.
“என்ன?…” ஷ்ராவணி வம்சியை பார்க்க,
“நீ சொன்னது க்யூட்டா இருந்தது…” என்றதும் அவள் வியப்புடன் ஷ்ராவணி கவனிக்க,
“வதினா என்னை பாருங்க…” என்றதும் அவள் பக்கம் ஷ்ராவணி திரும்பினாள்.
“அம்மா பேசினது உங்களுக்கும் அண்ணனுக்குமான கல்யாணத்தை பத்தி. அதுக்காக தான் உங்க வீட்டுக்கு எப்போ வந்து பேசன்னு கேட்டாங்க…” என உடைத்துவிட்டாள்.
“நேத்து கூட நீங்க அம்மாட்ட அண்ணா சொல்லி ஆசிர்வாதம் வாங்கினீங்க தானே? இதுக்கு தான். அண்ணா அப்பவே சொல்லியாச்சு…” அடுத்ததாய் சொல்ல ஷ்ராவணிக்கு அதிர்வில் தலை சுழன்றது.
அந்த அதிர்ச்சியில் கையில் இருந்த ஸ்பூனை இறுக்கமாய் பிடித்தபடி ஷ்ராவணி சிலை போல அமர்ந்துவிட்டாள்.
தன் காதில் விழுந்த செய்தி உண்மையா, பிரம்மையில்லையே என அத்தனை யோசனையும், படபடப்பும்.
எதை வைத்து இவர்கள் தன்னிடம் இதனை கேட்கிறார்கள்? ஒருவேளை தங்கள் இருவரையும் அந்த கோணத்தில் கவனித்திருப்பார்களோ?
தங்களை தவறாக புரிந்துகொண்டு தான் கேட்கின்றனரோ என பல்வேறு யோசனைகளை தாங்கியபடி வம்சியை பார்க்க,
“நீ கேட்டது சரி தான் நிலா…” என்றான் அவன்.
“என்ன?…”
“நான் சொல்லித்தான் அவங்க கேட்டாங்க…” அடுத்ததாய் சொல்ல இன்னுமே அதிர்ச்சி.
“நேத்து சித்திட்ட உன்னை தான் நான் கல்யாணம் பண்ணிக்க போறேன்னு சொன்னேன்…” என இன்னுமே சிரித்துக்கொண்டே சொல்ல,
“அண்ணய்யா…” ஷைலஜா அழைக்க,
“ஷைலு அவ பேசட்டும். நீ சைலண்டா இரு….”
“இது தப்பில்லையா? அப்போ அவங்களுக்கே தெரியாது நீங்க பேசினது. சரியா?…” அவள் கேட்க,
“என்னம்மா?…” என்றார் புரியாமல் சாந்தினி.
“பின்னி இப்புடு ஆமே வல்ல காது. அந்துகே சைலன்ட்டுக்கா உந்தி. மேமே செப்பெஸ்தாம்…” (சித்தி அவங்க வீட்டுல இப்ப பேச முடியாது. அதான் சைலண்ட்டா இருக்கா. நாங்களே சொல்றோம்) என ஷைலஜா கேட்டதை கண்டுகொள்ளாமல் பேசினான்.
அடுத்தடுத்து அவன் பேசிக்கொண்டே செல்ல வம்சியை என்னவென்று கூட கேட்க முடியாதபடிக்கு சாந்தினியின் கனிவான முகம் ஷ்ராவணியை கட்டிபோட்டது.
எதற்கு சொன்னான்? ஏதேனும் காரணம் இருக்குமோ? என வேறு விதமாகவும் யோசித்தாள் ஷ்ராவணி. முகமே வாடிவிட்டது.
ஷைலஜா அண்ணனை முறைக்க, வம்சி ஷ்ராவணியை கவனிக்க, சாந்தினி அதன் பின் அந்த பேச்சை தொடரவில்லை.
ஷ்ராவணிக்கு தான் முள் மேல் இருப்பதை போன்று அந்த சூழ்நிலை கடினமாக இருந்தது.