“நிலா போகலாம்…” வம்சி அவளிடம் சொல்லவும் அனைவரிடமும் தலையசைப்புடன் விடைபெற்று அவள் நகர்ந்தாள்.
ஷைலஜாவிற்கு ஒருபுறம் பாவமாகவும் இருந்தது. இன்னொருபுறம் அத்தனை பிடிக்கவும் செய்தது.
பிரணவ்விற்கு என்னவோ சரியில்லை என்பதை போல தோன்ற தங்கையை தனியே அழைத்து கேட்கவும் சொல்லிவிட்டாள்.
அத்தனை ஆச்சர்யம் தன் அண்ணன் இப்படியெல்லாம் செய்ய கூடியவனா? என்று நம்பமுடியாமல் இருந்தான்.
அண்ணன் ஒரு பெண்ணை விரும்புகிறேன் என்றதே பெரிதாய் இருந்தது முதல் நாள்.
இப்போது அந்த பெண்ணிற்கே தெரியாமல் அவளையும் சம்மதம் போல தாயிடம் சொல்ல வைத்து இதென்ன என்பது போல தான் தோன்றியது.
ஆனால் விளையாட்டிற்கு இல்லை என்பதும் புரிந்திருக்க இருவருமே தாயிடம் இதனை பற்றி மூச்சு விடவில்லை.
காரில் வந்து ஏறியதில் இருந்தே ஷ்ராவணி வம்சியிடம் எதையும் கேட்கவுமில்லை. பேசவுமில்லை.
சாலையில் தான் கவனம் என்பதை போலிருந்தாலும் நினைவுகள் எல்லாம் முதல் நாள் வம்சி தன்னிடம் பேசியவற்றில் தான்.
எப்படி இந்த மாதிரி ஒரு எண்ணம் இவனுக்கு வந்தது? நம்பவும் முடியவில்லை. நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.
ஒருவேளை இங்கே வந்த பின் தன்னை அவன் மனது தேடியிருக்குமோ என்றும் எண்ணவில்லை.
அவனிடம் அப்படி ஒரு பார்வையை கவனிக்கவில்லை. என்னவோ சிறு வித்தியாசம் தெரிந்தாலும் அது காதல் என்ற கணக்கீட்டிலேயே வரவில்லை.
இன்னொருபக்கம் பெண் பார்த்ததாக சொல்லியிருக்க ஒருவேளை அதிலிருந்து தப்பிக்க தன்னை பகடையாக்கியிருப்பானோ?
இது என்னவோ அவளுக்கே ஏற்க முடியவில்லை. அப்படி செய்பவனில்லை வம்சி என அவள் மனமே அந்த எண்ணத்திற்கு எதிராக இருந்தது.
இப்படி ஏகப்பட்ட குழப்பமும், கவலையும், படபடப்பும் என்று மாற்றி மாற்றி அவளை பந்தாட அவனோடு அந்த தனிமை அவளால் முடியவே இல்லை.
எப்போதடா தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு செல்வோம் என்று எண்ணம் அதிகமாய் வலுக்க சாலையின் திசையை பார்த்தவள் தாங்கள் வந்த பாதை போலில்லாது வெகுநேரம் பயணத்திலேயே இருக்க,
“இது ஹோட்டலுக்கு வேற வழியா?…” என்றாள் வம்சியை பார்க்காது பாதையில் பார்வையை வைத்து.
“கரெக்ட் கொஷின் நிலா. எங்க போறோம்? இதான் நீ கேட்கனும்…” என சொல்லவும் அவனை அச்சத்துடன் திரும்பி பார்த்தாள்.
“இப்பதான் என்னை பார்க்க தோணுதா உனக்கு?…” என்று கேட்க,
“ஹாங், என்ன?…”
“நத்திங்…”
“எங்க போறோம்ன்னு சொல்லுங்க…”
“உன் ஹோட்டலுக்கு இல்லை…”
“எனக்கு ஹோட்டலுக்கு போகனும்…”
“இப்ப ஏன்? சும்மா ஒரு ட்ரைவ் வா என்னோட….”
“ம்ஹூம், தலை வலிக்குது. ரெஸ்ட் எடுக்கனும்…”
“அந்த டேஷ்போர்டை ஓபன் பண்ணு…” என்றான்.
“எதுக்கு?…”
“சொன்னா செய்யமாட்டியா?…” என்றதும் ஷ்ராவணி அதனை திறக்க அதில் சின்ன மெடிக்கல் கிட்.
“ஹெட்டேக் டேப்லெட் இருக்கு. எடுத்து போட்டுட்டு கண்ணை மூடு. இன்னும் ஒருமணி நேரத்துக்கப்பறம் நானே எழுப்பறேன்…” என்றதும் அதிர்ந்துவிட்டாள்.
“ஒருமணி நேரமா? என்ன விளையாடறீங்களா? என்ன பண்ணாலும் நான் எதுவும் சொல்லமாட்டேன்னு நினைச்சீங்களா?…” என அத்தனை ஆத்திரத்துடன் கேட்டாள்.
இன்னும் அவன் சொல்லியது ஏன் என்றும் தெரியவில்லை. உண்மையா? இல்லை பொய்யா என்றும் தெரியாமல் மனதிற்குள் தவிப்புகள் தீயாய் தகிக்க கண்ணீர் இறங்கவா என்றது.
“உன்னை எங்கயும் கடத்திட்டு போகலை. டேப்லெட் போடு. இல்லைன்னா இன்னும் தலை வலிக்கும். வலிச்சாலும் பரவாயில்லைன்னா ஓகே…” என சாதாரணமாக தோளை குலுக்க அவனை அறைந்தால் என்ன என்று கோவம் வந்தது.
“டேப்லெட் போடு நிலா…”
“நிலா இல்லை. ஷ்ராவணி…” என அப்படி கத்தினாள் அவனிடம்.
“நிலா…” மீண்டும் சொல்ல,
“ஷ்ராவணி, ஷ்ராவணி, ஷ்ராவணி…”
“நிலா தான் எனக்கு. கத்தி கத்தி இன்னும் ஏன் பிரஷர் ஏத்திக்கற? நீ எத்தனை சொன்னலும் நிலா தான் சொல்லுவேன்…” என்றவன்,
“உங்ககிட்ட இவ்வளோ சீப் மென்டாலிட்டி எதிர்பார்க்கலை. ஒரு மேஜர் செய்யற வேலையா இது? என்னை இப்படி கட்டாயப்படுத்தி…” என்றதும் காரை அதே வேகத்தில் ப்ரேக்கிட்டு நிறுத்த கார் குலுங்கி அடங்கியது.
அதில் உயிரே போய்விட்டது ஷ்ராவணிக்கு. ஒரு நொடி அந்த எமனை பார்த்துவிட்டு வந்ததை போல நெஞ்சை பிடித்துக்கொண்டாள் உயிர் பயத்தில்.
“ஹேய் என்ன பண்ணேன் உன்னை? என்ன கட்டாயப்படுத்தினேன்? மேஜர்ன்னா?…” என்று கேட்க அவன் அதட்டலில் கண்ணீர் கரகரவென்று இறங்கிவிட்டது.
கலைந்த தலையுடன் பயத்துடன் மிரண்டுபோய் அவனை பார்த்தவளை கை நீட்டி தன் தோளில் சாய்த்துக்கொண்டான் வம்சி.
ஷ்ராவணி உடலில் அப்படி ஒரு நடுக்கம். இன்னும் வெடவெடவென்று நடுங்கிக்கொண்டு அவன் தோளில் கண்களை மூடி பயத்துடன் ஒட்டிக்கொண்டவள் உச்சந்தலையை ஆதுரமாய் வருடினான்.
“ஒன்னுமில்லைடா நிலாம்மா….” என சொல்லிக்கொண்டே இருக்க அந்த வார்த்தைகளிலும் அணைப்பிலும் கரைந்துவிடுவதை போல தோன்றியது ஷ்ராவணிக்கு.
மனதின் ஆசைகள் மீண்டும் உடைப்பெடுக்க அவள் வகுத்துவைத்த எல்லைகளை அவளே மீறிவிடும் அபாயத்திலிருந்து உடனே தன்னை மீட்டுக்கொண்டாள்.
அவனின் கையிலிருந்து வெடுக்கென்று விலகியவள் தன்னுடைய ஹேண்ட்பேக்கை இறுக்கமாய் பற்றியபடி முகத்தை திருப்பிக்கொள்ள வம்சியின் முகத்தில் சிறு புன்னகை.
ஷ்ராவணி அதன் பின் ஒன்றும் சொல்லவில்லை. தன்னுடைய மொபைலில் குமுதாவிற்கு மெசேஜ் அனுப்பிவிட்டு தான் இருக்கும் லொக்கேஷனையும் அனுப்பி வைத்தாள்.
ஓரவிழியால் அவள் செய்துகொண்டிருக்கும் விஷயங்களை பார்த்தவன் இதழ்களுக்குள் அடக்கப்பட்ட புன்னகை.
ஆனாலும் எதையும் கண்டுகொண்டதாக கூட காட்டிக்கொள்ளவில்லை. அமைதியாகவே ஷ்ராவணி வர அந்த பகுதியை பார்க்கவும் புருவம் சுருங்கியது.
மீண்டும் அதே இடமா? இங்கு எதற்கு என யோசித்தபடி வம்சியை பார்க்க அவன் திரும்பவில்லை.
மனது தடதடத்தது. ஒருவேளை? ஒருவேளை? என என்னென்னவோ எண்ணவோட்டங்கள் அவளை இழுத்துக்கொண்டு ஓடியது.
அப்படி எதுவும் இல்லையென்றால் என்ன சொல்ல? ஆமாம் என்றால் என்ன சொல்ல? இல்லை இது எதுவுமே இல்லாமல் வேறு எதுவுமானால்?
தவித்து அடங்கிய நெஞ்சத்தை கழுத்தோடு கை வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தவளின் தொண்டை வரண்டது.
காரை பார்க் செய்துவிட்டு வம்சி கீழே இறங்க ஷ்ராவணி அப்படியே தான் இருந்தாள்.
“பேசனும் நிலா. இறங்கி வா…” என்றவன் பார்வை யமுனையாற்றை ஒட்டிய தாஜ்மஹாலை பார்த்தது.
முதல் நாளே சொல்லியிருக்கவேண்டும். ஆனால் சூழ்நிலை இல்லையே? இதற்கு மேலும் தள்ளி போட எதுவுமில்லை.
பேசுவதற்கு இதை விட வேறு இடம் அவனுக்கு தோன்றவில்லை. எப்போதும் அந்த நேரத்தில் வெயில் தான் சுட்டெரிக்கும்.
ஆனால் அன்று குளிர்ந்த காற்றும், மழையை கூட்டிக்கொண்டு வருகிறேன் என்பதை போல வானம் மேகமூட்டத்துடனும் இருண்டு காணப்பட்டது.
“நிலா இறங்கு…” என்று கதவை திறந்து வைத்து அழைக்க மெதுவாய் இறங்கி வந்தாள்.
உள்ளே நுழைந்து ஓரிடத்தில் அமரும் வரை இருவரிடத்திலுமே பேச்சில்லை. அவள் ஏதேனும் கேட்கட்டும் என சிறிது நேரம் காத்திருந்தவன் பின் பொறுமையிழந்து,
“நிலா என்னை பாரேன்…” என கேட்க அவள் நிமிரவில்லை.
“ஓகே, உன் பேரன்ட்ஸ்ட்ட எப்ப நம்ம மேரேஜ் பத்தி பேசலாம்ன்னு நீ சொல்லு…” என்றான் நேரடியாக.
நிஜமே தான். அவளின் ஆன்மா கட்டியம் கட்டிக்கொண்டு அவன் வார்த்தைகள் மூலம் அவளுக்கு உணர்த்த உண்மைக்கும் சந்தோஷத்தில் தான் தட்டாமாலை சுற்றியிருக்க வேண்டும்.
ஆனால் கண்களில் கேள்வியுடன் அவன் பேசியதை கேட்டதன் ஆன்ம திருப்தி எல்லாம் பின்னுக்கு செல்ல,
“அப்போ நேத்து உங்க சித்திட்ட நீங்க சொன்னது நிஜமாவே தான். இல்லையா?…”
“ஹ்ம்ம், எஸ்…”
“எந்த நம்பிக்கைல?…”
“உனக்கும் என்னை பிடிக்கும்ன்னு தெரியும். அதான் சொல்லிட்டேன்…”
“தெரியும்ன்னா? எப்போ?…” அவளின் கேள்வியே அவள் மனதை வாய்வார்த்தையாக உணர்த்திவிட இன்னும் வம்சியின் முகம் இன்னும் ஒளிர்ந்தது.