ஷ்ராவணி அவன் பேசியதை இன்னும் நம்பமுடியாமல் பார்த்தபடி திகைப்புடன் நிற்க,
“ஹலோ நிலா…” என்றான் அவள் முன் கையை ஆட்டியபடி வம்சி.
“என்ன பேசறேங்க நீங்க?…” என திடுக்கிட்டு கேட்க,
“உனக்கு புரியனுமேன்னு தமிழ்ல தானே சொன்னேன்…” என்றான் மிதமான புன்னகையுடன்.
“உங்க லாங்க்வேஜ் ப்ளே இப்ப தானே புரியுது. எனக்கு உங்க மொழி தெரியாதுன்னு தானே இப்படி விளையான்டீங்க?…”
“ஷப்பா…” என நெற்றியை நீவிக்கொண்டவன்,
“இதுக்கு தான் உன்னை கத்துக்கோன்னு சொன்னேன். நீ கேட்கலை. இது என் ஃபால்ட் இல்லை…” என தோளை குலுக்கினான்.
“எவ்வளோ அலட்சியம் உங்களுக்கு?…” அதற்கும் சண்டைக்கு நின்றாள் ஷ்ராவணி.
“ப்ச், இப்ப என்ன உன் பிரச்சனை? ஆமா நேத்தே இல்லை அதுக்கு முன்னாடியே தெரியும். அதையும் நீ தான் உணர வச்ச…”
“அப்பவே ஏன் சொல்லலை?…”
“என்ன சொல்ல? நான் சொல்லியிருந்தா அதுக்கும் அன்னைக்கு குதிச்சிருப்ப தானே?…” என்றவன் எழுந்து நின்றுவிட்டான்.
விருப்பம் தெரிவித்த அன்றே இப்படி சண்டையிலா ஆரம்பிக்கவேண்டும் என்று சற்று சலிப்பாகி போனது.
“நேத்து சொல்லலாம்ன்னு தான் இருந்தேன்…” வம்சி கூற,
“அப்போ நேத்து இங்க என்னை பார்க்கலைன்னா?…” என கேட்டவளை எப்படி வாயடைக்க செய்வதென்று சுத்தமாய் தெரியவில்லை.
அதிலும் தங்களை போல பலர் அங்கே இருக்க அத்தனைபேரையும் வைத்துக்கொண்டு வாதாடவும் முடியாமல் கோபத்தில் மீசையை பிடித்து முறுக்கிக்கொண்டே நின்றான்.
இத்தனை தூரம் யாருக்கும் இப்படி வலிந்து பதில் சொல்லியதில்லை அவன் வாழ்வினில்.
இன்று தனக்கு எல்லாவற்றிற்கும் சேர்த்து செய்வதை போல ஷ்ராவணியின் பேச்சுக்கள் இருக்க,
“வா போகலாம்…” என அவளை அழைத்துக்கொண்டு முன்னே நடந்தான்.
திடீரென அவன் முகம் மாறிவிட்டு தன்னையும் அழைத்துக்கொண்டு கோபமாக செல்ல ஷ்ராவணிக்கு ஒருமாதிரியானது.
இவளுக்கு என்ன பதில் சொல்வது என்னும் அலட்சியமா? இல்லை கேள்வி கேட்டதனால் உண்டான கோபமா? எதுவும் புரியவில்லை.
அதுவேறு அவளை வண்டாய் குடைய தன் முன்னே செல்வபவனை ஒன்றும் செய்யமுடியாத ஆற்றாமையில் கால்களை உதைத்தபடி நடந்தவள் அவன் சட்டென திரும்பியதை கவனிக்கவில்லை.
முன்னே நடந்துகொண்டிருந்தவன் வந்துவிட்டு அப்படியே செல்வதா என உடனே திரும்ப அவனுக்கு அடுத்ததாக நடந்தவள் அதில் தடுமாறி பின்னே சாயும் முன் அவளையும் தாங்கி பிடித்து அப்படியே மொபைலில் அதனை படமும் பிடித்துக்கொண்டான்.
திகைத்த பார்வையுடன் ஷ்ராவணியும், அவளை அணைத்தபடி வம்சியும் மொபைலில் அடுத்தடுத்து நிழற்படமாக சேமிப்பாகியது.
என்ன செய்தான் என்று யோசிக்கும் முன் சடசடவென்று எடுத்து முடித்திருந்தான் அத்தனை படங்களை.
“நிலா…” என சிரித்துவிட்டவன் அவளின் தோளில் கை போட்டுக்கொள்ள,
“தொடாதீங்க…” என தட்டிவிட்டாள்.
“ஓகே, டச் பண்ணலை. ஆனா எவ்வளோ நாளைக்காம்?…” என சில்மிஷத்துடன் கேட்க,
“பேச்சை மாத்தறீங்க. ஏன் டைவர்ட் பண்ணிட்டே இருக்கீங்க?…”
“சரி கேளு, பதில் சொல்றேன்…” என பேன்ட் பாக்கெட்டில் கைவிட்டுக்கொண்டு அவன் நின்று கேட்க,
“நேத்து உங்க சித்திட்ட எதுக்காக அப்படி சொன்னீங்க?…” என்றவள்,
“ம்ஹூம். ஏன் உங்க சித்திட்ட அப்படி சொன்னதை எனக்கு தெரியாம மறைச்சீங்க? தெலுங்குல பேசி என்னை ஏமாத்துனீங்க? இதுல ஆசிர்வாதம். நானும் முட்டாள் மாதிரி என்னவோ நினைச்சு கால்ல விழுந்து. என்ன நினைச்சிருப்பீங்க என்னை?…”
“ஓஹ், வாவ். அப்போ எனக்கு ஏழு லாங்க்வேஜ் தெரியும். மத்ததுல சொல்லியிருந்தா ஓகே வா? இல்லை இப்ப வேணா ஒவ்வொரு லாங்வேஜ்லையும் உன்கிட்ட நேரடியா ப்ரப்போஸ் பண்ணவா?…”
அலட்டிக்கொள்ளாமல் கேட்டவனை என்ன தான் செய்வது என்று தெரியாமல் பார்த்தாள்.
“நான் பேசறது உங்களுக்கு புரியுதா?…”
“எனக்கு தமிழ் நல்லா புரியும்…” என்றான் சிரிப்புடன்.
“உங்ககிட்ட மனுஷி பேசுவாளா?…” என்று கோபத்துடன் அவனின் முன்னே நடந்தவள் காரின் அருகே சென்று நின்றுகொண்டாள்.
ஒரு பெருமூச்சுடன் வம்சியும் அவளை பின் தொடர அவன் வருவதை கவனித்தாலும் பேசவில்லை ஷ்ராவணி.
பேசி என்னவாக போகிறது? தனக்கு தேவையான பதிலோ, சமாதானமோ எதுவும் இவனிடமிருந்து கிடைக்க போவதில்லை என தெரியும்.
எதற்கு கேட்டு மண்டை காய்வதை விட பேசாமல் இருப்பதே மேல் என மௌனமாக கார் கதவை திறந்ததும் பின்னால் சென்று அமர வம்சியும் பின் பக்கம் வந்து அமர்ந்தான்.
“நீங்க இங்க வந்தா கார் யார் ஓட்டுவா?…” ஷ்ராவணி கேட்க,
“யாரும் ஓட்டவேண்டாம். இப்படியே இருப்போம்…” என சீட்டில் தலைசாய்த்து கண்ணை மூடிக்கொள்ள வெளியே மழை பிடித்தது.
“ப்ச், ஏன் இப்படி பன்றீங்க?…” ஷ்ராவணிக்கு அழுகையே வந்துவிடும் போலானது அவனின் அலும்பில்.
இன்னும் இவனிடம் என்னென்ன பரிமாணங்கள் உள்ளதோ என தெரியாமல் இதற்கே மூச்சு முட்டியது ஷ்ராவணிக்கு.
“இங்க பார் நிலா. நான் இவ்வளோ எக்ஸ்ப்ளைன் பன்ற ஒரே ஆள் நீ தான். சொல்ல போனா எனக்கு சுத்தமா பொறுமையே கிடையாது. ஆனா உன்கிட்ட ரொம்ப ரொம்ப பொறுமையா இருக்கேன்….”
“உங்க பொறுமை போக நான் என்ன பண்ணேன்?…”
“நீ இப்படி பண்ணினா நானும் இப்படித்தான் செய்வேன். என்னோட நேச்சர் இது தான். திருப்பி செய்வேன்…” என கூறிவிட்டு,
“நீ என்ன பண்ணலை? என்னோட வர முடியாதுன்ன. நான் என்னவோ உன்னை கடத்திட்ட மாதிரி உன் பிரெண்ட்க்கு லொகேஷன் ஷேர் பன்ற. இதெல்லாம் என்னன்னு தெரியாத சின்ன பையனா நான்?…”
அவன் கோபமாய் கேட்கவும் வாயை மூடிக்கொண்டாள். உண்மை தானே? இவனை விட வேறு எங்கே தனக்கு பாதுகாப்பு கிட்டிவிடும்?
ஆனால் அந்த நொடி பதட்டம், எதிர்பாராத திருப்பம், வம்சி மீதான கோபம் என எல்லாம் சேர்ந்து என்ன செய்கிறோம் என்றே தெரியாமல் நடந்துகொள்ள வைத்தது.
“நான் ப்ரெண்ட்க்கு…, அவங்க லேட்டாச்சுனா என்னை தேடுவாங்களே? அதான் லொக்கேஷன்…”
“பொய்…” என்றான் கடுமையாக.
“சமாளிக்காத, பொய் சொல்லாத. எனக்கு பிடிக்காது…”
“இல்லை நிஜம்மா…”
“நிஜங்கா?…” என கேள்வியாய் ஊடுருவும் பார்வையுடன் அவன் புருவம் உயர்த்த சில்லிட்ட மனதை அடக்கிக்கொண்டு வெளியே திரும்பிக்கொண்டாள்.
காரின் ஜன்னல் கண்ணாடியிலெல்லாம் மழைத்துளிகள் திரையாய் மறைத்திருக்க உள்ளே போதிய வெளிச்சமில்லை.
உள்ளூர அத்தனை படபடப்பாய் இருந்தது. இதற்கு முன்பென்றால் அவனுடன் தனியாய் இருப்பதென்றால் தயங்காமல் இருந்திருப்பாள் நாள் முழுவதும் கூட.
இன்றோ அவனின் மனதும், இத்தனை அடாவடியும் தெரிந்திருக்க அவனுடன் தனித்திருக்க உடல் நடுங்கியது.
“என்ன குளிர் அதிகமா இருக்கா? ஷிவராகுது?…” என அவளின் கையை பிடித்து தன் கைகளுக்குள் வைத்துகொண்டவன்,
“ஏன் நிலா? உன் ப்ரெண்ட்க்கு கரெக்ட் லொக்கேஷன் அனுப்பினா உன்னை கண்டுபிடிச்சு இங்க உடனே உன்னை சேவ் பண்ண வந்திருவாங்களா?…” என்றதும் அவனை வேகமாய் திரும்பி பார்க்க.
“நீ வேற இன்னும் ஓகே சொல்லலை…” என்றதும் அவனின் கரங்களுக்குள் இருந்து தன் கையை உருவிக்கொண்டவள் கதவை திறந்துகொண்டு முன்னால் வந்து அமர்ந்தாள்.
“இதை நீ முதல்லையே செஞ்சிருக்கலாம்…” என்றவன் உள்ளிருந்தே முன் சீட்டிற்கு மாற அவனை முறைத்தாள்.
“ப்ச், கொஞ்சமாச்சும் பீஸ்ஃபுல்லா பீல் பண்ண விடு நிலா…” என காரை கிளப்ப அதற்குள் அவனுக்கு வாகாய் வாகன நெரிசல். உள்ளம் துள்ளியது.
“ரைட், சொன்ன மாதிரியே இங்க தான் போல?…” என காரை மீண்டும் அணைத்துவிட்டு கையை கட்டிக்கொண்டான்.
“என்னலாம் பன்றீங்க நீங்க? எல்லாம் உங்களால தான்…” என்று தனது ஹேன்ட்பேக்கால் அவனை அடிக்க கை ஓங்கியவள் அப்படியே கைகளை இறக்கிக்கொண்டாள்.
“என்ன அப்படியே ஸ்டாப் பண்ணிட்ட? அடிக்கனும்னு தானே வந்த? இது எந்த உரிமைல நிலா?…” என கேட்க,
“உங்களுக்கு இப்பவும் புரியவே இல்லைல…” என்றவளிக்கு கண்கள் கலங்கியது.
“நேத்து நேத்து, ஏன் இன்னைக்கு என்ன நல்ல நாள் இல்லையா? ஆமா உன்கிட்ட சொல்லாம சித்திட்ட சொன்னேன். அந்த நிமிஷம் எனக்கு சொல்ல தோணுச்சு சொல்லிட்டேன்…” என்றவன்,
“நீ நினைக்கிறதெல்லாம் நான் பண்ணனும்னு எதிர்பார்க்காத நிலா. இதென்ன அபிஷியலா? இதுதான் இப்பதான் நடக்கனும்னு திட்டம் போட்டு பன்றதுக்கு…” என்றவன்,
“நேத்து உன்கிட்ட சொன்னேன் தானே? உன்னை நெக்ஸ்ட் மந்த் பார்க்க வரதா? ஏன் புரியலையா?…”
“நான் எதுவும் சொல்லலை. உங்க இஷ்டம் போல பண்ணுங்க…” ஷ்ராவணி அவனின் கோபத்தில் குரலை தழைத்து பேசினாள்.