அடுத்த இரண்டு நாட்கள் டெல்லியில் சென்ற வேகம் தெரியாதளவிற்கு விரைந்திருந்தது.
மறுநாள் காலை சென்னை கிளம்பவேண்டும். வம்சி முதல்நாள் இரவு அழைத்து பேசியிருந்ததோடு சரி.
இதோ உறங்கும் நேரமும் நெருங்கிவிட இன்னும் அவன் அவளுக்கு அழைக்கவில்லை.
திருமணத்திற்கு பேசிய பின்பு வம்சிக்கு தானே அழைத்து பேசியிருக்கவில்லை ஷ்ராவணி.
அழைக்கவும் மனது வராமல், இன்னும் கூப்பிடாமல் இருக்கிறானே என்ற காத்திருப்புகளுடன் மெல்ல கண்கள் சுழல உறக்கத்தை விரட்டியபடி கட்டிலில் மொபைலை பிடித்தபடி படுத்திருந்தாள்.
முதலில் மெசேஜ் வந்த சப்தம் ஒலிக்க போன் வெளிச்சத்தில் யார் என்று பார்க்க வம்சி தான்.
வாட்ஸ் ஆப்பில் குறுஞ்செய்தி அவனிடம் வந்திருப்பதாக மேலே காண்பித்தது. உடனே திறந்து பார்க்க சின்னதாய் ஒரு புள்ளியை மட்டும் அனுப்பியிருந்தான்.
“கொழுப்பு…” என சொல்லியவள் ஒன்றும் அவன் அனுப்பாததில் கடுப்புடன் மொபைலை அணைக்க உடனே அழைப்பு வந்துவிட்டது.
எடுக்கவா வேண்டாமா என மூளை யோசித்தாலும் அதற்குள் ஷ்ராவணி கைகள் தன்னைப்போல செயல்பட்டு வாயிலிருந்து முத்தும் உதிர்ந்துவிட்டது.
“உங்களுக்கு இவ்வளவு நேரமா எனக்கு கால் பண்ண?…” என்று கேட்டும்விட்டாள்.
“ஹேய் வெய்ட் பண்ணுனியா நீ?…” சிரிப்போடு அவன் கேட்க,
“இல்லையே? அதெல்லாம் இல்லை…” முறுக்கிக்கொண்டு பதில் இவளிடமிருந்து.
“அவுனா ம்மா?…” அவன் கேட்டவிதமே நம்பவில்லை என்பதை காண்பிக்க,
“இப்படித்தான் மெசேஜ் பண்ணுவாங்களா? வெறும் டாட் மட்டும்…” பேச்சை மாற்ற அடுத்த பேச்சிற்கு தாவினாள்.
“எஸ்கேப்பிசம் நிலா…” என சொல்லியவன்,
“நீ தூங்கியிருந்தா ஆன்லைன் வரமாட்ட. அதான் சின்னதா டாட். நீயும் வந்துட்ட…”
தன்னை இப்படி கூப்பிடுகிறானே என்று ஒருபுறம் மனதிற்குள் கோபம் பொங்கினாலும், தன்னை தானே அழைக்க தோன்றும் என்றும் தெரியாமல் இல்லை.
ஆனாலும் வம்சியின் இந்த பேச்சுக்கள் அவளை டெல்லி சந்திப்பின் முன் பின் என்று பிரித்து பார்க்க செய்தது.
முன்பிருந்தவனின் பேச்சில் தொனிக்கும் அதட்டலில் கூட மறைமுக அக்கறை இருக்கும்.
இப்போதோ உரிமை மட்டுமே மேலோங்கி இருக்க இன்னும் நெருங்கினால் அவன் பேச்சுக்கள் எல்லாவற்றிற்கும் உடனே தலையாட்டுவதை போலாகும் என மனதை அடக்கினாள்.
‘தனக்கு ஒன்றும் தெரியாதென்று மட்டம் தட்டுவான்’ இது மட்டுமே அவளின் மூளையை ஆக்கிரமித்திருந்தது தற்போதைக்கு.
‘ஒருவேளை விளையாட்டிற்கு கேட்கிறானோ? தன்னுடைய் பதிலில் தன்னை சோதிக்கிறானோ? தன்னுடைய மெச்சூரிட்டி லெவலை பரிசோதிக்கிறானோ?’ இப்படியாக பல குழப்பங்கள்.
‘ஊர் உலகத்துல இப்படி யாருமே லவ் பண்ணிருக்க மாட்டாங்க. ஹைய்யோ’ என்று வேறு கிண்டலாகவும் நினைத்துக்கொண்டாள்.
அவனிடமே இத்தனை குழப்பத்தை கொண்டிருந்தவள் அவை எதுவும் நிவர்த்தியாகாமல் காதல் என்று அவன் பேச்சிற்கு தலையாட்டி வீட்டில் பேச என்ற பகுதிக்கே செல்லவில்லை.
அவனின் காதல் தெரியும் முன்பு ஒருவித அவஸ்தை என்றால் தெரிந்துகொண்ட பின்னர் வேறு விதமான தாக்கம் மனதை அழுத்திக்கொண்டிருந்தது.
எல்லாவற்றிற்கும் மேல் தன் வீடு. குடும்ப உறுப்பினர்கள். தாய் தகப்பன் தாண்டி அக்கா, அக்காவின் கணவர். கண்களை இருட்டியது நொடிபொழுதில் இவை எல்லாம் மனதில் ஓட துவங்கவுமே.
“நிலா…” வம்சி அழைக்க,
“இல்லை நான் எங்கயும் வரமாட்டேன். இந்த நேரம் ஏன் கூப்பிடறீங்க?…” என கேட்டவள் இதில் இவன் இதற்கு கோபிப்பானோ என்றும் இன்னும் கலக்கத்தை சுமந்திருந்தாள்.
“ஓகே ஓகே அதுக்கேன் இவ்வளோ டென்ஷனா பதில் சொல்ற?…” என்றவன்,
“சரி இப்ப தூங்கு. நாளைக்கு பேசலாம்…” என்று வைத்துவிட்டான் அதற்கு மேல் அவளை வாட்டாமல்.
படுத்தவளுக்கு உறக்கம் என்ற ஒன்று வந்தால் தானே? எங்கேயோ தவறு செய்கிறோமோ என மனது அடித்துக்கொண்டது.
தான் மட்டும் விரும்பிய பொழுது இல்லாத ஒரு பாரம் இப்போது ஏறிவிட்டதை போல தோன்றியது வம்சியின் திருமண பேச்சில்.
‘ஒருவேளை வீட்டில் சம்மதிக்கவில்லை என்றால்?’ நினைவே தூக்கிவாரி போட கண்களை கரித்தது அப்படி நினைக்கையில்.
‘வம்சி. இல்லையில்லை இவன் பின்வாங்கமாட்டான். என்னை விட்டுத்தரவும் மாட்டான்.’ என்று அவன் மீது மலையளவு நம்பிக்கை இருக்க அதில் கடுகளவு கூட தன் மீது இல்லை.
உறங்கா இரவாகி போக எழுந்து குளித்து கிளம்பி ஆளுக்கு முன் தயாராகி இருந்தாள் ஷ்ராவணி.
“என்ன வணி, நான் இன்னும் எழுந்துக்கவே இல்லை. அதுக்குள்ளே ரெடியாகிட்ட?…” என்ற குமுதா,
“ஆமாக்கா, தூக்கம் வரலை…” கொண்டுவந்த பொருட்களை எல்லாம் எடுத்து வைத்தாகிற்றா என மீண்டும் ஒருமுறை சரிபார்த்துக்கொண்டே.
“ஏன் டெல்லியை விட்டு கிளம்ப மனசு வரலையோ?…” என சிரித்த குமுதா,
“பேசாம இங்க ட்ரான்ஸ்பர் கிடைக்குமான்னு கேட்டு பாரேன்…”
“க்கா, சும்மா இருங்க….”
“அட நீதானம்மா டல்லா இருந்த. டெல்லி வரப்போ இருந்த மாதிரியே இல்லையே? திடீர்ன்னு சந்தோஷமா இருக்க. தானா ஒரு சிரிப்பு உன் முகத்துல. திடீர்ன்னு இந்த உலகமே முடிய போற மாதிரி ஒரு சோகம்…”
“அப்படியெல்லாம் இல்லைக்கா…”
“இல்லைன்னா சந்தோசம் தான். ஆமா உன் ரிலேட்டிவ் அவர் வராரா உன்னை வழியனுப்ப?…” என வம்சியை குமுதா கேட்கவும் முகம் பளீரென்றானது.
விழிகளின் மேல் சிறு ஏக்கம் இழையோட குமுதாவிடமிருந்த தன் பார்வையை தாழ்த்தி பெட்டியை கவனித்தபடி,
“தெரியாதுக்கா…” என்றாள்.
“வந்தா பேசலாமேன்னு தான். அன்னைக்கு பேசமுடியலை. மறுநாள் லஞ்ச்ன்னு நீ கிளம்பி போய்ட்ட. அப்பறம் எங்க பார்க்க?…”
“தெரியலைக்கா…” என்றாள் அதற்கும் ஷ்ராவணி.
“நான் என்ன கேட்டா நீ எதுக்கு இப்பவும் தெரியாதுன்னு சொல்ற?…” என்றதும் ஷ்ராவணி விழிக்க,
“சரி சரி நான் குளிச்சு கிளம்பி வரேன். இங்க இருந்து ஏர்போர்ட் போக நேரமாகும். ப்ரேக்பாஸ்ட் அங்க போய்ன்னு மேடம் சொல்லிட்டாங்க…” என்ற குமுதா,
“எனக்கு தான் இங்க இருந்து கிளம்ப மனசே இல்லை. நீ வரியோ இல்லையோ? சான்ஸ் கிடைச்சா நான் ட்ரான்ஸ்பர் வாங்கிட்டு வந்துருவேன் இங்க…”
“க்கா…”
“என்ன க்கா? வேலை பார்க்கும் போது தான் இப்படி புது புது ஊரெல்லாம் பார்க்க முடியும். இந்த தடவை பர்சேஸ் பண்ண கூட பணமில்லை. திடீர் ட்ரிப். முதல்லையே தெரிஞ்சிருந்தா சேர்த்து வச்சிருந்திருக்கலாம்…”
குளிக்கிறேன் என சொல்லிக்கொண்டே அத்தனை பேச்சையும் பேசியபடி தனது பெட்டியை அடுக்கினாள் குமுதா.
“க்கா லேட்டாகுது….” ஷ்ராவணி சொல்லவும் தான் துண்டை எடுத்துக்கொண்டு உள்ளே ஓடியவள்,
“கோச்சுக்காம இதை மட்டும் எடுத்து வச்சிட்டு எதாச்சும் மிஸ் பண்ணிட்டேனா பாரேன்…” என கேட்டுவிட்டு கதவை சாற்றிக்கொண்டாள்.