“கால் பன்றேன்னாங்க. அதான் பண்ணலைன்னு நினைச்சேன். அதான் அப்படி சொல்லிட்டேன்…” என என்ன சொல்கிறோம் என்றே தெரியாமல் உளற முகத்தில் மெல்லிய வியர்வை படலம.
இப்படி இவர்களிடமே சொல்ல முடியவில்லை. வீட்டில் எப்படி பேச போகிறோமோ என அப்போதே உதற ஆரம்பித்தது.
மனதிற்குள் பெரும் அலையொன்று எழுந்து மோத டெல்லியே வந்திருக்க கூடாது என தோன்றி வரிசையாய் இது கூடாது, அது கூடாது என நினைத்தவள் கடைசியில் வம்சியை சந்தித்திருக்கவே கூடாது என்ற அளவிற்கு நினைத்து களைத்து போனாள்.
இத்தனை அலசல்களிலும் மொபைலை நொடிக்கொருதரம் எடுத்து பார்த்துக்கொண்டே இருந்தது ஷ்ராவணியின் கைகளும், கண்களும்.
குமுதாவை அருகே வைத்துக்கொண்டு வேறு மெசேஜ் அனுப்பவும் முடியவில்லை.
விமான நிலையம் வந்து சேர்ந்த பின்னரும் குமுதா சாப்பிட உடன் அமர்ந்திருக்க என கூடவே ஒட்டிக்கொண்டே தான் இருந்தாள்.
நேரம் செல்ல செல்ல இதோ உள்ளே செல்ல இன்னும் சிறிது நேரமே இருக்க அழுகை வரும் போலிருந்தது ஷ்ராவணிக்கு.
இன்னும் அழைக்கவும் இல்லை. ஒருவேளை தனக்கே தெரியாமல் தன்னை கவனிக்கிறானோ என்றுவேறு ஒரு எண்ணம்.
தனக்கு தெரியாமல் தன்னை தான் திருமணம் செய்வேன் என்று அறிமுகப்படுத்தியவன் இதையும் செய்யாமல் இருப்பானா என்ன என தோன்ற விழிகள் விமானநிலையத்தை சல்லடையாக துளைத்தது.
குமுதா ஒவ்வொன்றையும் காண்பித்து பேசி, அதில் செல்பி எடுத்து என தனியுலகத்தில் தான் மிதந்தாள்.
இடையிடையே கவலை வேறு அடுத்து இப்படி எப்போது ட்ரிப் அமையுமோ? அமையாதோ என்று வேறு புலம்பிக்கொண்டிருக்க எல்லாவற்றையும் கவனித்தும் கவனிக்காமலும் பொத்தாம்பொதுவாய் தலையசைத்துவைத்தாள்.
“வணி கேட்கிறயா? நான் தனியா பேசிட்டு இருக்கேன்…” என்று வேறு குமுதா அவ்வப்போது படுத்த அதற்கும் பதில் சொல்லியவள் மனதில் தவிப்பு கூடிக்கொண்டே தான் சென்றது.
இல்லை இல்லை இவன் வரபோவதில்லை என்று முடிவுக்கு வந்த நேரம் மொபைலில் அழைப்பு.
வேகமாய் எடுத்துவள் முகத்தில் ஆயிரமாயிரம் மத்தாப்புக்கள். வந்துவிட்டதாய் தான் சொல்கிறான் என நினைத்து உள் நுழையும் வழியை பார்த்தபடி,
“நான் இங்க பி.எம். பேலஸ்ல இருக்கேன். எங்க வரனும்? என்ன டே ட்ரீமா?…” என கேட்டவன் வானத்தில் பறந்துகொண்டிருந்தவள் சிறகை வெட்டி வீசுவதை போல சாதாரணமாக சொல்ல தொப்பென்று கீழே விழுந்தாள்.
“பேலஸ்லையா?…” காற்று போன பலூனை போல முகம் வாடி சோர்ந்துபோனாள்.
வம்சி கூறியதை நம்பமுடியாமல் கேட்டவளுக்குள் அவளின் காத்திருப்பின் எதிர்பார்ப்பு மொத்தமும் இப்போது ஊசியாய் அவளை திருப்பி துளைக்க ஆரம்பித்தது.
“எஸ், ட்யூட்டிக்கு வந்துட்டேன். இப்ப நீ கிளம்பிட்டியான்னு கேட்க தான் கால் பண்ணினேன்…”
வெகு சாதாரணம். அவளையும், அவள் கேள்வியையும் கவனித்துக்கொண்டதாக கூட தெரியவில்லை அவனின் பேச்சில்.
“நிஜமாவா? விளையாடாதீங்க…” என்று சொல்லிக்கொண்டிருக்க விமானம் பறக்கும் சத்தம் வேறு.
“நீங்க இங்க தானே இருக்கீங்க? பொய் சொல்லாதீங்க…” குரல் தழுதழுக்க கேட்டவளின் தவிப்பை வம்சி கண்டுகொண்டான்.
“நிலா, ட்ரஸ்ட் மீ. நிஜமா நான் பேலஸ்ல தான் இருக்கேன்…” என்றவனுக்கு வருத்தமாகிற்று.
“ஓஹ், சரி…” என சொல்லும் பொழுதே குரல் உடைந்துவிட,
“என்னை எதிர்பார்த்தியா நிலா?…” என்றான் அமைதியாக.
“ஹ்ம்ம், ரொம்ப. ஆமா…” என்றவள் உடனே,
“இல்லை, நிஜமா எதிர்பார்க்கலை. இனி ஒருதடவை அந்த தப்பை செய்யமாட்டேன்…” அழுகையை விழுங்கிக்கொண்டு சொல்ல,
“நிலா என்னாச்சு உனக்கு? நான் வரேன்னு உன்கிட்ட சொல்ல கூட இல்லை…”
“தப்பு என் பேர்ல தான் ஸார். நீங்க சொல்லலை. நாளைக்கு பார்க்கலாம்ன்னு சொன்னதை வச்சு நானா என்னவோ நினைச்சு…”
“இன்னும் ஸார் சொல்ற? அடி தான் உனக்கு. ஹே நான் வரதா இருந்தா சொல்லிருப்பேன் தானே? நேத்து அது ஏதோ…”
“ஆமா என் கிட்ட எல்லாம் சொல்லிட்டு தான் என் விஷயத்துல நீங்க டிசிஷன் எடுக்கற மாதிரி தான். சும்மா நிறுத்துங்க ஸார்…”
“இப்ப என்ன? நான் வரனுமா? சொல்லு, நீ நெக்ஸ்ட் ப்ளைட்ல கூட போகலாம். வரவா?…” என சிரித்தபடி.
அவளின் கோபமும், அதட்டலும் வம்சிக்கு அத்தனை பிடிக்க அவளின் உணர்வுகள் புரியாமல் அந்த நேரத்திலும் விளையாடினான்.
ஆனால் அவனின் சிரிப்பும், கிண்டலும் எரியும் தீயில் எண்ணெய்யை ஊற்றுவதை போல ஷ்ராவணியை பற்றிக்கொண்டது.
“தேவையில்லை. இன்னொருக்க நான் உங்களை பார்க்கனும்னு நினைக்கமாட்டேன்…”
“சரி, இப்ப நினைக்க வேண்டாம். கோபம் போகட்டும். பார்க்கலாம்…”
அப்போதும் அவன் அலட்டாமல் கூற தன் கோபம் கூட இவனுக்கு பொருட்டில்லையா என்று ஆற்றாமையாக வந்தது.
“என் கோபம் போகாது…”
“ஏனாம்?…”
“எவ்வளோ சாதாரணமா பேசறீங்க நீங்க? நான் வந்தப்போ இருந்த மனநிலை வேற. ஆனா இப்ப…” உணர்ச்சிவசப்பட்டு சத்தமாய் பேச,
“நிலா காம்டவுன். நீ இருக்கிறது ஏர்போர்ட்…”
“அதை நீங்க ஞாபகப்படுத்தாதீங்க…”
“வேற யார் சொல்லுவா? அதுவும் நீ என் வொய்ப் வேற. நான் சொல்லுவேன் தான்…”
“கோபப்படாம போய்ட்டு வா. நாம ஒன்னும் சின்ன பிள்ளைங்க இல்லை சும்மா சும்மா மீட் பண்ணி லவ் வளர்க்க…” என்றும் சொல்ல பெரிதாய் அடிவாங்கிய உணர்வு ஷ்ராவணிக்கு.
இதோ சொல்லிவிட்டான். அவனின் குணமே இதுதான் என்று தோன்றினாலும் அதனை வார்த்தைகளில் சொல்லி காண்பிக்கையில் அதிகமாய் மனதிற்குள் வலித்தது.
இதோ சொல்லிவிட்டான், எதிர்பார்க்க சின்ன பிள்ளையா நீ என அவளின் எதிர்பார்ப்பை ஒன்றுமில்லாமல் செய்துவிட்டான்.
கண்ணீர் வழியாவா என்றிருக்க கண்ணை துடைத்தவள் அதற்கு மேல் அவனிடம் என்ன பேச என நினைத்து,
“ஓகே, பை…” உணர்வற்ற குரலில் சொல்லி போனை வைக்க வம்சி மீண்டும் அழைக்க முயலவில்லை.
அழைக்கமாட்டான் என்று தெரிந்தாலும் மனதின் ஓரம் அழைத்தால் தான் என்ன என்றும் ஆசை எட்டிப்பார்த்துக்கொண்டே இருந்தது.
முகத்தை டிஷ்யூவால் துடைத்துக்கொண்டு வெளியேறினாள் அந்த ரெஸ்ட் ரூம் விட்டு.
அவனிடமிருந்து அழைப்பு வரவுமே, அவன் வரவில்லை என்று சொல்லவும் இதற்குள் நுழைந்திருக்க இப்போது வெளியே செல்லவும் குமுதா காத்திருந்தாள்.
“உனக்காக தான் வெய்ட்டிங். வா போகலாம்…” என சொல்ல சோதனையின் முன்பு ஹேன்ட் பேக் மொபைல் என்று வைத்துவிட்டு தனியே நின்றாள்.
பார்வை இப்போதும் போனில் தான். அதில் குறுஞ்செய்தி வந்ததன் ஒளிர்வை காண்பிக்க உடலும், உள்ளமும் நொடிபொழுதில் பரபரப்பாகியது.
என்ன தான் வம்சியின் பேச்சுக்கள் காயப்படுத்தினாலும் தன்னால் ஒதுங்கி இருக்க முடியாததை நினைத்து உள்ளுக்குள் திடுக்கிடல் தான்.
அவன் இல்லவே இல்லை என்று வகுத்திருந்த எல்லை எப்போதோ உடைந்திருக்க மீண்டும் ஒரு கோட்டை கிழிக்க முடியாத பலவீனம் அவளை ஆட்டிப்படைத்தது.
சோதனை முடிந்து மொபைலை கையில் எடுக்கும் முன் ஒவ்வொரு நொடியும் யுகம் போல கழிய வேகமாய் வந்து எடுத்து பார்க்க அவன் தான். அவனே தான் செய்தி அனுப்பியிருந்தான்.
“long live love…” என எழுத்துக்கள் மட்டும் ஒற்றை ஸ்மைலியுடன் வந்திருக்க நெஞ்சோடு மொபைலை பிடித்தபடி அவன் அனுப்பிய அந்த வார்த்தைகளை உச்சரித்தாள்.
“மீசை மில்டரி. சின்ன பிள்ளைங்க இல்லைன்னு சொல்லிட்டு அனுப்பிருக்கறதை பாரு. நீ என்ன அனுப்பினாலும் உன் பேச்சு கா தான்…” என சொல்லிக்கொண்டவள் முகத்தில் கண்ணீர் புன்னகை மின்னியது.