டெல்லியிலிருந்து கிளம்பியதிலிருந்து எங்கே சத்தம் எதுவும் கேட்காமல் போகுமோ என கூட்டி வைத்திருக்க இப்போது குறைத்து வைத்துவிட்டு பார்த்தாள்.
அடுத்தடுத்த மெசேஜ்கள் வந்து ஒளிர்ந்துகொண்டே இருக்க கைகள் பரபரத்தது அதனை திறந்து பார்க்க.
இரு கை விரல்களையும் ஒன்றோடொன்று பின்னி கோர்த்தபடி தன்னை கட்டுப்பாட்டுடன் வைத்துக்கொண்டு பார்க்க சில நொடிகள் எதுவும் வரவில்லை.
அவ்வளவு தான் உறங்க போய்விட்டான் போல என போனை பார்த்தபடி இருந்தவள் மெல்ல கண்களை மூட இப்போது ஒரு ரிங் வந்து அழைப்பு துண்டிக்கப்பட்டது.
பதறி விழித்து பார்க்க அவன் தான். அழைப்பு விட்டு துண்டிக்க மீண்டும் அழைப்பான் என நினைத்து அதனை பார்த்தபடி இருந்தவள் முகத்தில் அப்படி ஒரு மகிழ்ச்சி.
சுத்தமாய் சத்தத்தை குறைத்து வைப்ரேட் மோடில் போட்டுவிட்டு கையில் போனை வைத்தபடி மல்லாந்து படுத்தாள்.
இதோ அடுத்த அழைப்பு. மிக நீண்ட அழைப்பு. எடுக்கும் வரை அடித்துக்கொண்டே இருந்தது.
மனதிற்குள் அத்தனை சந்தோசம் ஷ்ராவணிக்கு. எடுக்க தோன்றவில்லை. குறுஞ்சிரிப்புடன் பார்த்தபடி அவளிருக்க இப்போது வீடியோ காலில் வந்துவிட்டான்.
எடுப்போமா வேண்டாமா என பதட்டமாகி பின் அழைப்பை துண்டிக்கவும் அவன் கண்டுகொண்டான்.
“கால் அட்டன் பண்ணு நிலா…” என மெசேஜ் அனுப்பியிருக்க மீண்டும் வீம்பு.
“இவங்க இஷ்டமா எல்லாம்? முடியாது முடியாது…” என சொல்லிக்கொண்டவள் அவன் அழைக்க இவள் துண்டித்தாள்.
“நிலா…” என கோபமான ஸ்மைலியை அனுப்பியிருந்தான்.
“நான் நிலா இல்லை…” பதிலுக்கு இவள் செய்தியனுப்ப இப்போது அவனிடம் பதிலில்லை.
“நான் ஷ்ராவணி…” உடனே அடுத்ததாய் அனுப்பிவைத்தாள்.
“நிலா என்ன விளையாட்டு இது? கால் அட்டன் பண்ணு…”
“மாட்டேன்…”
“ப்ச், நீ சென்னை ரீச் பண்ணியாச்சா? எப்போ போன? டைம்க்கு ப்ளைட் லேண்டாகிருச்சான்னு கேட்க தான் கால் பண்ணேன்…”
“ஆமா, இப்ப கொஞ்ச நேரம் முன்ன தான் எங்க ஹாஸ்டல் மாடில வந்து என்னை இறக்கிவிட்டுச்சு. இப்பதான் ரூம்க்குள்ள வந்தேன்…” நக்கலுடன் பதில் அனுப்ப,
“நிலா லைன்ல வா…” என வம்சி.
“முடியாது…”
“சொன்னா கேட்கமாட்டியா?…”
“நான் சொன்னா நீங்க கேட்பீங்களா?…”
“ப்ச், திரும்பவும் சின்னபிள்ளை மாதிரி இதென்ன?…” என்று அவன் அதிருப்தியை அனுப்பவும் முருங்கை மரத்தில் ஏறிவிட்டாள் ஷ்ராவணி.
“ஏன் விளையாட கூடாதா? உங்ககிட்ட தானே? கூடாதா?…” என கோபத்துடன் ஷ்ராவணி.
“நிலா இப்ப லைன்ல வருவியா மாட்டியா? உன்னை பார்க்கனும்….” என அனுப்பியிருக்க ஷ்ராவணிக்கு தன்னை அழவிட்டதற்கு வெறுமனே எப்படி விட என்று தோன்ற,
“ஷ்ராவணி சொல்லுங்க. அட்டன் பன்றேன். லைன்ல வரேன்…” என சொல்ல,
“சூர்…”
“ஹாங், ஆமா. கூப்பிடமாட்டீங்களா? அதானே என் பேர்…” என்றதும்,
“முடியாது போடி…” என்று அனுப்பியவன் ஆஃப்லைன் சென்றதும் திக்கென்றானது ஷ்ராவணிக்கு.
“இதென்ன பேரை சொல்ல சொன்னா இவ்வளவு கோபம் வருது?…” என்று முணங்கியவள் மொபைலையே பார்த்திருக்க அவன் இருப்பதன் அறிகுறியே இல்லை.
“தூங்கிட்டீங்களா?…” என்று அனுப்பினாள்.
செய்தி சென்றதன் அறிகுறி மட்டுமிருக்க பார்க்கப்படவும் இல்லை. மீண்டும் வந்து பேசவும் இல்லை.
மனதிற்குள் சிறு கவலை எட்டிப்பார்த்தது. இதென்ன இத்தனை கோபம் இவனுக்கு?
இவன் சொல்வதை மட்டும் தான் தான் செய்யவேண்டுமா? தான் எதுவும் சொல்ல கூடாதோ என முதலில் கவலையானவள் பின் அவனே வரட்டும் என்று விட்டுவிட்டாள்.
ஒருவாரம் சென்றும் வம்சியிடமிருந்து அழைப்பில்லை. அவன் கடைசியாக அவள் அனுப்பிய செய்தியை கவனித்திருந்தும் பதில் அனுப்பவுமில்லை.
எத்தனையோ முறை தானே அழைப்போமா என்று தோன்றினாலும் முயன்று இறுக்கமாக இருந்துகொண்டாள்.
இப்படி ஒவ்வொன்றிற்கும் இவன் இழுத்த இழுப்பிற்கு செல்ல முடியுமா தன்னால் என்று அப்போதே சோர்வு தட்டிவிட்டது.
‘ஒன்சைட் தான் எப்பவும் பெஸ்ட். எதையும் எதிர்பார்க்கவும் வேண்டாம். இப்படி உக்கார்ந்து அல்லாடவும் வேண்டாம்’ என புலம்பல் மட்டும் குறைந்தபாடில்லை.
வீட்டினர் வேறு அத்தனை கேள்வி. டெல்லியில் வேலையா? மாற்றுதல் கிடைத்தால் அங்கே செல்லும் யோசனை இருக்கிறதா? சம்பளம் இதை விட அதிகம் கிடைக்குமா? என்று.
இதில் சந்துருவின் படிப்பிற்கு என்று பேங்கில் லோன் போட்டிருக்க சம்பளத்தின் சிறு தொகை அதில் கழிந்தது சந்துருவின் செலவுகணக்கில்.
வீட்டில் மண்டை காய்ந்தது ராமனுக்கு. ரமேஷ் வேறு வரும் வேலைகளில் பாதிக்கு மேல் தனக்கு வேண்டும் என பிடுங்கிக்கொள்ள கையாலாகாமல் தான் சுற்ற வேண்டியதானது.
“இவர் என்னடான்னா கிடைக்கிற வேலையை பறிச்சிட்டு போய்டறார். மருமகனாச்சே, பொண்ணு மாசமா இருக்கேன்னு நானும் குடுத்துடறேன். கை செலவுக்கே தட்டுப்பாடாயிருக்கு…” என மனைவியிடம் புலம்ப,
“முடிஞ்சளவுக்கு சமாளிப்போம், வேற என்ன செய்ய?…” என சுலோச்சனா மறைமுகமாக இளைய மகளுக்கு தான் ஆதரவாக இருந்தார்.
“அதான் நான் சமைக்கறேனே. கையை கடிக்காம இருக்கறது தானே? போதும்…” என்று சொல்லி அந்த பேச்சை மாற்றிவிடுவார்.
அவருக்கும் புரிந்தது ராமனின் மாற்றம் இளைய மகள் சம்பாத்தியம் ஆரம்பித்ததில் இருந்து தான் என.
முதலில் அதில் அத்தனை பெருமையாக இருந்தாலும் ஊருக்குள் அவ்வளவு இளக்கார பேச்சுக்கள் ராமனை நோக்கி.
சின்ன பெண் சம்பாத்தியம், அதனால் வேலை தேவையில்லைன்னு மூத்த மருமகனின் தலையில் அத்தனையையும் கட்டிவிடுவதை போல பேசினார்.
ரமேஷ் அதற்கு அத்தனை காரணியாக இருந்தான். அனைவரிடமும் அவன் பேசிவைத்தது அப்படி இருந்தது.
“சின்னவ வேலைக்கு போகவும் மாமாவுக்கு சொகுசாகி போச்சு. வர வேலையில பாதியை என்கிட்டே தள்ளிடறார். சிவா உண்டாயிருக்கும் போது இன்னும் வேலை கிடைச்சா நல்லதுதானே?…” என்றவன் நல்லவன் வேடம் தரிக்க,
“ஆமாமா…” என சொல்லிக்கொள்ளும் கூட்டம் சுற்றி வந்தது.
“என்னருந்தாலும் ராமன் குடுத்து வச்சவன். உன்னை என்னவோன்னு நினைச்சேன். ஆனா உன் மனசு தங்கம்…” என பாராட்டி பேசுகையில் ராமனை இறக்கி பேசவும் தயங்கியதில்லை.
இப்படி வேலையையும் பிடுங்கிக்கொண்டு, என்னவோ ராமனே எல்லாவற்றையும் தலைமேல் சுமத்துவதை போல பாசாங்கு செய்து வைத்திருக்க அந்த கோபத்தை எல்லாம் அவனிடம் நேரடியாக காண்பிக்க முடியாத ராமன் வீட்டில் வந்து தான இறக்குவது.
“பெத்த மகளே என் பேச்சை கேட்கலை. சந்துரு வேலைக்கு போயிருந்தா கூட கொஞ்சம் கஷ்டமில்லாம போயிருக்கும். இன்னும் இறுக்கி பிடிக்கிற நிலைமை. அதுக்குள்ளே நான் இருப்பேனோ என்னவோ?…”
இப்படி ஷ்ராவணி போனில் பேசிக்கொண்டிருக்கும் பொழுதே பலமுறை சொல்லியும்விட்டார்.
தன்னுடைய வார்த்தைக்கு வீட்டில் மதிப்பில்லை என்பதை மருமகன் குத்தி காண்பிக்க அந்த இயலாமை இளைய மகளின் மேல் தான் ஆத்திரமாக படிய ஆரம்பித்தது.
மகள் மீது கொண்ட பாசம் மறைந்து பனியாய் சுவர் ஒன்று எழும்பி நின்றது அவரின் தன்மானத்தில்.
மகளை வேலைக்கு அனுப்பியது தான் என்னும் எண்ணமெல்லாம் எங்கோ மறைந்துவிட வேலைக்கு செல்வதால் மதிக்கவில்லை என்னும் பிம்பம் பெரிதானது.