இதில் ஊரில் உள்ளவர்கள் ராமனால் மகனை படிக்க வைக்க முடியவில்லை. மகள் வேலை செய்து படிக்க வைக்கிறாள் என்ற பேச்சுக்கள் பெருமையாக பேசப்பட்டாலும் அதில் மறைமுகமாய் அவரை இறக்கி பேசுவதாய் தான் எடுத்துக்கொண்டார்.
“ஆமா என்னால முடியலை. அதுக்கு இவ செய்யறேன்னு இன்னும் என்னை கீழே போட்டு மிதிப்பாளா?…” என வீட்டில் மனைவியிடத்தில் தான் அத்தனை கூச்சல்களும்.
இதனை கொண்டே சந்துருவிடம் அலைபேசியில் பேசுவதை அறவே நிறுத்தினார் ராமன்.
“என்னைவிட இந்த பொடி பயலுக்கு அக்கா பெருசா போய்ட்டாளா? அப்ப நான் லாயக்கில்லைன்னு நினைப்பு தானே என்னை மீறி போக வச்சது?…” என்று குமுறும் குமுறல்கள் பிள்ளைகள் மனதை தைத்தது.
இப்போதும் டெல்லி சென்றுவிட்டு வந்திருக்க அங்கே வேலை கிடைக்குமா? என்ன ஏதென்ற கேள்விகளை மனைவி மூலமே கேட்க வைத்தார் ராமன்.
“இப்போதைக்கு அங்க மாறி போற மாதிரி இல்லைம்மா. தெரியாத ஊர். அதான், யோசிப்போம்…” என பொதுவாய் சொல்ல,
“கிடைச்சா போக சொல்லு. சும்மா இங்கயே இருந்துட்டு இருக்காம அடுத்து போக சொல்லு…” என அதட்டலாக சொல்லிவிட்டு செல்ல,
“வணிம்மா…” சுலோச்சனா குரல் கலங்கி போய் ஒலித்தது.
“என்னாச்சும்மா? இன்னைக்கு இவ்வளவு கோபம்?…”
“வேற ஒண்ணுமில்லை. இங்க நம்ம சொந்தத்துல ஒரு விஷேஷம்ன்னு போயிருந்தோம். அங்க ஒரு வரன் பத்தி பேச்சு…” என்று நிறுத்த ஷ்ராவணிக்கு திக்கென்றானது.
“ம்மா…” அவளின் அழைப்பில் இதனை எப்படி மகளிடம் சொல்ல என்று சுலோச்சனா யோசித்தபடி இருந்தார்.
“ஏன்ம்மா?..” என கேட்கையில் உள்ளூர கொஞ்சம் சந்தோஷமே.
தந்தை ஒப்புக்கொள்ளவில்லை. ஒருவேளை மாப்பிள்ளை பக்கம் சரியில்லையோ என்று யோசித்தாள்.
“அப்பா பேசறதுக்குள்ள உன் அக்கா அங்க ஒரு ஆட்டம் ஆடிட்டா.,…”
“சுத்தம். அப்போ நடக்காது…”
“ஆமாடி, இவ வேற வாயை வச்சிட்டு இருக்காம பேசிட்டா. இத்தனை நாள் எங்களை கண்ணு தெரியலையா? இப்ப என் தங்கச்சி வேலைக்கு போகவும் பொண்ணு கேட்கறீங்க. அவ சம்பாதிக்கான்னு தானே அப்படின்னு ரொம்ப பேசிட்டா…”
“அதோட அந்த வீட்டு மனுஷங்க மட்டுமில்லை எல்லார் முன்னாடியும் என் தங்கச்சிக்கு பெரிய இடமா தான் பார்க்கலாம்ன்னு இருக்கோம். இப்படி எல்லாம் கேட்டு வராதீங்கன்னு முகத்திலடிச்ச மாதிரி சொல்லிட்டா…” என தயங்கி தயங்கி சொல்ல இப்போது இன்னும் நிம்மதியானது ஷ்ராவணிக்கு.
“ஓகே ம்மா. நல்லது தான்…” என வாய்விட்டு சொல்லிவிட,
“என்ன நல்லது? உங்கப்பா கொதிச்சு போயிருக்கார். சம்பாதிக்கிற பொண்ணு. அதுக்குள்ளே கட்டிக்குடுப்பீங்களா அப்படின்னு பேசிட்டாங்க. உன் அக்கா வேற எண்ணெயை ஊத்தின மாதிரி பேசினதுக்கு இன்னும் இளக்கார பேச்சு தான்…”
“சரிம்மா, இப்பவே நடக்க போற மாதிரி நீ ஏன் இவ்வளோ கவலைப்படற?…” என ஆசுவாசப்பட்ட மனதுடன் பெசியவளின் வார்த்தைகளில் ஒளிந்திருந்த சந்தோஷத்தை தாய் கவனிக்கவில்லை.
குடும்ப கஷ்டம், சூழ்நிலை. மகளின் பணம் தான் ஆதாரம் என ஒருபக்கம் இருந்தாலும் திருமணம் என வருகையில் இப்படி வரும் வரனை தட்டிவிடுவதா என்று தாயாய் அவரின் கவலை.
“சரிம்மா, நான் நாளைக்கு பேசறேன்…” என்று வைத்துவிட்டவளுக்கு அத்தனை சந்தோஷம்.
ஒருவகையில் இது நல்லதாகவே தோன்றியது. ஆனாலும் அதெல்லாம் ஒரு நொடிதான்.
வம்சியை கொண்டு சென்று நிறுத்தினால் என்ன பூகம்பம் வெடிக்குமோ என உதறல் மீண்டும் படமெடுக்க தொய்ந்து போய் அமர்ந்தாள்.
போதாகுறைக்கு இன்னும் வம்சி அவளுக்கு அழைக்கவே இல்லை. ஒருவாரம் சென்று இதோ மறு ஞாயிற்று கிழமை.
வகுப்பெடுக்க செல்ல வேண்டும். முதல் வாரம் செல்லவில்லை அவர்கள் ஊரில் இல்லையென்று.
அன்று கிளம்பி அந்த பகுதிக்கு செல்ல ஆனந்தின் வீட்டை கடக்கையில் வம்சி சொல்லியது தான் ஞாபகம் வந்தது.
‘வந்து பார்த்தானாமே? இன்றும் வந்திருப்பானோ?’ என ஒரு எதிர்பார்ப்பு எட்டி பார்க்க பார்வை மெதுவாய் ஆனந்தின் வீட்டை வட்டமிட்டது.
பாதங்கள் மெல்ல நடையின் வேகத்தை மட்டுப்படுத்த முதலில் ஓரவிழியால் அளந்தவள் இப்போது நன்றாகவே தலைமுடியை ஒதுக்குவதை போல திரும்பி பார்த்தாள்.
ம்ஹூம், அந்த வீடு எப்போதும் போல இருக்க கதவை திறக்கும் சத்தம் கேட்டது ஷ்ராவணி அதனை தாண்டவும்.
திரும்ப வேண்டாம் வேண்டாம் என நினைத்தாலும் அவளின் தலை லேசாய் திரும்பி பார்த்துவிட அங்கே கையில் குழந்தையுடன் ஆனந்தின் மனைவி தான்.
சாப்பாடு ஊட்டுவதை போல வந்து நின்றவள் ஷ்ராவணியை பார்த்து புன்னகைக்க பதில் புன்னகை புரிந்துவிட்டு வேகமாக நடந்துவிட்டாள்.
இப்படியா அவனின் அழைப்பிற்கும், அவனை பார்க்கவும் நினைப்போம் என மானசீகமாக தன் தலையிலேயே அடித்துக்கொண்டு வகுப்பெடுக்கும் வீட்டிற்குள் சென்றுவிட்டாள்.
இரண்டுமணி நேரம் சென்றதே தெரியவில்லை. இன்னும் ஒருமணி நேரம் இருக்கிறது.
ஆங்கில வகுப்பெடுத்துவிட்டு கிளம்ப வேண்டும். அதற்கு முன் குடிக்க டீ வந்திருக்க மொபைலை பார்த்தபடி டீயை குடித்தவளுக்கு புரையேறியது.
இதனை சுத்தமாய் எதிர்பார்க்கவில்லை. விழிகள் தெறித்து விடும் போல அதிர்வில் எழுந்து நின்றுவிட்டாள்.
“என்னம்மா?…” என அந்த வீட்டின் பெண்மணி கேட்க,
“ஒன்னுமில்லைக்கா, அவசரமா ஒரு கால் பண்ணனும்…” என்று சொல்லிவிட்டு வாசலுக்கு விரைந்தவள் வம்சிக்கு அழைத்துவிட்டாள்.
“ஹைய்யோ உங்களுக்கு ஏன் புரியலை? இப்படி நம்ம போட்டோவை ஸ்டேட்டஸ் வச்சு எங்கப்பா பார்த்தா?…”
“பார்க்கட்டும்ன்னு தான் வச்சிருக்கேன். ஏன் எனக்கு தெரியாதா? நீ ஓகே சொல்லலை.அதான்….” என்றான் வம்புக்கென்றே.
“யோவ் மில்டரி மனுஷனா நீங்க? நானே எவ்வளவு பதறிட்டு இருக்கேன். நீங்க கூலா சொல்றீங்க. அதுவும் உங்களை அணைச்சுட்டு நான்…”
கதிகலங்கியது ஷ்ராவணிக்கு. ஏற்கனவே பிரச்சனை. திருமண பேச்சு என தலைவலி.
இப்போது இதனை பார்த்தால் என்னெவெல்லாம் பிரச்சனையாகுமோ? அதிலும் அந்த தாஜ்மஹால் பின்னால் தெரிய வம்சியின் கைவளைவில் நெருக்கமாக ஷ்ராவணி.
இப்படி செய்வான் என நினைத்தும் பார்க்கவில்லை அவள். நிச்சயம் தந்தையின் என்னும் தானே இருக்கும்.
அவர் பார்த்துவிட்டால்? நினைக்கவே முடியாதளவிற்கு அடிமனது ஆட்டம் கண்டது.
பயத்தில் வியர்த்துவிட இவனானால் எத்தனை சாதாரணமாக சொல்கிறான் என்று கோபம் வேறு.
“இதை பார்த்தா அபிஷியலா நான் டெல்லி வந்தேன்னு வீட்டுல நினைக்கமாட்டாங்க…” கம்மிவிட்ட குரலில் அவள் சொல்ல வம்சியிடம் அமைதி.
“என்ன செய்ய சொல்ற? பேசலாம்ன்னா நீ கண்டிஷன் போடற? தூக்கமில்லாம உன்னை நினைச்சுட்டு நான் ஒருத்தன் கூப்பிட்டா உனக்கு அது புரியலை….”
“அதுக்கு இப்படி செய்வீங்களா நீங்க?…” கோபத்தில், ஆற்றாமையிலும் கண்கள் கலங்கிவிட்டது ஷ்ராவணிக்கு.
“ஓகே ஓகே கூல்…”
“போட்டோவை டெலிட் பண்ணுங்க…”
“முடியாது…”
“முடியாதா? எங்கப்பா…”
“அடடா, இது உனக்கு மட்டும் தான் விசிபிளாகும். போதுமா? சும்மா நீ என்ன ரியாக்ட் பண்ணுவன்னு பார்க்க…” என்று சொல்லி முடிக்கும் முன் அழைப்பை துண்டித்துவிட்டாள் ஷ்ராவணி.
முன்பிருந்ததை விட அத்தனை கோபம். இப்படி இவன் மட்டும் விளையாடுவானா? அதிலும் சற்று நேரத்தில் உயிர் போய் உயிர் வந்தது.
முகத்தை சுடிதார் துப்பட்டாவில் துடைத்துவிட்டு சாதாரணமாக உள்ளே வந்து புத்தகத்தை எடுத்துக்கொண்டு அமர்ந்தாள்.
பாடம் சொல்லித்தரும் மனநிலை அறவே இல்லை ஷ்ராவணிக்கு. சிறிது நேரம் போக அந்த குழந்தைக்கு டயர்ட் என்று சொல்லவும்,
“ஓகே நாளைக்கு வரேன்…” என கிளம்பிவிட்டாள்.
அங்கே இருக்கவும் முடியவில்லை. இருந்தால் அதைவிட தலைவலி தான் தனக்கு என்று கிளம்பி வாசலுக்கு இறங்கியவள் நடக்க ஆரம்பிக்க மனம் முழுவதும் வம்சியின் செயல் தான்.
ஆனந்தின் வீட்டை கடக்கையில் ஆனந்தின் மனைவி மாலதி குழந்தையுடன் காத்திருந்தாள் ஷ்ராவணிக்காக.
“ஹாய்…” என்ற அழைப்பில் பாதையின் கவனம் அவளிடம் திரும்பியது ஷ்ராவணிக்கு.
“ஹாய்…” என நின்றவளுக்கு ஒருவேளை வம்சி பேச அனுப்பியிருப்பானோ என தோன்ற,
“சொல்லுங்க…” என்றாள்.
அவ்வப்போது பார்க்கையில், கடக்கையில் சிறு புன்னகை, ஹாய் அவ்வளவு தான் பழக்கம்.
இப்போது நேரடியாக வந்து நிற்க வம்சியை தவிர வேறு என்ன என்று தெளிவாய் தோன்றியது.
“அவங்க பேச சொல்லி அனுப்பினாங்களா?…” ஷ்ராவணி நேரடியாக கேட்க மாலதி திகைத்துவிட்டாள்.
“ரொம்ப கோபமா இருக்கியாம்மா நீ?…” என மாலதி சொல்ல குழந்தை ஷ்ராவணியிடம் தாவ தூக்கிக்கொண்டாள்.
“குழந்தைக்கு என்ன பேர்?…” என மற்றதை விட்டுவிட்டு ஷ்ராவணி குழந்தை பற்றி பேச,
“உள்ள வாயேன். உக்கார்ந்து பேசலாம்…”
“ம்ஹூம், அப்படின்னா குழந்தையை பிடிங்க. நான் கிளம்பறேன்…”
“ஏன்? உள்ள வந்தா என்னவாம்?…” என்ற வம்சியின் குரலில் திடுக்கிட்டு திரும்ப வாசல் கேட்டில் சாய்ந்தபடி நின்றிருந்தான் அவன்.
“உள்ள வா…” என அழைக்க பார்த்துக்கொண்டே நின்றவள் கண்களில் சிவப்பேற குழந்தையை மாலதியிடம் நீட்டினாள்.
“மாலதி நீ உள்ள போ…” வம்சி சொல்லவும் மாலதியும் சென்றுவிட திகைத்து நின்றாள் ஷ்ராவணி.
“உள்ள வான்னா வரமாட்டியா? இங்க ஆனந்த் பேமிலி எல்லாரும் இருக்காங்க. நீ யாருன்னும் தெரியும் அவங்களுக்கு. வா நிலா…” என்று அழைத்தான்.
“கார்னர் பன்றீங்க…” குறையாத கோபமும், ஆதங்கமுமாக அவள் சீற்றத்துடன் கேட்க,
“ஈசிட்?…” என்றவன் புன்னகை கூட இன்னுமே எரிச்சலை தந்தது ஷ்ராவணிக்கு.
“வாம்மா ஏன் அங்கயே நின்னுட்ட?…” என மாலதியுடன் வயதில் மூத்த பெண்மணி வந்து கை பிடித்து அழைக்க வம்சி சிரித்துக்கொண்டே தலையசைத்தான்.
அவனை முறைத்தபடி அந்த வீட்டினுள் அவள் செல்ல அவனை தாண்டி செல்லும் முன் நிமிர்ந்து பார்த்தவள் வம்சியை முறைக்க கண்சிமிட்டினான் வம்சி சைத்ரயேஷ்.