“இன்னொரு கால் பேசிக்கட்டுமா?…” என கேட்கும் பொழுதே ஷ்ராவணி அழைத்த எண்ணில் இருந்து அழைப்பு வந்தது. அட்டன் செய்தவன் காதில் வைக்க,
“அலோ அலோ வணிக்குட்டி…” என்றார் அவளின் தாய்,
“உனக்கு தான்…” என்று அவன் நீட்டவும் வாங்கியவள்,
“ம்மா, தம்பியை இங்க அனுப்பறீங்களா? என்கிட்டே என்கிட்டே…” என்று அவனை பார்த்துவிட்டு திக்கி திணற விழியில் நீர் கோர்த்துவிட்டது.
கையில் சுத்தமாய் பணமில்லை. எதை வைத்து ஊருக்கு செல்ல? அதிலும் காலில், கையில் காயங்களுடன் இப்படியான உடையில் நினைக்கவே அழுகை பொங்கியது.
எல்லாவற்றிற்கும் மேல் தன்னுடைய உடமைகள், சர்ட்டிபிகேட். ஊருக்கு சென்று வந்தது போக மீதம் பணம், போன் என்று எல்லாம் பஸ்ஸில் விட்டிருக்க நெஞ்சை அடைத்தது.
“சந்துருவை முதல்ல அந்த பஸ்ல போய் பார்க்க சொல்லுங்கம்மா. என்னோட எல்லாமே பஸ்ல மிஸ்ஸாகிட்டு. முக்கியமா சர்ட்டிபிகேட்…” தொண்டை அடைத்தது அவளுக்கு.
“தம்பி காலையிலையே போய் பார்த்துட்டு வந்துட்டான் ம்மா. திரும்ப அப்பாவும் தம்பியும் போய் விசாரிச்சாங்க. அதுக்கப்பறம் தான் எல்லாமே குடுத்தாங்க…” என்றவர்,
“இதை எல்லாம் பாத்துட்டு தான் அந்த மனுஷன் நீ போய்ட்டன்னு இங்க எல்லார்ட்டயும் தகராறு பண்ணின்டிருக்கார்…”
“நான் வந்து பேசிக்கறேன் அவரை. நீ உன் மகட்ட சொல்லி வை…” மீண்டும் துர்கை அவதாரம் ஷ்ராவணியிடம்.
“உன்னை காப்பாத்தினார்ன்னு சொன்னியே. அவர்க்கிட்ட போனை குடு. ஒரு வார்த்த நன்றி சொல்லிக்கறேன்…” என்றதும்,
“அம்மா தேங்க்ஸ் சொல்லனும்ன்னு சொன்னாங்க…” என அவனிடம் நீட்ட வாங்கிக்கொண்டான்.
“ரொம்ப நன்றிங்க தம்பி. உங்க உதவியை காலத்துக்கும் நாங்க மறக்க மாட்டோம். எங்க குடும்பமே உங்களுக்கு கடமைப்பட்டிருக்கு…” இப்படி அத்தனை நன்றிகளை கூட்டிக்கொண்டு இருக்க வம்சி தலையசைத்து ஹ்ம்ம் கொட்டினான்.
“போதும், வச்சிருங்க…” என்றாள் ஷ்ராவணி வம்சியிடம்.
“ஹ்ம்ம்…” என்று அவளிடம் திரும்பியவன்,
“காவாலா?…” என்றான் போனை நீட்டி.
“புரியலை…” என விழித்தவள் போனை அவன் நீட்டவும் வாங்கினாள்.
“ம்மா, வை நீ. தம்பியை அனுப்பு. இந்த நம்பர்ல இருந்து லொக்கேஷன் அனுப்ப சொல்றேன்…” என்றவள் குரலை தழைத்து,
“காசு இருந்தா கொஞ்சம் குடுத்தனுப்புமா. ஒரு ட்ரெஸ் கூடவே. பஸ்ல இருந்து வாங்கிட்டு வந்த என் பர்ஸ்ல கூட காசு இருக்கும். இங்க ஹாஸ்பிட்டல் செலவு…” என சொல்லிக்கொண்டிருக்க,
“ம்க்கும்…” என்று செருமினான்.
“கிவ் மீ…” என கையை நீட்டவும் ஒன்றும் பேசாமல் அவள் மொபைலை தர,
“ஹலோ என் பேர் வம்சி. நீங்க கவலைப்படவேண்டாம். நானே கொண்டுவந்து உங்க வீட்டில விடறேன் இந்த பொண்ணை…” என்றதும் அவர் திகைத்து அமைதியாகிவிட,
“பயப்பட வேண்டாம். நான் ஒரு சென்ட்ரல் கவர்மென்ட் சர்வன்ட். ஆர்மி மேன். என்னோட ஐடியை உங்க மொபைலுக்கு அனுப்பறேன். பயப்படாம இருங்க. இன்னும் நாலு மணி நேரத்துல வந்திருவோம்…” என்று சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டான்.
ஷ்ராவணி திகைப்பு விலகாமல் பார்த்தபடி இருக்க வம்சி பெரிதாய் அலட்டிக்கொள்ளவில்லை.
அவள் பேசியதிலும், தயங்கியதிலுமே அவளின் குடும்ப சூழ்நிலை புரிந்துபோனது.
பணத்திற்கு என்ன செய்வார்களோ என்று ஒருபுறம் இருக்க, காப்பாற்றிய பெண்ணை அப்படியே விட்டுவிட்டும் செல்ல மனம் வரவில்லை.
“சூடு ஷ்ராவணி…”
“நீங்க ஹெல்ப் பண்ணின வரை போதும் ஸார், கிளம்புங்க…” என்றாள்.
“ஏமி?…”
“ஸார், உங்களுக்கு தான் சிரமம்…”
“என் கூட வர பயப்படத்தாரா?…” என்றான் கண்கள் சிவக்க.
“அச்சோ…” என்றவள் விழிக்க,
“கெட் ரெடி…” என்று காபி வரவும் அவளுக்கு தந்துவிட்டு தானும் குடித்தான்.
அவன் நடையும் பேச்சுக்களும் என்று கவனித்தவளுக்கு மறுக்கும் நிலையில் தானில்லை என்பதும் புரிய மனதிற்கு ரணமாய் வலி.
டிஸ்சார்ஜ் செய்ய சொல்லிவிட்டு ட்ரைவரிடம் மீண்டும் ராமேஸ்வரம் என்று வம்சி சொல்ல தலையில் கை வைக்காத குறையாய் சரி என்றார்.
எதுவானாலும் கிலோமீட்டர் கணக்கு தானே காசு. அது வந்தால் போதும் என நினைத்தபடி தயாராக இருந்தார்.
மருத்துவரிடம் சொல்லிவிட்டு காரில் கிளம்ப ஷ்ராவணிக்கு அவனிடம் பேச தயக்கமாகவும், தலையிறக்கமாகவும் இருந்தது.
காப்பாற்றவும் செய்து, மருத்துவமும் பார்த்து, இப்போது அவன் வந்த காரிலேயே அழைத்து சென்று பாதுகாப்பாய் விடுகிறேன் என்று சொல்ல எப்படியாவது கையிலிருக்கும் சிறிது பணத்தையேனும் கொடுத்துவிட்டேயாக வேண்டும் என்று மனதிற்கு சொல்லிக்கொண்டே வர,
“என்னவோ பணம் தரனும்ன்னு சொன்னியே? புரியலை?…” என்றதும், ‘சத்தமா சொல்லிட்டோமோ? இவ்வளோ ஹார்ஷா பேசவேண்டாம் நீங்க’ என்று தோன்றியது.
“எனக்கு சென்னையில வேலை கிடைச்சிருச்சு…”
“குட்…”
“வேலைக்கு போகவும் நான் நீங்க செஞ்ச ஹெல்ப்க்கு…” என்ற பொழுதே அவனின் பார்வையில் பேச்சை நிறுத்திக்கொண்டாள்.
கையில் மெடிக்கல் ரிப்போர்ட் இருக்க அதில் டிசார்ஜ் செய்த பேப்பர் இருக்க அதனுள் வேறு ஏதேனும் பில் இருக்கிறதா என்று மெல்ல ஆராய்ந்தாள்.
அவன் செலுத்தியதற்கான கட்டண ரசீது எதுவும் அதற்குள் இல்லை. எங்காவது குறிப்பிட்டிருக்க்கின்றனரா என்று பார்க்க அதுவுமில்லை.
“பில் என்கிட்டே இருக்கு…” என்றான்.
“நான் திரும்ப குடுத்திருவேன்…”
“நோ இஷ்யூஸ். ஜஸ்ட் ஒரு ஹெல்ப்பிங் மைன்ட். தட்ஸ் இட்…” என்று சொல்ல அமைதியாகி போனாள்.
ஆனாலும் அவனிடம் அந்த பணத்தை திருப்பி தந்துவிடவேண்டும் என்ற எண்ணம் மட்டும் ஆழ பதிந்துவிட்டது.
கருணையோடு பேசியிருந்தால கூட தெரிந்திருக்குமோ இல்லையோ? அவனின் கண்டிப்பு பேச்சு ஒருவகையில் எரிச்சலுடன் வெளிப்பட்டதாகவே தோன்றியது.
மனைவி என்று சேர்ப்பித்துவிட்டு இடையில் விட்டுவிட்டு சென்று ஏதேனும் ஆபத்து என்றால் அது தன்னை, தன் வேலையை பாதிக்கும் என்பதனால் தான் இத்தனை மெனக்கெட்டு தன்னை அழைத்து செல்கிறான் என்று அனுமானித்தாள்.
அவளின் அனுமானம் நூற்றுக்கு இருநூறு சதவிகிதம் உண்மை என்பது அவளறியாதது.
காப்பாற்றி கொண்டுவந்து சேர்க்கையில் பிரச்சனை இன்றி சிகிச்சை ஆரம்பிக்க என்ன சொல்ல வேண்டுமோ அப்படி சொல்லி மனைவி என்று ஒரு பெயரையும் வைத்து தனது ஐடியையும் காண்பித்திருக்க வம்சிக்கு அப்படியே விட்டு செல்ல தோன்றவில்லை.
இரண்டாவது அவளின் பண பிரச்சனை. கஷ்டப்பட்ட குடும்பம் போல என்று தான் நினைத்தான் அவள் தாயிடம் பேசியதை வைத்து.
வருடாவருடம் நிதியுதவி போல அவனின் சம்பளத்தில் இருந்து வழங்கி இருக்க இதுவும் அப்படி ஒரு கணக்கில் சேர்ந்துகொள்ளட்டுமே என எண்ணிக்கொண்டான் வம்சி.