ஆனந்தின் வீட்டிற்குள் நுழைய வரவேற்பறையில் ஒரு பெரியவரும், ஆனந்தும் அமர்ந்திருந்தனர்.
“உள்ள வாம்மா…” என பெரியவர் சொல்ல ஆனந்த் தலையசைத்தான்.
“வாம்மா, ஏன் தயங்கி தயங்கி வர? நான் ஆனந்த் அம்மா தான். வம்சி எல்லாம் சொன்னான். நீ அவன் கல்யாணம் செஞ்சுக்க போற பொண்ணுன்னு. சங்கடமில்லாம இரும்மா…” என்றவர் மாலதியை பார்க்க,
“நான் காபி கொண்டு வரேன் த்தை…” என உள்ளே சென்றாள்.
அதன்பின்னர் அவளின் வேலைகள், தங்கியிருக்கும் இடம், ஊர், வீடு, குடும்பம் பற்றி கேட்டுக்கொண்டே வர ஒவ்வொன்றிற்கும் எண்ணி எண்ணி தான் பதில்கள் வந்தது ஷ்ராவணியிடம்.
மடியில் குழந்தை வேறு இருக்க சட்டென சொல்லிக்கொண்டு கிளம்பவும் முடியவில்லை.
அவர்களை போல சகஜமாகவும் உரையாட முடியவில்லை. ஒட்டாத இடத்தில் இருப்பதை போல இருந்தது ஷ்ராவணிக்கு.
அதிலும் சற்றுமுன் வம்சி செய்ததன் வீரியம் இன்னும் அவளில் இருந்து அடங்கவில்லை.
கவனமின்றி எல்லோரும் பார்க்கும்படி வைத்திருந்தான் என்றால்? நினைக்கவே சங்கடமாக இருந்தது.
திருமணத்தின் முன்னால் இத்தனை நெருக்கமாக ஒருவனுடன் தான் நின்ற விதம் அவளால் ஏற்க முடியவில்லை.
மாலதி காபியை கொண்டுவந்து தந்த பின்னும் பேச்சுக்கள் அளவெடுத்து தான் வந்தது.
இத்தனையிலும் வம்சியை அவள் நிமிர்ந்தும் பார்த்தாளில்லை. அங்கிருந்து சென்றால் போதும் என்றளவில் தான் தோன்றிக்கொண்டே இருந்தது.
என்னதான் வம்சி தன்னை வருங்கால மனைவி என அறிமுகம் செய்திருந்தாலும் உள்ளூர குறுகுறுப்பு.
மூன்றாம் மனிதரிடமே இப்படி இருக்க தன் வீட்டில் இதனை எப்படி சொல்ல போகிறோம் என எப்பொழுதும் போல கேள்வி எழ காபியை குடிக்க முடியாமல் பாதியுடன் வைத்தாள்.
“என்னம்மா?…” ஆனந்தின் அம்மா கேட்க,
“போதும் ஆன்ட்டி, நான் இப்பதான் அவங்க வீட்டுல குடிச்சேன்…” லேசான திணறலுடன் சொல்ல வம்சி ஆனந்தை பார்த்தான்.
“ம்மா வாங்க, அவங்க பேசட்டும்…” என்று ஆனந்த் எழுந்துகொள்ள,
“இல்லை எனக்கு பஸ்க்கு நேரமாச்சு. நான் கிளம்பனும்…” என்று ஆளுக்கு முதலாய் ஷ்ராவணி எழுந்து நிற்க குடும்பமே அவளை திகைத்து பார்த்தது.
“நிலா உட்கார்…” என்றான் வம்சி.
“இல்லை நா…”
“நானே ட்ராப் பன்றேன்…” என சொல்ல,
“ம்ஹூம்…” என்றவள் பின் மாலதியை பார்த்துவிட்டு அவர்கள் முன்பு மேலும் மறுக்கமுடியாமல் அமைதியாய் அமர ஒவ்வொருவராய் நகர்ந்தனர்.
“குழந்தையை குடும்மா….” ஆனந்த் கேட்க,
“இருக்கட்டும்ங்கண்ணா…” என்று பிடித்துக்கொள்ள குழந்தையும் வாகாய் சாய்ந்துகொண்டது அவள் மீது.
மடியில் இருக்கும் குழந்தைக்கும், அதனை பிடிமானமாய் அணைத்து பிடித்துக்கொண்டு அமர்ந்திருந்தவளுக்கும் பெரிதாய் வித்தியாசம் எதுவும் தெரியவில்லை வம்சிக்கு.
இன்னும் தன்னை காணாமல் குழந்தையின் கன்னத்தை விரல்கொண்டு வருடியபடி இருந்தவளின் கன்னத்தை தீண்டினால் என்னவென்னும் ஆவல் புயல் போல வம்சியை மையம் கொண்டது.
“வம்சி…”
“நான் பார்த்துக்கறேன் ஆனந்த்…” என்று அவனிடம் சொல்லிவிட்டு ஷ்ராவணியை பார்த்தான்.
ஆனந்த் நகர்ந்த பின்னர் அந்த வீட்டில் அத்தனை நிசப்தம். குழந்தை கூட ஒற்றை விரலை வாயில் வைத்து சப்பியபடி ஷ்ராவணி உடையில் பதித்திருந்த சின்ன சின்ன கண்ணாடிகளை கவனித்துக்கொண்டு இருந்தது.
“ஹ்ம்ம், இன்னும் எவ்வளவு நேரம் என்னை பார்க்காம, பேசாம இருக்க போற நிலா?…” என்றான் அவனே.
அவன் குரலில் அத்தனை மென்மை. அவ்வளவு அமைதியாய் பேசினான் அவளிடத்தில்.
“உனக்கு இங்க பேச சங்கடமா இருந்தா மாடில…”
“இல்லை வேண்டாம் வேண்டாம்…” என அதற்கும் அவசர மறுப்பு.
“ப்ச், இப்ப என்னாச்சு? எதுக்காக இப்படி இருக்க?…”
“ஒண்ணுமே இல்லைங்களா? நீங்க பண்ணினதுக்கு…” என உதடு துடிக்க ஷ்ராவணி கேட்கவும் வம்சி விழிகள் அதில் பதிந்தது.
“ஹ்ம்ம், தனியா பேச வேண்டாம்ன்னு தான் நானும் நினைச்சேன். ரொம்ப கஷ்டம் தான்…” என்றான் ரசனையான குரலில்.
“இப்ப எதுக்காக இங்க கூப்பிட்டு வச்சு பேசறீங்க? எனக்கு இது ரொம்ப கஷ்டமா இருக்கு…”
“அப்போ வெளில எங்க மீட் பண்ணலாம்? சொல்லு அங்க பேசலாம்…” என கேட்க அதற்கும் திகைத்தாள்.
“வரமாட்ட தானே? அதான் நான் இங்க கூப்பிட்டேன்…” என்றவன்,
“உன்னை நான் ஒன்னும் லவ்வர்ன்னு இன்ட்ரோ குடுக்கலை. என்னோட வொய்ப்ன்னு தான் குடுத்திருக்கேன். சும்மா எல்லாத்துக்கும் இப்படி முகத்தை வச்சுக்காத…” என்றவனின் பேச்சில் பதில் சொல்லாமல் அவள் இருக்க,
“பேசு நிலா. உன்னை பார்க்க தானே கிளம்பி வந்தேன். நைட் நான் திரும்ப கிளம்பனும்…” என சொல்ல,
“டென்ஷன் இல்லாம? ஒருநிமிஷம் உயிரே போய்ருச்சு…” முகமெல்லாம் கலங்கி சிவந்துவிட அமைதியாக பார்த்தவனுக்கு அருகே சென்று அணைக்க கூட முடியவில்லை.
ஷ்ராவணி அதனை விரும்பவும் மாட்டாள். அதற்கும் ஏதேனும் பேசினால் தன்னுடைய கோபம் இன்னும் கூடுமென மௌனம் காத்தான்.
“அதுவும் டென்ஷன் பன்றீங்க நீங்க. இத்தனை நாள் பேசாம இன்னைக்கு இப்படி செஞ்சா?…”
“ஹேய் என்ன பண்ணிட்டேன்? அதுவும் இங்க நீ என் பக்கத்துல இருக்கும் போது சும்மா விளையாண்டு பார்த்தேன். இதுக்கு இவ்வளோ ரியாக்ட் பண்ணனுமா?…” என்றவன்,
“இத்தனை நல இந்த போட்டோ என்கிட்டே தான் இருந்தது. உனக்கு கூட அனுப்பலை. இதுவரைக்கும் இப்படி வைக்கவும் இல்லை. ஆனா இன்னைக்கு உன்னை பார்த்ததும் மனசை கன்ட்ரோல் பண்ண முடியலை. என்னை நீ தேடின பாரு. ப்பா…”
தன் நெஞ்சை பிடித்தபடி அவள் கண்களை பார்த்துக்கொண்டே அவன் பேச பேச இவனுள் இத்தனை உணர்வுகளா என்று பார்த்தாள் ஷ்ராவணி.
“என்னைக்கா இருந்தாலும் இது உன் வீட்டுக்கு தெரிஞ்சு தானே ஆகனும்?…” என்றான் அழுத்தமாய்.
“நிஜம் தான். ஆனா இப்பவே தெரியனும்னு இல்லையே? ஏற்கனவே இருக்கற பிரச்சனையில…” என்று மெல்லிய குரலில் சொல்லியவளின் பரிதவிப்பை கண்டுகொண்டவன்,
“என்ன பிரச்சனை நிலா?…” என்றான்.
“ஒண்ணுமில்லை…”
“ஏன் என்கிட்டே சொல்லமுடியாத பிரச்சனையா? இல்லை சொல்லகூடாதா?…” என்று கேட்க சஞ்சலத்துடன் பார்த்தாள் அவனை.
சொல்ல முடியாமல் இல்லையே? சொல்ல கூடாதென்ற எண்ணம் தானே தனக்கு என நினைக்கையில் அவள் சுயமரியாதை படுத்தியது.
வெறுமனே தன்னை அத்தனை பேசுபவன், யோசிக்காமல் காயப்படுத்துபவன் இதனை சொன்னால் அவனின் பார்வையில் தான் இன்னும் இறங்கி தெரிவோமோ என தவிர்க்க தான் நினைத்தாள்.
உன் கண்ணீர் தான் உன் மனதை காட்டியது என சொல்லியவனின் அடுத்த செயல்கள் சில அலட்சியத்துடன் தன்னை அணுகியிருக்க இதனை சொல்லவே தோன்றவில்லை.
யாரிடமாவது மனதின் ஆதங்கத்தை, வெறுமையை, கஷ்டத்தை சொல்லி அழுதுவிடமாட்டோமா என அவளுள்ளும் ஆயிரம் ஏக்கங்கள் இருக்கத்தான் செய்தது.
மனதிற்கினியவனின் தோள் சாய்ந்து சும்மா முடியாத தன் பாரங்களை அவனுடன் பகிர்ந்து கலந்து அதற்கு ஆறுதல் தேட தோன்றியது.
ம்ஹூம், இவனிடமா? சொன்னால் நிச்சயம் அதையும் கேலியாய் பேசினாலும் ஆச்சர்யமில்லை என்றே தோன்றியது.
“நிலா…” என்றதும் மற்றதெல்லாம் பின்னுக்கு சென்று அவன் தன்னை அழைக்காமல் தவிர்த்தது தான் முன்னே வந்தது.
“உங்களுக்கு அவ்வளோ ஈகோ இல்லையா?…”
“எனக்கா?…” வம்சி கேட்க,
“என்னோட பேர் சொல்லி கூப்பிடுங்கன்னு தானே சொன்னேன். அதை கேட்டா முடியாது போடின்னு அனுப்பினதோட சரி. பேசவே இல்லை. அப்போ ஈகோ தானே? நீங்க நினைச்சதை நான் செய்யனும். ஆனா நான் கேட்ட எதையும் நீங்க செய்யமாட்டீங்க…”
மனதில் தோன்றியதை கேட்டும்விட்டாள். என்னவோ அவன் என்ன முடிவிற்கு வந்தாலும் சரி என்பதை போல ஒரு விளிம்பு நிலை அவளது.
“கமான் நிலா. இதென்ன சின்னபிள்ளை…”
“அப்போ சின்ன பிள்ளையை ஏன் வொய்ப்ன்னு சொல்றீங்க?…” அத்தனை ஆவேசம் அவனின் மொழிதலில்.
ஷ்ராவணி கையில் இருந்த குழந்தை அவளின் இறுக்கத்திலும் சீற்றத்திலும் மிரண்டு நிமிர்ந்து பார்க்க தன்னை நிதானப்படுத்திக்கொண்டாள் உடனே.
“ஹேய் என்னரா?…” என ஷ்ராவணியின் அருகிலிருந்த இருக்கைக்கு மாறிவிட்டான்.
“எந்திச்சு முன்னாடி போங்க. அவங்க வந்து பார்த்தா?…”
“இப்ப நீ வாயை மூடலை, உன்னை தூக்கி என் மடில வச்சுப்பேன்….” என அதட்டினான் வம்சி.
“இதான், இதத்தான் சொல்றேன். நீங்க உங்க இஷ்டத்துக்கு தான் செய்வீங்க எல்லாம். என்னை யோசிக்கிறதே இல்லை…” மெல்லிய விசும்பலுடன் அவள் கேட்கவும் தலையில் கை வைத்துக்கொண்டான் வம்சி.
“உனக்கு எப்படி புரிய வைக்க நிலா? எனக்கு நீ அப்படித்தான் பதிஞ்சுபோயிருக்க. ஓகே லீவ் இட்…” என்றவன்,
“எல்லாம் என் இஷ்டம்ன்னா இப்பவே உன்னை கல்யாணம் பண்ணிக்க தோணுது. என் இஷ்டத்துக்கா பண்ணேன்? உனக்காக, உன்னோட வார்த்தைக்காக தானே வெய்ட் பன்றேன். அப்போ இது யார் இஷ்டமாம்?…”
“இன்னைக்கே கல்யாணமா?…” விழிகள் விரிய அவள் கேட்டதில் வம்சியின் டென்ஷன் குறைந்து புன்னகை பிறந்தது.